வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்கள் விண்ணப்பிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதிக்கான முதலாவது விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 28 ஆம் திகதியாகும். அத்துடன், மாணவர்களுக்கு பாடசாலை அதிபர்கள் விண்ணப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
வன்னிப்பகுதி மாணவர்களின் இந்த நிலைமை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சமரநாயக்காவின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இடம்பெயர்ந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை வலயக்கல்விப் பணிப்பாளரின் சிபார்சுடன் ஒப்பமிட்டு அனுப்பலாம் எனவும் விண்ணப்பங்களை இம்மாதம் 28 ஆம் திகதிக்குப் பின்னரும் அனுப்பிவைக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனவே, அவரின் அறிவுறுத்தலின் படி இடம்பெயர்ந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.