May

May

பாராளுமன்ற அமர்வுகள் நேற்று மழை காரணமாக இடைநிறுத்தம்

parliament2.jpgஸ்ரீஜய வர்த்தனபுர கோட்டே பகுதி உட்பட கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நேற்று இடைநடுவில் நிறுத்தப்பட்டன. வழமையாக பாராளுமன்றத்தினுள் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதி வீதி முழுமையாக நீரில் மூழ்கிக் காணப்பட்டது. மாற்று வழியாக பத்தரமுல்ல பகுதியிலிருந்து நுழைவு வீதி பயன்படுத்தப்பட்டது. தியவன்னா ஓயாவை ஊடறுத்து பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதியும் சிறிதளவு நீரில் மூழ்கியிருந்தது.

வழமைபோன்று பாராளுமன்ற அமர்வுகள் நேற்றுக்காலை 9.30க்கு ஆரம்பமானது. இச்சமயத்திலிருந்து கடும் மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளைக்கு பின்னரும் சபை அமர்வுகள் ஆரம்பமாகின. பிற்பகல் 2.00 மணியளவில் அமைச்சர் டிலான் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

எமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி இடைவிடாது பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கிவருவதாக தெரியவருகிறது.

பாராளுமன்றத்தின் முன்னாலுள்ள வீதியும் நீரில் மூழ்கி வருகிறது. பாராளுமன்றத்தில் தொழில் புரியும் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக நிலைமை மேலும் மோசமடையலாம். எனவே சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லை இடைநிறுத்துவதா? என சபை முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதனை ஆமோதித்த அமைச்சர் விமல் வீரவன்ச “கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டது. சபை இதற்கு முடிவு எடுக்க வேண்டும்” என்றார். சபாநாயகரின் ஆலோசனையை பெற்று சபையை இன்று காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக உதவி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் நேற்று இரண்டு மணிக்கு முடிவடைந்த வேளையிலும் மழை குறைவடைந்ததாக தெரியவில்லை.

எம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்…

sp.jpgபாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படியே பாராளு மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமெனவும் சபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும் வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கு சபாநாயகர் நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுந்த சர்ச்சை யொன்றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாச, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது அதற்குப் பொருத்த மில்லாத வகையில் ஐ.தே.க. எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, தயாசிரி ஜயசேகர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க ஆகியோர் கூச்சலிட்டனர். இதன்போதே இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் இவ் அறிவுறுத்தலை வழங்கினார்.

வன்னிப் படுகொலைகளும் அதன் நினைவு கூரலும்! : பாண்டியன் தம்பிராஜா

May_18_Remembranceபுலி துதிபாடிகள் வன்னிப் படுகொலைகளை நினைவு கூரத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு பிரபாகரன் கோமணத்துடன் வீழ்ந்து கிடந்த நாள்தான் நினைவிற்கு வருகின்றது. இந்த வியாபாரிகளுக்கு அரச இராணுவத்தாலும் புலிகளாலும் கொல்லப்பட்ட எம் சகோதரர்கள் மேல் எந்தவித நினைவும் இல்லை.

மனித நேயத்தின் அடிப்படையில்தான் பிறர் மீது அன்பு செலுத்துவது ஆகும். பாசிச புலித்தலைமைக்கு அது பற்றி கவலை ஒரு போதும் இருந்ததில்லை. அவர்களுக்கு புலியினது இருப்பே பிரதானமானது. புலி அமைப்பு என்பது மக்களுக்காகவே அன்றி புலிக்காக மக்கள் அல்ல. மாறாக புலி மக்களின் அழிவில் தம்மை பாதுகாக்க முயன்றனர் என்பது உங்களுக்கு தெரிந்ததே.

மறுபக்கமாக மனித நேயத்தின் அடிப்படையில் புலிகளின் இந்த மனித விரோத நடவடிக்கைகளை விமர்சித்த ஜனநாயக வெங்காயங்கள் வன்னி படுகொலைகளை மறுத்து மறைக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது.

நண்பர்களே! ஏங்களுக்கு இந்த படுகொலைகளை கண்டித்து நினைவு கூர மிகுந்த விருப்பம் உண்டு. ஆனால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும் வரை அவர்கள் இப்படுகொலையில் புலிகளின் பங்கை ஏற்கும் வரையில் அவர்களுடன் இணைந்து நினைவு கூருவது சாத்தியமில்லை.

ஐயோ என் சொந்தங்களே, உங்களை எண்ணி அழக் கூட முடியவில்லை. ஏனெனில் அதற்கு கூட இங்கு வியாபாரிகள் உண்டு!

வலி வடக்கு மீள்குடியேற்றத்தில் இணைந்து செயற்பட யாழ் பா உ க்கள் முடிவு! தீர்க்கமான முடிவு எடுக்காவிடில் யாழ் பா உ க்களுக்கு எதிராக போராட்டம்!!

Mavai_Senathirajahஅதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இரு வாரங்களில் சாதகமான முடிவெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (May 17 2010) தெல்லிப்பழையில்  நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் ஆர்.சி நடராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ். சிறிதரன், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தயாராக இருப்பதாக மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் சகலரும் இணைந்து செயற்பட முன்வந்தால், தானும் பங்களிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

யாழ் மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் இது குறித்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இக்கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின தலைவர் ஆர்.சி. நடராசா குறிப்படுகையில் வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கமாக முடிவை அறிவிக்காவிடில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாகள் ஒன்பது பேருக்கும் எதிராக போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிக்க வழிவகை செய்வேன் – ஜனாதிபதி

mahinda-raja_1.jpgபாரிய அபிவிருத்திகள் தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கும் வகையில் ஜீ-15 அமைப்பானது ஜீ-08 அமைப்புடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையினை உண்மையானதாகவும் யதார்த்தமுள்ளதாகவும் ஆக்குவதற்கு தெளிவான முறையொன்று தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஜீ-15 அமைப்பின் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி செயற்பாட்டை தோற்றுவிப்பதற்காக பொருளாதாரம், நிதி, விஞ்ஞானம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலுள்ள திறமைசாலிகள் மற்றும் தனிப்பட்ட அனுபவசாலிகளைக் கொண்ட செயற்பாட்டு படையொன்றை நியமிப்பது பொருத்தமானதெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈரான் இஸ்லாமிய குடிய ரசுக்குப் பின் ஜீ-15 அமைப்பின் தலைமையை இலங்கை பொறுப்பேற்பது மிகவும் மகிழ்ச்சியுடனேயேயாகும். அடுத்த ஆண்டு இந்த அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நாம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளோம். கடந்த காலங்களில் இந்த அமைப்புக்கு மிகவும் திறமையாக வழிகாட்டி வந்த கலாநிதி, மஹ்மூத் அஹ்மட் நெஜாட்டுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

தெற்கின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பு மற்றும் அந்தத் துறையின் சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்கொள்வ தற்கு வழிகாட்டிய உங்களுடைய அர்ப்பணிப் பான சேவைக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.

எவ்வாறாயினும் எமது இந்த அமைப்புக்கு புனர்வாழ்வளித்து அதனைத் தொடர்ந்து முன்நோக்கி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் இப்போது ஒரு சுற்றுவட்டத்தை முடித்துக் கொண்டுள்ளோம். எங்களது அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியலில் மாற்றம் ஏற்பட்ட ஒரு யுகத்திலாகும். நாங்கள் இன்று 20 வருடத்தை பூர்த்தி செய்வது இந்த பூகோளமயம் மாற்றமடைகின்ற சந்தர்ப்பத்திலாகும்.

சவால்களைக் கொண்ட சூழ்நிலை, நீண்ட எதிர்காலத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. நாங்கள் முதன்மை வழங்கக் கூடிய துறைகள் அநேகமானவை. பிணக்கு முடிவடைந்தாலும் எங்களால் கட்டியெழுப்பப்பட வேண்டியவை இன்னமும் முடிவடையவில்லை.

உலகெங்கும் நடைபெறுகின்ற இயற்கை அழிவுகளை சுட்டிக் காட்டுவது காலநிலை விபரீதங்களை நிர்வகிப்பதற்கு பூகோள ரீதியாக நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். அதற்கிடையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற அபிவிருத்தி சவால்கள் ஏராளமானவை. அவை வறுமையொழிப்பு, பட்டினியொழிப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதார சேவையை பெற்றுக் கொடுத்தல் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவாகும். நான் கூறிக் கொள்வதென்னவென்றால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எங்கள் அமைப்புக்குள் தீர்வுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. எனினும் செல்வச் செழிப்பு மிக்க மிக ஒற்றுமையான எங்கள் அமைப்புக்கூடாக நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய விசேட நடவடிக்கை எடுக்கலாமென்பது எனது நம்பிக்கையாகும்.

தலைமைப் பொறுப்பை கையேற்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜீ-15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்கு வழிவகை செய்வேன் என அவர் உறுதியளித்தார்.  இச் செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்பு கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் ஏழு பேர் நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு அங்கத்தினர் ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

சகல இனங்களையும் பல்கலாசாரத்தையும் பிரதிபலிப்பதான இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற சட்ட மா அதிபருமான சித்தரஞ்சன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தினர்களாக கலாநிதி ரொஹான் பெரேரா, எச். எம். ஜி. எஸ். பலிகக்கார, பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி, சி. சண்முகம், திருமதி மனோராமநாதன், மெக்ஸ்வெல் பரனகம ஆகியோரும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

நாட்டின் சகல சமூகங்களினதும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டதாகச் செயற்படும் இவ்வாணைக்குழுவானது அது தொடர்பான விடயங்களை விசாரணை செய்து அதன் அறிக்கையையும் விதப்புரைகளையும் ஆறு மாத காலத்திற்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சகல அரசாங்க ஊழியர்களும் நபர்களும் தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பினையும் இதற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆணைக்குழுக்கள் விசாரணைச் சட்டத்தின் 14ம் பிரிவின் 393ம் அத்தியாயத்தின் கீழான விதிகளுக்கிணங்க இவ்வாணைக்குழு இயங்கும்.

இவ்வாணைக்குழுவில் அங்கத்தவரான டாக்டர் ரொஹான் பெரேரா வெளி விவகார அமைச்சின் சட்ட ஆலோசகரும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு ஆசிய பிராந்தியத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழு ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்காக ஐ. நா. பொதுச்சபையினால் வேட்பாளராக நியமிக்கப்பட்டவராவார்.

எச். எம். ஜீ. எஸ். பலிகக்கார ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவராவார்.

பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பிரதித் தலைவராவார்.

சி. சண்முகம் முன்னாள் திறைசேரியின் செயலாளராவார்.

திருமதி மனோ இராமநாதன் முன்னாள் நீதியரசர் பி. ராமநாதனின் மனைவியும் பிரதி சட்ட வரைஞராகப் பணியாற்றுபவருமாவார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர்.

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி

rain.jpgநாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரி ழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

rain.jpgஎட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளா கியிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர். இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார். இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்மழையினால் மேல் மாகாணத்திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா – மினுவாங்கொட, கம்பஹா – ஜாஎல, கம்பஹா – உருதொட்ட, பெலும்மகஹா – வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார். கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன. குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார். களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம்; இடியுடன் கடும் மழை தொடரும்; மக்களுக்கு எச்சரிக்கை!

9colombo.jpgதிருகோண மலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரன தெரிவித்தார்.

இந்தத் தாழமுக்கத்தினதும், தென்மேல் பருவ பெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி நிட்டம்புவவில் 313.6 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்ய முடியும் என வானிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

இக்காலப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் அதிக மழை காரணமான பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்நிலையம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது. வானிலையாளரான கயனாஹெந்த வித்தாரண மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் தற்போது இலங்கைக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி நிட்டம்புவவில் 313.6 மி.மீ, மக்காவிட்ட 223.5 மி.மீ, ஹங்வெல்ல 210 மி.மீ, கலட்டுவாவ 219.5 மி.மீ, குக்குலேகங்கை 188 மி.மீ, அவிசாவளை 157 மி.மீ. என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் முடிவுற்ற 6 மணி நேர மழைவீழ்ச்சி பதிவுப்படி இரத்த மலானையில் 169.5 மி.மீ. கொழும்பில் 126 மி.மீ. என்றபடி மழை பெய்துள்ளது என்றார்.

”யாழ் கடத்தல் முயற்சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல்களும் காதலர்களின் திருமண முயற்சிகளுமே” – மாநகர முதல்வர் : வி ராம்ராஜ் (ரிபிசி பணிப்பாளர்)

Jaffna_Mayor_Yogeswari_Patkunam”யாழ் நகரை அபிவிருத்தி செய்ய தமிழ் மக்கள் முன்வரவேண்டும்” என யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் May 16 2009 ரிபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துதுரையாடலில் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
”அண்மைக்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த கடத்தல் முயற்சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகளுமேயாகும். எனினும் இவற்றை யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர்ப் பத்திரிகைகள் சில கடத்தல் சம்பவங்கள் என்றே செய்திகளைப் பிரசரித்து நாடுகடந்த தமிழ் ஈழ் அரசிற்க்கு ஆதரவு தேடும் முயற்சிற்களில் ஒன்றாகவே காணபடுகிறது.
 
யாழ் மாநகர சபையின் துணை முதல்வர் கைது என்பது ஒரு மொட்டை கடிதத்தை கொண்டே கைது செய்யபட்டுள்ளார். அது தொடர்பாக மக்களின் வேண்டுகோள்ளுக்கு இணங்க நீதிதேவதை நீதி வழங்க என்ற அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன் தவிர நீதிதுறை நான் விமர்சிக்கவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்
 
”இந்தியாவின் அணுசரனையுடன் ஜனாதிபதி இன்னும் மூன்று மாதகாலத்திற்க்குள் 13வது அரசியல் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவதுன் ஊடாக முழுமையான தீர்வு ஒன்றை காணவுள்ளதாக ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளலஸ் தேவநந்தாவுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார். மிகவும் பலமான அமைப்பான விடுதலை புலிகளால் கூடு தமிழ் ஈழ விடுதலை வெற்றி பெறமுடியாவில்லை மற்றவர்களால் எவ்வாறு தமிழ் ஈழ அடையமுடியும்” என யாழ் மாநகர முதல்வர் கேள்வி எழுப்பினார்.
 
நல்லூர் ஆலய பகுதிகளில் தற்காலிகமாக நடைபாதை வியாபாரிகளுக்கு மக்களின் உடனடி தேவைகளுக்காக தற்காலிகமாக அனுமதி வழங்கபட்டிருந்தது ஆனால் இப்பொழுது அப்பகுதி முழுமையாக புனிதபடுத்தபட்டிருப்பாதாகவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தெரிவித்தார்.

இனியொரு முள்ளிவாய்க்கால் செய்திடோம் என்று சங்கே முழங்கு!!! : த ஜெயபாலன்

May18_2009_Rememberanceவன்னி யுத்தம் முற்றுப் பெற்று ஓராண்டுகள் நினைவு கூரப்படுகின்றது. சுதந்திர இலங்கையில் காலம் காலமாக தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் சாணக்கியம் என்பது நினைவு கூரலிற்கு அப்பால் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. இதற்கு தமிழ் மிதவாதத் தலைமைகளோ தீவிரவாதத் தலைமைகளோ விதிவிலக்கல்ல. வன்னி யுத்தத்தைத் தடுப்பதற்கான அரசியல் வழிமுறைகள் இருந்த போதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவத் தலைமையும் அது தெரிவு செய்திருந்த ஒருவழி அரசியல்பாதையும் தமிழ் மக்களை பணயம் வைத்து தன்னுடன் மக்களையும் உடன்கட்டையேறச் செய்துள்ளது. ஆதன் ஓராண்டை சம்பிரதாயபூர்வமாக தமிழ் தேசியத் தலைமை தனது அரசியல் உயிர்ப்பிற்கு கையிலெடுத்துள்ளது.

சுதந்திர இலங்கையில் பல்வேறுபட்ட சமூக முரண்பாடுகள் இருந்த போதும் பிரதான முரண்பாடாக இருப்பது ஒடுக்குகின்ற ஆளும் குழுமத்திற்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கும் இடையிலான முரண்பாடு. இந்த முரண்பாட்டில் குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற தமிழ் சமூகத்திற்கும் ஒடுக்குகின்ற ஆளும் குழுமத்திற்கும் இடையிலான முரண்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பிரதான முரண்பாடாக இருந்து வந்துள்ளது. ஒடுக்குகின்ற குழுமம் அல்லது ஒடுக்குகின்ற அரசு தானாக முன்வந்து ஒடுக்குமுறையைக் கைவிடப் போவதில்லை. அது தொடர்ந்தும் ஒடுக்குமுறையை தக்க வைத்துக் கொள்வதற்கான வழிவகைகளை தொடர்ச்சியாகத் தேடிக்கொண்டே இருக்கும். ஆந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்கின்ற சக்திகளுக்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய பொறுப்பு உண்டு. அம்மக்கள் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை தடுத்து அல்லது மட்டுப்படுத்தி அம்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்களின் பொறுப்பு.
  
ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் அரசியல் என்பது தமிழ் மக்களின் வாழ்வியலை மிகமோசமாகப் பின்னடையச் செய்துள்ளது. கடந்தகால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி 2009, 1983, 1977, 1956 என்று சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையைக் காட்டி அரசியல் செய்கின்ற போக்கே தொடர்கின்றது. இந்தக் காலகட்டத்திற்கு இன்னும் சற்றுப் பின் சென்று பிரித்தானிய காலனித்துவம் தான் இவையெல்லாவற்றுக்கும் காரணம் என்று பழிபோடுவதும் இவர்கள் கையாள்கின்ற மற்றுமொரு யுக்தி. சுpங்கள பேரினவாதம், காலனித்துவம் பூச்சாண்டிகளெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரியாததல்ல. இதனை ஆண்டாண்டு காலம் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை அவசியமில்லை. இந்தச் சூழலில் உங்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற ஒடுக்குமுறையை நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியுமா? துமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முடியுமா? அதனைச் செய்ய முடியாத தலைமைகள் அப்பொறுப்பில் இருந்து தங்களை வெளியேறுவதே அழகு.

ஆனால் இதுவரை அவ்வாறு நிகழவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களில் சவாரி செய்த தமிழ் தலைமைகள் சவாரி செய்வதில் ருசி கண்டனவேயன்றி இலக்கு நோக்கி நகரவில்லை. மாறாக அதற்கு எதிராகவே நகர்ந்துள்ளன. ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாதத் தீவிரவாதத் தமிழ் தேசியவாதத் தலைமைகளால் கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய அவசரமும் அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள எவ்வாறு முடிந்தது என்ற இந்திய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ‘கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கான காரணங்களைக் கண்டு பிடித்து சரி செய்தோம்;. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தோம்.’ என்று தெரிவித்திருந்தார்.

ஒடுக்குமுறை மேற்கொள்கின்ற அரசிடம் தனது இலக்குநோக்கி இருந்த விவேகமும் தூரநோக்கும் அதனிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தங்களை ஏகபிரதிநிதிகளாகக் அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. அதனாலேயே அரச இயந்திரம் ‘புரஜக்ற் பீக்கன்’ என்று கால அட்டவணை போட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டும் அறியாமல் இருக்கவில்லை தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையுமே அறியாமல் இருந்துள்ளனர்.

மூன்று தசாப்த கால விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துப் போராளிக் குழுக்களையும் மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகைளயும் அழித்து தங்களை ஏக பிரதிநிதிகள் என்று அறிவித்தனர். மே 16 2009 வரை அவர்கள் ‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி யுத்தம்’ என்றும் ஒவ்வொரு நிலப்பரப்பையும் இழக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் ‘தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்றும் அறிவித்தனர். ‘தலைவர் திட்டமிட்டபடியே பின்வாங்குகிறோம். உள்ளுக்கு விட்டு அடிப்போம்.’ ஏன்று அரசியல் இராணுவ ஆய்வுகள் களைகட்டின. 30 ஆண்டுகால போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மே 17 2009ல் இரவோடு இரவாக வரலாறாகிப் போனார்கள். வுரலாற்றை கற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தங்கள் உச்சவிலையை அதற்குச் செலுத்தினர். இவர்களால் அப்பாவி மக்களும் தங்கள் உச்சவிலையைச் செலுத்த வேண்டி ஏற்பட்டது.

ஆனால் இந்த மிக மோசமான நிலையிலும் மிதவாத தீவிரவாத தமிழ் தேசியத் தலைமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையை இதுவரை மீளாய்வு செய்யவில்லை. தமிழ் தேசியவாதத்தை புலம்பெயர்ந்த மண்ணில் உசுப்பி விட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களில் உள்ள இரத்தக் கறையைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஒரு சமூகத்தைத் தலைமை தாங்குவதற்கான அடிப்படைத் தகுதியை இழக்கின்றனர். இத்தலைமைகள் கடந்த காலத் தவறுகளை ஏற்க மறுப்பது அதே தவறுகளை அவர்கள் மீண்டும் விடுவதற்கே வழிகோலும். தமிழ் மக்களுக்காக தமிழ் தலைமைகளால் எதனையும் சாதிக்க முடியாமல் போனதற்கான முழுமுதற் காரணம் அவர்களுடைய கட்சிசார்ந்த அல்லது தனிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளே. தங்களுடைய அரசியல் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் என்றும் மேற்கொண்டதில்லை. எதிரியின் மீது பழியைப் போட்டுவிட்டு எதிரியின் பலவீனத்தில் அரசியல் செய்கின்ற தலைமைத்துவமே இதுவரை இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது.

இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள முதலாளித்துவக் கட்சிகளே தேர்தலில் மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கத் தவறும்பட்சத்தில் தாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை ஏற்று கட்சிப் பதவியில் இருந்து வெளியேறி புதிய தலைமைக்கு வழிவிடுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத்த மிதவாதத் தலைமையாக இருந்தாலென்ன, தீவிரவாதத் தலைமையாக இருந்தாலென்ன எப்போதும் மக்கள் அபிப்பிராயம் பற்றி கணக்கிலெடுத்ததில்லை.

எஸ் ஜே வி செல்வநாயகம் நோய்வாய்ப்படும் வரை அவரே தமிழரசுக் கட்சித் தலைவர் தலைவர், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்படும் வரை அவரே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம், தமிழீழ விடுதலைப் புலிகளால் அல்லது வேறுவழிகளில் கொல்லப்படும்வரை ஒரே தலைமையே அந்தந்த இயக்கங்களை வழிநடத்தியது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகியும் கொல்லப்பட்டாரா இல்லையா என்ற விவாதம் தொடர்கிறது. அதற்கு இன்னமும் தலைமை இல்லை.

வன்னியில் மக்கள் தினம்தினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் ஆட்சியாளர்களுடன் பேச மறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தற்போது அதே அரசுடன் பேசத் தயார் என்கிறார். இதையே அன்று அந்த அரசுடனும் பேசி தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் பேசி பணயமாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஆயிரக் கணக்கான வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதித்து இருந்தால் இன்று எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். ‘யுத்தத்தின் ஆரம்பத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தித்து இருக்க முடியும்’  என எம் கே சிவாஜிலிங்கம் 2009 பெப்ரவரியில் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை. இன்று சகல பழியையும் தமிழீழ விடுதலைப் புலிகளிலும் இலங்கை அரசின் மீதும் போட்டுவிட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஆர் சம்பந்தன் தக்க வைத்துள்ளார். வன்னி மக்களின் இவ்வளவு அழிவிலும் ஆர் சம்பந்தனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பொறுப்பு உள்ளது. இந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை தடுத்து நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாத இயலாமைக்காக ஆர் சம்பந்தன் தனது தலைமையைத் துறந்திருக்க வேண்டும்.

அதேபோல் தமிழ் மக்களால் தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சிறிதரன் போன்றவர்கள் தங்கள் தலைமையை தொடர்ந்தும் வைத்திருப்பது மக்களுடைய தீர்மானத்திற்கு எதிரானது. இவர்கள் தங்கள் தலைமைகளைத் துறப்பதுடன் இவ்வமைப்புகள் தங்கள் அரசியல் பற்றி தீர்க்கமான முடிவுகளுக்கு வரவேண்டும். அவசியமானால் கூட்டிணைவை ஏற்படுத்துவது அமைப்பினைக் கலைத்துவிடுவது பற்றி இவர்கள் சிந்திப்பது அவசியம்.

தமிழ் மக்களின் தலைமைத்துவம் என்பது யாருக்கும் ஆயுட்காலப் பதவியல்ல. குறிப்பிட்ட காலத்தில் இத்தலைமைகளால் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதிக்க முடியாது போயுள்ள நிலையில் இவர்கள் தங்கள் தலைமைப் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குவதே மேல். தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அம்மக்களின் விடுதலையை வென்றெடுத்து அம்மக்களால் நேசிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் அந்தத் தலைமையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளவில்லை. தமிழ் சமூகம் அவ்வாறான தலைவர்களை உருவாக்காது போனது அல்லது அவ்வாறானவர்கள் கொல்லப்பட்டமை மிகவும் துரதிஸ்டமானது.

பொதுவாகவே இந்தத் தலைமையை தக்க வைத்துள்ளவர்கள் அமைப்பில் கட்சியில் உள்ளவர்கள் வற்புறுத்துகின்றார்கள், தலைமையை ஏற்பதற்கு ஆளில்லை போன்ற நொண்டிச்சாட்டுக்களையே தெரிவிப்பது வழமை. நீங்கள் தலைமையை உடும்புப் பிடியாகப் பிடித்து இருந்தால் ஒருவர் எப்படி தலைமை ஏற்க முன்வருவார். இத்தலைமைகளுடைய இவ்வளவு கால அனுபவமும் சாணக்கியமும் தமிழ் மக்களுக்கு எதையும் சாதிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு தங்கள் ஆயுட்காலம் முழுவதும் தலைமை தாங்குவதற்கு மட்டுமே அவை பயன்படுகின்றது.

இனியொரு முள்ளிவாய்க்கால் நோக்கி நாம் செல்லாது இருக்க வேண்டுமானால் தமிழ் மக்களினால் இதுவரை காலமும் எதனையும் சாதிக்க முடியாது போன காரணங்களை ஆராய்ந்து கண்டறிய வேண்டும். தமிழ் சமூகத்தின் அரசியல் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலுக்கு வன்னி மக்களை அழைத்துச் சென்ற தமிழ் அரசியல் தலைமைகள் அவர்கள் தயாகத்தில் இருந்தாலென்ன புலம்பெயர் நாடுகளில் இருந்தாலென்ன அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு தங்கள் தலைமைகளில் இருந்து வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் தமிழ் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான புதிய திட்டமிடலை புதிய தலைமையொன்று முன்னெடுக்க வேண்டும். ஒரே குட்டையில் கூறிய மட்டைகள் தலைமைத்துவத்தை தங்கள் ஆயுள் வரைக்கும் தக்கவைப்பதற்கும் பழைய புதிய பிளாவில் பழைய கள்ளு அருந்தும் அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலமே இனியொரு முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழ் மக்கள் நகர்த்தப்படுவதை தடுக்க முடியும்.

இனியொரு முள்ளிவாய்க்கால் செய்திடோம் என்று சங்கே முழங்கு!!!