February

February

“உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான ரஸ்ய படைகள்.” – அமெரிக்கா குற்றச்சாட்டு !

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு கனிசமானளவு  மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஸ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழலில், உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஸ்யா குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது,

“ கடந்த 24 மணி நேரமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன்  எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் எல்லையில் படைகளை அதிகரித்து வருகிறார்.

எல்லையில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர்,  ரஸ்யா – உக்ரைன் இடையே நிலவும் பதற்றத்தை தவிர்க்க, இரு நாட்டு அதிபர்களிடமும் இந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

காவி மாணவர்களின் மிரட்டலுக்கு நடுவில் ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கிய முஸ்லீம் மாணவி – காணொளி இணைப்பு !

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 6 இஸ்லாமிய மாணவிகள் புர்ஹா (ஹிஜாப்)  அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. சமத்துவத்தை நிலைநாட்ட மாணவ மாணவிகள் சீருடை அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி அம்மாணவிகள் புர்கா அணிந்து வந்ததாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், புர்கா அணிவது எமது உரிமை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராகவும் இந்து மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் கல்லூரி மாணவர்கள் பலர் காவி துண்டை அணிந்துகொண்டு எதிர்வினையாற்றி வருவது மாநிலத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சக மாணவிகள் தங்களது உரிமைக்காக போராடி வரும் சூழலில், மத வன்முறையை தூண்டும் நோக்கில் மாணவர்கள் பலர் காவி சால்வை அணிந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்திக்கொண்டு இஸ்லாமிய மாணவியை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஆசிரியர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றிய மாணவர்கள் காவிக் கொடியேற்றும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்க, காவி சால்வை அணிந்து அட்டகாசம் செய்யும் மாணவர்களின் வீடியோவும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அம்மாநில முதல்வர் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளார். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டி கோரிக்கையும் வைத்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடகாவில் தீவிரமைடையும் ஹிஜாப் ஆடை விவகாரம் – கல்லூரி மாணவர்களிடையே காட்டுத்தீயாய் பரவும் மதவாதம் !

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

hijab ban: ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்! - midst a big row over the  ban on wearing hijab there are a few muslims who support the ban | Samayam  Tamil

 

இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.

இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டம் இன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் கூற்றுப்படி, ஹிஜாப் அணிந்து வகுப்பறைகளில் நுழைவதைத் தடை செய்வது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது.

கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2)படி, கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது நிர்வாகத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடையை மாணவர்கள் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ” மாணவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம். நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது” குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் உடுப்பி, சிக்மகளூருவில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதனால் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற மக்களவையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தை ஏற்க மறுப்பதாகக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து கனடாவில் தொடரும் போராட்டம் – அவசர நிலை பிரகடனம் !

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில்  அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லொறி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லொறி ஓட்டுநர்கள் , தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லொரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலைகளில் விளையாட்டுகளும் விளையாடுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒட்டாவில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஓட்டாவா மேயர் கூறுகையில், இந்த போராட்டம் வருத்தம் அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு சவாலானது. தலைநகரில் உள்ள போலீசாரை விட போராட்டத்தில் ஈடுபடு பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
இதற்கிடையே லொறி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக கனடாவில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டு – பதவி ஏற்ற ஒரு வாரத்தினுள் பதவி விலகிய பிரதமர் !

தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ந் திகதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியதாக அந்த நாட்டின் வானொலி அறிவித்தது. அவர் துஷ்பிரயோகம் செய்பவர் என வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்து விட்டார்.

மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் மீது அவர் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பிரதமர் ராஜினாமா செய்திருப்பது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவும் – ரஷ்யாவும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் !

மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

குளிர்கால ஒலிம்பிக்கிற்கான விளாடிமிர் புட்டின் விஜயத்தின் போது பல சிக்கல்கள் குறித்த அவர்கள் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கத்திய சக்திகள் ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த நேட்டோ பாதுகாப்பு கூட்டணியை பயன்படுத்துவதாக விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே நாட்டவர்கள் என தெரிவிக்கும் புடின் எல்லையில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புக்களை களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை, உக்ரைனை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நேட்டோ ஒரு பனிப்போர் சித்தாந்தத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளன. இதேவேளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான அவ்க்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து இரு நாடுகளும் கவலை வெளியிட்டுள்ளன.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் குறித்த ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா கடந்த ஆண்டு அறிவித்தது.

தென் சீனக் கடல் போன்ற சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் பதற்றத்தை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் – விசேட அவதானம் செலுத்தும் பிரித்தானியா !

இலங்கையில் படையினரால், பாதுகாப்பு தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் , இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து பிரித்தானியா ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் ஒன்று தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

92வது வயதில் காலமானார் இந்திய பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் !

இந்திய பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மீண்டும் மோசமானது.

why Lata Mangeshkar Never Got Married ? This is the Reason | லதா மங்கேஷ்கர்  திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? | Movies News in Tamil

இந்நிலையில், லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை – ஆராரோ ஆராரோ – எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் – உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க 5 நாள் முயற்சியும் வீண் – பிரிந்தது ரயான் அவ்ரமின் உயிர் !

மொராக்கோவின்  வடக்கு பகுதியில்  இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது.

சிறுவன் Rayan உயிரிழப்பு.., கடும் துயரத்தில் மொராக்கோ.. - லங்காசிறி நியூஸ்

கடந்த செவ்வாய்கிழமை ரயான் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன், குறித்த ஆழ்துறை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டி, சிறுவனை மீட்கும்  பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.

சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் பிராணவாயு வழங்கப்பட்டது. கைப்பேசி மற்றம் கெமரா மூலம் சிறுவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த சிறுவனை மீட்கும் நடவடிக்கையானது உலக நாடுகள் முழுவதினதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவனை உயிருடன் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் ரயான் உயிரிழந்து விட்டதாக இரண்டு அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன் மொரோக்கோ நாட்டின் மன்னர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு ரயானின் பெற்றோரைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ரயானுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளனர்.

“சீன இந்திய பிரச்சினையில் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆதரவாக செயல்படுவோம்.” – அமெரிக்கா அறிவிப்பு !

“இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து ஆதரிப்போம்.” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் ஊடகங்களுக்கு தெரிவித்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்இ. மேலும் பேசிய அவர்,

சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் வளமை, பாதுகாப்பு கருதி, எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கு துணை நிற்போம்.

சீனா, பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. அதற்கு ஒலிம்பிக் தீபம் ஏந்திச்செல்ல குய் பபோவா என்ற ராணுவ அதிகாரியை தேர்ந்தெடுத்துள்ளது. அவர், கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்திய சீன ராணுவ படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தவர். அதனால் அவரை தேர்வு செய்ததற்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 2 பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்கோ ருபியோ என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-

பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா அரசியல் ஆக்குவதை நிரூபிக்க மற்றொரு உதாரணம் கிடைத்துள்ளது. இந்திய படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியை தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. திட்டமிட்டே ஆத்திரத்தை தூண்டுவதாக உள்ளது. இதில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜிம் ரிஸ்ச் என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவரை ஒலிம்பிக் தீபம் ஏந்த சீனா தேர்வு செய்திருப்பது வெட்கக்கேடானது. உய்குர் இனத்தினருக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்து வருகிறது. அவர்களின் விடுதலைக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஆதரவாக அமெரிக்கா செயல்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.