September

September

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரைக் காட்டுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி இடைத்தங்கல் முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பரமசாமி சந்திரமோகன் (31) காணாத நிலையில் எழுந்த வதந்தியையடுத்து, அவரைக் காட்டுமாறு கோரி அந்த முகாமைச் சேர்ந்த மக்கள் புதனன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி வளவின் ஒரு பகுதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கல்லூரியின் பிரதான நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டிருந்தனர்.

தகவ அறிந்த வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அழைத்துச் செல்லப்பட்டவரைக் கொண்டு வந்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட நபரைப் பொலிசார் அழைத்து வந்து காட்டினர். அதன்பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. . இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். எனினும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நிலைமை சுமுகமானதாகத் தெரிவிக்கப்பட்டது. 

தமிழர்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் முன்னேற்றமடையலாம் – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna000.jpgதமிழ் மக்கள் தேசிய அரசியலில் இணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியில் முன்னேற்றமடைய முடியுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்
”இந்நாட்டில் பதினைந்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும் அவற்றுக்கிடையே ஒற்றுமை கிடையாது என தெரிவித்த அமைச்சர், கிழக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்காக நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூற அமைச்சர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக ஜனாதிபதி வாகரைக்கு வந்து வாகரை பாடசாலை புனரமைப்புக்கான அடித்தளத்தை இட்டுச் சென்றார். இன்று அனைவரும் பெருமைப்படத்தக்கதாக இப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பாரிய கட்டிடத் தொகுதியாக நிர்மாணம் பெற்றுள்ளது.

கிழக்கு மக்கள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியுள்ளனர்.  இப் பகுதி அபிவிருத்தி பற்றி சிந்திக்கும் மக்கள் ஜனாதிபதியையும் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் நினைவு கூருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்பும் அரவணைப்பும் கொண்ட ஒரு சிறந்த மனிதர். ஆளும் கட்சியில் நாம் பங்கேற்பதால் நாம் மேலும் முன்னேற்றங்களை அடைய முடியும். நாம் ஜனாதிபதியுடன் உரிமையோடு பழகுகின்றோம்.  இதனைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் அனைவரும் அவருக்கு முழுமையான ஆதரவளித்து அவரைப் பலப்படுத்துவோம்” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கை விஜயம்

210909walter-kalin.jpgஉள்நாட்டு இடம்பெயர்வுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் வோல்ட்டர் கலீன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலை குறித்தும் அது தொடர்பாக அவர் தமது விஜயத்தின் போது ஆராயவுள்ளார். அதனடிப்படையில் அவர் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிடவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றம் மனித உரிமைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. அவர் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்தித்து உரையாடவும் உள்ளார்.

மீள்குடியேற்றத்தை துரிதமாக்க ரூ.35கோடி குறைநிரப்பு பிரேரணை: சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்

26parliament.jpgஇடம் பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கேதுவாக 35 கோடி ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணையொன்று நேற்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு இந்த நிதியை வழங்க சபை அங்கீகாரம் வழங்கியது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சமர்ப்பித்த பிரேரணை விவாதத்தின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் அமைச்சர் பதியுதீன் குறைநிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றினார். மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் வெகுவிரைவாக தமது சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

மீளக் குடியமர்த்தும் பணிகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றோம். முதலில் வயது முதிர்ந்தவர்களை விடுவித்தோம். தற்போது காயமுற்றோர் மற்றும் பெண்களை அனுப்பி வருகின்றோம். அதே நேரம், கிளிநொச்சி – முல்லைத்தீவு தவிர்ந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள் கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து சிக்குண்டோர்கள் எனப் பெருந்திரளானோரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் என்று தெரிவித்த அமைச்சர், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கி, வவுனியா அரசாங்க அதிபரின் ஊடாகச் செயற்படுத்தி வருவதாகக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார். அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமது உறவினர்கள் ஈடுபட்டிருப்பதாக ஐ. தே. க. உறுப்பினர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் விளக்கியுள்ளாரென்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்து அரசியல் நடத்தும் நோக்கம் அரசாங்கத்திற்குக் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்

”அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன்.” அஜீவனுடன் ஒரு நேர்காணல்.

Ajeevanஅஜீவன் சிறுவயது முதலே மேடை நாடகங்கள் வானொலி தொலைக்காட்சி என பலவேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர். சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்திலும் இவர் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுவிஸ்க்கு புலம்பெயர்ந்த பின்னரும் இன்று வரை அவருடைய ஊடகப் பயணம் அனுபவம் தொடர்கின்றது.

புலம்பெயர்ந்த பின்னர் குறும்படங்களை இயக்கி சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பதித்துக் கொண்டவர். அண்மைக்காலத்தில் பல சினிமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கு முன்னதாகவே 2000 ஆண்டு காலப்பகுதியிலேயே மாற்று சினிமாவுக்கான ஒரு தளத்தை உருவாக்கியவர். 2002 மார்ச் 30 – 31ல் தேசம்நெற் ஏற்பாடு செய்த குறும்படப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சிகளை வழங்கி இரு குறும்படங்கள் அதில் உருவாக்கப்பட்டது.  http://www.oruwebsite.com/tamil_eelam_videos/musicvideo.php?vid=e593271b8

தற்போது சுவிஸ் நாட்டு தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகின்ற அஜீவன் ‘ஜீவன் போர் யு’ என்ற பெயரில் சுவிஸ் வானொலியில் வாராவாரம் தமிழ் சிங்கள நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகின்றார். தனது சினிமா அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் அஜீவன் பகிர்ந்து கொள்கின்றார். உங்களுடைய மேலதிக கேள்விகளைப் பதிவு செய்தால் அஜிவன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். (இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.)

._._._._._.

Ajeevanபுலம்பெயர்ந்த மண்ணில் யாத்திரை கவிக்குயில், ரீஸிங், பீல்ட் த பெயின், நவ் அன் போரெவர், நிழல் யுத்தம், எச்சில் போர்வை, பவர் அழியாத கவிதை என்று குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடிய குறும்படங்களை இயக்கி உள்ளீர்கள். இந்த அனுபவங்களினூடாக தற்போதுள்ள புலம்பெயர் சினிமா பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?

பூத்து குலுங்கும் என்று எதிர்பார்த்த சினிமா, முட்களுக்குள் சிக்கிக் கொண்டதனால் தன்னையே இறுக்கி தன்னை நசுக்கிக் கொண்டது. வளரும் போதே வளைந்து போனது. சுதந்திரமாக பேசப்பட வேண்டிய சினிமா, விருதுகளை வெல்வதற்கு சுயநலமாகிப் போனது. இலங்கை தமிழ் சினிமாவை தோற்கடித்த அதே தமிழன் புலத்திலும் புலத்து தமிழ் சினிமாவை தோற்கடித்தான் என்பதை வருத்தத்தோடாவது மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும். சினிமாவை உருவாக்கிய படைப்பாளிகளது பெயரைக் கூட, படம் காட்டியவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். அதாவது திரையிட்டவர்கள் பெற்ற புகழின் ஒரு சதவீதத்தையாவது, அதை உருவாக்கியவனால் பெற முடியவில்லை. அரசியல் தளங்களைக் கொன்டோர் கையில் புலம் பெயர் சினிமா சிக்கிய போது, சாவுச் சங்குச் சத்தம் கேட்கும் என்பதை உணர்ந்தேன்.

நேர்மையான கலைஞர்களை மெளனிக்க அது வழி வகுத்தது. ஏதோ அதிஸ்டத்தில் வென்றவர்கள் அப்போதைய அலையோடு அடங்கிப் போனார்கள். திறமையான சிலர் மனப்புழுக்கத்தில் வெந்து வெறுத்து ஒதுங்கினார்கள். பலருக்கு ஆசை இருந்த அளவு, அந்த கலை குறித்து அறிவு இருக்கவில்லை. அதை வளர்த்துக் கொள்ளவும் யாரும் முயலவில்லை. அது குறித்து சொன்னாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. சினிமா தெரிந்த இளைஞர்களுக்குக் கூட அடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பாவம் அந்த இளைஞர்கள்.

புலம்பெயர் சினிமாவிற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புலம்பெயர் சினிமா தனது தனித்துவத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. கனடா, லண்டன், பிரான்ஸ், சுவிஸ் என சினிமாவுக்கான அமைப்புகளும் குறும்பட விழாக்களும் உருவாகிய போதும் அவை விளலுக்கு இறைத்த நீராகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்நிலைக்குக் காரணம் என்ன?

குறும்பட விழாக்களின் தேர்வுக் குழுவினர், சினிமா தேர்வுக் குழுவுக்கு எப்படித் தேர்வானார்கள் என்ற வினாவை எழுப்பினால் இதற்கான பதில் கிடைக்கும். எழுதவே தெரியாதவன் பரீட்சை தாள் திருத்தியதன் விளைவை இப்போது அனுபவிக்க வேண்டி வந்துள்ளது.

இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதிகளில் அஜீவன் என்ற இயக்குநரிடம் இருந்து தொடர்ச்சியாக சில படைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது புலம்பெயர்ந்த தமிழ் சினிமாச் சூழலில் அஜீவன் காணமற் போனது ஏன்?

அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன். நான் வாழும் சுவிஸ் சினிமாவோடும் தொலைக் காட்சிக்குள்ளும் என்னை பதித்துக் கொண்டேன். இலங்கை சிங்கள சினிமாவில் என் குழுமத்தோடு எப்போதும் போல் இருக்கிறேன். என்னைப் போல்தான் நாளைய இளைய புலம் பெயர் தலைமுறையும் செய்யும். இருள் படிந்ததால் சூரியன் இல்லாமல் போய் விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. அது மறு புறத்தில் ஒளி கொடுத்துக் கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்கிறது.

குறிப்பாக ஈழவர் திரைக் கலை மன்றத்தின் அணுசரணையுடன் உங்களின் சில படைப்புகள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈழவர் திரைக்கலை மன்றத்தின் சினிமா முயற்சிகளும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஏன்?

உண்மையானவர்களை யாரும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதை அவர்கள் உணரும் போது, காலம் கடந்து இருக்கும். பணம் இருக்கும் அல்லது இல்லாமல் போகும். கற்ற கல்வியை எவராலும் அழிக்க முடியாது. எனவே பணத்தாலும், பலத்தாலும் மட்டும் எதையும் வெல்ல முடியாது. ஜால்ராக்கள் எங்கும் சூழலாம். நல்ல நண்பர்கள் எங்கும் சூழ்ந்து இருக்க மாட்டார்கள். உண்மை பேசுவோர் எதிரிகளாகத் தெரிவார்கள். ஆனால் உண்மைகள் பொய்யாவதில்லை. மெதுவான வளர்ச்சியை கொள்ளாமல், அகலக் கால் பதிக்க முயன்றதும், சுயநலவாதிகள் சூழப் பெற்றதும், அவர்களை ஏற்றுக் கொண்டதும், ஈழவர் திரைக்கலை மன்றத்தின் ஸ்தம்பிதத்துக்குக் காரணம்.

நான் ஏனையவர்களது படைப்புகளை கொண்டு வர ஆதரவும், ஆலோசனையும் வழங்கினேன். அதுவே எனது அவாவாகவும் இருந்தது. பிரான்சில் படைப்புகளை செய்ய அடிப்படை தேவைகள் மற்றும் முன்னெடுப்புகளை எப்படிச் செய்வதென ஆலோசனை வழங்கினேன். அங்கே படப்பிடிப்பு நடத்தி, அதன் வெளியீட்டின் பின்னேதான் என்ன செய்துள்ளார்கள் என பார்க்க முடிந்தது. அதுவும் அரைப் பிரசவமானது.

ஜெர்மனியில் ஒரு படத்தின் மேற்பார்வைக்காகச் சென்று, அதன் ஒளிப்பதிவையும், அவர்களுக்கான உதவிகளையும் என் செலவிலேயே செய்தேன். இன்றுவரை அந்த படத்தின் ஒரு பிரதி கூட எனக்குக் கிடைக்கவில்லை. காட்டவும் இல்லை. நான் பிரான்ஸ் சென்ற போது, படத்தொகுப்புக்கு முன்னரான பகுதிகள் நடிகர் ரகுநாதனிடம் வந்துள்ளதாக சொன்னார். அடுத்த நாள் அவர் வீட்டுக்கு சென்று, அனுப்பியுள்ள ஒளிப்பதிவு செய்து உங்களிடம் வந்துள்ள பகுதிகளை பார்க்கலாமா என்று கேட்டேன். அதை அனுப்பி விட்டேன் என ஒரு பெரும் பொய்யை சொன்னார். நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். ஒளிப்பதிவாளருக்கு காட்டாமல் படத்தை எடிட் செய்யும் கொடுமையை அன்றுதான் உணர்ந்தேன்.

சினிமா என்பது இயக்குனர் மீடியா என்றாலும் இயக்குனர் நினைப்பதை ஒரு ஒளிப்பதிவாளனே செதுக்குகிறான். அவன் எடுத்த ஷாட்களில் தவறானதை பாவிக்காதீர்கள் என்று சொல்லக் கூட ஒளிப்பதிவாளருக்கு உரிமையில்லாத கொடுமையை இவர்களிடம் கண்டேன். இவையெல்லாம் இவர்கள் செய்த மாபெரும் தவறுகள். சமைத்த சமையல்காரருக்கு ருசி பார்க்ககூட சந்தர்ப்பம் அளிக்காது விருந்தினருக்கு பரிமாறியதில் உணவு விடுதியை மூடவேண்டி வந்துள்ளது.

இங்கே சிலதை சொல்லியே ஆக வேண்டும். இது பலருக்கு மனவேதனை தந்தாலும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக நான் சொல்பவை சிலவேளை அமையலாம்.

எனது சினிமா ஆசான் அன்றூ ஜயமான்ன சொல்வார் ” ஒன்று வேலை தெரிந்தவனோடு வேலை செய். அல்லது வேலை தெரியாதவனோடு வேலை செய்.” என்பார். அரை குறைகளோடு மட்டும் வேலை செய்யாதே என்பார். வேலை தெரிந்தவர்களோடு வேலை செய்தால், அவர்களிடமிருந்து நீ எதையாவது கற்றுக் கொள்வாய். வேலை தெரியாதவனோடு சேர்ந்து வேலை செய்தால் நீ சொல்வதை அவன் ஏற்றுக் கொள்வான். அவனும் எதையாவது கற்றும் கொள்வான் என்பார். காரணம் அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பார். அதை நம்மவர்களிடம் அநேகமாக பார்க்கலாம்.

ஸ்டார்ட், கட் சொன்னால் அல்லது ஒரு நல்ல கேமரா இருந்தால் படம் எடுக்கலாம் என்பதை விட அநேக விடயங்கள் இருக்கிறது என்பதை நம்மில் பலர் உணராமல் இருப்பது வேதனையானது. என்னோடு பேசிய அநேக தமிழர்கள் இப்படியான தமிழ் சினிமா ஆர்வலர்கள். அரசியல் மற்றும் போராட்ட வரலாறு கொண்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த கருத்து திரைப்படம் எடுக்க ஆவல். அது எனது குறிக்கோள் அல்ல.

இலங்கையில் நாங்கள் எடுத்த இரு சிங்கள திரைப்படங்களின் இயக்கத்தையும் என் நண்பனே செய்தான். ஆரம்பம் தொட்டு இறுதிவரை நான் அவனோடு இருந்தேன். முதலாவது படம் அவனை தொலைக் காட்சியிலிருந்து, வெள்ளித் திரைக்கு கொண்டு வந்தது. அவன் இலங்கையின் 3 தொலைக் காட்சிகளை உருவாக்கிக் கொண்டு வர அடிப்படையாக இருந்தவன்.

இவற்றில் பணியாற்றிய நாங்கள், இலங்கையின் திரைப்பட மேதையும் இடதுசாரியுமான காலஞ்சென்ற திஸ்ஸ அபேசேகரவின் சினிமா குழந்தைகள். http://en.wikipedia.org/wiki/Tissa_Abeysekara , http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090418_tissa.shtml . அவர் எமக்கு ஆசீர்வாதமாக மட்டுமல்ல, அடித்தளமாகவும் இருந்தார். நாங்கள் உலக சினிமாவுக்குள் செல்ல வழிகாட்டியாக இருந்தார். ஈகோக்கள் உருவாகாத மனதை கொடுத்தார். தவறானதை செய்யாதே, தூக்கி எறிந்துவிட்டு வெளியேறு. அதுவே உன்னை உண்மையான படைப்பாளியாக அடையாளம் காட்டும். என்னதான் கிடைத்தாலும் தவறான படைப்புகளை உருவாக்க வேண்டாம் என அறிவுரை தந்தார். தவறான ஒரு திரைப்படம் ஒரு சமூகக் கொலைக்கு சமன் என்றார்.

இலங்கையில் உருவான திரைப்படங்கள் தொடர்பாக, நாங்கள் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வில்லை. அது கலைஞனுக்கு மாபெரும் ஆபத்து. முதல் திரைப்படத்தில் இலங்கைக்குள் தடம் பதிப்பதை குறியாகக் கொண்டோம். அத்திரைப்படம் போர் காலத்தில் திரைப்பட்டதால் பெரும் வசூல் கிடைக்கவில்லை. எம்மைக் காத்துக் கொண்டோம். அதனால் உலக சினிமாவுக்குள் எம்மை அறிமுகம் செய்து கொண்டோம். அது அடுத்த நகர்வுக்குத் தேவையாக இருந்தது. காலம் தாழ்த்தாது உடனடியாகவே அடுத்த படத்தை உலக சினிமாவுக்காக கொண்டு வந்தோம். அத் திரைப்படம் இலங்கை அரசியல் களம் மற்றும் யுத்தம் காரணமாக வெளியிட வைக்காது தாமதிக்க வைத்தது. ஆனால், உலக சினிமா எம்மை அடையாளம் கண்டுள்ளது. தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளோம். அது இலங்கை பாதாள உலகம் குறித்த திரைப்படம்.

இங்கே பணிபுரியும் அனைவரும் நான் என்பதை விட, நாங்கள் என்று படைப்புகளை உருவாக்குகிறோம். என்னை விட, இலங்கை பிரச்சனை தெரிந்த என் நண்பர்கள் சினிமா வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த தளத்தில் உள்ளவனே அதற்கு சிறந்தவன். நான் உலக சினிமாவுக்கு எமது படைப்புகளை கொண்டு செல்லவும், தயாரிப்பு மற்றும் வினியோகம் குறித்தும் இந்தியாவில் லேப் வேலைகள் தொடர்பாகவும் எனது பணியை முன்னெடுக்கிறேன். இதற்கும் என்னை விட என் நண்பர்களே நேரடியாக பணியாற்றுகிறார்கள். நான் போய்ச் செய்வதை பல வேளைகளில் தொலைபேசி வழியே பணிக்கிறேன். எனவே புரிந்துணர்வுள்ள நாங்கள் ஒரு குழுமமாகவே பணியாற்றுகிறோம். முடிந்தளவு செலவுகளை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. இதை எம்மவரோடு செய்வது கடினமாக உணர்கிறேன்.

எம்மவர் மருத்துவரை ஒதுக்கி விட்டு, ஓடலிகளை வைத்து மருந்து கொடுக்க முற்படுவதாக சொன்னால் நம்பவா போகிறார்கள். என்னை அடிக்கத்தான் வருவார்கள். அதுவே தொடர்கிறது. காலம் வரும். அப்போது தமிழில் நல்ல படைப்புகளையும் நிச்சயம் தருவோம். அதற்கான தருணம் உருவாகிறது என நம்புகிறேன்.

அண்மைக் காலங்களில் சிங்கள மொழிப் படங்கள் இரண்டை இயக்கியதாக அறிந்துள்ளேன். அவை பற்றி சற்று கூற முடியுமா?

இயக்கவில்லை. எனது ஆசான்களோடும், நண்பர்களோடும் இணைந்து இரு சிங்கள திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம். Sankranthi’ (The Tender Trap), 2006 இந்திய திரைப்பட விழாவிலும், கனேடிய திரைப்பட விழாவிலும், சுவிஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்றது. Sankranthi’ இலங்கையில் திரையிடப்பட்டு விட்டது. இத் திரைபடத்தின் உரிமை சிரச தொலைக் காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமை என்னிடம் உள்ளது.
http://img19.imageshack.us/img19/24/ajeevanfilmteam.jpg
சென்னையில் திரைப்பட குழுவினர் இறுதிக் கட்ட பணிகளுக்கு சென்ற போது….

http://www.cyberstudio.biz/HB/static/anujaya/sankranti-html/film-makers.html

http://www.youtube.com/watch?v=6WMQaUWqGFk&feature=channel_page

http://sundaytimes.lk/061231/TV/012tv.html

http://www.cfi-icf.ca/index.php?option=com_cfi&task=showevent&id=14

http://iffi.nic.in/MoreFilm.asp?id=307

அடுத்த Cruel Embrace / Dhawala Duwili. 2007, 35 mm, Colour, 90 mins, Sinhala திரைப்படம் சோவியத் திரைப்பட விழாவில் விருதொன்றையும், இந்திய திரைப்பட விழாவில் பங்கு கொண்டும் உள்ளது. இன்னும் திரையிடப்படவில்லை. இலங்கையில் இடம் பெற்று வந்த, யுத்தம் காரணமாக போர்களம் செல்லும் படையினரால் சின்னா பின்னமாகும் சிங்கள கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு பகுதியான போர்க்கால விதவைகள் குறித்து பேசும் இத் திரைப்படத்தை சில அரசியல் காரணங்களால் இன்னும் திரையிட முடியவில்லை.
http://www.cyberstudio.biz/HB/static/anujaya/davala_duvili-html/davala-duvili.html

http://www.iffigoa.org/iffi2007/SCREENINGSCHEDULE07.doc

சுவிஸ் திரைப்பட அமைப்பின் உத்தியோகபூர்வ உறுப்பினராக உள்ள நீங்கள் அதன் அனுபவத்தை சுருக்கமாக சொல்ல முடியுமா?

நான் வாழும் நாட்டு திரைப்படத் துறையினரோடு வாழ்வதற்கும், அவர்களுக்குள் இருப்பதற்கும் ஒரு வரமாக அதைக் கருதுகிறேன். நான் செய்வது குறைவு, மதிக்கப்படுவது அதிகம். அதில் மகிழ்வாக இருக்கிறது.

அண்மையில் பேர்ளின் திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்ட ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’, ஆர் புதியவனின் துறுத வின்டோ போன்ற குறும்படைப்புகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவந்துள்ளது. ஆர் புதியவன் தொடர்ச்சியாக முழுநீளப் படங்களை இயக்கி வருகின்றார். அண்மையில் ‘லண்டன் மாப்பிளை’ என்ற படத்தின் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. இவை புலம்பெயர் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனவா?

மகிழ்வாக இருக்கிறது. நல்ல படங்கள் அனைத்து தரப்பாலும் வர வேண்டும். அவர்களை வாழ்த்துவேன். எனக்கு அவர்களது வேதனையை உணரத் தெரியும். முன்னரெல்லாம் எனது எண்ணங்களை சொல்ல முயன்றேன். புலம் பெயர் படைப்பாளிகளை உருவாக்கவும் முயன்றேன். அதன் பிரதி பலனை எப்போதோ அனுபவித்து திருந்தி விட்டேன். இப்போது அதைச் செய்வதை தவிர்த்து வருகிறேன். முதுகில் குத்தியவர்களை விட்டு எப்போதோ பாதையை மாற்றிக் கொண்டேன். இப்போது உலக மக்களுக்காக சினிமா செய்கிறேன். அது எந்த மக்கள் என தரம் பிரிப்பதல்ல என் நோக்கம். எனவே என்றும் மகிழ்வாக இருப்பேன்.

புலம்பெயர் தமிழ் சினிமா – மாற்றுச் சினிமா எதிர்கொள்கின்ற தடைகள் என்ன? அவற்றை எவ்வாறு தாண்ட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இது அவரவர் திரைப்படம் செய்யும் கரு மற்றும் தளத்தைப் பொறுத்தது. எங்கும் தடை வரலாம். தடைகளை தாண்டி நேர்மையோடு நடக்கிறவன்தான் கலைஞன். நம் மனதுக்கு சரியென்று பட்டு, அதைச் செய்தால் தோல்வியிலும் மகிழலாம். வித்தியாசமாக படைப்பவனால் மட்டுமே படைப்பாளியாக உலக சினிமாவில் தடம் பதிக்கலாம். அதற்காக நம் இதயத்துள் இரத்தம் சிந்தி நமக்குள்ளேயே போராட தயாராக இருக்க வேண்டும். தோல்விகள் என்பவைதான் வெற்றிக்கான வழி காட்டல்கள். நம்மில் பலர் மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டு பழம் புடுங்கி சாப்பிட நினைப்பவர்கள். அல்லது நினைத்தவர்கள். பழம் புடுங்க மரம் இருந்தால்தான் தொடர்ந்தும் பழம் புடுங்கலாம் என அவர்களாகவே உணரும் காலம் வரை நம்மால் உயர்வடைய முடியாது. அதை உணர்ந்தால், அடுத்த நொடியே நம் சமூகம் அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு உயர்வடையும். அந்த நாள் வரை பொறுப்போம்.

நீங்கள் தேசம் சஞ்சிகையுடன் இணைந்து சினிமா பயிற்சிப் பட்டறை நடாத்திய காலங்களில் குறும்படங்களைத் தயாரிப்பவர்கள் அவற்றை வெளியிடுவதற்கான தளங்கள் இல்லாமல் விரல் விட்டு எண்ணக் கூடிய தங்கள் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு போட்டக் காட்டி விட்டதுடன் முடிந்துவிடும். இன்று யூ ரியூப் போன்ற தொழில்நுட்பங்கள் பார்வையாளர் தளத்தை உலகளாவிய தளத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது. அதனை புலம்பெயர் தளத்தில் உள்ளவர்கள் ஏன் முழுமையாகப் பயன்படுத்தத் தவறுகின்றனர்?

நான் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. புலத்து திரைப்பட படைப்பாளிகள் உருவாக வேண்டும் என நினைத்தேன். இலவசமாக பயிற்சி பட்டறைகளை நடத்தினேன். அந்த காலத்தில் நான் வேறு ஏதாவது செய்திருக்கலாம். ஒரு சிலரைத் தவிர பலரால் தலை காட்ட முடியவில்லை. திறமையை விட ஜால்ரா அடிக்க கற்றுக் கொண்டால்தான் எம்மவர் மத்தியில் நிற்க முடியும். அது எனக்கு வராது. எனவே இங்கே தோற்பதே என் வெற்றி.

யூ டியுப்பினால் கூட கலைஞர்கள் ஏழ்மை நிலைக்குத்தான் போகிறார்களே தவிர, பொருளாதாரத்தில் எவரும் முன்னேறவில்லை. பொழுது போக்கிற்காக இது பரவாயில்லை. வீட்டு அடுப்பு எரிய இந்த வழி பயன்தராது. இது சில நினைவலைகளை மீட்க உதவலாம் அல்லது ஒருவரை வெளிக்காட்டிக் கொள்ள உதவலாம். ஒரு கலைஞனை வாழ வைக்காது. முதலில் ஒரு கலைஞனை வாழவைக்க முயலுங்கள். அதைக் கண்டு அடுத்த கலைஞன் தோன்றுவான். அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு இடத்துக்குத்தான் எவரும் வேலை மாறுகிறார்கள். தனக்கு பிடித்த இடத்தில் இலவசமாக எவராவது வேலை செய்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதை நம் கலைஞர்களிடம் மட்டுமே காணலாம். பாவப்பட்ட ஜென்மங்கள்.

படைப்புகளிலும் பார்வையாளரின் ரசனையிலும் புலம்பெயர் மண்ணில் தோன்றிய தொலைக்காட்சிகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

பாவம் புலம் பெயர் தமிழ் பார்வையாளர்கள். வானோலி நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் பார்க்கிறார்கள். இந்திய படைப்புகள் இல்லையென்றால், எவரும் தொலைக் காட்சியையே பார்க்க மாட்டார்கள். தொலைக் காட்சியை பார்த்து முட்டாள்கள் ஆன மக்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினால், எந்த மக்களில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி எவரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை? அந்த அளவுக்கு நம் தொலைக் காட்சிகள் நம் சமூகத்துக்கு கெடுதல் செய்து கொண்டு உள்ளன.

யாழ். குடாநாட்டுக்கு 10 இலட்சம் பாடநூல்கள் இன்று அனுப்பிவைப்பு. கல்வியமைச்சு அறிவிப்பு

150909sri-lankas-students.jpgயாழ்.  குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு இன்று 10 இலட்சம் பாடப்புத்தகங்களை தரைவழியாக அனுப்பி வைக்கவுள்ளது.

தரைவழியாக அனுப்பி வைப்பதன் மூலம் அதற்கான செலவினம் அரைவாசியாகக் குறைந்துள்ளது என கல்வி அமைச்சு அறிவிக்கின்றது.
முந்தைய வருடங்களில் யாழ். குடாநாட்டுக்கு கப்பல் மூலம் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கு மூன்று மில்லியன் ரூபா செலவாகியதாகவும் இம்முறை  ஏ-9 வீதியினூடாக இவற்றைக் கொண்டுசெல்வதால் 1.3 மில்லியன் ரூபாவே செலவாகுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

28 வருடங்களுக்குப் பின்னர் இன்று முதல் தடவையாக யாழ். குடாநாட்டு மாணவர்களுக்கு  அடுத்த ஆண்டுக்குத்  தேவையான பாடப்புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக எடுத்துச் செல்லப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்லும் லொறிகள் இன்று காலை 10.30 க்கு கல்வி யமைச்சிலிருந்து யாழ். குடாநாடு நோக்கி புறப்படுகின்றது.

நளினி- ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ்

nalini-111.jpgராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் வேலூர் மகளிர் சிறை அதிகாரி ஜெயபாரதி அளித்த உறுதிமொழியின் பேரில் அவர் இன்று காலை உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

நளினி விடுதலை குறித்து ஆராய அரசு கமிட்டி ஒன்று அமைத்திருந்தது. இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதே போன்று, ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபர்ட் பயஸ் நேற்றிரவு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இவர் ராஜீவ் ‌கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பி‌டத்தக்கது

காஸ்பரோவ்- கார்போவ் மீண்டும் பலப்பரீட்சை

செஸ் ஜாபவான்களான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் அனாடோலி கார்போவ் இருவரும் வாலென்சியா நகரில் இன்று துவங்கும் செஸ் போட்டியில் மோதுகின்றனர். கடந்த 1984ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு இடையே நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடர், 5 மாதங்களாக நடந்தது.  இதில் 48 போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெற்றவர் என முடிவு செய்ய முடியாததால், வீரர்களின் நலன் கருதி போட்டியை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்தத் செஸ் தொடர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், செஸ் ஜாம்பவான் யார் என்பதை நிரூபிக்க இருவரும் மீண்டும் விளையாடுகின்றனர். இப்போட்டி ஸ்பெயினின் வாலென்சியா நகரில் இன்று துவங்குகிறது.

இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காஸ்பரோவ் பேசுகையில், “சர்வதேச தர செஸ் விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்பரோவை எதிர்த்து விளையாட உள்ள கார்போவுக்கு தற்போது 58 வயதாகிறது. எனவே, காஸ்பரோவின் நகர்த்தலுக்கு கார்போவால் ஈடுகொடுக்க முடியாது என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். 

தாய்நாட்டிற்கு துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் – ஜனாதிபதி

slpr080909.jpgசயனைட் யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. தாய்நாட்டிற்குத் துரோகமிழைக்காது சகலரும் ஒன்றிணைந்து வாழ்வோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்தார். 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகரை மகா வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணம் முழுமையான அபிவிருத்திக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; வாகரை பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் நான் இரண்டாவது தடவையாக இங்கு வந்துள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட வாகரை மகா வித்தியாலயம் மீள புனரமைக்கப்பட்டு இயங்கி வந்த வேளை பயங்கரவாதத்தினால் மீண்டும் சீரழிக்கப்பட்டது.  அதன்போது படைவீரர்களே, அதனை மீளத் திருத்தியமைந்துள்ளனர். அவர்களை இத்தருணத்தில் நாம் பாராட்ட வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாகரை மகா வித்தியாலயம் கிழக்கு மாகாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் கல்வி மட்டுமே எவராலும் களவாடப்பட முடியாதது. அந்த வகையில் இப்பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பெரும் பாக்கியசாலிகள். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். நம் மத்தியில் எவ்வித பேதமும் கிடையாது. அன்பான உங்கள் தாய்நாட்டை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. நாடு நமக்கு என்ன செய்தது என யோசிக்காமல் நாம் தாய்நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை. இனி சிறுபான்மை என்ற இனமே இந்த நாட்டில் இல்லை. நாம் அனைவரும் இலங்கைத் தாயின் மக்களே. எனது முதல் விருப்பும், இரண்டாவது விருப்பும், மூன்றாவது விருப்பும் என் தாய்நாடே. அவ்வாறே நீங்களும் சிந்திக்க வேண்டும்.

சயனைட் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாம் நமது தாய்நாட்டுக்குத் துரோகமிழைக்காது இணைந்து ஒற்றுமையாக வாழ்வோம். ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. காகத்துக்கு இரவில் கண்தெரியாது. கல்லாதோருக்குப் பகலிலும் இரவிலும் கண் தெரியாது. எனவே நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எந்த தீர்மானத்தையும் புத்தியுடனும் தெளிவுடனும் மேற்கொள்ள வேண்டும். அப் போதுதான் நாம் சுதந்திரமாக வாழ முடியும்.

இன்றைய மாணவர்களே நாளைய மன்னர்கள். நீங்களே இந்த நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள். இப்பாடசாலையை இந்தளவு சிறப்பாக உருவாக்குவதில் கல்வியமைச்சும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயற்பட்டுள்ளன.

பயங்வரவாதப் பிடியிலிருந்து வாகரைப் பிரதேசத்தை மீட்டபோது நான் இங்கு வருகை தந்தேன். அப்போது எனக்குத் திலகமிட்டு வரவேற்ற குருக்களைப் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். முப்பது வருடகால பயங்கரவாத யுகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று அனைவரும் பயமின்றி சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒளிமயமான எதிர்காலம் அனைவருக்கும் கிட்டுவது நிச்சயம். வாகரைப் பிரதேசத்திலும் தயிர், தேன், போன்றவை உள்ளன. எனது ஊரான அம்பாந்தோட்டையிலும் தயிரும் தேனும் உள்ளது. இதனால் அந்த நெருக்கமான நினைவுகளை நான் மீட்ட முடிகிறது.

உங்கள் எதிர்கால வெற்றி உங்கள் பிள்ளைகளினதும் வெற்றியாகும். இந் நாட்டின் வெற்றியும் அதுவே. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ICC Champions Trophy 2009/10 – நேரஅட்டவணை

the-glittering-trophy.bmpஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நேற்று ஆரம்பமாகியது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நேரஅட்டவணை வருமாறு

Tue Sep 22          
14:30 local | 12:30 GMT 
18:00 IST  1st Match, Group B – South Africa v Sri Lanka
SuperSport Park, Centurion    
 
Wed Sep 23          
14:30 local | 12:30 GMT
18:00 IST  2nd Match, Group A – Pakistan v West Indies
New Wanderers Stadium, Johannesburg  

Thu Sep 24         
09:30 local | 07:30 GMT
13:00 IST  3rd Match, Group B – South Africa v New Zealand
SuperSport Park, Centurion  

Fri Sep 25          
14:30 local | 12:30 GMT 
18:00 IST  4th Match, Group B – England v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg  

Sat Sep 26         
09:30 local | 07:30 GMT
13:00 IST  5th Match, Group A – Australia v West Indies
New Wanderers Stadium, Johannesburg  

Sat Sep 26          
14:30 local | 12:30 GMT
18:00 IST  6th Match, Group A – India v Pakistan
SuperSport Park, Centurion 

Sun Sep 27
09:30 local | 07:30 GMT
13:00 IST  7th Match, Group B – New Zealand v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg    
 
Sun Sep 27          
14:30 local | 12:30 GMT
18:00 IST  8th Match, Group B – South Africa v England
SuperSport Park, Centurion  
 
Mon Sep 28          
14:30 local | 12:30 GMT
18:00 IST  9th Match, Group A – Australia v India
SuperSport Park, Centurion
 
Tue Sep 29          
14:30 local | 12:30 GMT
18:00 IST  10th Match, Group B – England v New Zealand
New Wanderers Stadium, Johannesburg
 
Wed Sep 30
09:30 local | 07:30 GMT
13:00 IST  11th Match, Group A – Australia v Pakistan
SuperSport Park, Centurion
 
Wed Sep 30          
14:30 local | 12:30 GMT
18:00 IST  12th Match, Group A – India v West Indies
New Wanderers Stadium, Johannesburg  
 
Fri Oct 2          
14:30 local | 12:30 GMT
18:00 IST  1st Semi-Final – TBC v TBC (A1 v B2)
SuperSport Park, Centurion  
 
Sat Oct 3          
14:30 local | 12:30 GMT
18:00 IST  2nd Semi-Final – TBC v TBC (B1 v A2)
New Wanderers Stadium, Johannesburg
 
Mon Oct 5          
14:30 local | 12:30 GMT
18:00 IST  Final – TBC v TBC
SuperSport Park, Centurion