வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ள மக்களுக்கு முதற்தடவையாக தனியார் துறையினர்; நிவாரண உதவி வழங்கியுள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் எட்டு லொறிகள் மூலம் நேற்று முற்பகல் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இப்பொருட்களை இலங்கை மத்திய வங்கி தலைமையில் பல நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11.00 மணியளவில் ராஜகிரியாவில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றதுடன் அதில் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன். ஜனாதிபதி விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சப்ரகமுவா மாகாணசபை முதலமைச்சர் மஹீபால ஹேரத் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கப்ரால் உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய வங்கி ஆளுனர் பொருட்களைக் கையளித்ததுடன் அமைச்சர் பதியுதீன் மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் அவற்றை அரசாங்கம் சார்பாக பொறுப்பேற்றனர்.
மத்திய வங்கியின் தலைமையில் யுணி லீவர்ஸ் நிறுவனம், மஞ்சி பிஸ்கட் நிறுவனம், ஆர்.ஆர்.ஆர். அன்ட் எஸ் நிறுவனம் பசினேட் எக்ஸ்போர்ட் நிறுவனம், டிப் லங்கா நிறுவனம், ஐ.டி.எல். லங்கா நிறுவனம் ஆகியன இப்பொருட்களை வழங்கியுள்ளன. வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக இப்போருட்கள் இடம்பெயர்ந்தோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.