2010

2010

”ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தென்னாபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்சாட்சியம். : தொகுப்பு த ஜெயபாலன்

No_Future_Without_Forgiveness”நாங்கள் உண்மையிலேயே ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால், நாங்கள் குறைந்தபட்சம் தென்ஆபிரிக்காவின் (Truth and Reconciliation) உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” என அமெரிக்காவில் இருந்து யாழ் திரும்பியுள்ள பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நவம்பர் 12, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கையில் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக 2006ல் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தமிழீழ விடுதலைப் புலிகளினன் கொலை மிரட்டல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”தாங்களாக முன் வந்து தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

பேராசிரியர் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்ட விடயங்களின் சுருக்கும் மட்டும் கீழ்பதிவிடப்படுகிறது. அவருடைய சாட்சியம் முழுமையாக ஆங்கிலத்தில் LLRC_Testimony_By_Ratna_Jeevan_Hool இணைக்கப்பட்டு உள்ளது. (இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. சாரம்சம் மட்டுமே.)

”நான் ஒரு இலங்கையன். ஒரு தமிழன். நான் உள்ளக சுயநிர்ணய உரிமையை இதயபூர்வமாக ஆதரிப்பவன். இந்த அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தாவும் இவ்வாறன ஒரு அதிகாரப் பரவலாக்கலுக்காக (மத்தியில் கூட்டாச்சி. மாநிலத்தில் சுயாட்சி) பாடுபடுபவர்.

யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் எப்போதும் அரசாங்கத்துடன் இணங்கி இருக்கவே விரும்பி உள்ளனர். அல்பிரட் துரையப்பா வுக்கும் அப்போது மூன்றில் ஒரு பகுதி யாழ்ப்பாண மக்களின் ஆதரவு இருந்தது. அண்மைய தேர்தலும் இதனையே காட்டி உள்ளது. இது தமிழ் தேசியவாதம் வெட்கப்பட வேண்டிய உண்மை.

என்னைப் போன்ற இலங்கையனாகவும் தமிழனாகவும் உள்ளவர்களுக்கு இது கடினமான காலம். அரசாங்கத்தில் எண்ணிக்கையில் குறைந்த சிலர் தமிழர்களுக்கு தாயகப் பிரதேசம் இல்லை என்கின்றனர். இது சிங்கள தேசம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். அதனாலேயே கடந்த 50 ஆண்டுகால துயரம் நிகழ்ந்தது. எல்ரிரிஈ வளர்ந்தது. தமிழ் – சிங்கள இனவாதம் ஒன்றையொன்று வளர்த்தது.

எனக்கு இந்த அரசாங்கத்திலும் அதன் ஸ்தாபனங்களிலும் குறைந்தபட்ச நம்பிக்கையே உள்ளது. ஆணைக்குழுக்களை உருவாக்கி காலத்தை இழுத்தடித்து அதனுடைய ஆலோசணைகளை நடைமுறைப்படுத்தாமல் அவை எங்களுடைய வரலாற்று குப்பைகளாக அக்கப்பட்டு உள்ளன. சன்சோனி ஆணைக்குழு அறிக்கை ஒரு போதும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அவ்வாறே திருகோணமலையில் அக்சன் எய்ட் உறுப்பினர்களின், 5 மாணவர்களின் கொலை தொடர்பான விசாரணைக் குழுக்கள்.

இந்த யுத்தத்தின் முடிவுடன், 1970ற்குப் பிறகு யாழ்ப்பாணம் ஓரளவு சுதந்திரமாக உள்ளது. அதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி அனைவருக்கும் பொதுவான ஒரு தேசத்தை உருவாக்கும் சிந்தனையைக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கீழ் மட்டத்தில் உள்ள அலுவலர்கள் ஜனாதிபதியின் சிந்தனைக்கு மாறாக செயற்படுகின்றனர்.

எனது அனுபவத்தில் இங்குள்ள செயற்தளத்திற்குள் நாம் செயற்பட கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு நான் அந்த செயற்தளத்திற்குள்ளேயே சட்ட நடவடிக்கை எடுத்து நீதியைப் பெற்றுக்கொண்டேன். இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டைக் கட்டியமைக்க, ஜனாதிபதி இலங்கையர் அனைவருக்கும் அழைப்பு விட்டபோது, நானும் இலங்கைக்கு வந்தேன். பலரும் வருவதற்கு ஆவலாக உள்ளனர். ஆனால் இங்கு சட்டத்திற்கு வெளியேயான தடைகள் பல. யாழ் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாகப் பேராசிரியராக நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியபடி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டும், கடந்த மூன்று மாதகாலமாக நியமனத்தை வழங்க, யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடித்து வருகின்றது. இலங்கையில் குறிப்பிட்ட தகமையுடைய ஒரே பேராசிரியராக உள்ள எனக்கு அறிவியல் தேர்ச்சிக்கும் தகமைக்கும் பெரும் தேவையுள்ள பிரதேசத்தில், நியமனத்தை வழங்கப் பின்னடிக்கிறார்கள். இதற்கு இனவாதம் காரணமல்ல. ஜனாதிபதி வரை தொடர்புடைய எனக்கு இவ்வளவு தடைகள் இருந்தால் சாதாரண ஒரு தமிழன் உடைய நிலை என்ன?

அதனாலேயே ஆளப்படுபவர்கள் அரசாங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரப் பகிர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2006ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக நியமிக்கப்பட்ட எனக்கு, எல்ரிரிஈ ஆல் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்கு இராணுவ பாதுகாப்புத் தரவும் முன்வந்தார். ஆனால் அவ்வாறான ஒரு சூழலில் பணியாற்ற என்னால் முடியவில்லை. நான் கொழும்பில் இருந்து செயற்பட முயன்ற போதும், அதுவும் முடியவில்லை. அதனால் நாட்டைவிட்டு வெளியேறினேன். அப்போதைய ரிஎன்ஏ எம்பி கஜேந்திரன், எல்ரிரிஈ அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் எனக்கு எதிராக கடுமையாகச் செயற்பட்டனர்.

இவ்வாறு முக்கிய விடயங்களை தீர்மானிப்பது ஒரு சிலரின் கைகளிலேயே இருந்தது. ஏனைய பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் தனிப் பல்கலைக்கழகங்களாக வளர்ச்சி அடைந்த போதும் வவுனியா கம்பஸ் திருகோணமலைக் கம்பஸ் என்பன தனிப் பல்கலைக்கழகங்களாக அனுமதிக்கப்படவில்லை. வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை விரும்பிய போதும் தமிழ்ச்செல்வன் பிரதேசம் வாதம் கதைப்பதாகக் கூறி அதனை நிறுத்திவிட்டார்.

ஒரு தமிழனாக இது எனக்கு ஒரு வேதனையான காலம். தமிழர்களுக்கு விடுதலை என்ற பெயரில், எங்களுடைய அத்தனை நிறுவனங்களையும் – பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள், தேர்தல் முறை, எங்களிடம் என்ன இருந்ததுவோ அனைத்தும் மத்தியப்படுத்தப்பட்ட உயர்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கீழ்ப்பணிய நிர்ப்பந்திக்கப்பட்டது. சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் எங்களைப் பாதிக்கின்ற முடிவுகளை ஒரு சிலரே எடுத்தனர்.

இது முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியானது. இப்பொது அரசாங்கம் சுயநிர்ணய உரிமையை அளவுக்கு வழங்கப் போகிறதா இல்லையேல் பழைய விடயங்களுக்கு புதிய எஜமானர்களாக அரசாங்கம் இருக்கப் போகிறதா?

நாங்கள் இன்று வாழ்கின்ற அவலத்திற்கு தமிழ் பாராளுமன்றத் தலைவர்களுடைய தவறான தலைமைத்துவமும் காரணம். ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரும், கள்ள வாக்குகளுடன் ரிஎன்ஏ எம்பி க்களாக வந்தவர்களை தம்மத்தியில் ஏற்றுக்கொண்டதால் எங்களைத் தவறவிட்டனர். இவர்கள் அரசியலில் இருந்து சாதாரணமாக ஓய்வு பெற்றிருந்தாலே தலைமைத்துவப் பண்பை பேணியதாக இருந்திருக்கும். அது தமிழ் ஏகபிரதிநிதித்துவம் எதிர்கொள்ள வேண்டிய முடிவை விரைவுபடுத்தி இருக்கும். தமிழரசுக் கட்சியில் பல தவறுகள் இருப்பினும் தமிழர்களிடையே அவர்கள் ஆழ வேர்விட்டள்ளனர். இனி அவர்களைக் கடவுள் வழிநடத்துவாராக.

நோர்வேயின் மத்தியஸ்துவமும் அவர்கள் கூறுகின்ற சமாதானம், நீதி, மனித உரிமைகள் சந்தேகத்திற்கு உரியதே. அவர்கள் எல்ரிரிஈ இன் மீறல்கள் பற்றி குறிப்பாக என்னுடைய உபவேந்தர் நியமனத்தில் எல்ரிரிஈ இன் தலையீடு பற்ற அக்கறைகொள்ளவில்லை.

இந்தப் பிரச்சினையைத் தாண்டுவதற்கு ரிஎன்ஏ ஜனாதிபதியுடன் ஒரு உடன்பாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நான் உண்மையிலேயே நினைக்கிறேன். இந்த விடயத்தில் டக்ளஸ் தேவானந்தா அரசியலை சரியாகவே புரிந்துகொண்டுள்ளார். ஆனால் தமிழரசுக் கட்சியும் ரிஎன்ஏ யும் இதனைத் தவறவிட்டுள்ளனர்.

அரசாங்கம் மதிப்பிற்குரிய தமிழ் தலைமைகளை உருவாக்குவதில் அக்கறையுடன் இருக்கின்றதா என்ற சந்தேகம் எனது சிந்தனையில் எழுகிறது. ஒரு காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. ஆனால் அவர் தனது கடுமையான உழைப்பினால் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார். கூடுதலான விருப்பு வாக்குகளை தமிழ் மக்கள் அவருக்கு வழங்கி உள்ளனர். தனது உயிராபத்துக்கு மத்தியிலும் அரசாங்கத்துடன் நின்ற டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து இப்போது அரசாங்கம் தன்னுடைய விசுவாசத்தை திருப்புவதையே உணரமுடிகிறது. இது எப்படி ஏனைய தமிழர்களை அரசாங்கத்துடன் இணைய வைக்கும்?

No_Future_Without_Forgivenessகடந்த ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் பத்து ஆயிரங்கள் என்று இரு தரப்பாலும் மக்கள் கொல்லப்பட்டதை நான் உறுதியாக நம்புகிறேன். குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லோரையும் தண்டிக்க முற்பட்டால், தண்டிக்கப்படுவோம் என்று அஞசுபவர்கள் எதிர்க்க ஆரம்பிப்பார்கள். அதனால் நாங்கள் உண்மையிலேயே ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால், நாங்கள் குறைந்தபட்சம் தென்ஆபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும். தாங்களாக முன் வந்து தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் சொந்தங்களை இழந்தவர்கள் ஒரு அமைதியைப் பெறுவார்கள்.

அரசாங்கம் உண்மையில் ஆர்வமாக இருந்தால், எதிர்கால சட்டங்கள் திருத்தங்ககள் பற்றிக் கதைப்பதை விட்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.உதாரணமாக 13வது திருத்தம், மொழிச் சட்டம் என்பன. இது நடைபெற்ற பின் அரசு உறுதியானதாகும் நீங்கள் எதிர்பார்க்கின்ற கலந்துரையாடலுக்கான நேரம் கனியும்.” என்று நீண்டதொரு சாட்சியத்தை பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் வைத்தார்.

2006ல் உபவேந்தர் பொறுப்பை தொடர முடியாத நிலையில் தனது சேவையை யாழ் கல்விச் சமூகத்திற்கு தான் பிறந்த மண்ணுக்கு வழங்க பேராசிரியர் ஹூல் ஊர் திரும்பியுள்ளார். தற்போதைய உபவேந்தர் தெரிவுக்கான பட்டியலில் கூடுதல் தகமையும் நிர்வாகத்திறமையும் உடைய பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்டுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும். தமிழ் மக்களின் கல்விநிலை கடந்த காலங்களில் கல்விக் கட்டமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களின் பொறுப்பற்ற தன்மையினால் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. அதனை தடுத்து தமிழ் கல்விச் சமூகத்தை மீளுயிர்ப்பிக்கும் ஒருவரை பொறுப்புவாய்ந்த பதவியில் நியமிக்க இன்றைய அரசியல் தலைமைகள் ஆதரவளிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

வலிகாமம் வடக்கில் நேற்று 970 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்கள் மீள்குடியமத்தப் பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கழமை காலை 8மணிக்கு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறும் என குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் கொட்டும் மழையிலும் மக்கள் அந்நேரத்திற்கு கீரிமலைக்கு வந்தடைந்தனர். ஆனால், பிற்பகல் 2மணிக்கே மீள்குடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணமும், சிமெந்து பக்கற்றுக்கள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிற்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இம்மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

970 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுபட்டு உழைப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திருடர்களால் தொல்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்ள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கதவுகள், யன்னல்களற்ற நிலையில் காணபடுவதாலும் பல வீடுகள் முற்றாக சேதமடைந்து தற்காலிக வீடுகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையிலும் திருடர்கள் இரவு நேரங்களில் அவர்களின் உடமைகளை திருடிச் செல்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளில் அண்மைய நாட்களாக சைக்கில்கள். மோட்டார் சைக்கில்கள் உள்ளிட்ட அவர்களின் உடமைகள் பல திருடர்களால் களவாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிப்பதாகவுள்ளது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் நேற்று யாழ்.பொது நூலகத்தின் முன்பாக நடைபெற்ற உழவு இயந்திரங்கள் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தையானது திருப்தியானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்துக்கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்திப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கிருஸ்ணாவிற்கு நேரமின்மை காரணமாக இச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் கிருஸ்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு- இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

sr.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார். இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

சுற்றுலாக் கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள்ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணையதள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.

Wikramabahu Karunaratnaலண்டன் வந்துள்ள இலங்கையின் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உடனான சந்திப்பு நவம்பர் 28 2010ல் வோல்தம்ஸ்ரோவில் இடம்பெற உள்ளது. இச்சந்திப்பை தேசம், ASATiC என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மே 18 2009ற்குப் பின்னான அரசியல் நிலைமைகள் இடதுசாரி முன்னணி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துவந்த போதும் தொடர்ச்சியாக தமிழ் தேசியத் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டு வந்தமை இடதுசாரி முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும்.

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணியை ஆதரிக்குமாறு மே 18 இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகள் கேட்டுக்கொண்டிருந்தன. (இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!) இது தொடர்பாக இடதுசாரி முன்னணியுடன் இணைந்துகொண்ட எம் கெ சிவாஜிலிங்கம் உடனான சந்திப்பினையும் தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. (ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்)

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் லண்டன் கூட்டாளிகளும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்து இருந்தனர். தங்கள் அரசியல் முடிவுகள் மண்கவ்விய நிலையில் முதற்தடவையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிஎப் இடதுசாரி முன்னணித் தலைவருடனான வெளிப்படையான சந்திப்பை Nov 25 2010 ஏற்பாடு செய்திருந்தது. (கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு)

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்த காலகட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்ணவை வன்னிக்கு அழைத்து மாவீரர் நாளில் உரையாற்ற வைப்பதன் மூலம் தமிழ் – சிங்கள மக்களிடையே அரசியல் ரிதியான புரிந்தணர்வுக்கு அது வழியேற்படுத்தும் என்பதையும் தேசம் சஞ்சிகைகயில் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் முள்ளிவாய்க்கால் வரை பொறுத்திருந்து ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட அரசியல் ஞானம் பெறாமல் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு புறப்பட்டு உள்ளது தமிழ் தேசியம்.

வோல்தம்ஸ்ரோவில் இடம்பெறும் சந்திப்பில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் இடதுசாரி முன்னணியின் நிலைப்பாடு எதிர்காலத்தில் தமிழ் அமைப்புகளுடன் எவ்வாறான ஒரு உறவை இடதுசாரி முன்னணி வளர்த்துக்கொள்ளும் என்பன போன்ற விடயங்களுக்கு இச்சந்திப்பில் விளக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை இங்கு பதிவிடும் பட்சத்தில் அவற்றை விக்கிரமபாகு கருணாரட்னவின் முன் வைக்கமுடியும்.

நிகழ்வு விபரம்:

இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உடனான கலந்துரையாடல்

November 28, 2010 @ 19:30

 Lord Broke Hall, Shernhall St, Walthamstow, London, E17 3EY

 Joint Invitation: ThesamNet & ASATiC

 T Jeyabalan (07800 596 786), T Sothilingam (07846 322 369)

தயவு செய்து கேவலப்படுத்தாதீர்கள்! சூதாட்டத்தை நிறுத்துங்கள்!! மக்களை ஏமாற்றும் இழி செயலை நிறுத்துங்கள்!!! – மாவீரர் தினத்தை முன்னிட்டு : ஆதவன்

Maaveerar_Thuyilum_Illam_2010தயவு செய்து கேவலப்படுத்தாதீர்கள்!  சூதாட்டத்தை நிறுத்துங்கள்!! மக்களை ஏமாற்றும் இழி செயலை நிறுத்துங்கள்!!! : மாவீரர் தின உரை நாடகத்தை முன்னிட்டு : ஆதவன் 
  
முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டு –மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை பெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா! 
 
சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 
 
எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை. 
 
ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம். 
 
இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இ;ல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது. 
 
இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான். விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொருத்தவரையில் மாவீரர் தின உரையாற்றும் தகுதி அதன் தலைவருக்கு மட்டுமே உண்டு. அதுவே புலிகளின் மரபாகவும் இருந்து வந்திருக்கிறது. சிலரின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாடானது, புலிகளின் மரபையும், அந்த மரபைக் காத்து உயிர்நீத்த ஆயிரக் கணக்கான போராளிகளின், உடன் இருந்த மக்களின் தியாகங்களை நகைச்சுவைக்குரியதாக மாற்றும் செயலன்றி வேறொன்றுமில்லை. தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் பகிரங்கப்படுத்திய கே.பியை துரோகி என்றவர்கள் எந்த அடிப்படையில் ; இந்தச் செயலை அனுமதிக்கின்றனர்? அவ்வாறு ; உரையை ஏற்பதாயின் முதலில் கே.பியின் கூற்றை அங்கரித்துவிட்டல்லவா அதனை ஆமோதிக்க வேண்டும். சிலர் சொல்லுவது போன்றே தலைவர் இருக்கிறார், அவர் தக்க தருணத்தில் வருவார் என்றால் எவ்வாறு .,?????? தலைவர் பிரபாகரனின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும்? இப்படியான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகின்றவர்கள் யார்? 
 
ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம். 
 
புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர் வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன.

அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை ‘மேதகு’ அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னர் தலைவர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. மேதகு சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.

உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.  
 
எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர். 
 
நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின்  கவிதை வரிகள் இவை – ‘எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை’ – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை. 
 
இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள் –  பட்டினியில் மயங்கும் முதியோருக்கு  ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான  பகடைக்  காய்களாக்க முயற்சிக்காதீர்கள். 
 
வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி  துரோகி பட்டம் சூட்டி  அடாவடித்தனம்  செய்யும் நீங்கள்  எங்களது அரசியல்  உரிமையில் மட்டும்  அக்கறை காட்டுவதனை எப்படி  நம்புவது?  ஆடு நனைகிறது என்று ஓநாய்  அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது? 

Related Link:

http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

மாவீரர்களை மதிப்போம்! அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!! : த ஜெயபாலன்

இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? : ஆதவன் (வன்னி)

இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaவட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள மக்களுக்கும் உள்ள உறவு தொடர்பாக தெரியாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவு பூரணமடையாது என யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம், சமயம், வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இந்திய அரசின் உதவியுடனான நூறு உழவு இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

._._._._._.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் இன்று திறப்பு- 27 Nov 2010

MR&SM_Kirishnanஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப்படவுள்ளன.