2009

2009

சுவாசச் சிக்கல், தொடர் இருமல்: பொலன்னறுவை முஸ்லிம் ம.வி 12 மாணவர் ஆஸ்பத்திரியில்

சுவாசிப்பதில் சிரமமும், தொடர்ச்சியான இருமல் காரணமாகவும் பொலன் னறுவை திவுலான முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த வேளையில் மாணவர்கள் திடீரென சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதுடன் நிறுத்த முடியாதபடி தொடர்ச்சியான இருமலும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உடினடியாக பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நேற்றும் மற்றுமொரு மாணவரும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இம்மாணவர்கள் திடீர் சுகவீனமுறுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகள் உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் தொடர்ந்தும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பொலன்னறுவை ஆஸ்பத்திரி டொக்டர் எம். ஈ. ஆர். பெல்லன தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

யாழ்.மா.ந தேர்தல்: புத்தளத்தில் வாக்களிக்க 4388 பேர் தகுதி

election_cast_ballots.jpgயாழ்.  மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்சமயம் புத்தளம் மாவட்டத்தில் வதியும் இடம்பெயர்ந்த மக்களில் 4388 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. ஏ. எம். நபீல் தெரிவித்தார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ‘ஏ’, ‘பீ’ என்ற இரு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்-அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச் சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்திய சீன பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி!

சீனா மற்றும் இந்தியப் பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி இணைப்பு (ஹொட்லைன்) இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எழுத்து மூலம் பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளின் பிரதமர்களிடையே தொடர்ச்சியான தொடர்பிற்கு நேரடித் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தத் தேவையான தொழில்நுட்பம்,  மற்ற வசதிகள் குறித்து இருநாடுகளும் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் ரஷியாவுக்கிடையே இதுபோன்ற நேரடித்தொலைபேசி இணைப்பு செயல்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை அனுமதிப் பத்திரம் – பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு

school-children.jpgஅடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்தரங்கள் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது குறித்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவிக்குமாறு அவர் அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதேவேளை அடுத்த மாதம்  23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரிட்;சைக்கான  அனுமதிப் பத்திரங்களையும் விரைவில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

பரீட்சை வினாத்தாள் குளறுபடி பொலன்னறுவை கல்வி வலய அதிகாரிகள் மூவர் இடைநிறுத்தம்

வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் மூலம் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற குளறுபடி மற்றும் அச்சு பிழை காரணமாக பொலன்நறுவை கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவியுள்ளமையால் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழி, சிங்கள மொழி மூல வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதுடன் நேர அட்டவணைக்கு அமைய வினாத்தாள்கள் கிடைக்காமையால் மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலன்நறுவை வலயக் கல்விப் பணிப்பாளர் பியஷிலி ஜயசிங்க, பாட பணிப்பாளர் கே. விமலரத்ன, பாட ஆலோசகர் கே. பீ. விக்கிரமசிங்க ஆகிய மூவருமே இடைநிறுத்தப்பட்டுள்ளவர்கள்.

இரண்டாம் தவணைப் பரீட்சை குளறுபடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டிக்கு அழைத்து வரப்பட்ட நலன்புரி நிலைய சிறுமிகள்

kandy-parahara.jpgவவுனியா அகதிகள் முகாமிலிருந்து ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 73 சிறுமிகளை நாமல் ராஜபக்ஷ தலைமையிலான “இளைஞர்களின் நாளை’அமைப்பினர் மத்திய மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் கண்டிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கண்டிக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிகளை கண்டி மகா மாயா தேசியக் கல்லூரி மாணவிகளும் அதிபர் ஐ.விதானாச்சியும் வரவேற்றதுடன், அங்கு கலை நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. மாலை தலதாமாளிகைக்கு விஜயம் செய்து தரிசித்ததோடு இரவு பெரஹராவையும் கண்டு கழித்தனர். நாமல் ராஜபக்ஷவும் இவர்களோடு கலந்துகொண்டார்.

நேற்று புதன்கிழமை காலை பேராதனைப் பூங்காவிற்குச் சென்ற இவர்களை கண்டிப் பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் வரவேற்றனர். கண்டிப் பெண்கள் சாரணியர் மாணவிகள் கலை நிகழ்வுகளை நடத்தினர்.

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, சொர்ணாலி பேராதனை கனிஷ்ட வித்தியாலயம், அந்தெஸ்ஸ மகா வித்தியாலயம், தீரானந்த மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து தலா 10 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஒன்று கூடலின் போது விசேட அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் கலந்து கொண்டு பராமரிப்பு சிறுமிகளுக்கு புத்தகங்கள், உடைகள், பாதணிகள், உணவுப் பண்டங்கள் வழங்கினார்.

“இளைஞர்களின் நாளை’ அமைப்பினர் மற்றும் இவர்களைப் பராமரிக்கும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். தாய், தந்தை, உறவினர்களை இழந்து செஞ்சோலையில் பராமரிக்கப்பட்டவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாளை வெளியாகவுள்ள தீர்ப்பு குறித்து ஆங் சான் சூ கி அச்சம்

miyanmar_s.pngமியன்மார் எதிரணித் தலைவி ஆங் சான் சூ கிக்கு எதிரான விசாரணை குறித்த தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தீர்ப்பு வலி மிகுந்ததாக இருக்குமென தான் அச்சமடைந்துள்ளதாக ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார்.  நாளை வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் சூ கிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரங்கூனின் இன்செய்ன் சிறை வளாகத்திலுள்ள நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதிக்கட்ட வாதத்தை சூ கியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முன் அனுமதி எதுவுமின்றி அமெரிக்கரொருவரைத் தனது வீட்டில் தங்க அனுமதித்ததன் மூலம் வீட்டுக்காவல் விதிகளை மீறியதாக சூ கி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இறுதிநாள் விசாரணைகளை பார்வையிடுவதற்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையைத் தரும் தீர்ப்பே வழங்கப்படுமெனத் தான் அச்சமடைந்துள்ளதாக சூ கி தூதுவர்களுக்குக் கூறியதாக அங்கு பிரசன்னமாயிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். மேலும், துரிதமாகத் தீர்ப்பு வெளிவர முயற்சித்தமைக்காக தூதுவர்களுக்கு சூ கி நன்றியும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட்டால் தீர்ப்பில் சாதகமான மாற்றம் வருமெனத் தாம் சிறிது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சூ கியின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கு அரசியலுடன் தொடர்புடையது என்பதால் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியல் வழக்குகளில் எந்தவொரு பிரதிவாதியும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களைத் தான் ஒருபோதும் பார்த்ததில்லையெனத் தெரிவித்துள்ள வழக்கறிஞரும் சூ கியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளருமான நியான் வின் எம்மால் முடிந்தளவு நாம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம். மோசமான முடிவுகளைச் சந்திப்பதற்கு அவரும் (சூ கி) தயாராகியுள்ளாரெனத் தெரிவித்துள்ளார்.
 

இ.ஒ.கூ. தாபனத்தில் டிஜிட்டல் கலையக தொழில்நுட்பம் – அமைச்சர் யாப்பா திறந்து வைப்பு

images-radio.jpgஒலிநாடா, இசைத் தட்டுகள், இறுவட்டுகள், யாவற்றையும் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் சுவடி கூடத்தில் சேகரித்து தேவையான நேரத்தில் எடுத்து கலையகத்தின் ஊடாக நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கான கணனி தொடர்பு முறையில் செயல்படும் புதிய கலையகத் தொடரை ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உத்தி யோகபூர்வமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திறந்து வைத்தார்.

ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் சகலவற்றையும் சுவடிக் கூடத்திற்குள் உட்புகுத்துவதற்கு 33 வருட காலம் தேவைப்படும் என்று தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தெரிவித்தாலும், இங்குள்ள அனைத்தையும் கட்டிக் காக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இது எங்கள் சொத்து இதனை இரவு பகலாக பாதுகாப்பது எங்கள் கடமை என்றார்.

10580 பாடல்கள் அடங்கிய “ஹாட் டிஸ்க்” அமைச்சர் பிரியதர்ஷன யாப்பாவிடம் முன்னாள் ஊழியரும், கலைஞருமான ஆரியதாச பீரிஸ் கையளித்தார். அத்தோடு ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட 99 வருட பழைமை வாய்ந்த இசைத் தட்டு ஒன்று தலைவர் ஹட்சன் சமரசிங் கவிடம் ஆரியதாச பீரிஸால் வழங்கப்பட்டது.

இலங்கையின் நடுநிலை கொள்கைக்கு பஹ்ரெய்ன் பிரதமர் பாராட்டு

kalifa-shik-binsalman.jpgஅரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றமையைப் பாராட்டுவதாக இலங்கை வந்துள்ள பஹ்ரெய்ன் இராச்சியத்தின் பிரதமர் ஷேய்க் கலிபா பின் சல்மான் அல்- காலிஃபா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் அரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையும், நடுநிலைக் கொள்கையையும் கொண்டுள்ளமை பாராட்டுக்குரியதென்று அவர் தெரிவித்தார். பஹ்ரெய்ன் பிரதமர் தமது இல ங்கை விஜயம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமது இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நீண்டகால ஆழமான உறவின் ஒரு புதிய மைல் கல்லாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் இணக்கம் கண்டிருப்பதாகத் தெரிவித்த பஹ்ரெய்ன் பிரதமர், பஹ்ரெய்ன் இராச்சியத்தின் மேம்பாட்டுக்காகப் பங்களிப்புச் செய்துவரும் இலங்கை யர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

வவுனியா நகரில் பஸ் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு – அமைச்சர் டளஸ் அழகப்பொரும தகவல்

dallus_allahapperuma.jpgவவுனியா நகரில் இரவு 7:30 மணியுடன் நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் நாளை 31 ஆம் திகதி முதல் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நடத்தப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பொரும இன்று வவுனியாவில் தெரிவித்தார்.

இன்று காலை வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சும் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியா மக்களுக்கு சிறந்த போக்குவரதது சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரஜரட்ட ரயில் சேவை நாளை 31 ஆம் திகதி மீண்டும் வவுனியா ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயில் நாளை அதிகாலை 3:15 மணிக்கு வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் இதற்கு முன்னர் வவுனியா வரை நடத்தப்பட நகரங்களுக்கிடையிலான  ஐந்து கடுகதி ரயில் சேவைகளும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டன. இப்போது அவை அநுராதபுரம் வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இச்சேவைகளும் வவுனியாவரை நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.