2010

2010

தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 211 பேர் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி.

000stud.jpgதடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை 360 பேர் தோற்றியதாகவும் அவர்களில் 211பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் 40பேர் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகும் வாய்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 1இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுளளனர். ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் 22ஆயிரம் பேர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட மாணவிகள் மத்தியில் நடத்தைப் பிறழ்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவிகளின் மத்தியில் நடத்தைப்பிறழ்வுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமகாலத்தில் 15 வயது தொடக்கம் 19 வயது வரையிலான மாணவிகள் மத்தியில் இந்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் வைத்திய நிபுணர்களும் உளநல மருத்துவ நிபுணர்களும் இணைந்து பெற்றோர் ஆசிரியர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி வருகின்றனர்.

மாணவர்களின் நடப்தைப்பிறழ்வுகள் தொடர்பான காரணிகளை ஆராய்ந்து பெற்றோர், ஆசிரியர்கள் எவ்வாறு அவர்களை வழிநடத்தலாம் என்பது குறித்து இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டு வருகின்றது. யாழ் நகரிலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக பெற்றோர் ஆசிரியர்களை உள்ளடக்கி இக்கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவிகள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் எதிர்கொள்ளும் வைத்தியப் பிரச்சினைகள் குறித்து வைத்திய நிபுணர்களும் உளமருத்துவ நிபுணர்களும் உணர்வு பூர்வமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கபட்டுள்ளார். மாணிக்கப்போடி சசிகுமார் (வயது 35) என்ற தமிழ் ஊடகவியலாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் கொண்டு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் தாக்கப்பட்டுள்ளார். இதாக்குதலினால் தலையிலும் கையிலும் காயமேற்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயலில் தேங்கி நின்ற நீரை வானம் உறிஞ்சியது. நவாலியில் மக்கள் வியப்புடன் அவதானித்தனர்.

வயல் நிலத்தில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தை வானம் உறிஞ்சிய காட்சியை நேற்று ஞாயிற்றுக்கிழமை நவாலி மேற்கில் பொதுமக்கள் கண்டு அதிசயித்தனர். யாழ்.நவாலி மேற்கில் நண்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றது. வயல் வெளியில் தேங்கி நின்ற நீர் திடீரென் பெரும் ஒலியுடன் வானை நோக்கி சுழன்று சுழன்று சென்றது. இதனை அதிசயத்துடன் பார்த்த மக்கள் அச்சமடையவும் செய்தனர் சுனாமி அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டதென அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இந்நீர் உறிஞ்சல் சுமார் அரைமணி நேரம் இடம்பெற்றது. கடந்த இரு நாட்களாக மழை விட்ட நிலையில் கடும் வெப்பம் நிலவியது. வளியமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இவ்வாறான சம்பவம் சாதாரணமாக இடம்பெறக்கூடியதுதான் என வளிமண்டலவியல் அவதான நிலைய பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரவித்துள்ளார். இவ்வாறான மினி சூறாவளிகள் மக்களின் உயிர் மற்றும், உடமைகளுக்கும் சேதத்தை எற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீரை வான் உறிஞ்சும் சம்பவங்கள் சில சமயங்களில் கடலில் தோன்றுவதை பலர் அவதானித்துள்ளனர் ஆனால், வயல் நீர் இவ்வாறு உறிஞ்சப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வியப்பினை எற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் புதிய இராணுவ காவல்நிலையங்கள் தோற்றம் பெறுகின்றன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் யாழ்.குடாநாட்டில் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வந்த இராணுவ காவலரண்கள், சோதனைநிலையங்கள் என்பன மீண்டும் புதிய முறையில் அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டு வீதிச் சந்திகளின் சில இடங்களில் இராணுவ சோதனை நிலையங்களையும், காவலரண்களையும் இராணுவத்தினர் புதிதாக அமைத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. முன்னர் இருந்த இடங்களிலேயே இவை மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இணுவில் கந்தசாமி கோவில் சந்தியிலும், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் தேர்முட்டிக்கு அருகாமையிலும் புதிய இராணுவ காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடாநாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு புதிய இராணுவ காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் – தமிழ்தேசியக்கூட்டமைப்பு சந்திப்பில் பொது விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

Sivajilingam_M_Kதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் இனப்பிரச்சனைக்கு தகுந்த தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் விடயத்தில் இணைந்து செயற்பட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இதன்போது பொதுத்தீர்வுத்திட்டம் ஒன்றைக் காணும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூட்டமைப்பின் சார்பில் மூவரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பில் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சனைக்கான தீர்வு காணும் வகையில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு தனது சிபார்சுகளை இரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்,கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு, தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் போன்ற விடயங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவது முக்கியமானது எனவம், தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் நின்று சமர்ப்பிக்கும் யோசனைகளை அரசாங்கம் நிராகரிக்க முடியாது எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்.

வடமாகாண சபை அலுவலகங்கள் ஜனவரி மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் இயங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபையின் ஏழு அலுவலகங்கள் நேற்று பால் காய்ச்சி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகம் திருநெல்வேலியிலும், உள்ளுராட்சி அமைச்சின் அலுவலகம் கைதடியிலும், திட்டமிடல் அலுவலகம் கல்வியங்காட்டிலும், கணக்காய்வுத் திணைக்களத்தின் அலுவலகம் நாயன்மார்கட்டிலும், வடமாகாண ஆளுநரின் அலுவலகம் சுண்டுக்குழியிலும், கூட்டுறவு ஆணையாளர் அலுவலகம் நல்லூரிலும், திறைசேரி அலுவலகம் றக்கா வீதியிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் இவ்வலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் செயற்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மீள்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் நிலவும் காணிப் பிரச்சினைகள்.

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் மத்தியில் காணிப்பிரச்சினைகள் பெரும் சிக்கலான ஒன்றாகியுள்ளது. காணிப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் அன்றாடம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வந்த வண்ணமுள்ளன.

கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றபட்டு வருகின்ற நிலையில், முன்னர் காணிகளை விற்றவர்கள் மீண்டும் அக்காணிகளைப் பிடித்து வருவதால் அக்காணிகளை கொள்வனவு செய்தவர்கள் சிக்கல்களுக்குள்ளாகி வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெருமளவு காணிகள் காணிஉறுதிகள் வழங்கப்படாமல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கபட்ட நிலையிலுள்ளதால் அவற்றை விற்பனை செய்வதற்கு அதிகாரம் இல்லை. ஆனால், உறவினர்களுக்கு அக்காணியை மாற்றம் செய்வதாக காணி அலுவலங்களில் மாற்றங்களை மேற்கொண்டு காணிகள் விற்பனை செய்யப்படும் வழக்கம் உள்ளது. இவ்வாறு விற்பனை செய்யபட்ட காணிகளில் பழைய உரிமையாளர்கள் தங்களது காணி என உரிமை கோரி வருகின்றனர். இவ்வாறான பிரச்சினைகள் தினமும் காணி அலுவலகத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் வந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்க படையினர் அனுமதி மறுப்பு.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட அனுமதி மறுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் மீன்பிடித் தொழிலை தங்கள் வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு ஈடுபட்டு வந்த குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இரணைமடுக்குளத்தின் அண்மையிலுள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் இம்மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளன. இக்குடும்பங்கள் தற்போது மீண்டும் அத்தொழிலை மேற்கொள்ள படையினர் அனுமதிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதும் படையினர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இத்தொழிலை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அச்சமூட்டும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் காணப்பட்ட கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், குடாநாட்டு மக்கள் அச்சம் கொள்ளும் வகையிலான கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

நேற்றிரவு யாழ்.சங்கானையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமும் கொள்ளையிடப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கத்தி வெட்டுக்குள்ளாகிய சம்பவமும் அப்பகுதி மககள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கானை இழுப்பைத்தாழ் முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்கள் வீட்டிற்குள் கொள்iளையிட வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவரது மோட்டார் சைக்கிகளை அபகரித்துச் சென்றதுடன் அவரையும் அவரது இரு மகன்மார்களையும் துப்பாக்கியினால் சுட்டும், வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நித்தியானந்த குருக்களும், அவரது இரு மகன்மார்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலய குருக்கள் வவுனியாவிலிருந்து புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்து கொண்டு நேற்று சனிக்கிழமை சங்கானையிலுள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு 8.40 மணியளவில் அவரது வீட்டிற்கு வந்த மூவர் மோட்டார் சைக்கிளை களவாட முற்பட்டுள்ளனர் இதனைத் தடுக்க முற்பட்ட குருக்களையும் அவரது இரு மகன்மாரையும் துப்பாக்கியினால் சுட்டும் வாளால் வெட்டியும் கொள்ளையர்கள் காயப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் சி.நித்தியானந்த குருக்கள் (வயது 56) அவரது மகன்மாரான ஜெகானந்தசர்மா (வயது 26) சிவானந்தசர்மா (வயது 32) ஆகியோரே கொள்ளையர்களினால் காயப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.