2010
2010
போலி ஆவணங்கள் தயாரிக்கும் சட்ட விரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ள சமாதான நீதவான்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதி அமைச்சு கூறியது. இதற்காக விசேட குழுவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். போலியான ஆவணங்களை தயாரிக்க சில சமாதான நீதவான்கள் உதவி வருவதாகவும் இத்தகையோரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமாதான நீதவான் முத்திரையை பயன்படுத்தி மோசடிகளுக்கு உதவுவதாகவும் அதனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப் பதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இத்தகைய சமாதான நீதவான்களின் பதவி இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
ஹபரண ஹுருளு வனாந்தரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 2,500 ஏக்கர் காடு சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது திட்டமிட்ட காடு எரிப்பாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சீகிரியாவிலுள்ள விமானப்படையினரின் உதவி பெறப்பட்டது. இதனையடுத்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
என்றாலும், நேற்று இரவு வரை தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையென வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையினருக்கு உதவியாக பொலிஸாரும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கப்டன் சங்கக்கார, பரனவிதனா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது. இலங்கை – இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலியில் நேற்று துவங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை கப்டன் சங்கக்கார துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு டில்ஷான், பரனவிதனா சுமாரான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்த போது அபிமன்யூ மிதுன் வேகத்தில் தில்ஷான் (25) அவுட்டானார். பின்னர் இணைந்த கப்டன் சங்கக்கார பரனவிதனா ஜோடி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்கார, டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதமடைத்தார். இவர் 103 ஓட்டங்கள் எடுத்த நிலையில் செவாக் சுழலில் சிக்கினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய பரனவிதனா டெஸ்ட் அரங்கில தனது முதல் சதமடித்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பரனவிதான (110) மஹேல ஜயவர்தன (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய சார்பிபல் அபிமன்யூ மிதுன் செவாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது நிலைத்து நிற்கவேண்டியவர்களுள் மண்டேலாவும் ஒருவராவார். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் ஒளிக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
2010 ஜூலை 18 இல் இடம்பெற்ற முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தில் “மண்டேலா ஆபிரிக்காவின் மைந்தன் / தேசத்தின் தந்தை என்ற திரைப்படமொன்றும் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், மண்டேலாவை கௌரவித்து ஐ.நா. பொதுச் சபையில் உத்தியோகபூர்வமற்ற அமர்வொன்றும் இடம்பெற்றுள்ளது. நெல்சன் மண்டேலா “மக்களின் மனிதர்” என்ற புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றதாக ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதரான நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினமான 2010 ஜூலை 18 இல் முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென 2009 நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை முன்நகர்வாக ஜூலை 18 இல் நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாட வேண்டுமென கியூபா பாராளுமன்றம் தீர்மானித்தது. அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதத்துவத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்த நெல்சன் மண்டேலாவை கௌரவித்து கியூபா பாராளுமன்றம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தவர் நெல்சன் மண்டேலாவாகும்.
நெல்சன் மண்டேலா (Nelson Mandela International Day), ஜூலை 18, 1918 இல் பிறந்தவர். இவர் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.
இதற்கு ஓர் உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியது கூடக் கிடையாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை. நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.
மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. 2010 இல் உதைபந்தாட்ட உலக கிண்ணத்துக்கான போட்டியும் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது.
மண்டேலா சிறுபராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டார். இவரது குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம்பராயத்திலே கல்வியைப் பெறுவதில் கூடிய ஆர்வம் கொண்ட மண்டேலா, பின்பு இலண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு: அராஜக நடவடிக்கைகளை கட்டழ்த்தது. இனவாதமும் அடக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன.
மண்டேலா தனது பல்கலைக்கழகத் தோழன் ஒலிவர் ரம்போவுடன் இணைந்து இன ஒதுக்களுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். இதன் விளைவு பயங்கரமாக மாறியது. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் சுமார் 150 தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோல்வியுறும் போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென இவரால் உணரமுடிந்தது. வேறுவழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை முன்னெடுத்தார்.
1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதும் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது” என வற்புறுத்தி நின்றார்.
இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடைசெய்யப்பட்டது. இத்தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.
1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.
தென்னாபிரிக்காவில் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தொடர்ந்து 10 மே 1994 இல் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 14 ஜூன் 1999 வரை பதவி வகித்தார். மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கத் தலைவராக பதவியேற்றவர் தாபோ உம்பெக்கியாவார். 3 செப்டம்பர் 1998 முதல் 14 ஜூன் 1999 அணிசேரா இயக்கப் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
இவரின் முதலாவது வாழ்க்கைத் துணைவி எவெலின் மாசே (1944–1957). பின்பு 1957 இல் வின்னி மண்டேலாவைக் கரம்பற்றி 1996 வரை வாழ்ந்தார். 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவிட்டு மண்டேலா விடுதலையாகி வெளியே வந்ததும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 1998 இல் கிராசா மாச்செலை மணம் புரிந்த இவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மெதடிசம் சமயத்தவரான இவர் தற்போது ஹூஸ்டன் எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார். 1993இல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருந்த போது, ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இனஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது கறுப்பின மக்களை அதுகாலவரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கிய வெள்ளையர்களை மன்னித்து நல்லிணக்கப்போக்கினைக் கடைபிடித்தார். தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் ஆட்சியின் முடிவுக்குப் பின்னரான காலகட்டம் அனர்த்தங்கள் மிகுந்ததாகவே இருக்கும் என்று உலகம் நினைத்தது. ஆனால், இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதிவழிச் செயற்பாடுகளில் வெள்ளை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்ட நெல்சன்மண்டேலா 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்லின ஜனநாயகத் தேர்தலின் பின்னர் அமைத்த ஆட்சி உலகத்தின் நினைப்பைப் பொய்யாக்கியது. மண்டேலா ஆட்சியின் அடிநாதமாக நல்லிணக்கக் கோட்பாடே அமைந்தது.
ஒகஸ்ட் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இவர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு செயலமர்வு நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென கல்வியமைச்சின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றுவிக்காத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு நிலையத்தில் இவ்விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 252 ஆண்களுக்கு வவுனியா தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும் 110 பெண்களுக்கு பூந்தோட்டத்திலும் அவர்களது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களே இவர்களுக்கான கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றனர். புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 260 பேர் கலைப் பிரிவிலும் 09 பேர் கணிதப் பிரிவிலும் 22 பேர் உயிரியல் பிரிவிலும் 71 பேர் வர்த்தகப் பிரிவிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனரெனவும் அதன் ஆணையாளர் மேலும் கூறினார்.
மேலும் டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 172 பேர் தயாராகி வருவதாகவும் அவர் குறிப் பிட்டார்.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர்.
தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ. வெங்கடேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில் கெளரவத்திற்குரிய முதன்மை பேராளர்களாக பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் சி. சிவலிங்கராசா, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்வர்.
இன்றைய நிகழ்வில், பெரிய நீலா வணையில் இருந்து காரைதீவு வரையுமான சிறப்பு ஊர்தியுடனான ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் இலக்கியவாதிகள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வர். இன்று காலை 8.30 அளவில் ஊர்வலம் ஆரம்பமாகும். காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் புதுப் பொலிவு பெற்றுள்ளது. பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவின் சகல பொது நல அமைப்புகளும் விழா ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன. பிரதான விழா விபுலானந்த மத்திய கல்லூரியில் 12.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
காலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலை வடிவங்கள், தமிழின்னிய அணிகள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி, கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள், பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலம் நகர்ந்து விழா நடைபெறும் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.
விழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுவாமி விபுலானந்தரின் மருமகள் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை (இ. அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார். மாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
எப்பாவல நால்வர் கொலை விசாரணை – கொலைகளை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புதல்; கோடரி, வீட்டுச்சாவி மீட்பு
எப்பாவலயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் தானே அக்கொலைகளை புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதேவேளை குறித்த இளைஞனால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி மற்றும் வீட்டுத் திறப்பு ஆகியனவும் மீட்கப் பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குத்தியும் வெட்டியும் கொல்லப் பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். அவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இந்நிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து 23 வயதுடைய இளைஞரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கே. பிரியந்தவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலமொன்றின் கீழ் மறைந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் சம்பவதினம் நள்ளிரவு கோடரி ஒன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகவும் பின்னர் வீட்டின் உள்ளிருந்த மூவாயிரம் ரூபா பணத்தை எடுதுக்கொண்டு கதவுகளை மூடிவிட்டு திறப்புகளை வீட்டின் பின்னாலிருந்த கிணற்றுக்குள் போட்டுவிட்டு வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் அநுராதபுரம் வரை வந்து பின்னர் கண்டி, குருநாகல், கொழும்பு பகுதிகளில் அலைந்து திரிந்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி வீட்டுக்கு அருகிலிருந்த குளம்ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மது மற்றும் ஹெரோயின் போதைவஸ்துக்களுக்கு அடிமையான இவ்விளைஞன் அநுராதபுரம் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவனாவார்.
டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்றீரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.
இந்த பக்றீரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்றீரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த அடிப்படையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கென சுகாதார அமைச்சு கியூபாவிலிருந்து தருவிக்கும் பத்தாயிரம் லீட்டர் பி.ரி.ஐ. பக்aரியா கிடைக்கப்பெற்ற தும் அதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இந்த பக்றீரியா வந்து சேர்ந்ததும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கண்டி நகர், அக்குறணை, கம்பளை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.
இதேவேளை இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரையும் டெங்கு நோய் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 20 ஆயிரத்து 647 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர் என்று அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். இந்நோய் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய்க்கு இவ்வருடத்தை விடவும் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவு எனவும் அவ்வதிகாரி கூறினார். இதேநேரம் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்துவதற்கு டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமுள்ள மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் 61 இருப்பதாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் முதல் தெஹிவளை மருத்துவ அதிகாரி பிரிவும் டெங்கு அச்சுறுத்தல் மிக்க மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.
கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் பி.ரி.ஐ. பக்றீரியாவை கலாநிதி ராதிகா சமரசேகர தலைமையிலான குழுவினரே தயாரித்திருக்கின்றனர். இது தனியார் நிறுவன மொன்றின் ஊடாக இம்மாதத்தின் இறுதியில் சந்தைக்கு விடப்படும். இந்த பக்றீரியா கிருமிநாசினிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் பதிவாளர் இதனைச் சந்தைப்படுத்துவதற்கு தற்காலிக பதிவையும் வழங்கியுள்ளார் என்றார்.
232 தமிழ் குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் கப்பலொன்று மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவுக்கு அருகில் வைத்து நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 59 மீற்றர் நீளமான எம். வி. சன் எனும் இக்கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும் 12 இந்திய தமிழர்களும் இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தை நோக்கி இக்கப்பல் சென்று கொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில் கனேடிய அதிகாரிகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ளவர்களில் தமிழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.