நீர் கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று கைதிகள் மரணமான சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நீதிவான் ஜெயகிடி அல்விஸ் சிறைச்சாலையில் விசாரணை நடத்தினார். சிறைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தும் கைதி ஒருவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீது அவர் விசனம் தெரிவித்தார்.
சிறைச்சாலையைச் சுற்றி 18 அடி உயரமான மதில் சுவர் இருப்பதாகவும், அருகில் 2 அடி பாதையும், குடிமனைகளும் இருப்பதால் யாராவது துப்பாக்கியை உள்ளே வீசியிருக்கலாம் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நீதிவானிடம் கூறியதையடுத்து நீதிவான் இந்த விசனத்தை தெரிவித்தார். கைதிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் இத்துப்பாக்கி எப்படி உள்ளே வந்தது எனவும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.
அடுத்த விசாரணையின் போது இத்துப்பாக்கி எவ்வாறு சிறைச்சாலைக்குள் வந்தது என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக சிறைச்சாலை திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்துள்ளார்.
இரு கைதிகளையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு அரச மரத்தில் ஏறிநின்ற கைதி எம்மை அச்சுறுத்தி கைக்குண்டை வீசப்போவதாகக் கூறியதால் நிர்கொழும்பு பொலிஸாரின் உதவியை நாடியதாக சிறைச்சாலை அத்தியட்சர் லக்ஷ்மன் குணவர்தன தெரிவித்தார்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயராம தமது சாட்சியத்தில்; அரச மரத்தில் நின்ற கைதியொருவரை நோக்கி கீழே துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உத்தரவின்படி நான் அந்தக் கைதியை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தேன். அவர் சூடுபட்டு கீழே விழுந்தார் என்றார். மரண விசாரணையின் பின்னர் பிரேத பரி சோதனையைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.