2009

2009

பேருவளை பதற்றம் தணிவு; பொலிஸ், இராணுவம் கடும் பாதுகாப்பு

beruwela.jpgபேருவளை, மஹகொடை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தற்பொழுது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்பொழுது பூரண அமைதி நிலவுவதாகவும் அந்தப் பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 131 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் முன்னிலையில் நேற்று 103 பேர் சந்தேகத்தின் பேரில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த 103 பேரும் சட்டத்தரணி பி. மானமடு மூலமாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு இவர்களை உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஏற்கனவே சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளனர். இவர்களது உடைகளை அரச பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகம் 30 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்

university-of-sri.jpgதற்காலி கமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட இப்பல்கலைக்கழகத்தை எதிர் வரும் 30 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு அதன் உப வேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு அறிவிக்கின்றுது.

விடுதி மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வந்தோருக்கு மட்டும் – திரைப்படங்களை திரையிடுவது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை

images-teli.jpgவயது வந்தோருக்கு மட்டும் திரைப்படங்கள் நாட்டின் திரையரங்குகளில் திரையிடப்படுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசிகளைத் கொண்டு செல்வது, பாடசாலையினுள்ளே உபயோகிப்பது, சிறுவர்களை தொலைக்காட்சி விளம்பரங்களில் தவறாக உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அமைச்சரவை அனுமதியுடன் இதனைக் காத்திரமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இது தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து உரிய சட்டங்களை இயற்ற கல்விமான்கள், நீதித்துறை சார்ந்தோர் உள்ளிட்ட விசேட குழுவொன்றையும் நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சீகிரியா வதுல ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலாசார மரபுரிமை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன இத்தீர்மானங்களை அறிவித்தார். இதன்படி, தேசிய, சர்வதேச வயதுவந்தோருக்கான திரைப்படங்களை திரையிடத் தடை விதிப்பதுடன் மீறி செயற்படுவோருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள், தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தணிக்கைச் சபையின் அனுமதியின்றி இத்தகைய திரைப்படங்கள் இனி திரையிடப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசியில் சமூகத்தைச் சீர்குலைக்கும் தகவல்கள், விடயங்கள், பொய்ப் பிரசாரங்களை வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறுவர்களை சமூக, மேம்பாட்டு க்குப் பொருந்தாத விளம்பரங்களுக்கு ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதனைக் கடுமையானதாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நாட்டில் இயங்கும் சர்வதேச பாடசாலைகள் நாட்டின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டியதும் முக்கியமென அமைச்சர் தெரிவித்தார்.

தணிக்கைச் சபையின் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சமூகத்தைச் சீர்குலைக்கும் வகையிலான விடயங்கள், விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவது மற்றும் விற்பனை செய்வது தம்வசம் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முகாம்களிலிருந்து பல்கலைக்குத் தெரிவான மாணவர்களை பதிவு செய்ய நடவடிக்கை

university-of-sri.jpgவவுனியா முகாம்களிலிருந்து,  பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறுமென வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்சனி ஒஸ்வேர்ட் கூறினார். யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கு 173 தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  எதிர்வரும் 21ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சமரநாயக்கவும் மற்றும் அதிகாரிகளும் முகாம்களுக்குச் சென்று மாணவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

19 இலங்கையர் சுமத்ராவில் கைது

_arrested.jpgசுமத்ரா வில் இலங்கையைச் சேர்ந்த 19 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமத்ராவின் லொம்பொக் பகுதியில் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்.) வழங்கியிருந்த இடத்திலிருந்து இவர்கள் தப்பியோடியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பெங்குளு பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்தாரா செய்திச் சேவை தெரிவித்தது.

சனிக்கிழமை இந்த 18 பேரும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கும் பெங்குளுநகர பொலிஸ் ஆணையாளர் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க தமக்கு அதிகாரம் இல்லை என்றும் பெங்குளு பிராந்திய பொலிஸ் கட்டளைப் பிரிவே இதற்குப் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

சாடிங் செம்பகா பொலிஸ் பிரிவில் 7 குடியேற்ற வாசிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மகேந்திரன் வர்ணன் (25 வயது), சுப்பிரமணியம் (20 வயது), சோமசுந்தரம் விஜயா (28 வயது), ஆறுமுகன் சுசிகரன் (24 வயது), வேதனா ஜோகியம் ரெஜினோல்ட் (28 வயது), தியாகவடிவேல் பகீரதன் (28 வயது), குலசேகரம் ஸ்ரீஸ்வரா (39 வயது) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெங்குளுவை பார்ப்பதற்காக அதாவது உல்லாசப் பயண நோக்கத்துடன் அங்கு சென்றதாக ஆறுமுகன் சுசிதரன் கூறியுள்ளார். இவர்களில் 5 பேர் தற்போது பெங்குளு பிராந்திய பொலிஸ் கட்டளைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 5 பேர் பெங்குளு தென்பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்குளுவுக்கு வருவதற்கு முன்னர் தாங்கள் ஜசார்த்தாவில் இருந்ததாக அவர்கள் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். யூ.என்.எச்.சி.ஆரின் ஆவணப் பத்திரங்களை வைத்திருந்ததால் பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். கடவுச்சீட்டுகளுக்கு பதிலாக அவர்கள் யூ.என்.எச்.சி.ஆரின் பத்திரங்களையே வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைரேகைகளுடன் அடையாள அட்டை

elc-ic.jpgநாட்டில் தற்போது பாவனையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைரேகைகளுடன் கூடிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் இவ் ஆண்டின் இறுதியில் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் அனைத்தும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாக மாற்றப்படும். 1972 ஆம் ஆண்டு முதல் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் மனித வலுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் இலகுவாக மோசடி செய்ய முடிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் முழுவதுமாக கணினி மயப்படுத்தப்படுவதுடன் மத்திய தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆகையால் அவை மேலும் பாதுகாப்பானவையாக இருக்குமென்றும் அவற்றில் மோசடிகள் செய்ய முடியாதென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 480 கோடி ரூபாவை அரசு செலவிட உள்ளது. இதற்கான கேள்வி கோரல் விடப்பட்டு தகுந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர் உபநந்த விதானபத்திரன தெரிவித்தார்.  இந்தத் திட்டத்தை உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கே தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட தாமதங்களால் அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக் கொள்வதென்று அரசு தீர்மானித்துள்ளது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போதுள்ள அடையாள அட்டைகள் 2015 ஆம் ஆண்டுடன் நாட்டிலிருந்து முற்றாக அகற்றப்பட்டுவிடும். அவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இயல்பாகவே அவை பாவனையிலிருந்து மறைந்து விடும். இலத்திரனியல் அடையாள அட்டைகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு பணம் அறவிடப்படப்போகின்றதென்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நாடுமுழுவதும் உள்ள 331 பிரதேச செயலகங்கள், இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிக்கு அனுசரணை வழங்கவுள்ளன. புதிய அடையாள அட்டைகளில் ஒருவரின் தனிப்பட்ட விபரங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதியப்பட்டிருக்கும். அத்துடன் கைரேகைப் பதிவும் ஒளிப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.
 

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி

cricket1.jpgபங்களா தேஷ் கிரிக்கெட் அணி மே.தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. 2 டெஸ்டிலும் வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதிய முதல் நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவு முதலில் பங்களாதேஷை “பேட்டிங்” செய்ய அழைத்தது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்ட ங்கள் எடுத்தது.  முகம்மது அஸ்ரப் 57 ஓட்டமும், தற்காலிக கப்டன் சகிப் அல்-ஹசன் 54 ஓட்டமும் மகமதுல்லா 42 ஓட்டமும் எடுத்தனர். ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மே.தீவு அப்துல் ரசாக்கின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 43.4 ஓவரில் 194 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. மே.தீவில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மே.தீவு அணியில் சுமித் அதிகபட்சமாக 65 ஓட்டம் எடுத்தார். அப்துல் ரசாக் 39 ஓட்டம் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டித் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

ஆபாச இணையத் தளங்களை மூடிவிடுமாறு உள்நாட்டு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தல்

computer.jpgபாலியல் மற்றும் ஆபாச விடயங்களை உள்ளடக்கிய இணையத் தளங்களை மூடிவிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நேற்று சகல உள்நாட்டு இணையத்தள சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாலியல் விடயங்களுடன் தொடர்புள்ள 12 இணையத் தளங்களை தடை செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் நிஷாந்த ஹப்புஆராச்சி இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு விடுத்த உத்தரவுக்கு அமையவே இந்த அறிவுறுத்தலை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இவ்வாறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத் திறப்பு விழா

புளியங்குளம் ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியன எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட இந்த பொலிஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் அரசியல் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மாணவி மீது வல்லுறவு ஒருவருக்கு விளக்கமறியல்

images000.jpgபாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருபிள்ளைகளின் தந்தையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. குருவிட்ட புஸ்தல்ல மகாவித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்விகற்கும் 13 வயதான இம்மாணவி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அருகிலுள்ள நீர் நிலையொன்றுக்கருகில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு வல்லுறவுக் குட்படுத்தப்பட்டதாக மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் உத்தரவிட்டார்.