இடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் வவுனியா செல்லவுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களுடன் இக்குழுவினர் செல்லவுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் தமது கல்வியைத் தொடர கல்வி அமைச்சினூடாக அவசரகாலக் கல்வியை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதிக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய வடக்கில் யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ள மாணவர்களில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை, உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவர். அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ்விடம்பெயர்வினால் பாதிப்படைந்துள்ளது.