மியன்மார் எதிரணித் தலைவி ஆங் சான் சூ கிக்கு எதிரான விசாரணை குறித்த தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தீர்ப்பு வலி மிகுந்ததாக இருக்குமென தான் அச்சமடைந்துள்ளதாக ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் சூ கிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ரங்கூனின் இன்செய்ன் சிறை வளாகத்திலுள்ள நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதிக்கட்ட வாதத்தை சூ கியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முன் அனுமதி எதுவுமின்றி அமெரிக்கரொருவரைத் தனது வீட்டில் தங்க அனுமதித்ததன் மூலம் வீட்டுக்காவல் விதிகளை மீறியதாக சூ கி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இறுதிநாள் விசாரணைகளை பார்வையிடுவதற்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையைத் தரும் தீர்ப்பே வழங்கப்படுமெனத் தான் அச்சமடைந்துள்ளதாக சூ கி தூதுவர்களுக்குக் கூறியதாக அங்கு பிரசன்னமாயிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். மேலும், துரிதமாகத் தீர்ப்பு வெளிவர முயற்சித்தமைக்காக தூதுவர்களுக்கு சூ கி நன்றியும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட்டால் தீர்ப்பில் சாதகமான மாற்றம் வருமெனத் தாம் சிறிது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சூ கியின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கு அரசியலுடன் தொடர்புடையது என்பதால் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியல் வழக்குகளில் எந்தவொரு பிரதிவாதியும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களைத் தான் ஒருபோதும் பார்த்ததில்லையெனத் தெரிவித்துள்ள வழக்கறிஞரும் சூ கியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளருமான நியான் வின் எம்மால் முடிந்தளவு நாம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம். மோசமான முடிவுகளைச் சந்திப்பதற்கு அவரும் (சூ கி) தயாராகியுள்ளாரெனத் தெரிவித்துள்ளார்.