February

February

இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் திரட்ட சோனியா அறிவுறுத்தல்

soniya2.jpgஇலங்கையின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கட்யின் தென்மாநிலப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தூர விலகி நிற்பதாக ஆத்திரமடைந்துள்ள தமிழ்நாட்டின் விசனத்தைத் தணிப்பதற்காகவே அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து பணியாற்றும்படி தனது சகாக்களுக்கும் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தை இடைநிறுத்த ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்

UN_Logoமோதலை இடைநிறுத்தி பொது மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கு இடமளிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேவையற்ற விதத்தில் பொது மக்களுக்கு மேலும் இழப்புகளையும் இலங்கை சமூகத்திற்கு அழிவையும் ஏற்படுத்தாமல் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியத் தேவை இருப்பதாக ஐ.நா.வில் நிருபர்கள் மத்தியில் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.

மோதல் அதிகரித்திருப்பதால் அங்கு அகப்பட்டிருக்கும் பொது மக்களின் இறப்புகள் அதிகரித்து வருவதையிட்டு ஐ.நா. கவலையடைந்துள்ளது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற இடமளிப்பதற்காக யுத்தத்தை இடைநிறுத்துவதற்கு ஐ.நா. ஆதரவளிக்கின்றது என்று பான் கி மூன் கூறியுள்ளார்.

யுத்த நிறுத்தம் என்ற வார்த்தையை ஐ.நா. செயலாளர் நாயகம் பயன்படுத்தவில்லை. ஆனால், பொது மக்களைப் பாதுகாக்குமாறு மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரையும் வலியுறுத்தி முன்னர் அவர் விடுத்த அறிக்கைகளிலும் பார்க்க அவர் இப்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிகமானதாக இருப்பதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. “சகல தரப்பினரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அரசியல் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்’ என்ற தனது அழைப்பை மீண்டும் ஐ.நா. விடுப்பதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார

புலம்பெயர் தொழிலாளருக்கென தேசிய கொள்கை அறிமுகம்

rambukwela.jpgபுலம்பெயர் தொழிலாளர்களுக்கென தேசியக் கொள்கையொன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்ப நலன்களைக் கருத்திற்கொண்டு இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது தொடர்பாக அமைச்சில் நடந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுடனான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு உத்தரவு பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் கடிதம் அவசியமில்லை.

இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்குதல், அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் போன்ற தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமே தீர்மானங்கள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்குமேயன்றி தொழில் வழங்குநர்களுக்கு உதவ முன்வரமாட்டாது. பல்வேறு அமைப்புகளின் தேவைகளுக்கமைய கொள்கைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக வில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்களாக செல்வோர் காப்புறுதி செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் எனக் கூறியமைக்கு காரணம் அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டமையால் தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கட்டணங்களை செலுத்த தவறும் தொழில் வழங்குநர்களின் கீழ் பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப் படமாட்டார்களென்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல கூறியுள்ளார்.

சர்வகட்சிக்குழு இவ்வாரம் முக்கிய தீர்மானம்; ஐ.தே.கவுடன் பேசவும் முடிவு

Minister Tissa Vitharanaஇனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இவ்வாரம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இவ்வாரத்துடன் குழுவின் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் விதாரண, அதன் பின்னர் ஐ. தே. க. வின் கருத்தை அறிய, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவுள்ளதாகக் கூறினார்.  சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெறவில்லை. எனவே, இந்த வார இறுதிக்குள் கூடி கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த எதிர் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீர்வுத் திட்டம் தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சு நடத்தப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச உள்ளதாக அமைச்சர் கூறினார். அதனைத் தொடர்ந்து தீர்வு யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற பொருத்தமான ஏற்பாடு வேண்டும்; உதவத்தயார் – டில்லி கொழும்புக்குத் தெரிவிப்பு

navy_rg.jpgஇலங்கையில் மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையூட்டுவதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கும் இந்திய அரசாங்கம் இதற்கு உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதியளிக்க வேண்டுமென்று சர்வதேச ரீதியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கான விருப்பத்தைப் புலிகள் தெரிவித்திருப்பதாக செய்திகளில் நாம் பார்த்தோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இதனடிப்படையிலேயே இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குப் பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கையையும் அக்கறையுடைய ஏனையவர்களையும் இந்தியா கேட்டுக் கொள்கின்றது என்றும் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

அதேசமயம் இடம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவதை சர்வதேச நிறுவனங்களும் மேற்பார்வை செய்யும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு வலயங்களுக்கு இருதரப்பும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிறிய தொகையினர் கடல் மார்க்கமாக வெளியேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன் தரை, கடல்மார்க்கமாக அதிக எண்ணிக்கையானோரை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையை சாத்தியமானதாக மாற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புதுடில்லி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா ஆயத்தமாக இருப்பதாகவும் அத்துடன், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உதவிகளை வழங்கத் தயாரெனவும் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும், காயமடைந்த மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

sarath_f_jaffna.pngவிடுதலைப் புலிகள் தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது விமானத்தாக்குதல்களை நடத்தக் கூடுமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். படையினரின் தாக்குதல்களால் ஏற்பட்டிருக்கும் விரக்தி நிலை காரணமாகவே விடுதலைப்புலிகள் இந்தியாவை இலக்காகக் கொள்ளக் கூடுமென இந்திய தினசரி பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டியில் லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அண்மையில் கொழும்பு மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் முயற்சியின் போது விடுதலைப்புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, புலிகளின் வான் பலம் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இந்திய இலக்குகளைத் தாக்கும் திறன் இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் வழியில் நீண்டு இழுபட்டுக் கொண்டிராமல் தற்போது பொதுமக்களின் நிலைமைகள் பற்றி மட்டுமே பேசுவதால் விடுதலைப் புலிகளும் தென்னிந்தியாவிலுள்ள அவர்களது அனுதாபிகளும் ஆத்திரமடைந்துள்ளனர் என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அவர்கள் (புலிகள்) இலங்கையின் வடக்கு, கிழக்கு முழுவதுமாக பறந்து வந்து கொழும்பிலுள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் திரும்பிச் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தியாவிலும் இதையே செய்ய முடியும் என்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளின் 7 விமான ஓடுபாதைகளும் கைப்பற்றப்பட்டுவிட்ட போதிலும் கூட அவர்களால் கொழும்பு மீது விமானத் தாக்குதல் நடத்த முடிந்தமையானது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் நம்பக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தாழப் பறக்கும் விமானத்தைக் கண்டறிவது கடினமென்பதுடன் அதற்கு இந்தியாவினுள் 150170 கிலோ மீற்றரை விட அதிகமான தூரம் சென்று இலகுவாகத் தாக்குதல்களை நடத்த முடியுமென்று சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இதேநேரம் அது தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கையாக இருந்தால் விமானத்துக்கு மேலும் நீண்ட தூரம் உள்ளே பயணிக்க முடிவதுடன் விமானம் திரும்பியும் வராது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த தமிழ்ப் பொதுமக்களை மோதல்கள் நடைபெறும் பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிப்பதில்லையென குற்றஞ்சாட்டி விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவை இலக்கு வைப்பதால் விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் பயன் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் லெப். ஜெனரல் பொன்சேகா; ராஜீவ் காந்தியை (இந்திய முன்னாள் பிரதமர்) இந்திய மண்ணிலேயே படுகொலை செய்யுமளவிற்கு போதுமானளவு துணிச்சலோ அல்லது முட்டாள்த்தனமோ புலிகளுக்கு இருந்தது. அவர்கள் சமாதானத்தையோ அல்லது பேச்சுகளையோ நம்பவில்லை. தற்போது, அவர்கள் முல்லைத்தீவில் வெறும் சுமார் 35 சது கிலோமீற்றர் பரப்புடைய நிலப்பரப்பிற்குள்ளும் 20 சதுர கிலோமீற்றர் பரப்புடைய கடற்கரை பிரதேசத்திற்குள்ளும் முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரக்தியடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார்

Pranab_Mukherjeeஇலங்கையில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என அவர் இறுதி நேரத்தில் முகர்ஜீ அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜீக்கு பதிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஈ.அஹமட் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

sampanthan.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணி நேரமாக  விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், ஈழப் போராட்டம் நிறைவடையாதென நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

நிவாரணக் கிராமங்களில் தொற்று நோய்களை தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை

navy_rg.jpgவவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார்.

பொக்களிப்பான் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் பொக்களிப்பான் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்படும் ஐயப்பாடு தொடர்பாகக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; நிவாரணக் கிராமங்களில் தங்கி இருப்பவர்கள் எவராவது தொற்று நோய்க்கு உள்ளானால் அவர்களைத் தங்க வைக்கவென தனியான வார்ட்டு தொகுதியும் வவுனியாவில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆகவே, தொற்று நோய்கள் பரவுமென எவரும் அச்சப்படத் தேவையில்லை. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த ஒரு சிலர் மத்தியில் பொக்களிப்பான் தொற்று காணப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்நோய்களின் பரவுகை வவுனியா நிவாரணக் கிராமங்களில் கிடையாது என்றார்.

சிவிலியன்களை விடுவிக்க சம்மதித்தால் உரிய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயார்

mahinda_samarasinghe.jpgசிவிலியன்களைத் தமது பிடியில் இருந்து விடுவிப்பதாக புலிகள் ஒரு தெளிவான அறிவிப்பைச் செய்வார்களாயின் அதற்காக அரசாங்கம் எவ்வகையான நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தயாரென மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்கமும், சர்வதேச சமூகமும் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து புலிகள் ஒரு தெளிவான பதிலை அறிவித்தால், சிவிலியன்கள் எவ்வகையிலும் பாதிப்படையாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்காக இருதரப்பும் மோதல்களை இடைநிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகார அமைச்சர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் கைவிடுமாறும் அறிக்கையொன்றின் மூலம் இயக்கத்தைக் கோரியுள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரமசிங்க, ‘இந்தத் தருணத்திலாவது புலிகள் சாதகமாகப் பதில் அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புலிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அவர்கள் பிடித்த பிடியாய்த் தடுத்து வைத்திருக்கிறார்கள். தற்போது படையினர் புதுக்குடியிருப்பை நெருங்கிவிட்டார்கள். அதனால், சிவிலியன்கள் இனி வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிவிலியன்கள் வெளியேறினாலும் புலிகள் இயக்கத்தினரை எதிர்கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அவ்வாறான நிலைமையில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். நாம் மோதல்களை இடைநிறுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். புலிகள் அமைப்பு இதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியுயோர்க்கில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த அவர் :-

‘ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் அண்மையில் மிகச் சிறப்பான ஒரு விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்துக்குமிடையில் மோதல்கள் தீவிரமாக உள்ள பகுதிகளில் சிவிலியன்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கும் சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேறி விடுவிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மோதலை இடைநிறுத்த வேண்டும். இது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மேலும் சிவிலியன் உயிரிழப்பைத் தடுப்பதற்கும் மிக அத்தியாவசியமானது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தை மூலமான நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சகல தரப்பினரும் பங்காற்ற வேண்டுமென்றும் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.