எப்பாவல நால்வர் கொலை விசாரணை – கொலைகளை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புதல்; கோடரி, வீட்டுச்சாவி மீட்பு

எப்பாவலயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் தானே அக்கொலைகளை புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதேவேளை குறித்த இளைஞனால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி மற்றும் வீட்டுத் திறப்பு ஆகியனவும் மீட்கப் பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குத்தியும் வெட்டியும் கொல்லப் பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். அவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்நிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து 23 வயதுடைய இளைஞரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கே. பிரியந்தவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலமொன்றின் கீழ் மறைந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் சம்பவதினம் நள்ளிரவு கோடரி ஒன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகவும் பின்னர் வீட்டின் உள்ளிருந்த மூவாயிரம் ரூபா பணத்தை எடுதுக்கொண்டு கதவுகளை மூடிவிட்டு திறப்புகளை வீட்டின் பின்னாலிருந்த கிணற்றுக்குள் போட்டுவிட்டு வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் அநுராதபுரம் வரை வந்து பின்னர் கண்டி, குருநாகல், கொழும்பு பகுதிகளில் அலைந்து திரிந்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி வீட்டுக்கு அருகிலிருந்த குளம்ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மது மற்றும் ஹெரோயின் போதைவஸ்துக்களுக்கு அடிமையான இவ்விளைஞன் அநுராதபுரம் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவனாவார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *