மலையக தோட்டப் புறங்களிலுள்ள நீர்வீழ்ச்சி மூலமே இந்நாடு முழுவதுக்குமான மின்சாரம் பெறப்படுகின்றது. ஆனால், அத் தோட்டத்தொழிலாளர்களின் லயன் காம்பராக்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. நான்காவது பரம்பரையாக இந்நாட்டில் வசித்துவரும் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் தமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பத்தடி லயன் காம்பராக்களிலேயே இன்னும் மூன்று நான்கு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மாத்தளை மாவட்டத்தில் இந்த அவல நிலையை பல தோட்டங்களில் காணலாம். எனவே இவர்களை இந்த அவல நிலையிலிருந்து மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என நகர அபிவிருத்தி அமைச்சர் ரோஹண திசாநாயக்க கூறினார்.
தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்க, ஸ்ரீ.ல.சு.க.மாத்தளை மாவட்ட அமைப்பாளர் எம்.சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர் மேலும் கூறியதாவது;
மாத்தளை மாவட்டத்தில் ஒருசில தொழிலாளர்களின் லயன் காம்பராக்களின் கூரைத்தகடுகள் பழுதடைந்துள்ளதையும் இவர்களுக்கு குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படாமலுள்ளதையும் என்னால் நேரில் காணமுடிந்தது. இவர்களின் குறைகளை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பாளர் எம்.சசிகரனுக்கு அறிவித்துள்ளேன். ஏற்கனவே அவரால் கையளிக்கப்பட்ட அறிக்கையையடுத்து உடனடியாக லயன் காம்பராக்களுக்கு மூவாயிரம் கூரைத்தகடுகள் வழங்கியுள்ளேன். நாம் இதேபோன்று மக்களது அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். இதே போன்று முஸ்லிம் மக்களும் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். அண்மைக் காலங்களில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபைத் தேர்தல்களிலுமே எமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுவருவதை நோக்கும்போது அடுத்து நடைபெறவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.
எமக்கு கிடைத்துள்ள தொடர்ச்சியான வெற்றிகள் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்து, நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் சரியானவை என்பதை மக்கள் அங்கீகரிப்பதையே உணர்த்துகின்றன. எந்தவொரு நாடும் எமது உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டியதில்லை என நாட்டுமக்கள் சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதாகவும் அது அமைந்துள்ளது.
நாம் கடந்த ஒரு மாதத்துக்குள் மாத்தளை மாவட்டத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரைகாலமும் அபிவிருத்தி வேலைகளுக்காக திறைசேரியில் வழங்கப்பட்டுவந்த நிதி முறையாகப் பயன்படுத்தாததால் மீண்டும் திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுவந்தது. ஆனால் இவ்வருடம் வழங்கப்பட்ட நிதி வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடும். மாத்தளை மாவட்ட வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் இதுவரை பெற்றுக் கொள்ளாத மாபெரும் வெற்றியை கடந்த மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி பெற்றுள்ளதால் எம்மால் எதிர்காலத்தில் மேலும் சிறந்தமுறையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது என்றார்.