September

September

பத்மநாதனிடம் பாகிஸ்தான் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்தவுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் கே.பி.யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அண்மையில் லிபியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்தவிடம், இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில்  நடத்தப்பட்ட தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஹிலார்னி தெரிவித்திருந்தார்.

இதன்படி, குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தானிய உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு எதிர்வரும் வாரத்தில் விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் பத்மநாதனை விசாரணை செய்யும் இந்திய புலனாய்வுக் குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலுக்கும் பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டை காட்டி கொடுக்க வேண்டாம் -ஜனாதிபதி வேண்டுகோள்

mahinda-rajapaksha.jpgஅரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும், பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (11ம் திகதி) காலியில் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நோக்கில் மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட தாயகத்திற்கு எதிராக பலவகைகளிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு எதிராக இடம்பெறுகின்ற சூழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒருசிலர் தகவல்களைத் திரட்டி நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சி செய்கின்றார்கள். பெற்றுள்ள வெற்றியைப் பேணிப் பாதுகாப்பதென்பது பெரும் சிரமமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

காலி, யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டார். மெட்டரம்ப ஹேமரத்ன தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் வைபவமும், ‘புனருதய’ கலை விழா – 2009 நிகழ்வும் யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொட ர்ந்தும் உரையாற்றுகையில் :- மனிதாபிமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முழு மையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவொரு இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக முன் னெடுக்கப்பட்டதல்ல. மாறாக புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பயனாக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பயங்கரவா தம் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தாயகத்திற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற் காக படைவீரர்கள் 26 ஆயிரம் பேர் தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்கள்.

இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புடன் அடையப் பெற்றி ருக்கும் இவ்வெற்றியை அரசியல் லாபம் பெறுவதற்காக குறைத்து மதிப்பிட வேண்டாம். பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டு நாடு ஐக்கியப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக் கும் நாட்டை இன, மத, கட்சி, மொழி, நிற பேதங் களுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண் டும். இது சகலரதும் பொறுப்பாகும்.

புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் எமது தாயகத்திற்கு எதிராகச் சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன. அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளுவதற்காக சிலர் நாட்டைக் காட்டிக்கொடுக்க முய ற்சி செய்கின்றனர். ஆனால், நாம் அரசியல் செய்வதற்கு நாடு இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முதலில் உணர்ந்துகொள்வது அவசியம். அதனால் ஒவ்வொருவரும் தாய் நாட்டுக்கே முதலிடமளிக்க வேண்டும். நாட்டைக் காட்டிக்கொடுக்கக் கூடாது.

பாராளுமன்றத்தில் சிலர் எழுப்புகின்ற கேள்விகள் என்ன நோக்கத்திற்காக? யாருடைய தேவையை நிறை வேற்றுவதற்காக எழுப்பப்படுகின்றன என்பதை நாமறிவோம். சிலர் பணத்திற்காக எதையும் செய்யத் தயாராக இரு க்கின்றார்கள். அவர்களுக்கு பணமே முக்கியம். இவ் வாறான சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பாதாள உலகம் கூட பணத்திற்காகவே இயங்குகின்றது.

இந்நாட்டுக்கு எதிராக தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சூழ்ச்சிகள் இடம்பெறக் காரணம் எமது படையினர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அடைந்திருக்கும் வெற்றியேயாகும். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாட்டு மக்கள் மத்தியில் தாயகம் மீதான பற்று அதிகரித்திருக் கின்றது. தேசியக் கொடிக்கு முன்னொருபோதுமே இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

தாயகத்தின் மீது அன்பும், பற்றும் கொண்டவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்களை நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்ன அபிவிருத்தி செய்தாலும் அவை பிரயோசனமற்றதாகிவிடும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான டப்ளியூ. டி. ஜே. செனவிரட்ன, பியசேன கமகே, ஹேமகுமார, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, பிரதியமை ச்சர் லயனல் பிரேமசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

7334 முதியோர் வெளியேற அனுமதி

வவுனியாவில் உள்ள மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் உட்பட இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பல்வேறு முகாம்களில் இருந்து இதுவரையில் 7334 முதியவர்கள் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முதியவர்கள் உறவினர்களிடம் செல்வதற்கும், உறவினர்கள் அல்லது உற்றார் இல்லாத முதியவர்கள் பலர் பல்வேறு முதியோர் இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா மன்னார் வீதியில் சனசமூக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை- ரஜினி

13-rajini.jpgஅரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மீண்டும் அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வாலி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்குள்ள கலைஞர் கருவூலத்தை சுற்றிப் பார்த்த ரஜினி, “கலைஞர் கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. இதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவும் ஒரு நாள் போதாது’ என்றார்.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவரது அழைப்புக்கு நன்றி. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போது இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அது பற்றி யோசிப்பேன்’ என்றார் ரஜினிகாந்த்.

பின்னர் முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். திமுகவை உரசும் விதத்தில் ராகுலின் சமீபத்திய சென்னை விசிட் அமைந்திருந்தது. ரஜினியை காங்கிரசில் சேர அழைத்திருந்த ராகுல், அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.

ராகுலுக்கு சரியான பதிலடி தரவே ரஜினியை அறிவாலயத்துக்கு அழைத்து, அவர் வாயாலேயே காங்கிரஸ்காரர்களுக்கு பதிலும் சொல்ல வைத்தார் கலைஞர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் யோசனையை பரிசீலிக்க ஐசிசி முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள நடைமுறையை முறையை மாற்றி இரு அணிகளுக்கும் தலா ஒரு இன்னிங்ஸ் என்பதற்கு பதிலாக, 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் யோசனை பரிசீலனை செய்ய உள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் அதிரடியான பிரபலத்தால் 50 ஓவர் (ஒருநாள்) போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் 50 ஓவர் போட்டியை மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு 25 ஓவர்களாக பிரித்து விளையாட வேண்டும் என்று ஒரு சில நாட்களுக்கு முன் டெண்டுல்கர் யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனைக்கு ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், கபில்தேவ் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் சச்சினின் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி) மேலாளர் (கிரிக்கெட்) ரிச்சர்ட்சன் கூறுகையில், சச்சினின் யோசனை நல்லது தான். இந்த யோசனையை தென்ஆப்ரிக்கா பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பகலிரவு போட்டியை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு பகலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், மற்றொரு அணிக்கு இரவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் ஒரு அணிக்கு சாதமாக சூழலும், எதிரணிக்கு சாதகமற்ற சூழலும் ஏற்படுகிறது. பூவா-தலையா ஜெயித்து முதலில் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.

சச்சினின் யோசனை குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டி பிரபலத்தால் 50 ஓவர் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் 25 ஓவர்களாக பிரித்து ஆடுவதால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

பல்கலைக்கழக அனுமதியில் அநீதி இல்லை’ – அமைச்சர் விஷ்வ வர்ணபால

viswa-999.jpgபல்கலைக் கழக அனுமதியில் எவருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாதென உயர் கல்வியமைச்சர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார். கொழும்பு-ஸ்ரீஜயவர்தன புர பல்கலைக் கழகங்களுக்கிடையில் மாணவர் அனுமதி தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கிழக்குப் பல்கலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 2008, 2009ம் ஆண்டுகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகத் தில் இருந்த வெற்றிடங்களை கருத்திற் கொண்டு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இம்முறை 25 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் இடம்பெற்றதாக பல்கலைக்கழக உபவேந்தர் என்னுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார். பகிடிவதையைப் பல்கலைக்கழகங்களிலிருந்து இல்லா தொழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்று பல் கலைக்கழக மாணவர்கள் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சேர்த்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக அமைச்சர் பி. தயாரத்னவுடன் பேச்சு நடத்தி உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இன, மதம் என மாணவர்களைப் பிரிக்காது சகலரும் கற்கும் பல்கலைக்கழகங்களாக சகல பல்கலைக்கழங்களையும் உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

‘ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் முடிந்தது

13-jet-airways.jpgஐந்து நாட்களாக நடந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் இயங்கத் துவங்கியுள்ளனர். சில மூத்த பைலட்டுகளை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பைலட்டுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் என்று அறிவிககாமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடங்கியது.

இதனால் நாடு முழுவதும் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். செத்த வீட்டில் புடுங்குவது மாதிரி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜய் மல்லையாவின் கிங்பிஷ்ஷர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் ஐந்து மடங்காக உயர்த்தி தங்கள் குறுகிய புத்தியைக் காட்டின. இந் நிலையில் ஜெட் நிர்வாகம், மத்திய விமானத்துறை அதிகாரிகள், பைலட்டுகள் இடையே நேற்று இரவு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. சுமார் 7 மணி நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் சுமூகமான நிலை எட்டப்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமான சேவைகள் மெல்ல மெல்ல மீண்டும் துவங்கியுள்ளன. இதில் சர்வதேச விமான சேவைகளும் அடக்கம்.

பேச்சுவார்தையில் எந்த வகையான சமரசம் ஏற்பட்டது என்பதை இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை ஜெட் நிர்வாகம் மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாகவும், அதே போல ஜெட் விமானிகள் சங்கம் அமைப்பதை தவி்ர்க்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு கிழக்கில் முப்படை முகாம்கள் அகற்றப்பட மாட்டா : ஜனாதிபதி

வடக்கு கிழக்கில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக் குடியேற்ற வேண்டும் எனவும், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது

யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் மழையால் பாதிப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முக்கிய போட்டிகள் கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் இப்போட்டிகள் மழை காரணமாக நேற்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நாளையும், இறுதிப்போட்டி 14ஆம் தேதியும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம்: அமைச்சர் சமரசிங்க இன்று ஜெனீவா பயணம்

mahinda-samarasinha.jpgஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஜெனீவா செல்லவுள்ளார்.

நாளை திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு அமைச்சர் பேசவுள்ளார்.

ஜெனீவா செல்லும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் சட்ட மா அதிபரும் செல்லவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் பணிப்பாளர் நாயகம் நவநீதம்பிள்ளை, சட்டத்துக்குப் புறம்பான படு கொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட தூதுவர் பேராசிரியர் பிலிப் அலீஸ்டன், அகதிகளுக்கான ஐ. நா. பிரதிநிதி அண்டோனியோ குட்டேரஸ் ஆகியோரையும் அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இவர்களுடனான சந்திப்பின்போது ஊடகவியலாளர் திஸநாயகம் தொடர்பாக கேள்விகள் எழும்பட்சத்தில் அமைச்சருடன் செல்லும் சட்ட மா அதிபர் விளக்கமளிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.