‘எந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல’ – மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை

rathnasiri_wicremanayake.jpgஎமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது.

பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசும் போது :- அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை.

நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் ‘உறுமல்கள்’ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது.

மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள். நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.

நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டின் துரதிஷ்டம் என்னவெனில், கட்சி, நிறம், கொள்கை என்பவற்றால் நாட்டிற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு பொது உடன்பாடு காண முடிவதில்லை. இவ்வாறான குறுகிய நோக்கங்களால் எமது நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் பலமடைந்து வருகின்றன. எனினும், நாம் இன்னும் பிரிந்து நிற்கி றோம். இவைதான் நாம் முகம் கொடுத்து வரும் துரதிஷ்டவசமான நடவடிக்கைகள், எனினும், எமது புலனாய்வுப் பிரிவு இன்னும் தனது கடமையை செய்து வருகிறது.

மக்களை வாட்டி வதைப்பதற்காக அரசு எந்த சட்டத்தையும் நடைமுறைப்ப டுத்தவில்லை. ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகளை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நாம் பயன்படுத்தியதில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன்.

நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் எம்மால் அனுமதி வழங்க முடியாது. பொறுப்புள்ள ஒரு அரசு என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது.

அரச விரோத சக்திகளுக்குத் தேவையான விதத்தில் தகவல்களை வழங்கும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பலம்வாய்ந்த நாடுகளும் அமைப்புகளும் இன்று எமது நாட்டுக்கு எதிராக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் புலிகளை பலமடையச் செய்வதற்காக சில குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஜேர்மனியில் இவ்வாறான சிலர் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள். வருடக் கணக்காக பின்தள்ளப்பட்டுப் போன எமது நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளுக்கு பலன் கிடைக்கப் போவது எதிர்காலத்திலேயே. வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *