2010

2010

நோர்வேயில் சிவசுப்பிரமணியர் ஆலயத் தேர்த் திருவிழாவில் நடந்தது என்ன? : ரி சோதிலிங்கம்

Sivaganesh_Vadiveluநோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர். 8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் தேசம்நெற் இடம் முறைப்பட்டார். ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
 
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.

தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.

தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.

என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
 
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும். இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
 
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.

வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
 
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.

மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
 
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது. சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது. தமிழ்நெற் இச்செய்தியை மறுத்து அச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு ஒழுங்குப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு எனச் சுட்டிக்காட்டி இருந்தது. நோர்வே மக்கள் அவை உறுப்பினரான சிவகணேஸ் வடிவேலு காயப்பட்டதை வைத்துக் கொண்டு சந்தேசயா செய்தியைத் திரிபுபடுத்தியதாக தமிழ்நெற் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

கொட்டாஞ்சேனைப் பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைப்பு! மீண்டும் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

 Police_Checkகொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதி நேற்று முன் தினம் வியாழக்கிழமை (Aug 12 2010) அதிகாலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுள்ளனர். இதன் போது தமிழ் பொதுமக்கள் சிலருக்கும் பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதங்களும் எற்பட்டுள்ளன. போர் முடிவுற்ற பின்னர் அவசரகாலச் சட்ட விதிகளிலிருந்து தமிழ்மக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தமிழ் மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் படி கேட்பது எந்த வகையில் நியாயம் என சில படித்த தமிழர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள்  கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கொழும்பு உள்ளிட்ட தென்பகுதிகளில் இடம்பெற்றபோது பொலிஸ் பதிவு நடைமுறையும், தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பக்கள், விடுதிகள் முதலானவை அடிக்கடி சுற்றிவளைப்பு, தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“கே.பி அரசாங்கத்தால் நடத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது” தவிகூ தலைவர் வீ ஆனந்தசங்கரி

a_sangary.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மன்னிப்பும். அவரை நடத்தி வருகின்ற முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இடம்பெயர்ந்த மக்களும், விடுதலைப் புலி போராளிகளும் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பரிவு காட்டி வருகின்றது. 10500 இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகளான அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறு” எனக் குறிப்பிட்ட அவர் அரசாங்கம் கே.பியிலும், அவரது ஆதரவாளர்களிலும் தங்கியிருப்பது குறித்தும் எச்சரிக்கை செய்தார்.

 கே.பி இலங்கையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் பணம் சட்டவிரோதமாகவும், பாவ காரியங்களூடாகவும் சேர்க்கப்பட்டவையாகும். அப்பணத்தை அபிவிருத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் மேற்படி பாவத்தில் அரசாங்கமும் பங்கு கொள்ளக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும்,  இராணுவத்தினர் மத்தியில் வாழும் அம்மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையிலுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும் – நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.

அத்துடன் வடக்கில் மக்களின் சுதந்திரமான இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்து வதற்காக அங்கு சிவில் நிர் வாகத்தை முழுமையாக ஏற் படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வில் ஆனந்தசங்கரி நேற்று சாட்சியமளித்தார். குழுவின் தலைவர் – முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சுமார் 45 நிமிடம் சாட்சியமளித்த கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, குழுவின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரும் எமது அப்பாவி பிள்ளைகள். அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்களே தவிர எந்தக் குற்றமும் அறியாதவர்கள். அவர்கள் உடலால் சரணடைந்திருந்தாலும் அவர்கள் உணர்வால் சரணடையவில்லை. அவர்கள் அப்பாவிகள். அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்தால், அவர்கள் சமூகமயப் படுத்துவார்கள். யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் எமது மக்கள் சுதந்திரமாக அவர்களின் சொந்த மண்ணில் வாழ வேண்டும். இது எமது நாடு. எமது மண். நாம் இந்த நாட்டையே நேசிக்றோம். நான் இந்த நாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்.

வடக்கில் முழுமையாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படாத வரை நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எமது பிரச்சினை 50 வருடம் பழைமை வாய்ந்தது. இன்னமும் தீர்வு காணப்படவில்லை” என்று குறிப்பிட்ட ஆனந்த சங்கரி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ், சிங்கள மொழிகளைப் பாடசாலை மட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றதுடன் ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைத் தருவிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த எஸ். எல். குணசேகர, “புலிகள் இயக்கத்திற்கும் ஜே. வி. பி. யினருக்கும் வேறுபாடு கிடையாது. இவர்களும் வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆனால், இரு அமைப்புக்களின் ஒழுங்கு நடைமுறையே மாறுபட்டிருந்தது” என்று சுட்டிக்காட்டினார்.

சுகவீனமுற்றுள்ள ரணிலின் தாயாரை மகிந்த ராஜபக்ச பார்வையிட்டார்.!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயாரை இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சென்று பார்வையிட்டார்.

 நோயுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் ரணில் விக்கரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்கவை நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு அவர் சுகமடைய தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதபதி வைத்தியசாலைக்குச் சென்ற போது அங்கு ரணில் விக்கரமசிங்க இருக்கவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

14வயது சிறுமியை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இருவர் கைது!

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி கட்டுகஸ்தொட்ட என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயது சிறுமியின் காதலனான இளைஞன் ஒருவனும் 38 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் இச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வல்லறவிற்குட்படுத்தினர் என விசாரணகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

பரீட்சை நிலையத்தில் செல்லிடத்தொலைபேசியைப் பயன்படுத்திய மாணவர்கள் விசாரணையில்!

தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மாத்தறையிலுள்ள பரிட்சை நிலையமொன்றில் இரு மாணவர்கள் செல்லிடத் தொலைபேசியைப் பயனபடுத்தியமைக்காக விசாரணகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் பரீட்சையில் ஏதும் மோசடி செய்வதற்காக தொலைபேசியைப் பயன்படுத்தினரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இம்மாணவர்கள் பரிட்சைகளை பூhத்தி செய்ததும் இது குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

தீர்ப்பினை அனுமதித்தார் ஜனாதிபதி – மறுப்பு பொன்சேகா

sa.jpgசரத் பொன்சேகாவை அனைத்து இராணுவ நிலைகளையும் நீக்குமாறு முதலாவது இராணுவ குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக  இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.

 அதே நேரம் தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

நாளை மடுமாதா ஆலயத் திருவிழா

madu.jpgகத்தோலிக்க மக்களின் புனித தலமாக விளங்கும் மருதமடு மாதா ஆலயத்தின் ஆகஸ்ட் விண்ணேற்புத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 6.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியை தமிழ், சிங்கள, இலத்தீன் மொழிகளில் மன்னார் ஆயர் அதி.வணஇராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆறு ஆயர்கள் இணைந்து ஒப்புக்கொடுப்பார்கள். அதனையடுத்து அன்னையின் திருச்சொரூப பவனியும் வழிபாடும் ஆசீரும் வழமை போல நடைபெறும்.

கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை நற்கருணை வழிபாடு, பவனி, ஆசீர் நடைபெறும். இம்முறை வழமையைவிட பெருமளவு பக்தர்கள் வரவுள்ளதால் மடுத்÷தவாலயத்தைச் சூழவுள்ள காட்டுப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கியுள்ளனர்.

குடிநீர் மற்றும் பாவனைக்குரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகள் அகற்றப்படாது எச்சரிக்கை குறியீடுகள் காணப்படும் இடங்களில் மக்களை நடமாடவேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா குற்றவாளி: இராணுவ நீதிமன்று தீர்ப்பு

sf.jpgசரத் பொன்சேகா குற்றவாளியென முதலாவது இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.அவரின் பதவி நிலைகள், பதக்கங்களைப் பறிப்பதற்கான தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியின் அங்கீகாரத்தின் பின் நடைமுறைக்கு வரும்.

இதன்படி, இத்தகைய சூழ்நிலையில் இராணுவ அதிகாரியொருவர் பதவி நீக்கம் செய்யப்படும் பொழுது, அவருக்கு கிடைத்த பதவி நிலைத் தரம் மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழப்பார்.

சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தி வந்த முதலாவது இராணுவ நீதிமன்றம், அவர் சேவையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் மீதே இந்தத் தீர்ப்பு வழங்கியதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டிற்கான தீர்ப்பு ஜெனரல் பொன்சேகாவுக்கு வாசிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

5 மாதங்களுக்கு முன்னர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றத்தால் பொன்சேகா மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் நடவடிக்கைகளில் பொன்சேகா ஈடுபட்டிருந்தாரென்ற குற்றச்சாட்டு தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்றது. இந்த வாரம் இடம்பெற்ற முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது பொன்சேகா தரப்பு சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதேவேளை, மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொன்சேகா மீது மற்றொரு இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தேசிய கதாநாயகனாக பொன்சேகா புகழப்பட்டார். பின்னர் அரசியலில் இணைந்த ஜெனரல் பொன்கேசா கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற இரு வாரங்களில் கைதுசெய்யப்பட்ட அவர், ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்

கடல்சூரியன் கப்பலுக்குள் கனடா படை பிரவேசம் – 490 பேர் இருப்பதாக கனடா அறிவிப்பு

son-k.jpgஇலங்கை அகதிகள் இருக்கலாமென நம்பப்படும் ‘கடல்சூரியன்  கப்பலுக்குள் கனேடிய கரையோர காவல் படையினர் பிரவேசித்துள்ளதாக கனடா செய்திச் சேவை அறிவித்துள்ளது. 490 தமிழர்களுடன் கடல்சூரியன் கப்பலை இடைமறித்துள்ள கனடிய அதிகாரிகள் அவர்களை விக்டோரியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சி.எப்.பி.எஸ்கியூமோட்டுக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றிருப்பதாக கனடிய குளோப் அன்ட் மெயில் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

500 இலங்கையர் இருக்கலாமென ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்த போதும், 490 பேரே கப்பலினுள் இருப்பதாக கனடிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்ரோவ்ஸ் அறிவித்துள்ளார். என்றாலும், இவர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருக்கலாமென நம்புவதாகவும் அவர் கூறினார். “இவர்கள் மீதும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும் கனடா கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இந்த அகதிகள் விடயத்தில் கனடா என்ன நடவடிக்கை எடுக்கிறதென்பதை மனிதக் கடத்தலில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கையைப் பொறுத்து மனிதக் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடலாமா? இல்லையா? என்பது தான் அவர்களது அங்கலாய்ப்பாக இருக்கிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேற்படி கடல்சூரியன் கப்பல் விடயம் தொடர்பாக அமெரிக்காவும் கருத்துத் தெரிவித்துள்ளது.

“இது தொடர்பாக கனடிய அரசுடன் பேசி வருகிறோம். அவதானித்தும் வருகிறோம். ஏதும் அவசரமான நிலை ஏற்படுமாக இருந்தால் அமெரிக்கா பொருத்தமான முறையில் பதிலளிக்கும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக் களப் பேச்சாளர் நிகோல் தோம்ஸ்சன் தெரிவித்தார்.

கனேடிய வன்கூவர் சன் செய்திச் சேவையின் தகவல்படி கப்பலில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  எனினும், யாரென்ற விடயம் வெளி யாகவில்லை. அதேவேளை, கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கடல்சூரியன் கப்பலை எச்.எம்.சி.எஸ்.வின்னிபஹ் கப்பலே இடைமறித்திருக்கிறது. வின்னிபெஹ் பலதடவைகள் கடல்சூரியனுடன் தொடர்புகொள்ள முயற்சித்தது. தொடர்பாடல்களை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் கப்பலில் அகதிகள் இருப்பதாக கடல்சூரியன் அறிவித்தது என்று அவர் கூறியுள்ளார்.  கப்பலானது எஸ்கியூமோட் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படுமென்பதை கனடாவின் போக்குவரத்துத்துறை உறுதி செய்தது.