ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சில வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்துவரும் சுப்பிரமணியம் சுவாமி, நேற்று, சிதம்பரம் நடராஜர் ஆலய தீஷிதர்கள் சார்பாக வாதாட நீதிமன்றம் வந்திருந்தார்.
நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, மற்றும் சந்துரு முன்னிலையில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே சில வழக்கறிஞர்கள் அறைக்குள் நுழைந்து, சுவாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நீதிபதிகளின் கண்டனங்களையும் மீறி சுவாமி மீது அழுகிய முட்டைகளை வீசியதோடு அவரைத் தாக்கவும் முயன்றனர்.
பின்னர் பொலிசார் விரைந்து வந்து வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் சுவாமி தனக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கத் தவறிவிட்டதென்றும், நீதிபதிகள் முன்னிலையில் இவ்வாறு தாக்குதல் நடைபெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.
உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.
நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.