நோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர். 8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் தேசம்நெற் இடம் முறைப்பட்டார். ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.
தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.
தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.
என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும். இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.
இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.
மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.
வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.
மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.
இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது. சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது. தமிழ்நெற் இச்செய்தியை மறுத்து அச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு ஒழுங்குப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு எனச் சுட்டிக்காட்டி இருந்தது. நோர்வே மக்கள் அவை உறுப்பினரான சிவகணேஸ் வடிவேலு காயப்பட்டதை வைத்துக் கொண்டு சந்தேசயா செய்தியைத் திரிபுபடுத்தியதாக தமிழ்நெற் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.