24

24

புலிகள் மீண்டும் மூச்சுவிட இடமளிக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath_f_jaffna.pngபயங்கர வாதிகளை முற்றாக அழித்தொழிக்கும்வரை மனிதாபிமான நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புலிகளுடன் எந்தவித யுத்தநிறுத்த உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி வலியுறுத்திக் கூறினார்.

2006ம் ஆண்டிலிருந்து பாதுகாப்புப் படையினர் இந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட முன்னேற்றங்களிலிருந்து தாம் எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புலிகள் மீண்டும் மூச்சுவிடுவதற்கு தான் இடமளிக்கப் போவதில்லை. தற்பொழுது புலிகள் 65 சதுர கிலோமீற்றர் சிறியபரப்புக்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவுக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மீண்டும் செல்கிறது

red-cr.jpgநோயா ளிகளையும் காயம்பட்டவர்களையும் அழைத்துவருவதில் செஞ்சிலுவைக்குழு உதவிவருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றுமொரு தொகுதி நோயாளாகளை அழைத்து வரும் வகையில் சற்று முன்னர் கிறீன் ஓசியானிக் கப்பல் அனைத்துலக செஞ்சிலுவக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என பி.பி.ஸி. செய்திச்சேவை நேற்று அறிவித்துள்ளது. .

இந்தக் கப்பலில் கோதுமை மாவு உள்ளிட்ட ஒரு தொகுதி உணவுப் பண்டங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுமாத்தளன் பகுதியிலிருந்து தொடர்ந்து நோயாளர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் காயங்களுக்கு இலக்கானோர் திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் நிலையில், சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்து வகைகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மருத்துவப் பணிகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது பற்றியதான இணைப்புக் குழுவின் கூட்டமும்  நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

நான்காவது பரம்பரையாகவும் தோட்டத் தொழிலாளர்கள் பத்தடி காம்பராக்களிலேயே வாழ்கின்றனர் – நகர அபிவிருத்தி அமைச்சர்

up-cun.jpgமலையக தோட்டப் புறங்களிலுள்ள நீர்வீழ்ச்சி மூலமே இந்நாடு முழுவதுக்குமான மின்சாரம் பெறப்படுகின்றது. ஆனால், அத் தோட்டத்தொழிலாளர்களின் லயன் காம்பராக்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. நான்காவது பரம்பரையாக இந்நாட்டில் வசித்துவரும் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் தமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பத்தடி லயன் காம்பராக்களிலேயே இன்னும் மூன்று நான்கு குடும்பங்களாக வசித்து வருகின்றனர். மாத்தளை மாவட்டத்தில் இந்த அவல நிலையை பல தோட்டங்களில் காணலாம். எனவே இவர்களை இந்த அவல நிலையிலிருந்து மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என நகர அபிவிருத்தி அமைச்சர் ரோஹண திசாநாயக்க கூறினார்.

தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்க, ஸ்ரீ.ல.சு.க.மாத்தளை மாவட்ட அமைப்பாளர் எம்.சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர் மேலும் கூறியதாவது;

மாத்தளை மாவட்டத்தில் ஒருசில தொழிலாளர்களின் லயன் காம்பராக்களின் கூரைத்தகடுகள் பழுதடைந்துள்ளதையும் இவர்களுக்கு குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படாமலுள்ளதையும் என்னால் நேரில் காணமுடிந்தது. இவர்களின் குறைகளை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பாளர் எம்.சசிகரனுக்கு அறிவித்துள்ளேன். ஏற்கனவே அவரால் கையளிக்கப்பட்ட அறிக்கையையடுத்து உடனடியாக லயன் காம்பராக்களுக்கு மூவாயிரம் கூரைத்தகடுகள் வழங்கியுள்ளேன். நாம் இதேபோன்று மக்களது அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். இதே போன்று முஸ்லிம் மக்களும் எமது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். அண்மைக் காலங்களில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபைத் தேர்தல்களிலுமே எமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுவருவதை நோக்கும்போது அடுத்து நடைபெறவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.

எமக்கு கிடைத்துள்ள தொடர்ச்சியான வெற்றிகள் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்து, நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் சரியானவை என்பதை மக்கள் அங்கீகரிப்பதையே உணர்த்துகின்றன. எந்தவொரு நாடும் எமது உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டியதில்லை என நாட்டுமக்கள் சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதாகவும் அது அமைந்துள்ளது.

நாம் கடந்த ஒரு மாதத்துக்குள் மாத்தளை மாவட்டத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரைகாலமும் அபிவிருத்தி வேலைகளுக்காக திறைசேரியில் வழங்கப்பட்டுவந்த நிதி முறையாகப் பயன்படுத்தாததால் மீண்டும் திறைசேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுவந்தது. ஆனால் இவ்வருடம் வழங்கப்பட்ட நிதி வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிடும். மாத்தளை மாவட்ட வரலாற்றில் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் இதுவரை பெற்றுக் கொள்ளாத மாபெரும் வெற்றியை கடந்த மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி பெற்றுள்ளதால் எம்மால் எதிர்காலத்தில் மேலும் சிறந்தமுறையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது என்றார்.

சிறைச்சாலைக்குள் எவ்வாறு துப்பாக்கி வந்தது? அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

gun.jpgநீர் கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று கைதிகள் மரணமான சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நீதிவான் ஜெயகிடி அல்விஸ் சிறைச்சாலையில் விசாரணை நடத்தினார். சிறைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தும் கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீது அவர் விசனம் தெரிவித்தார்.

சிறைச்சாலையைச் சுற்றி 18 அடி உயரமான மதில் சுவர் இருப்பதாகவும், அருகில் 2 அடி பாதையும், குடிமனைகளும் இருப்பதால் யாராவது துப்பாக்கியை உள்ளே வீசியிருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நீதிவானிடம் கூறியதையடுத்து நீதிவான் இந்த விசனத்தை தெரிவித்தார். கைதிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் இத்துப்பாக்கி எப்படி உள்ளே வந்தது எனவும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.

அடுத்த விசாரணையின் போது இத்துப்பாக்கி எவ்வாறு சிறைச்சாலைக்குள் வந்தது என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சிறைச்சாலை திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்துள்ளார்.

இரு கைதிகளையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு அரச மரத்தில் ஏறிநின்ற கைதி எம்மை அச்சுறுத்தி கைக்குண்டை வீசப்போவதாகக் கூறியதால் நிர்கொழும்பு பொலிஸாரின் உதவியை நாடியதாக சிறைச்சாலை அத்தியட்சர் லக்ஷ்மன் குணவர்தன தெரிவித்தார்.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயராம தமது சாட்சியத்தில்; அரச மரத்தில் நின்ற கைதியொருவரை நோக்கி கீழே துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தரவின்படி நான் அந்தக் கைதியை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தேன். அவர் சூடுபட்டு கீழே விழுந்தார் என்றார். மரண விசாரணையின் பின்னர் பிரேத பரி சோதனையைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் மருத்துவ சிகிச்சை முகாம்

medicine.jpgமட்டக் களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் இலவச ஒருநாள் நடமாடும் வைத்திய சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட 23 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜே.டி.சி.கலும் திலகரத்ன தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் சிவில் இணைப்பதிகாரி மேஜர் தென்னக்கோன் மற்றும் களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம், பெரியகல்லாறு, பட்டிருப்பு இராணுவ பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கண், காது, தொண்டை, பல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இதில் இடம்பெற்றன. இராணுவ வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட 12 வைத்திய நிபுணர்களால் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சை தேவையானோர்களுக்கு வைத்திய ஒழுங்குகளும் செய்துகொடுக்கப்பட்டன.  ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சிவில் நடவடிக்கைகளை மக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முகமாகவே இச்சிகிச்சை முகாம் இங்கு இடம்பெற்றது.

பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், கிரான்குளம், குருக்கள்மடம், தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டனர். இம் முகாமில் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.யின் அரசியல்துறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாண தேர்தல் முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வி

sri-lanka-election-02.jpgஇம்முறை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் 11 பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் 8 பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருவரும் என 21 முன்னாள் உறுப்பினர்கள் தோல்வியுற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் ஏழு பேரும், மக்கள் விடுதலை முன்னணியில் ஐந்து பேரும் இத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் மக்கள் விடுதலை முன்னணியில் மூவரும் தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்த புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் யூ. எம். ஐயூப்கான் இம்முறை தோல்வி அடைந்துள்ளார்.

இங்கினியாகலவில் பாதுகாப்பு தீவிரம்; கூடுதலான படைவீரர்கள் கடமையில்

police_spokperson.jpgஅம்பாறை, இங்கினியாகல கிராமத்தில் புகுந்த புலிகள் அங்குள்ள பொதுமக்கள் அடங்கலாக 21 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தையடுத்து இங்கினியாகல பகுதியிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று கூறினார்.

கூடுதலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் தேடுதல் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததோடு மக்கள் தமது சொந்த இடங்களை விட்டும் வெளியேறத் தொட ங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் கூடுதலான பொலிஸாரும் இராணு வத்தினரும் ஈடுபடுத்தப்பட் டுள்ளதோடு, சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மக்கள் மத்தியில் அச்சம் தனிந்து வருவ தாகவும் தப்பியோடிய புலிகளை தேடி பரந்தளவில் தேடுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கிலிருந்து தப்பிவரும் புலிகளே இவ்வாறு கிராமங்களில் புகுந்து அப்பாவி மக்களை கொலை செய்து வருவதாகவும், இதனைத்தடுக்க விசேட ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜி இலங்கை வருகிறார்

pranaf.jpgஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை மீண்டும் இலங்கை வரவிருக்கிறார். கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களது கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டே பிரணாப் முகர்ஜி இலங்கை வருவதாக வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கிறார். சார்க் நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களது கூட்டம் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

பிரணாப் முகர்ஜியின் இந்த இலங்கை விஜயத்தின்போது அவருடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாட விருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்திருக்கிறார்.

ஒரு மாத காலப் பகுதிக்குள் பிரணாப் முகர்ஜியின் இலங்கைக்கான இரண்டாவது விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முகர்ஜி அவசர பயணமாக இலங்கை வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக அனுமதிக்கு வன்னி மாணவர்கள் விண்ணப்பிக்க மானியங்கள் ஆணைக்குழு விசேட ஏற்பாடு

red-cross-srilanka.jpgவன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்கள் விண்ணப்பிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதிக்கான முதலாவது விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 28 ஆம் திகதியாகும். அத்துடன், மாணவர்களுக்கு பாடசாலை அதிபர்கள் விண்ணப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

வன்னிப்பகுதி மாணவர்களின் இந்த நிலைமை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சமரநாயக்காவின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இடம்பெயர்ந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை வலயக்கல்விப் பணிப்பாளரின் சிபார்சுடன் ஒப்பமிட்டு அனுப்பலாம் எனவும் விண்ணப்பங்களை இம்மாதம் 28 ஆம் திகதிக்குப் பின்னரும் அனுப்பிவைக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனவே, அவரின் அறிவுறுத்தலின் படி இடம்பெயர்ந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மட்டுமே சில பிரச்சினைகளுக்கு தீர்வு- ரவி கருணாநாயக்க எம்.பி.

srilanka-parliament.jpgநிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தால் மட்டுமே சில முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க, இலங்கை அரசு உலக நாடுகளுடனும் யுத்தம் புரிவதால் இங்கு முதலிடுவதற்கு எந்தவொரு நாடும் முன்வருகின்றதில்லையெனவும் கூறினார். அண்மையில்  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான ஒழுங்கு விதிகளை அங்கீகரிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் நான் உறுதியாகவிருக்கின்றேன். இந்த நாட்டில் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் அதிகாரங்களை ஓரிடத்தில் மையப்படுத்தியே ஆட்சி புரிந்தனர், புரிகின்றனர். இந்த அதிகார முறை மாற்றப்படவேண்டும். பாராளுமன்றத்தினூடாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால்தான் முக்கிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.

இலங்கையரசு உலக நாடுகளுடனும் தற்போது யுத்தம் புரியத் தொடங்கிவிட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், அந்த நாட்டின் விசேட பிரதிநிதி டெஸ்மன் பிரௌன் உட்பட பலருடன் முரண்படுகிறார்கள். அரசின் இந்த நிலைப்பாட்டால் இலங்கையில் முதலிட வெளிநாடுகள் மறுக்கின்றன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். விடுதலைப்புலிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென இந்திய ஜனாதிபதி அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது முன்னர் இல்லாத நிலைமை. இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதையே இது காட்டுகின்றது.  பிரிமா தொடர்பாக என்னைக் குற்றவாளியாக்கி, தேசத்துரோகியாக்கி தம்மை தேசப்பற்றாளர்களாக இந்த அரசு காட்டியது. நான் நீதிமன்றம் சென்றே இந்த அரசின் வாயை அடக்கினேன். இன்று பிரிமா தொடர்பாக இந்த அரசு என்ன செய்கின்றது?  மிஹின் லங்காவை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால் தினமொன்றுக்கு 20 இலட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. இந்த விமான சேவையில் பயணிக்க எவருமே இல்லையெனக் கூறப்படுகின்றது.

ஹெட்ஜிங் மூலம் இந்த நாட்டு அப்பாவி மக்களின் பணமே நாசமாக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்திலேயே பாலம் கட்டப்படுகிறது. இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் இந்த அரசினால் சீரழிக்கப்படுகின்றது.