January

January

தமிழர்கள் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் – வடக்கு கிழக்கில் விரைவில் அதிக தமிழ் பொலிஸார் – உறுதியளித்த அனுர அரசு !

தமிழர்கள் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் – வடக்கு கிழக்கில் விரைவில் அதிக தமிழ் பொலிஸார் – உறுதியளித்த அனுர அரசு !

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு மையத்தை யாழ்ப்பாணத்தில்  திறந்து வைக்கும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது உங்களுக்கு (பொலிஸாருக்கு) ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதேவேளை வடக்கு மக்கள் எமக்கு பெற்றுத் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம் . கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவையை பெற்றுக் கொடுப்போம் . அதேபோன்று சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய ஒழுக்கமான சமூகத்தையும் உருவாக்க நாம் முன்னிற்போமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால அநுராதபுரம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் ஆட்சியேற்று மிகக்குறுகிய கால இடைவெளியில் தமிழ் மக்களின் நம்பிக்கையை அதிகமாக பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. முன்னைய அரசாங்கங்கள் தங்களது தென்னிலங்கை வாக்கு வங்கிக்காக தமிழர்களின் அடிப்படை நினைவேந்தல் உரிமையை கூட மறுத்துவந்தன. எனினும் என்.பி.பி அரசாங்கம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைகளை முழுமையாக கடந்த ஆண்டு கார்த்திகை 27ஆம் திகதி வழங்கியிருந்தது. மேலும் இராணுவ தடைகள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருவதுடன் இராணுவம் பொலிஸாரால் அங்கங்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டு வருவது மக்களிடையே தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தேசம் நேர்காணலில் பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த  நிலையில் மிக நீண்டகாலமாக தமிழர் பகுதிகளில் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் வேண்டும் என்ற வேண்டுகோள் காணப்பட்ட நிலையில் தமிழ்தேசிய கட்சிகள் ஆதரவளித்த நல்லாட்சி அரசாங்கம் தொடங்கி முன்னைய அரசாங்கங்கள் இது தொடர்பில் மௌனம் சாதித்து வந்த நிலையில் தமிழர் பகுதிகளில் தமிழ்பொலிஸ் அதிகாரிகள் தவை என்ற நிலைப்பாட்டை தாம் உணர்ந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமையானது அக்கபூர்வமான அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

“நானும் சிறியும் நீரில்லாத நெடுந்தீவுப் பூர்விகம்! ஆனாலும் இரணைமடுத் தண்ணீர் இரணைமடு விவசாயிகளுக்கே ! யாழ்ப்பாணத்துக்கு அல்ல!”

“நானும் சிறியும் நீரில்லாத நெடுந்தீவுப் பூர்விகம்! ஆனாலும் இரணைமடுத் தண்ணீர் இரணைமடு விவசாயிகளுக்கே ! யாழ்ப்பாணத்துக்கு அல்ல!”
விவசாயிகள் சம்மேளனத் தலைவர் முத்து சிவமோகன்

 

 

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் கோருகிறார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அது பிள்ளைகளுக்கு மன உளைச்சல் என்கிறார்கள் ஆனால் அதற்கு முன்னர் ஐந்தாம் தர பரீட்சையினை ஏன் நடத்தக் காரணம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அதற்கு பாடசாலைகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடுதான் எனத் தெரிவித்திருந்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும்.

பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ மட்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளைக் குறைக்கும் வகையில் பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறை இருக்க வேண்டும். முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம், இது அரசியல்வாதியோ, அமைச்சரோ அல்லது செயலாளரோ தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதற்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் பொறிமுறையை அமைக்க முயற்சிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை தடுக்க புதிய திட்டம் : சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி !

வைத்தியசாலைகளில் ஊழல் மோசடிகளை தடுக்க புதிய திட்டம் : சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி !

நேற்றைய தினம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்தக்கசிவு உயிரணு மாற்று சிகிச்சைப் பிரிவானது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க வைத்தியசாலையொன்றில் முதலாவதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பிரிவானது ருஹூணு கதிர்காம மகாதேவாலயத்தின் நிதியுதவியானால் கட்டப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைகளின் அனைத்துவிதமான அபிவிருத்திப்பணிகளும் தேசிய திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சால் ஒதுக்கப்படும் நிதிமூலம் மட்டுமே செய்யப்படும். இனிவரும் காலங்களில் அரசியல் நலன்சார்ந்து அல்லது வைத்தியசாலைகளின் குறைபாடுகளைக் கண்டு எழுகின்ற உணர்வெழுச்சியினால் தூண்டப்பட்டோ வைத்தியசாலைகளில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடும் போது எந்தவொரு கடவுள்களை விடவும் ஏன் கதிர்காம கடவுளின் கருவூலத்தில் இருக்கும் பணத்தை விடவும் அதிக பணம் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 33 கோடிகள் ஒதுக்கப்படுகிறது. மேலும் அமைச்சர் குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் சுகாதார அமைச்சுக்கு அதிகூடிய தொகை தொகுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுவாக எந்த அரசாங்கம் கேட்டாலும் சுகாதார அமைச்சு பணம் கொடுக்கும். சுகாதார அமைச்சானது காலத்திற்கு காலம் வெளிநாட்டு சர்வதேச அமைப்புக்களின் ஆதரவை உள்ளூர் ஆளுநர்கள் மூலமாகவும் நேரடியாகவும் குறிப்பிட்ட காலங்களில் பெறுகிறது. அந்தவகையில் எதிர்காலத்தில் இவை அனைத்தும் ஒரு முறையான திட்டமிடலின் கீழ் செயற்படுத்தப்படும். அடுத்த 20 ஆண்டுகளை நோக்காக கொண்டு இத்திட்டமானது வடிவமைக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் இந்த முடிவு ஊழலை ஏற்படாமல் தடுக்கும் ஓரு பொறிமுறையாக அவதானிகள் கருதுகின்றனர். தன்னிற்ச்சையாக வைத்தியசாலைகள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றபோது இடம்பெற வாய்ப்புள்ள மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

கடந்த வருடம் பெரும் சர்ச்சையாக வெடித்த சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் கூட இவ்விடயம் கவனத்திற்கு வந்திருந்தது. தென்மராட்சி அஅபிவிருத்திக் கழகத்தால் சாவகச்சேரி வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவை இயங்க வைக்கவென உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தென்மராட்சி மக்களிடம் பணம் சேகரிகப்பட்டிருந்தது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி பணத்தில் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்தமை போக மிகுதி 23 மில்லியன்களுக்கு என்ன நடந்தது என்ற சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அவசர விபத்துப்பிரிவு சத்திரசிகிச்சை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்தமையும் பல ஆண்டுகளாக அப்பிரிவு இயங்காமை தொடர்பான முறைப்பாடுகளை முன்னாள் பதில் சாவகச்சேரி பணிப்பாள் வைத்தியர் அர்ச்சனா இராமநாதன் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து விபத்து மரணங்கள் – புளியம்பொக்கணைக்கு நேரடி விஜயம் செய்த ஆளுநர் வேதநாயகன் !

அடுத்தடுத்து விபத்து மரணங்கள் – புளியம்பொக்கணைக்கு நேரடி விஜயம் செய்த ஆளுநர் வேதநாயகன் !
 ஏ- 35 பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலமானது அடுத்தடுத்து பல விபத்துக்கள் இடம்பெறும் பகுதியாக உள்ளது. இது தொடர்பில் மக்கள் பல்வேறுபட்ட தரப்பினரிடமும் இந்த பிரச்சினையை கொண்டு போய் சேர்த்தும் தீர்வுகள் எவையுமே மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில், குறித்த பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் வெதநாயகன்,  புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு அறிவுறுத்தினார்.
அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர், பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால், பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அந்த வீதியூடாக  பயணித்த ஆளுநர், இடைநடுவில் புனரமைப்பு நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டதுடன் அந்தப் பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களும், பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
புனரமைப்பை முன்னெடுத்த ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒப்பந்தகாரரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் அளவில் புனரமைப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்றும், அதுவரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் எனவும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

யாழில் சட்டவிரோத கடத்தல் – களத்தில் இறங்கி மடக்கிப்பிடித்த பா.உ க.இளங்குமரன் !

யாழில் சட்டவிரோத கடத்தல் – களத்தில் இறங்கி மடக்கிப்பிடித்த பா.உ க.இளங்குமரன் !

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக பிரதேச மக்களால் முறைப்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரனுக்கு கிடைக்கப்பெற்றது.

அதனை தொடர்ந்து இளங்குமரன் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது 02-01-2025 இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது, அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் எற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

உலகில் நடந்த மிகப்பெரிய இராசாயன விபத்தின் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

உலகில் நடந்த மிகப்பெரிய இராசாயன விபத்தின் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு!

அமெரிக்காவின் யூனியன் கார்பைட் (Union Carbide) நிறுவனத்திற்குச் சொந்தமான கிருமி கொல்லி தயாரிக்கும் இந்தியாவின் போபால் (Bhopal) மாநிலத்தில் இருந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவின் பின் அதன் கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் அத்தொழிற்சாலையிலேயே உள்ளது. அதனை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக இது இன்றும் உள்ளது.

1984 டிசம்பர் 2 இரவு ஆரம்பமான விசவாயுக் கசிவு மறுநாள் காலையும் தொடர்ந்தது. காற்றில் கலந்த ஐசொசையனைட் வாயு ஓரிரு வாரத்தில் 30,000க்கும் மேற்பட்டவர்களைப் பலியெடுத்தது. இதன் உண்மையான தொகை இதனிலும் அதிகம் என்றே கருதப்படுகின்றது. இப்பகுதியில் பிறக்கின்ற குழந்தைகள் இப்போதும் அதன் தாக்கத்தல் பாதிக்கப்பட்டு குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்.

இந்தியா தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக கூறிக்கொண்ட போதும், போபால் விசவாயு விபத்தில் பலியானவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு, அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டது. இவ்வளவு மோசமான விபத்தின் பொறுப்புக் கூறலிலிருந்து யூனியன் கார்பைட் தப்பிக்க வைக்கப்பட்டது. இந்தக் கழிவை அகற்றுவதற்கு 40 ஆண்டுகள் எடுத்துள்ளது. இந்தப் பொறுப்பிலிருந்தும் யூனியன் காபைட் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு விபத்து அமெரிக்காவில் நிகழ வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்கான இழப்பீடுகளை அந்த நிறுவனம் வழங்கியிருக்க வேண்டும். தங்களுடைய தவறுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டடு சில வாரங்களில் இவ்விபத்து நிகழ்ந்தது. இந்திராகாந்தியின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய மகன் ராஜீவ்காந்தி பிரதமரானார். 1989 டிசம்பர் வரை அவர் பிரதமராக இருந்தார். இவருடைய காலகட்டத்தில் நிகழ்ந்த இப்பாரிய விபத்தின் பொறுப்புக்கூறலிலிருந்து யூனியர்கார்பைட் நிறுவனம் தப்பிக்க வைக்கப்பட்டது.

தி ரெய்ல்வே மென் – The Railway Men’ என்ற விபரண நாடகமாகத் தயாரிக்கப்பட்ட படம் இந்த விபத்தை மிகத் தத்துரூபமாக விபரிக்கின்றது. யூனியக் கார்பைட் நிறுவனம் அங்கு உருவாகக் கூடிய வாயுவின் நச்சுத்தன்மையையும் அதன் தாக்கத்தையும் 1975ம் ஆண்டே அறிந்திருந்தும், அதன் ஆபத்தை வெளியிடாததும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அத்தொழிற்சாலையின் அடிப்படை பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்கவில்லை என்பதையும் அந்த விபரண நாடகம் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த ‘’விபத்துக்குக் காரணமானவர்கள் யூனியன் கார்பைட்டும் டோவ் கெமிக்கல்ஸ்ம் (Dow Chemicals, போபாலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்பபடி ஏன் வற்புறுத்தப்படவில்லை’’ என ரட்சன டின்ங்றா Rachana Dhingra என்ற உள்ளார் அழுத்தக்குழவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்

 

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்படும் – காணிகள் விடுவிக்கப்படும் !

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்படும் – காணிகள் விடுவிக்கப்படும் !

அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் உள்ள படைகளின் எண்ணிக்கை 50 வீதத்திலிருந்து 70 வீதத்திற்குக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகளும் விடுவிக்கப்படும் என தேசம்நெற்க்குக் கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பிரித்தானிய போன்ற மேற்குநாடுகள் போல் தேசிய மக்கள் சக்தி அரசும் தன்னுடைய இராணுவத்தை வினைத்திறன் மிக்க இராணுவமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து வினைத்திறன் மிக்க ‘ஸ்மாட்’ படையணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற வைஸ் மார்சல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் 28இல் திருகோணமலையில் உள்ள நவல் அன் மரிரைம் அக்கடமியின் அணிவகுப்பை ஏற்று டிசம்பர் 31இல் ஓய்வுபெற்ற இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை கொமான்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு இராணுவக் கட்டமைப்பை மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட அவர் வளங்களை எவ்வாறு அதன் உச்ச பலனைப் பெறும்வகையில் பயன்படுத்துவது மற்றும் வினைத்திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும் மீளாய்வுகள் செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார் பாதுகாப்புச் செயலர் சம்பத் துயகொந்த.

3,46.000 பேரைக்கொண்டு உலகின் 14வது பெரிய படையணியாக உள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையை 2030 இல் 1,00,000 ஆகக் குறைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசு திட்டமிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தவே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் முயற்சிகளை எடுக்கின்றது. எதிர்காலத்தில் எண்ணிக்கையில் அல்லாமல் திறமையின் அடிப்படையில், தேவையான பிரிவுகளுக்கு மட்டுமே ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலர் துயகொந்த தெரிவித்தார். இலங்கைப் படைகள் 8 ஆண்டுகள் சேவைக்காலம் முடிய அல்லது 50 வயதை எட்டுகின்ற போது ஒய்வுபெறுவார்கள். எதிர்காலத்தில் ஆட்சேர்ப்புகள் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுவதால் படைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரச பணியாளர்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்துள்ளது. இந்த அரச பணியாளர்களில் படையினரும் கணிசமான பங்கினர். இலங்கையின் சனத்தொகைக்கு இலங்கையில் உள்ள படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அடிப்படையில் படைகளை 1,00,000 மாகக் குறைக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் தேசிய மக்கள் சக்தியாலும் முன்னெடுக்கபடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது. பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் – பொதுத் தேர்தலுக்கு முன் வடக்கு கிழக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும். மேலும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது அவர்களுக்கு காணிகளும் அவசியமில்லாமல் போகும். இந்தப் பின்னணியில் இப்போதே காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் பாதைகள் திறக்கப்படுவதையும் காணலாம்.

மேலும் புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி டிஜிற்றலைசேஸனை உள்வாங்கி பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் படையினரை போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஈடுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2024இல் இராணுவம் வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் 451 கைதுககள் இடம்பெற்றுள்ளது. 5000 கிலோகிராமுக்கு அதிகமான கஞ்சா, கேரளா கஞ்சா, ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவத்தின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கசிப்பு சட்டவிரோத பீடிகள், சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் யால நீர்த்தேக்கப் பிரதேசத்திலும் உடவலவே பிரதேசத்திலும் மட்டும் 3,500 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது அதைவிடவும் 440,000 கஞ்சா கன்றுகள் அழிக்கப்பட்டுள்ளது. தற்போது யுத்தமற்ற சூழலில் இராணுவத்தின் தேவை வேறுவிதமான பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு வருகின்றது.

நிரந்தரமற்ற அரசாங்கத்துக்கும் நிரந்தரமான அரச அலுவலர்களுக்குமான மோதல் ! ஜேவிபியால் வெல்ல முடியாது!! முன்னாள் ராஜதந்திரி,

நிரந்தரமற்ற அரசாங்கத்துக்கும் நிரந்தரமான அரச அலுவலர்களுக்குமான மோதல் ! ஜேவிபியால் வெல்ல முடியாது!! முன்னாள் ராஜதந்திரி, நிர்வாக சேவைத்துறை பயிற்றுனர் அய்யம்பிள்ளை தர்மகுல சிங்கம்

https://youtu.be/HgUVWRmCN38?si=LxI-swZkIbcxI-nd

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் உணவிலும் ஊழல் மோசடி – ஆசிரியர் முன்சேவை பயிற்சியில் பல மில்லியன் ஊழல்.?

மாணவர்களுக்கான இலவச உணவில் ஊழல், பெண் ஆசிரியர்களிடமும் அடாவடி- கொட்டடி அதிபருக்கு எதிராக அனுரவிடம் முறைப்பாடு

ஊழலில் ஈடுபட்டுவந்த யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபர் வினாசித்தம்பி சிவனேசனுக்கு எதிராக ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவிடம் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றும் அதிபர் வி. சிவனேசன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு உட்பட பல்வேறு விடயங்களில் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பில் இரு வருடங்களுக்கு முன்பே எழுத்து மூல முறைப்பாட்டை பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக மட்ட அமைப்பினர் இணைந்து ஆளுநருக்கு வழங்கியிருந்தபோதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்தே ஜனாதிபதிக்கு இதுகுறித்து கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாய்மையடைந்திருந்த ஆங்கில ஆசிரியர் ஒருவரை மலசல கூடத்தில் வைத்து பூட்டியமை, பெண் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள்  முன்னிலையில் அடிக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வலயக்கல்வி பணிமணைக்கு புகாரளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இவற்றைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரின் வினைத்திறனற்ற செயற்பாட்டால் மாணவர்களது எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2015இல் 400 மாணவர்களாக இருந்த தொகை 2022இல் 202 ஆக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 6மாணவர்கள் மாத்திரமே தரம் 1இல் சேர்ந்துள்ளனர்.

வடக்கில் கஸ்டப் பிரதேச பாடசாலைகளை முன்வைத்து இவ்வாறான பல ஊழல் முறைகேடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. இவற்றில் கோட்டக்கல்வி, வலயக்கல்வி என மேல்மட்டத்தினரும் தொடர்புபட்டிருப்பதால் இவை மூடிமறைக்கப்படுகின்றன என தேசம்நெற்க்கு ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அந்த ஆசிரியர்.  பாடசாலையில் வழங்கப்படும் இலவச உணவுக்காக பாடசாலை செல்லும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் பலர் வடக்கில் உள்ளனர். இவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையை கவனத்தில் கொண்டே உலக உணவுத்திட்டத்தின் ஏற்பாட்டிலும் மேலும் பல புலம்பெயர்  தன்னார்வ அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் மாணவர்களுக்கான இலவச உணவுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சத்துணவாக முட்டை, மீன், நெத்தலி ஆகியவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட பல பாடசாலைகளில் இவை நடைமுறைப்படுத்தப்படுவது கிடையாது. உதவித்திட்டங்களை வழங்குவோர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் போது விதவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றது. குறித்த உணவுக்கான பணம் ஏதோ ஒருவகையில் களவாடப்படுகிறது. சில பாடசாலைகளில் மாணவர்களின் இலவச உணவுக்காக வழங்கப்படும் பணத்தில் தான் மதில் கட்டுதல் தொடங்கி ஆசிரியர் அதிபர் கௌரவிப்பு விழாக்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சில் பல குறைபாடுகள் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்சேவைப்பயிற்சி செயலமர்வுகள் கோப்பாய் தேசிய கல்வியற்கல்லூரியில் நடைபெற்றிருந்தது. 10 நாட்களுக்கான மொத்த செலவு சுமார் 90 லட்சம் ரூபாய் என வடக்கு மாகாண கல்வி திணக்கள பணிப்பாளர் நிகழ்வு அங்குரார்ப்பண விழாவில் தெரிவித்திருந்ததாகவும் எனினும் உணவின் தரம் மிகக்கீழான நிலையில் காணப்பட்டதாகவும் பல ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.நாளொன்றுக்கு ஆசிரியர் ஒருவருக்கான உணவுக்கான பணம் ரூபாய் 2000 வரை செலவிடப்படுதாக கூறிய போதும் கூட அதற்கேற்றதான உணவு வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் சிலர் முன்சேவை பயிற்சி காலத்தின் போதே ஏற்பாட்டுக்குழுவினருடன் முரண்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது. எனினும் இது தொடர்பில் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேசிய வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு கந்தையா பிரட்லி ஜெனட் ஆசிரியர்கள் தாபன விதிக்கோவைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் அது மீறினால் கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் பகிரங்கமாக எச்சரித்திருந்தததாக அறிய முடிகிறது. குறித்த முன்சேவை பயிற்சி செயற்றிட்டத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும்  அறிய முடிகிறது.

ஊழல் மலிந்து போயுள்ள வடக்கின் அனைத்து அரச துறைகளிலும் தான் முதலில் சிஸ்டம் சேஞ்ச் வரவேண்டும் என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் முன்னாள் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார் தெரிவித்திருந்தார். பாசாலை அதிபர் தொடங்கி மாகாண கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள் வரை உணவுத்திட்டம் என்ற பெயரில் ஊழல் செய்வது கல்விச்சமூகத்தின் நிலை தொடர்பில் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. ஊழல் ஒழிப்பு என்ற கொள்கையுடன் நாட்டில் ஆட்சியேற்றுள்ள  புதிய அரசாங்கம் இவ்வாறான ஊழல்களுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளிக்கு