18

18

இடம்பெயர்ந்தோருக்கு முதற்தடவையாக தனியார் நிவாரண உதவி

lorry__food.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ள மக்களுக்கு முதற்தடவையாக தனியார் துறையினர்; நிவாரண உதவி  வழங்கியுள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் எட்டு லொறிகள் மூலம் நேற்று முற்பகல் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இப்பொருட்களை இலங்கை மத்திய வங்கி தலைமையில் பல நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11.00 மணியளவில் ராஜகிரியாவில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றதுடன் அதில் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன். ஜனாதிபதி விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சப்ரகமுவா மாகாணசபை முதலமைச்சர் மஹீபால ஹேரத் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கப்ரால் உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய வங்கி ஆளுனர் பொருட்களைக் கையளித்ததுடன் அமைச்சர் பதியுதீன் மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் அவற்றை அரசாங்கம் சார்பாக பொறுப்பேற்றனர்.

மத்திய வங்கியின் தலைமையில் யுணி லீவர்ஸ் நிறுவனம், மஞ்சி பிஸ்கட் நிறுவனம், ஆர்.ஆர்.ஆர். அன்ட் எஸ் நிறுவனம் பசினேட் எக்ஸ்போர்ட் நிறுவனம், டிப் லங்கா நிறுவனம்,  ஐ.டி.எல். லங்கா நிறுவனம் ஆகியன இப்பொருட்களை வழங்கியுள்ளன. வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக இப்போருட்கள் இடம்பெயர்ந்தோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இலங்கைப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல இந்திய அரசுக்கு பா.ம.க. இருநாள் கால அவகாசம்

drramadoss.jpgஇலங்கை விவகாரத்தை ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருநாள் கால அவகாசம் வழங்கியிருப்பதாக அரசின் பங்காளிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த நேற்று புதுடில்லிக்கு பயணமாகவிருப்பதாக பா.ம.க.வின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு சென்று இலங்கையில் அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ராமதாசை சந்தித்து இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் டி.சுதர்சனம் கூறியதாவது;

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசினோம். பா.ம.க.வை பொறுத்தவரை மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் இன்னும் உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.தொடர்ந்து நீடிப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை நேரு, இந்திரா, ராஜீவ் ஆகிய தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பாடுபட்டு இருக்கிறார்கள். எனவே காங்கிரசுக்கு எதிரான மனப்போக்கு வரும் தேர்தலில் மக்களிடம் இருக்காது என்றே நம்புகிறேன் என்றார் சுதர்சனம். அதன் பிறகு ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தங்கபாலு, சுதர்சனம் ஆகிய தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதனை படித்துப் பார்த்து விட்டு சுதர்சனம் என்னை வந்து சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இதற்காக கண்டனக் குரல் எழுப்பி வருவதுடன் இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

தமிழின அழிப்பில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் உரை ஆறுதலாக அமைந்துள்ளது. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டும் போதாது, போரை நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு இந்தியா கட்டளையிட வேண்டும். அதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு செல்லவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இதனை இரண்டே நாட்களில் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா.மன்றத்திற்கு மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் இந்த பிரச்சினையை கொண்டு சென்று இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் இந்தியா சொன்னால் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். புலிகள் தரப்பில் போரை நிறுத்த தயாராக இருப்பதாக அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.  ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து விட்டு ஒரு போராளி இயக்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்.

“1987ஆம் ஆண்டும் தற்போது நடைபெறுவதுபோல இலங்கையில் தமிழின படுகொலை நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி விமானம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினார். அதே நிலைதான் இப்போதும் உள்ளது. இது தொடர்பாக எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் தொகுப்புகளையும் சுதர்சனத்திடம் கொடுத்துள்ளேன். ராஜீவ் காந்தியை இழந்தது வருத்தத்திற்குரியது. தீட்சித் போன்றவர்களின் தவறான ஆலோசனைகளே அவரது இழப்புக்குக் காரணம். இப்போதும் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தவறான ஆலோசனைகளே வழங்கப்படுகின்றன. இந்த போக்கை கைவிட்டு ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும், வெளியுறவுத்துறை செயலாளராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் மத்திய அரசு ஆலோசனை பெற வேண்டும்.

புலிகளை முடக்கினாலும் தேசியப் பிரச்சினையோ பிரிவினைவாதமோ முடிவுக்கு வரப்போவதில்லை – ஜே.வி.பி. கூறுகிறது

jvp-press-confe.jpgஇனப் பிரச்சினைக்குப் பலராலும் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனையைத் தீர்வாக சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதற்காக பிரிவினைவாத பிரச்சினையும் , தேசியப்பிரச்சினையும் முடிவுக்கு வந்து விடப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளை அடுத்து அது தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கற் சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“வழமை போன்றே இம்முறை தேர்தலும் நீதியானதும் சுதந்திரமானதாகவும் நடைபெறவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்க இன்று கூட ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராகவில்லை. இவ்வாறான தேர்தல்களை நடத்தி வெற்றிகளை பெறும் நோக்கமே இதற்குக் காரணம்.

இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியை இறுதி யுத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கோரும் அளவுக்கு அரசாங்கம் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் , 30 தொடக்கம் 40 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது ஒருபக்கம் அரசாங்கத்துக்கு கிடைத்த தோல்வியே.

எனவே இந்தத் தேர்தலை இறுதி யுத்தத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கோரியதன் மூலம் அரசாங்கம் படையினரது வெற்றிகளை அவமதித்து தரம் தாழ்த்தி விட்டது.

நாடு இன்று அபாயகரமானதொரு நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்காலத்தில் அதைப் பகிர்ந்து கொண்டு செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதேநேரம் அரசாங்கம் பலராலும் நிராகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்க செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராகவே இந்த பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

படையினரின் வெற்றிகளைப் பறிக்கும் இந்த முயற்சிகளை தோற்கடிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்க நாம் தயாராக இருக்கிறோம். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க எவரும் முயற்சிப்பார்களாயின் அதை மக்கள் எதிர்ப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கு ஜே.வி.பி. தலைமை வகிக்கும்.

எதிர்காலத்தில் நாம் முகம் கொடுக்கவுள்ள சமய, சமூக, பொருளாதார, கலாசார, நிதிநெருக்கடிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமோ , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமோ பதில் கிடையாது. ஜே.வி.பி. யிடம் மட்டுமே அதற்கான பதில் இருக்கிறது.

இதேநேரம் இன, மத,குல பேதங்களின்றி மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலுமே ஏனைய ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகள் ஆகிவிட்டார்கள் என்பதில் எமக்கு இன்னும் நம்பிக்கையில்லை. ஏனெனில் எவரும் அதிகாரப் பகிர்வினையும் பிரிவினைவாதத்தையும் முற்றாக நிராகரித்து விடவில்லை.

அதிகாரப் பகிர்வை வழங்க அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைக்காத போதிலும் அது பற்றியே அரசாங்கம் பேசி வருகிறது. ஜனாதிபதியோ வெளிநாட்டு செய்தி சேவைக்கு (அல்ஜசீரா) அதிகாரப் பகிர்வு என்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றையாட்சி என்றும் கூறி ஏமாற்றி வருகிறார்.

இந்த அரசாங்கத்தால் பிரிவினைவாதத்தை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் அரசாங்கத்திலேயே அவ்வாறானவர்கள் இருக்கின்றனர். புலிகள் முடக்கப்பட்டு விட்டதற்காக பிரிவினைவாதமும் தேசியப் பிரச்சினையும் முடிந்து விடாது. சகல இன மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும்வரை பிரச்சினைகள் முடியப் போவதில்லை. சம அந்தஸ்து என்பதற்கு அர்த்தம் தெரியாத கட்சிகளினால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது’ என்றார்.

நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி மீது தாக்குதல்

_swamy_.jpgஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்துவரும் சுப்பிரமணியம் சுவாமி, நேற்று, சிதம்பரம் நடராஜர் ஆலய தீ‌ஷிதர்கள் சார்பாக வாதாட நீதிமன்றம் வந்திருந்தார்.

நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, மற்றும் சந்துரு முன்னிலையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே சில வழக்கறிஞர்கள் அறைக்குள் நுழைந்து, சுவாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நீதிபதிகளின் கண்டனங்களையும் மீறி சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசியதோடு அவரைத் தாக்கவும் முயன்றனர்.

பின்னர் பொலிசார் விரைந்து வந்து வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் சுவாமி தனக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கத் தவறிவிட்டதென்றும், நீதிபதிகள் முன்னிலையில் இவ்வாறு தாக்குதல் நடைபெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.

நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை முதல் குமரி வரை மனித சங்கிலி

tamilnaadu.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  17 ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி பேரணி நடத்தப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பா.ஜ.க. கலை இலக்கிய பிரிவு மாநில பார்வையாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் அரசவை கவிஞர் புலமை பித்தன், திரைப்பட இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, ஓவியர் புகழேந்தி, ‘புதிய பார்வை  இதழ் ஆசிரியர் ம.நடராஜன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தொடங்கி மனித சங்கிலி, செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, கரூர் வழியாக குமரி வரை நீடித்தது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தமிழின உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ள வேண்டியிருந்தது, சோனியா அழைப்பின் பேரில்  ராமதாஸ் டெல்லி சென்றதால், பாமக மேல்மலையனூர் எம்எல்ஏ செந்தமிழ்ச்செல்வன், முகையூர் எம்எல்ஏ களிவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேபிள் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் படையினரால் கைது

vavuniya-tv.jpgவவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த சன் ரீவி மீள் ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் திங்களன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பொலிசாரிடம் மேல் விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதிப்பத்திரமின்றி தொலைக்காட்சி நிலையம் நடத்தி வந்தமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையத்திற்குச் சென்ற இராணுவத்தினர் அந்த நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் உட்பட நான்கு பேரைக் கைது செய்ததுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் கைது செய்யப்பட்டவர்களுடன் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோனிப்பிள்ளை மரியசீலன் (40), ஜெய்கிஷ் (45). அன்ரனி (40), புரூஸ் (38) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

தமிழ்நாட்டில் புதிய இயக்கங்கள் அடுத்த கட்டத்தில் உருவாகக்கூடும்- தமிழ்த் தேசிய பிரச்சினை எல்லை தாண்டிவிட்டது; சிறிதுங்க ஜயசூரிய

தமிழ்த் தேசியப் பிரச்சினை இப்போது எல்லைகளை தாண்டிச்சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் புதிய இயக்கங்கள் உருவாகும் பிரச்சினை அடுத்த காலகட்டத்தில் ஆரம்பிக்கப்படக்கூடும். இப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகத் தோற்றம் பெற்றுவருகிறது என்று ஐக்கிய சோசலிசக்கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிதுங்க ஜயசூரிய ஏ.என்.ஐ. செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லாத போது புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

யுத்தத்தில் வெற்றி கொள்வது தமிழர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வராது. அது பிரபாகரனையோ அல்லது புலிகளையோ வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ள சிறிதுங்க, தமிழர் பிரச்சினையை தமிழகத் தலைவர் நாடகத்தை அரங்கேற்றுவதாக விமர்சித்துள்ளார்.

பல வருடங்களாக இது நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கும் ஏனைய சர்வதேச அரசுகளுக்கும் அவர்கள் (தமிழகத் தலைவர்கள்) அழுத்தம் கொடுக்கின்றனர். இது அவர்களின் நாடகத்தின் ஓரங்கம் என்று தான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல்களை கண்டிப்பதால் யுத்தம் நின்று விடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாதானப் பணியாளராக இலங்கைக்கு வருகை தர ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் திட்டம்

இலங்கையில் யுத்தநிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனும் பேச்சு நடத்தப் போவதாக வாழும் கலை மன்றத்தின் ஆன்மீகக் குருவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ள சுவாமி ரவிசங்கர் அங்கு வைத்து இதனைக் கூறியுள்ளதாக “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்தது. அத்துடன், விரைவில் பாகிஸ்தானுக்கும் தான் செல்லப்போவதாக ரவிசங்கர் கூறியுள்ளார்.

சமாதான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்தும் அதனை மேற்கொள்வேன். விரைவில் பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளேன். இருதரப்பு அதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். யுத்தநிறுத்தம் தொடர்பாக இலங்கை, இந்திய அரசாங்கங்களிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அங்கு செல்வேன். ஜனாதிபதி ராஜபக்ஷவையும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தனித்தனியாகச் சந்தித்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும். இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆன்மீகக் கல்வியானது மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இலங்கை அகதிகள் தமது தாயகத்துக்குத் திரும்பிச் சென்று கௌரவத்துடன் வாழ்வதற்கான சகல முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். இலங்கை அகதிகளின் தொழில், வீடுகள், நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கவேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”தப்பியோடுவதா? தற்கொலை செய்வதா? தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன்” – கோதபாய : ”நாங்கள் போராடுவோம்!! சரண் அடையமாட்டோம்!!!” – யோகி

gothabaya.jpgஅப்பாவி மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் வன்னியில் மறைந்துள்ளார்கள். தாம் தப்பியோடுவதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா? என்று தீர்மானிக்க முடியாத நிலையில் பிரபாகரன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் அரசியல் புகலிடம் கோரக்கூடுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்புச் செய லாளர் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம். பாதுகாப்பு படையினர் உயிர் தியாகத்துடன் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கோதபாய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் அளித்த விசேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 10 நாட்களுக்குள் 30 ஆயிரம் பேரை புலிகளிடமிருந்து மீட்டெடுத்திருப்பதாகவும் 50 ஆயிரத்துக்கும் 70 ஆயிரத்துக்கும் இடையிலான மக்களை புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி

yokaradnam-yoki.jpgநாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்று விடுதலைப்புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்து பகிர்வு நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்து இருப்பதாவது:-

நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல. இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம். எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.

ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம். போராடியிருக்கின்றோம். இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது. வடமராட்சியில் ‘ஒப்ரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். ‘ஜெயசிக்குறு’ காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.

ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

இன்று உலகம் முழுவதிலும் ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.

இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.

அண்மை காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப் படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும்.

நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.  எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன. இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுக்கப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு இலட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50 இலிருந்து 60 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100 க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.

அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக் காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.

ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர். ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.

நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத போராட்டம் தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார்.

வன்னி மக்கள் பாதுகாப்புடன் வெளியேற இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

வன்னியில் மோதலில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பொன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பகுதியில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட கால வரையறைக்குள் உடனடியாக ஒருதலைப்பட்சமாக மோதல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் கேட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.

அத்துடன், பலவந்தமாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்குமாறு சர்வதேச சமூகம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக அவர்களை வைத்திருக்கக்கூடும். ஆனால், இது தொடர்பான சர்வதேசத்தின் அபிப்பிராயம் தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் என்று சமாதானத்திற்கான தமிழர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சகல பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். அத்துடன், அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான தார்மீக உரிமை இந்த நிலையில் உண்டு. தங்களின் தரப்பில் அந்த நடவடிக்கையானது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். நீங்கள் புலிகளுடனேயே போரிடுகிறீர்கள். தமிழ் சமூகத்திற்கு எதிராக அல்ல என்பது குறித்தும் தமிழ் மக்களின் துன்பம் தொடர்பாக மனிதாபிமான ரீதியான கரிசனையை மனதில் அதிகளவுக்கு கொண்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.