மட்டக் களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் இலவச ஒருநாள் நடமாடும் வைத்திய சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட 23 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஜே.டி.சி.கலும் திலகரத்ன தலைமையில் இடம்பெற்ற இம் முகாமில் சிவில் இணைப்பதிகாரி மேஜர் தென்னக்கோன் மற்றும் களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம், பெரியகல்லாறு, பட்டிருப்பு இராணுவ பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கண், காது, தொண்டை, பல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இதில் இடம்பெற்றன. இராணுவ வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட 12 வைத்திய நிபுணர்களால் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சை தேவையானோர்களுக்கு வைத்திய ஒழுங்குகளும் செய்துகொடுக்கப்பட்டன. ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சிவில் நடவடிக்கைகளை மக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முகமாகவே இச்சிகிச்சை முகாம் இங்கு இடம்பெற்றது.
பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், கிரான்குளம், குருக்கள்மடம், தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிகிச்சையினைப் பெற்றுக்கொண்டனர். இம் முகாமில் விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி.யின் அரசியல்துறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.