March

March

‘எந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல’ – மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை

rathnasiri_wicremanayake.jpgஎமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது.

பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசும் போது :- அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை.

நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் ‘உறுமல்கள்’ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது.

மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள். நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.

நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டின் துரதிஷ்டம் என்னவெனில், கட்சி, நிறம், கொள்கை என்பவற்றால் நாட்டிற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு பொது உடன்பாடு காண முடிவதில்லை. இவ்வாறான குறுகிய நோக்கங்களால் எமது நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் பலமடைந்து வருகின்றன. எனினும், நாம் இன்னும் பிரிந்து நிற்கி றோம். இவைதான் நாம் முகம் கொடுத்து வரும் துரதிஷ்டவசமான நடவடிக்கைகள், எனினும், எமது புலனாய்வுப் பிரிவு இன்னும் தனது கடமையை செய்து வருகிறது.

மக்களை வாட்டி வதைப்பதற்காக அரசு எந்த சட்டத்தையும் நடைமுறைப்ப டுத்தவில்லை. ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகளை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நாம் பயன்படுத்தியதில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன்.

நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் எம்மால் அனுமதி வழங்க முடியாது. பொறுப்புள்ள ஒரு அரசு என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது.

அரச விரோத சக்திகளுக்குத் தேவையான விதத்தில் தகவல்களை வழங்கும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பலம்வாய்ந்த நாடுகளும் அமைப்புகளும் இன்று எமது நாட்டுக்கு எதிராக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் புலிகளை பலமடையச் செய்வதற்காக சில குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஜேர்மனியில் இவ்வாறான சிலர் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். வருடக் கணக்காக பின்தள்ளப்பட்டுப் போன எமது நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளுக்கு பலன் கிடைக்கப் போவது எதிர்காலத்திலேயே. வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.

மகா சிவராத்திரி தினம்; ஒலிபெருக்கியை பாவிக்க பொலிஸாரிடம் அனுமதி பெறலாம்

மகா சிவராத்திரி தினத்தன்று இரவில் ஒலிபெருக்கியைப் பாவிப்பதற்குப் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள முடியுமென்று அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

சகல இந்து ஆலயங்களும், அமைப்புகளும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு விண்ணப்பித்து, ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலவே இவ்வருட மஹா சிவராத்திரி தினமான 13 ம் திகதி சனிக்கிழமையன்று சகல இந்து ஆலயங்களிலும் இரவு முழுவதும் ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளையடுத்து, மாமன்றம் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட போது, இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக் கும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

எனவே, சகல இந்து ஆலயங்களும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, உரிய வகையில் விண்ணப்பம் செய்து இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந் தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தீ

நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் இடம் பெறும் பகுதியில் நேற்றுத் தீ விபத்தொன்று இடம்பெற்றதுடன் சில மணித்தியாலங்களில் அதனைக் கட்டுப்படுத்த முடிந்ததாக மின்வலு எரிபொருள் அமைச்சு தெரிவித்தது.

மேற்படி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலையொன்றே தீப்பிடித்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லை யெனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத் தீவிபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப் பட்டுவருவதுடன் தீ விபத்துக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக சீன நிறுவனத்தின் குழுவொன்று விசாரணைக ளில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 02 : போனஸ் ஆசன முறை சிறுபான்மையினருக்கான விமோசனம் அல்ல – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgவிகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்படுவதினால் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தினைவிட,  விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமாக சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்தகவு அதிகமானது என்பதைக் கடந்த வாரம் நோக்கினோம்.

பெரும்பான்மை தேர்தல் முறையினையும்,  விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய ஏனைய தலைப்புக்களை இன்று நோக்குவோம்.

நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும்முறை

முதலாம் குடியரசு அரசியலமைப்பின் 70ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவின்படி தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும்,  நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் மூலமாகவோ, சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த முறையின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை இருந்தாலும் கூட,  மக்கள் மத்தியில் பிரபல்யமான அரசியல் கட்சியொன்றினூடாக சிறுபான்மை வேட்பாளர் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக் குறியே.

ஏனெனில்,  தேர்தல் தொகுதியொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் ஒரு வேட்பாளரை மாத்திரமே அபேட்சகராக நிறுத்தமுடியும். எனவே,  சிறுபான்மை இனத்தவர்கள் செறிவாக வாழும் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள தொகுதிகளில் – குறிப்பாக பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் தொகுதிகளில் பிரதான கட்சிகள் இச்சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டாது. (பல அங்கத்துவ,  இரட்டை அங்கத்துவ தொகுதிகள் நீங்கலாக)  இதனால் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானதை அடுத்து இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளால் வடக்கு,  கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எந்தவொரு பிரதிநிதியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும்.
யதார்த்த பூர்வமாக நோக்குமிடத்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுற்றியே வாக்காளர்களின் விருப்புக்கள் அமைவதினால் சுயேட்சையாகவோ,  அன்றேல் ஒரு சிறுபான்மைக் கட்சியின் மூலமாகவோ போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமான காரியமே.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தல்

1978 யாப்பின் கீழ் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 ம் குடியரசு அரசியலமைப்பைப் போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.

யாப்பின்படி பட்டியலைத் தாக்கல் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும்போது தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவாகவுள்ள அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்றைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேட்சைக் குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கமைய பட்டியலைத் தயாரித்தல் வேண்டும். 12+03 = 15 வேட்பாளர்கள் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்போது பிரதான கட்சிகள் அத்தேர்தல் மாவட்டத்திலுள்ள சிறுபான்மைச் சமூகங்களினது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள விழைவதினால் பட்டியலில் சிறுபான்மை சமூக வேட்பாளர்களுக்கும் இடம் வழங்குதல். எனவே,  பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறையில் கிடைக்காத வாய்ப்பு இங்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தினால் கிடைக்கிறது.

வாக்களிக்கும் முறை

1972ம் ஆண்டு குடியரசு யாப்பின் கீழ் வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதி ரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடியாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்கலாம். எனவே,  பெரும்பான்மைச் சமூகத்தினர் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளில் பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தெரிவாக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகமாக உள்ளன.

2ம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு 2 கட்டங்களாக நிகழ்த்தப்படும்.

1. தான் விரும்பும் கட்சிக்கு சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு.
2. விருப்புத் தெரிவு வாக்கு

விகிதாசார முறையின் கீழ் வாக்களிக்கும் விளக்கங்கள் 1981 இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்டியல் சிங்கள அகரவரிசைக்கமைய வரிசைப்படுத்தப்பட்டு,  அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது 3 அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.

விருப்புத் தெரிவு வாக்குமுறை வேட்பாளர் மத்தியில் போட்டி நிலையையும்,  குரோதங்களையும் ஏற்படுத்துவதால்,  விருப்புத் தெரிவு முறை பற்றி பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட சிறுபான்மையினத்தவர்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கும் நிலை சாத்தியப்படுவதை நிராகரித்து விடமுடியாது.

உதாரணமாக 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 முஸ்லிம் பிரதிநிதிகளும்,  தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மொத்தம் 3 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்றால் விகிதாசார தேர்தல் முறையில் விருப்புத் தெரிவு வாக்குமுறையும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது.  மாறாக பெரும்பான்மைத் தேர்தல்முறை அமுல்படுத்தப்பட்டிருந்தால் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாக முடியுமா என்பது கேள்விக்குறியே.

ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும்முறை

பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதி ரீதியாக நடைபெறும் தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் நேரடியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக x எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட A, B, C  ஆகிய வேட்பாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்.

A – 18.332
B – 16.218
C – 573

இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் A ஆவார். இதன்படி X எனும் தேர்தல் தொகுதிக்கு A என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
1978ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் ஆசனங்களைப் பகிர்ந்தளிக்க பின்வரும் 6 படிமுறைகள் கையாளப்படும்.

1ம் படிமுறை : போனஸ் ஆசனத்தினை வழங்குதல்
2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள்
    குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்
3ம் படிமுறை : தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல்
4ம் படிமுறை : முடிவான எண்ணைக் கணித்தல்
5ம் படிமுறை : முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்
6ம் படிமுறை : மிகுதிப் பெரும்பான்மை முறைக்கமைய ஆசனங்களைப் பகிர்தல்

மேற்குறித்த 6 படிமுறைகளுக்கமையவே தேர்தல் மாவட்டத்துக்கான பிரதிநிதிகளைத் தீர்மானிப்பர். இப்படிமுறைகளினால் சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்புக்களும் உள்ளன. நன்மைகளும் உள்ளன. இதனைப் பின்வரும் உதாரணத்துக்கமைய ஆராய முடியும்.

உதாரண எடுகோள்

X எனும் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆசனங்கள் உள்ளன என்றும்,  இந்தப் 10 ஆசனங்களுக்குமாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன என்றும்: போட்டியிட்ட கட்சிகளும், குழுக்களும் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளன எனவும் கொள்வோம்.

கட்சி A = 5,400 வாக்குகள்
கட்சி B = 3,600 வாக்குகள்
கட்சி C = 1,410 வாக்குகள்
சுயேட்சைக்குழு 1 = 540 வாக்குகள்
சுயேட்சைக்குழு 2 = 750 வாக்குகள்
மொத்தமாக செல்லுபடியான வாக்குகள் 11700

1 ம்படிமுறை – போனஸ் ஆசனத்தினை வழங்குதல்

விகிதாசார தேர்தல் முறையில் ஆசனங்களைப் பதிவு செய்யும்போது பேணப்படும் 1வது படிமுறை போனஸ் ஆசனத்தை வழங்குவதாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுள் எந்தக் கட்சி அல்லது குழு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதோ, அந்தக் கட்சி அல்லது குழுவிற்கு வழங்கப்படும் அன்பளிப்பு ஆசனத்தையே போனஸ் பிரதிநிதித்துவ ஆசனம் என அழைக்கின்றோம்.

எனவே, எமது உதாரண எடுகோளின்படி அதிக வாக்குகளைப் பெற்றுள்ள கட்சி A ஆகும். எனவே A கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனம் வழங்கப்படும்.
போனஸ் ஆசன முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் உண்டு எனப்பொருள் கொள்ள முடியாது. பெரும்பாலும் இதன் மூலம் பிரதானக் கட்சிகளுக்கே வாய்ப்பு அதிகம். இலங்கையில் இதுகால வரை நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போனஸ் ஆசனங்கள் பெற்ற கட்சிகளைப் பின்வரும் அட்டவணை மூலம் கண்டு கொள்ளலாம்.; வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே சிறுபான்மைக் கட்சிகள் நன்மை பெற்றுள்ளன.

1989/ 1994 /2000/ 2001/ 2004ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற அதிகமான வாக்குகளைக் கொண்டு போனஸ் ஆசனம் பகிரப்பட்ட முறை. மேற்குறிப்பிட்ட ஆண்டு ஒழுங்கில் மாவட்டத்தில் வெற்றியடைந்த கட்சிகள் தரப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம் : 1989/1994/ 2000/ 2001 / 2004
1. கொழும்பு : ஐ.தே.க / பொ.ஜ.மு /ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.  
2. கம்பஹா:  ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
3. களுத்துறை: ஐ.தே.க/ பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
4. கண்டி: ஐ.தே.க /ஐ.தே.க /பொ.ஜ.மு / ஐ.தே.க/ ஐ.தே.க.
5. மாத்தளை : ஐ.தே.க/பொ.ஜ.மு/ பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
6. நுவரெலியா : ஐ.தே.க/ ஐ.தே.க / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
7. காலி : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு/ ஐ.தே.க / பொ.ஜ.மு. 
8. மாத்தறை : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
9. ஹம்பாந்தோட்டை:  ஐ.தே.க / பொ.ஜ.மு / ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஜ.மு. 
10. யாழ்ப்பாணம்: சுயேட்சை/ சுயேட்சை/ ஈ.பி.டி.பி/ த.ஐ.வி.மு/  இ.த.அ.க
11. வன்னி : த.வி.கூ/ புளொட் / டெலோ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
12. மட்டக்களப்பு:த.வி.கூ/ த.வி.கூ / த.வி.கூ/ த.ஐ.வி.மு/ இ.த.அ.க
13. திகாமடுல்லை: ஐ.தே.க / ஐ.தே.க/ பொ.ஐ.மு/ ஸ்ரீ.ல.மு.க /பொ.ஜ.மு. 
14. திருகோணமலை: ஸ்ரீ.சு.க/ ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க /  இ.த.அ.க
15. குருநாகலை : ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
16. புத்தளம்: ஐ.தே.க/ பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
17. அநுராதபுரம்:  ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு
18. பொலன்னறுவை: ஐ.தே.க / பொ.ஜ.மு / ஜ.தே.க / ஐ.தே.க / பொ.ஜ.மு. 
19. பதுளை: ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க / ஐ.தே.க.
20. மொனராகலை: ஐ.தே.க / பொ.ஜ.மு/ பொ.ஜ.மு / பொ.ஐ.மு /  பொ.ஜ.மு. 
21. இரத்தினபுரி : ஐ.தே.க / பொ.ஜ.மு / பொ.ஜ.மு / ஐ.தே.க /   பொ.ஜ.மு. 
22. கேகாலை: ஐ.தே.க / ஐ.தே.க / பொ.ஐ.மு / ஐ.தே.க / பொ.ஜ.மு. 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போனஸ் ஆசன முறையால் ஆளும்கட்சிக்குத் தன் பலத்தை ஓரளவேனும் அதிகரித்துக் கொள்ளும் ஒரு ஏற்பாடாகவே இம்முறை காணப்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும், இலங்கையில் இதுவரை நடைபெற்ற 5 பாராளுமன்ற தேர்தல்களின் போதும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்கள் தவிர ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.க.கட்சியும், பொ.ஐ. முன்னணியுமே முன்னணியில் நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது.

2ம் படிமுறை : வெட்டுப்புள்ளிகளைப் பெறாத கட்சிகள் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்

ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1/20 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல். வெட்டுப்புள்ளி வாக்குக் கணிப்பு, சிறுபான்மைக் கட்சிகளின் வளர்ச்சிக்கும் , சிறிய கட்சிகளின் வளர்ச்சிக்கும், பெரிதும் தடையாகும். விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இந்த வெட்டுப்புள்ளி 1/8 பங்கு (அதாவது 12.5 % ஆகக் காணப்பட்டது. 1988ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பிரகாரமே 1/20 பங்காக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உதாரண எடுகோளை எடுத்து நோக்கும்போது வெட்டுப்புள்ளிக் கணிப்பு பின்வருமாறு அமையும். வெட்டுப்புள்ளி வாக்கு = செல்லுபடியான வாக்கு X 1/20 எமது உதாரணத்தின்படி =11700X1/20 =    585

எனவே 585 வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத கட்சிகள், குழுக்கள் நீக்குதல் வேண்டும். இதன்படி 540 வாக்குகளைப் பெற்ற சுயேட்சைக்குழு 1 போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும்,  5 வீத வாக்குகளைப் பெறாத கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இலங்கை அரசியல் திட்டத்துக்கு அமைய 22 மாவட்டங்களில் இருந்து மக்களை பிரதிநிதிதுவம் படுத்தும் வகையில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும், 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த கால அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து இம்முறை போட்டியிடக்கூடிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் 90 வீதத்துக்கும் அதிகமான கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் ஐந்து வீத வாக்குகளைப் பெறாமல் நீக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

மாவட்டங்களுக்கு ஆசனங்கள் பகிர்ந்தளிக்கக் கூடிய முறைப்பற்றியும, சிறுபான்மைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைப் பற்றியும் தொடர்ந்தும் இடம்பெறும்.

(தொடரும்…….)

69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன.

பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.

நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும்,  ஐ. தே. கவினரும் எதிர்த்தே வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக தொடர்ந்தும் ஆதரவளித்து வாக்களித்து வந்த ஜே. வி. பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களித்தனர். சபைக்குள் மனோ கணேசனுடன் ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

புலம்பெயர்ந்த சமூகத்திலும் தொடரும் குடும்ப வன்முறைகள்! லண்டனில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்துப் பெண்ணின் பதிவு

Domestic_Violence._._._._._. 

 மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராவும் விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பெண் விடுதலையை பறைசாற்றும் இந்நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டமோ அல்லது மேற்கு நோக்கிய புலம்பெயர்வோ தமிழ் ஆணாதிக்கச் சிந்தனை முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இப்பெண்ணுடைய பதிவு வெளிப்படுத்துகின்றது. சம்பந்தப்பட்ட நபர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் நீக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னமும் தொடர்கின்றது. இப்பெண் இலங்கையில் இருந்த சமயம் ஐரோப்பிய பெண்ணிலைவாதி ஒருவர் இலங்கை சென்ற சமயம் அவரைச் சந்தித்து உதவி நாடியுள்ளார். அப்பெண்ணிலைவாதியுடன் தொடர்புகொண்டு லண்டன் குரல் இதனை உறுதிசெய்துள்ளது. தான் ஏதும் நடவடிக்கைகள் எடுத்தால் அது ஊரில் உள்ள பெண்ணுக்கும் அவரது உறவினர்களுக்கும் கூட ஆபத்தாக அமையும் என்பதால் எதனையும் மேற்கொண்டு செய்யவில்லையென அப்பெண்ணிலைவாதி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

._._._._._. 

”அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். சித்திரவதைகளால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.”

._._._._._. 

நான் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். எனக்கும் லண்டனில் வசிக்கும் என் மாமாவின் மகனுக்கும் 1994ல் அவரின் வீட்டாரின் அவரின் விருப்பத்தின் பேரில் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தாரின் பல தொல்லைகள் இன்னல்களுக்கு மத்தியில் மூன்று வருடங்கள் கழித்து 11/6/1997ல் இந்தியாவில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு மூன்று வருடங்களுக்க முன்னரே வீடு கட்டச் சொன்னார்கள். தாலி கூறை பாஸ்போட் எடுக்கச் சொன்னார்கள். சீதனமாக ஜந்து லட்சம் வாங்கினார்கள். கலியாணச் செலவு போக்குவரத்துச் செலவையும் (அவரது அண்ணாவுக்கும் சேர்த்து) எடுக்கச் சொன்னார்கள். எனது அப்பா இறந்துவிட்டார். பல கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்பட்டு என்னுடைய அம்மா சகோதரங்கள் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று ஒருநாள் மட்டுமே என்னைத் தன்னுடன் தங்கவைத்தார். அவர் அவரது சகோதரருடன் தனி வீட்டிலும் என்னை என் சகோதரியுடன் வேறு ஒரு வீட்டிலும் தங்கச் செய்தார். திருமணம் முடித்த ஏழாவது நாள் 19/06/1997 அன்று என்னைக் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பிவிட்டு அவரும் அவரது அண்ணாவும் 25ம் திகதிவரை தங்கியிருந்துவிட்டு லண்டன் திரும்பினார்.

லண்டன் திரும்பியதும் மன்னிப்புக் கேட்டு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவசரப்பட்டு யோசிக்காமல் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிட்டேன் நாங்கள் ஒரு மாதம் வரையாவது தங்கியிருக்கலாம் என்று போனிலும் மன்னிப்புக் கேட்டார். அதன்பின்னர் ஒரு வருடம்வரை ஒருசில கடிதங்கள் போட்டார். ஒரு சில தடவைகள் போனிலும் பேசினார். அத்தோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். அதனால் நான் பல வழிகளிலும் அவரது சகோதரங்களாலும் அவர்களது நண்பர்களாலும் அவமானங்களையும் பல துன்பங்களையும் அடைந்தேன்.

அதனால் 2000 ஆண்டு அவரிடம் விவாகரத்துக் கேட்டு கடிதம் போட்டேன். அதற்கு அவர் நாங்கள் இந்தியாவிற்குப் போய்ப் பேசித் தீர்ப்போம் என்றார். அதன் பின்னர் எதுவித தொடர்பும் இல்லை. 2002ல் தன்னை மன்னிக்கும்படியும் நான் திருந்திவிட்டேன் இனிமேல் இப்படியான பிழைகளைச் செய்ய மாட்டேன் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்றார்.

அவரால் பல தடவைகள் ஏமாந்ததாலும் அவரின் சகோதரங்களால் துன்பங்களை அடைந்ததாலும் நான் மறுத்தேன். அதனால் லண்டனில் இருக்கும் அவரது சகோதரர் அண்ணி நண்பர்கள் மூலம் என் குடும்பத்தாருடன் பேசவைத்து எனக்கு பல வாக்குறுதிகளைத் தந்தார். உங்களை நான் கடைசிவரைக்கும் கைவிட மாட்டேன். சந்தோஷமாக வைத்திருப்பேன். ஊரில் என் குடும்பத்தாரால் நீங்கள் நேரடியாகவே நிறையவே பாதிக்கப் பட்டதனால் அவர்களுடன் நட்புக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லி என்னை சம்மதிக்கவைத்து 21/06/2003ல் அவர் இலங்கை வந்து 05/07/2003 என்னை லண்டன் அழைத்து வந்தார்.

ஆனால் ஒரேயொரு வாரம்தான் நாங்கள் சந்தோசமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டோம். அதன் பின்னர் அவர் என்னைப் பலவழிகளிலும் புறக்கணித்து காயப்படுத்தி மட்டம் தட்டினார். என்னை எங்கும் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. அவரது சகோதரர் வீட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வார். வேறு எங்கு செல்வதானாலும் அவர் தனியாக என்னை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்.

நான் எனது நண்பர்கள் உறவினர்களுடன் போனிலும் பேச அனுமதியில்லை. அவரது அண்ணா வீட்டாருடன் மட்டுமே கதைக்க வேண்டும். போன் நம்பரையும் அடிக்கடி மாற்றுவார். நோர்வே, பிரான்ஸ், ஜேர்மன், கனடா, கொலண்ட், சிங்கப்பூர், துபாய் என்று பல நாடுகளிலும் உள்ள நண்பர்களைப் பார்க்க அடிக்கடி செல்வார். நானும் வருவதாகக் கேட்டால் எனக்கு விசா எடுப்பது கஷ்ரம் என்று ஒவ்வொரு தடவையும் மறுத்துவிடுவார். அதனால் நான் மிகவும் நொந்து போனேன். வீட்டிற்குள்ளேயே அநாதையான தனிமையான பயந்த சிறை வாழ்க்கையே வாழ்ந்தேன்.

நான் எங்கள் நாட்டு கலை கலாச்சாரப் பண்பாடுகள் கட்டுப்பாட்டுடன் வளர்ந்ததால் அவரை பூரணமாக நம்பி கடவுளாக மதித்து அவருக்காகவே வாழ்ந்தேன். ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை. அவரது அன்பு, ஆறுதல், ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு எதுவுமே இல்லாது அநாதையாகவே வாழ்ந்தேன்.

அவர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்பவர். வெளியில் எல்லோரிடமும் நல்லவர் மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் வீட்டில் ஒரு ஊத்தைப் பெண்ணை பல வருடங்களாக வைத்திருந்தார். அவளை நான் சொல்லித்தான் அனுப்பினார். அதுமட்டுமல்ல மட்டமான கிளப்புகள் மட்டமான தொடர்புகளும் உள்ளவர். அப்படியெல்லாம் அவர் மோசமான ஆளாக இருந்தாலும் நான் அவரை அதிகமாக ஆழமாக நேசித்தேன்.

அதுமட்டுமல்ல அவர் என்னுடன் அதிகமாகப் பேசவும் மாட்டார். இரண்டொரு வார்த்தைகளே பேசுவார். சில சமயங்களில் அதுகூட பேசமாட்டார். ஆனால் நண்பர்கள் உறவினர்களுடன் மணிக்கணக்காகப் பேசுவார். எனக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணியவும் அவர் விரும்பும் சிலருடனேயே பேச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பார். ஆனால் நண்பர்களிடம் நான் அழகாக இல்லை. நாகரீகமாக இல்லை ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் விமர்சிப்பார். என்னுடன் பெயரளவிற்கே வாழ்க்கை நடாத்தி எனக்கு எதுவுமே தெரியாமல் ஆக்கி புறக்கணித்து ஒதுக்கியே வைத்தார். நான் அவருக்காக என் குடும்பம், வேலை, என்னுடைய மேல்படிப்பு இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். எனக்கு லண்டனில் எதுவும் தெரியாது. அவரையே உலகமாக நினைத்து வாழ்ந்தேன். ஆனால் அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் 16 வருடங்களாக என் வாழ்க்கையை நாசம் பண்ணி விட்டார்கள்.

25/12/2004ல் என்னை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அவரின் நடவடிக்கைகளால் லண்டன் வர மறுத்தேன். இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது நாங்கள் ஒரு புதுவாழ்க்கை வாழலாம் என்று அவரின் தாயின் படத்தின்மீது சத்தியம் செய்து என்னை அழைத்து வந்தார். ஆனால் அவர் எள்ளளவும் திருந்தவில்லை. 2006 ஜனவரி அவரின் நண்பரின் கல்யாணம் என்று என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு சென்றதும் அவர் என்னை திருமணத்திற்கு அழைத்துப் போக செல்ல விரும்பவில்லை. அவரது கொழும்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு என்னை வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு அவரும் அவரது சகோதரங்கள் நண்பர்களும் சென்றனர்.

லண்டன் திரும்பியதும் காரணமே இல்லாமல் என்னுடன் அடிக்கடி சண்டை போடுவார். அசிங்கமான வார்த்தைகளால் பேசி குட்டி அடிப்பார். கழுத்தை நெரித்து சித்திரவதை செய்வார். செத்துத் தொலை என்று சொல்லுவார். எங்களுக்குப் பிள்ளைக்கான எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை. அவரது சகோதரங்கள் மலடி என்று அடிக்கடி திட்டுவார்கள். இப்படியான சித்திரவதைகளால் மனதளவில் பெரும் பாதிப்படைந்த நான் அவரது கொலை மிரட்டல்களுக்கும் பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அவர் நீ செத்தால் சா ஆனால் எனக்குப் பாதுகாப்புத் தேவை என்று சொல்லி பொலிசாரை வரவழைத்தார். அவர்கள் வந்து எங்களைச் சமாதானம் செய்து தைரியம் சொல்லிவிட்டுச் சென்றனர்.

அவருக்கு உயிரணுக்கள் குறைபாடு இருந்தது. அதனை என்னிடமும் மற்றவர்களிடமும் மறைப்பதற்காகவும் என்னை இந்தியாவில் கைவிடுவதென்று அவரும் அவரது சகோதரர்களும் நண்பர்களும் முடிவெடுத்திருந்தனர். நானும் இது தெரியாமல் அவருடன் இந்தியா சென்றேன். இதெல்லாம் பின்னர்தான் தெரிய வந்தது.

அவருக்கு மருத்துவ விசா எனக்கு சுற்றுப்பயண விசாவும் எடுத்திருந்தார். ஏன் என்று கேட்டதற்கு அது தவறுதலாக நடந்தது என்றார். 21/06/2006ல் இந்தியா சென்று சிகிச்சை ஆரம்பித்தோம். சிகிச்சை கடினமானதாகவும் நீண்டகாலம் எடுக்கும் என்றும் கூறி என்னை இந்தியாவில் அவரது நோர்வேயில் வசிக்கும் நண்பரின் வீட்டில் தங்கவைத்தார். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதென்றால் பொலிஸ் பதிவு தேவை. 10 நாட்கள் தங்கிச் செல்லும் அவருக்கு எடுத்தார் ஆனால் தங்கியிருக்கும் எனக்கு எடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் உங்களுக்குத் தேவையில்லை என்ன செய்வதென்று எனக்குத் தெரியும் என்றார்.

பொலிஸ்பதிவு இல்லாததால் நான் பல சிரமங்களை அனுபவித்தேன். அவர் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் என்னுடன் தங்குவதற்கோ மருத்துவமனைக்கு வருவதற்கோ விரும்புவதில்லை. வரச் சொன்னால் சண்டைபோட்டு அடிப்பார். கழுத்தை நெரிப்பார். அவரின் இவ்வாறான நடவடிக்கைகளாலும் கடுமையான தொடர்ச்சியான சிகிச்சை முறைகளாலும் உதவிக்கு ஆள் இல்லாததாலும் உடல் உள ரீதியாக அதிகமாகப் பாதிக்கப்பட்டேன். அதனால் சிகிச்சை 4 தடவைகள் தோல்வியாகவே முடிவடைந்தது. ஜந்தாவது தடவை சரிவந்தது. நான் உதவிக்காக எனது தாயை அழைக்கச் சொன்னேன். அவர் மறுத்தார். எனது சகோதரியே செலவுசெய்து எனது தாயை இந்தியா அனுப்பினார்.

அவர் சிகிச்சைக்கு வந்து லண்டன் திரும்பியவர் 5 மாதங்கள் கழித்து 03/12/2007ல் இந்தியா வந்தார். 05/12/2007 அன்று பிள்ளையை வெளியில் எடுத்தால்தான் நீங்கள் பிழைப்பீர்கள் என்று (பிள்ளை ஆரோக்கியமாக இருந்தது) வைத்தியர்கள் சொன்னார்கள். நான் இறந்தாலும் பரவாயில்லை பிள்ளை வேண்டும் என்றேன்.என் கணவர் மறுத்து விட்டார். என் கணவரால்தான் பின்னர் ஜந்தாவது மாதத்தில் பிள்ளையை சாகடிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. எல்லாம் முடிந்து 4 மாதத்திற்குப் பின்னரே அங்கு வேலை செய்பவர்கள் மூலம் அறிந்தேன்.

அவர் 16/12/2007 லண்டன் திரும்பிவிட்டார். என்னை 2 மாதங்கள் கழித்து கூட்டிப் போவதாகச் சொன்னார். ஆனால் போனவர் வரவேயில்லை. ஒவ்வொரு மாதமாக நேரம் இல்லை என்று நாட்களைக் கடத்திக் கொண்டே போனார். அவர் 8, 9 தடவைகள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், நோர்வே, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, கொலன்ட் என்று அவரது நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்கச் சென்றார். 21/06/2008 இருந்து எனக்குப் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார்.

எனது அம்மாதான் என்னுடன் இருந்தா. அவர் லண்டன் கூட்டிப்போக மாட்டார் என்று 16/06/2008ல் அம்மா இலங்கை சென்றுவிட்டார். அவரது நோர்வே நண்பன் (வீடு அவருடையது) சகோதரியை (இந்தியாவில் வசிப்பவர்) என்னுடன் தங்கவைத்து அவர்மூலம் என்னை பலமுறை கொலைசெய்ய முயற்சி செய்தார்கள். காஸ்சினை திறந்துவிடுவா. வெளியில்விட்டு கேற்றைப் பூட்டுவா. பின்னர் ஒரு மாதம் சாப்பாடு இல்லாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தா. வெறும் பிஸ்கட் தண்ணியுடனேயே ஒரு மாதம் வாழ்ந்தேன். அதுவும் வேலைக்காரி வீட்டுக்காரிக்குத் தெரியாமல் வாங்கிவந்து தருவா.

20/09/2008 இரவு 7 மணியளவில் வீட்டைவிட்டுத் துரத்தினார்கள். எங்கு செல்வது என் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கையில் பணமும் இல்லாது தவித்தேன். அந்த நேரம் இந்தியாவில் வசிக்கும் என்னுடன் படித்த நண்பி என்னை அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து அவர் போன் செய்வதையும் நிறுத்திவிட்டார். நான்தான் அவருக்குப் போன் செய்வேன். ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு கட்பண்ணி விடுவார். 27/10/2008 லண்டன் வரும்வரை நகைகளை விற்றே சாப்பிட்டேன்.

நான் இந்தியாவில் இருக்கும்போது சிங்கப்பூரில் அவரும் அவரது சகோதரரும் சேர்ந்து 06/06/2008 அவருக்கு மறுமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்தவிடயம் எனக்குத் தெரிந்ததும் நான் லண்டன் திரும்ப பணம் கேட்டேன் தர மறுத்துவிட்டார்.

அவரது லண்டனில் வசிக்கும் நணபர் ஒருவரும் எனது நண்பி என் சகோதரங்கள் அம்மா எல்லோரும் சேர்ந்தே எனக்கு பணஉதவி செய்துள்ளார்கள். பொலிஸ் பதிவு இல்லாததால் எனக்கு உடனே வர இரண்டரை லட்சம் இந்தியன் பணம் தேவைப்பட்டது. எனது PRஜ கான்சல் பண்ணுவதற்காகத்தான் அவர் 2 வருடங்கள் 4 மாதங்கள் வேண்டுமென்றே என்னை இந்தியாவில் தங்க வைத்தார்.

அத்தனை சிரமங்களையும் அனுபவித்து லண்டன் வந்த என்னை ஈவு இரக்கம் மனச்சாட்சி எதுவுமே இல்லாமல் கதவை திறக்காமல் அறைக்குள் இருந்துகொண்டு 2.30 தொடக்கம் இரவு 8.30 வரைக்கும் கதவடியிலேயே தங்க வைத்தார். உடல் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நான் கௌரிவிரதத்தோடும் காச்சலோடும் மிகவும் சிரமப்பட்டேன். அவரது நண்பர் ஒருவரை (எனக்கு 3 வருடங்களாகத் தெரியும் 3 வருடங்கள் அவனுக்கு சாப்பாடு கொடுத்திருக்கன்றேன்.) தற்செயலாக சந்திக்க வைப்பதுபோல் சந்திக்க வைத்து என்னை அவனது வீட்டிற்கு போகச் செய்தார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் எனது கணவரின் லண்டனில் வசிக்கும் அண்ணாவிடம் உதவி கேட்டேன். காலையில் பார்க்கலாம் இப்போ அந்த நண்பருடன் செல்லுங்கள் என்றார். நானும் அவனுடன் சென்றேன். அவனிடம் என்னைக் கொலை செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். அவன் என்னை அடைத்து வைத்திருந்தான். நான் அங்கிருந்து தப்பி குயின்ஸ்வேய்க்கு வந்து பொலிசாரின் உதவியை நாடினேன். அவர்கள் உதவிசெய்ய மறுத்து விட்டார்கள். வுமன் சென்ரருக்கு போகச் சொன்னார்கள். காவல்காரனும் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. என் கணவர் அப்படி எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

நான் எனது கணவரின் அண்ணாவிடம் மறுபடியும் உதவி கேட்டேன். அவர் மறுத்து விட்டார். அவரது வீட்டிற்கு வரவேண்டாம் என்றார். ஊருக்குப் போங்கள் இல்லையென்றால் எங்காவது ஒரு மூலையில் போய் தங்குங்கோ என்றார். அழுதுகொண்டே வீதியில் 5 மணித்தியாலங்களாக குளிரில் உறைந்து போயிருந்தேன். அதன் பின்னர் எனது நண்பியின் அக்கா வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்.

திட்டம் போட்டே என்னிடம் டிவோஸ் எடுத்து ஊருக்குப் போய் திருமணம் 09/2009ல் செய்துகொண்டு வந்து மனச்சாட்சி இல்லாமல் குடும்பம் நடத்துகின்றார். மில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். (இயக்கக் காசுகளும் எக்கச்சக்கமாக அவரிடம் மாட்டியுள்ளது.) எல்லோரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கின்றார். சொந்தமாக குயின்ஸ்வேயில் 2பெட்ரூம் 1 லிவிங் ரூம் பிளாட் இருக்கிறது. கொலின்டேலில் 4 பெட்ரூம் வீடு உள்ளது. (அதனை அண்ணாவின் மகளின் பெயருக்கு மாற்றியிருக்கின்றார்.). 6 மணி ரான்ஸ்பர் கடை 3 கார் வைத்திருக்கின்றார். ஒரு கார் அண்ணாவுக்கும் இன்னொரு நணபருக்கும் கொடுத்திருக்கின்றார்.

எனக்கு எதுவுமே தர மாட்டாராம் என்னைக் கொலை செய்தே தீருவாராம். அவர் பணத்தினால் எனது வக்கீல் உட்பட அனைவரையும் விலைகொடுத்து வாங்கி விட்டாராம். என்னால் எதுவுமே பண்ண முடியாதாம். எலும்புத் துண்டை நாய்க்கு வீசுவது போல வீசிக் கொண்டிருக்கிறாராம். அதனால் எல்லோரும் தன் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றார்களாம்.

கலைக்கப்பட்டஇலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது

srilanka_parliament_02.jpgகலைக் கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டுகிறார்.
 
அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள இன்றைய கூட்டத் தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்படுவது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இது இரண்டாவது தடவையாகும்.

பொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணுவ நீதிமன்ற விசாரணை – சிவிலியன் உட்பட 35 பேரிடம் சாட்சியம் பதிவு

sarath_fonseka.jpgகைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:- குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்க ப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவுற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்படி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

சரத் பொன்சேகா மீது இந்த குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார். இந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும்.

குறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும் – அமைச்சர் பாடலி

minister-patali.jpgஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2/3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிகளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய்கின்றன.

சில வேட்பாளர்களுக்கு புலி ஆதரவாளர்களே வாக்குப் பெற்றுத்தர உள்ளனர். ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும். கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் வாக்கெடுப்பில் இலங்கை 2/3 பெரும்பான்மையுடன் வென்றது. சகல ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. ஒரு சில நாடுகளே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன.

ஐ.நாவின் எந்த மனித உரிமை விசார ணைக்கும் எமது அரசாங்கம் இடமளிக்காது. ஐ.நா. முன்வைக்கும் விடயங்களுக்கு நாம் பதிலளிக்கத் தயார். ஆனால் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட இடமளிக்கமாட் டோம் என்றார்.