பொன்சேகாவுக்கு எதிராக இன்னும் சில தினங்களில் இராணுவ நீதிமன்ற விசாரணை – சிவிலியன் உட்பட 35 பேரிடம் சாட்சியம் பதிவு

sarath_fonseka.jpgகைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு இராணுவத் தளபதியிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:- குறிப்பிட்ட சாட்சியங்களின் தொகுப்பில் 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 இராணுவத்தினரிதும் 7 பொலிஸ் உத்தியோகத்தரினதும் ஏனையவை பொது மக்களிடமிருந்தும் கிடைத்துள்ளன. சாட்சியங்களின் தொகுப்பு பற்றிய மேற்படி அறிக்கை தற்போது இராணுவத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்க ப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனை முடிவுற்றதும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களின் படி முன்னாள் இராணுவத் தளபதி மீது ஐந்துக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த முடியும். அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும். இராணுவ சட்டத்தின் விதி முறைகளின்படி இராணுவ நீதிமன்றத்தில் வைத்தே அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

சரத் பொன்சேகா மீது இந்த குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டதும் உடனடியாக இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகும். 3 அல்லது 5 நீதிபதிகளைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தும். அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு ஏற்ப இராணுவ தளபதி மேற்படி 3 அல்லது 5 நீதிபதிகளை நியமிப்பார். இந்த நீதிபதிகள் குழுமம் மேற்படி இராணுவ நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி மீது விசாரணை நடத்தும்.

குறிப்பிட்ட இந்த இராணுவ நீதிமன்றம் எந்த இராணுவ முகாமில் இடம் பெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *