February

February

காஸாவைக் கட்டியெழுப்ப அமெரிக்கா 900 மில்லியன் டொலர் நிதியுதவி

hamas.jpgகாஸாவைப் புனரமைக்க 900 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக அமெரிக்கா வழங்கவுள்ளது.  மார்ச் மாதம் 2ம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்ப மாகவுள்ள காஸாவைப் புனரமைக்கும் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த நிதி உதவிபற்றி அறிவிப்பார். ஆனால் இது எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இதற்கான அனுமதி காங்கிரஸில் கிடைத்தவுடன் இந்நிதி பற்றிய ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

காஸாவைப் புனரமைக்க வழங்கப்படவுள்ள இந்நிதி ஹமாஸிடம் கையளிக்கப்பட மாட்டாது. அமெரிக்காவுக்கும் ஹமாஸ¤க்குமிடையே உறவுகள் இல்லை. இதனால் அமெரிக்க சார்பு அமைப்பிடம் அல்லது அரசிடம் இது கையளிக்கப்படலாம். காஸா புனரமைப்பு மாநாட்டில் பங்கேற்கவரும் ஹிலாரி கிளிண்டன், இஸ்ரேல் மேற்குக் கரைக்கும் விஜயம் செய்யவுள்ளார். ஹிலாரி கிளிண்டனின் விஜயத்தை இஸ்ரேல் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அங்கு புதிய அரசாங்கம் இதுவரை அமைக்கப்படாத போதும் பெரும்பாலும் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் பென்ஜமின் நெதன்யாஹு உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ஹிலாரி கிளிண்டன் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதிய அரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சரான ஹிலாரி கிளிண்டன் மத்திய கிழக்கிற்கு செய்யும் முதல் விஜயம் இதுவாகும். புஷ்ஷின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரபு அமைச்சர்கள் மாநாடு அனோபெலிஸ் மாநாடுகள் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் இந் நிதியுதவி உள்ளது. காஸாவில் கட்டுமானப் பணிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  காஸா மீது 22 நாட்களாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் நடந்தது.

இதனால் அரபுலகின் அதிருப்தியை அமெரிக்கா ஈட்டிக்கொண்டமை தெரிந்ததே. யுத்தம் நடந்த காலப் பகுதியில் (2008 டிசம்பர்) ஒபாமா பதவி யேற்காதபோதும் காஸாவில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவில்லை. பின்னர் அரபுலகில் கொதிப்பும், ஆத்திரமும் அதிகரிக்கவே அப்பாவிகள் கொல்லப்படுவது கவலையளிப்பதாகச் சொன்னார். அரபுலகிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளபோதும் காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பிடம் இந்நிதி வழங்கப்படமாட்டாது. மேற்குக் கரைக்குச் செல்லவுள்ள ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸையும் சந்திப்பார். இஸ்ரேல் மேற்கு க்கரை மற்றும் அரபு நாடுகளின் மேற்பார்வையில் காஸா புனரமைக்கப்படலாம்.

நிவாரண கிராமங்களுக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர் அனுப்பி வைப்பு

pregnant-lady.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கிய நலன்களைக் கவனிக்கவென சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணரொருவரும் உடனடியாக கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருவர் கடமையில் உள்ளனர்.

இதேநேரம், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணிகளை பிரசவத்திற்கென வவுனியா போதனா வைத்தியசாலைக்கும் செட்டிகுளம், பூவரசங்குளம் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இப்பெண்களின் பிரசவத்திற்கு ஏற்ப இந்த ஆஸ்பத்திரிகளின் வசதிகளை துரிதமாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சுமார் 750 கர்ப்பிணிப் பெண்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 14 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவசேவை வழங்கவென வவுனியா ஆயுர்வேத ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ மாதுகளின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறையும். அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

bandula_gunawadana.jpgஅரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.

அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

சீனாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலிட விருப்பம்

anura-piriyadarshana-yappa.jpgசீனாவின் பல்வேறு துறைகளையும் சார்ந்த முதலீட்டாளர்கள் 50 பேர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவைக் கொழும்பில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

சீன நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்புகளைச் செய்துவரும் பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்களான 50 முக்கியஸ்தர்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்தது.

இதன்போது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இத்துறைகளில் சீன வர்த்தகர்கள் முதலீடுகளை மேற் கொள்ளும் வகையில் முதலீட்டுச் சலுகைகளை விரிவு படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சீனத் தூதுக் குழுவினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில் முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான காலமொன்று உருவாகியுள்ளதாகவும் இலங்கையின் முக்கிய துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் 35 சீன நிறுவனங்கள் இலங்கை முதலீட்டுச் சபை மூலம் முதலீடுகளை மேற் கொண்டுள்ளதுடன் மேலும் 46 நிறுவனங்கள் இலங்கை யின் பொது சட்ட திட்டங்களிற்கமைவாக தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சீன முதலீட்டாளர்களைக் கவனத்திற்கொண்டு விசேட பொருளாதார வலயமொன்றை கொழும்புக்கு அண்டிய பகுதியில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முதலீட்டுச் சபை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்துவது கொழும்பின் அவசியத் தேவை’

children-srilanka-01.jpgஇலங் கையில் தமக்கு எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை கொழும்பு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கும் “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ உண்மையிலேயே சகல தரப்பினரையும் உள்ளீர்த்துக் கொண்ட தேசமாக இருக்க இலங்கை விரும்புகின்றது என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டிய தேவை கொழும்புக்கு இருக்கிறது’ என்று மகுடமிட்டு இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அண்மித்து வருவதாக இலங்கை அரசாங்கம் நம்புகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்கும் யுத்தத்தில் அது தோல்வியை அண்மித்து வருவதாக கருத முடியும்.

இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளால் தமிழ் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது போராட்டத்தின் பின்னணியில் தமிழ் சமூகத்தின் துன்பங்களை நிவர்த்தி செய்யக் கூடிய சமாதானப் பொதியையும் கொழும்பு முன்வைக்க வேண்டும். போர் முடியும் வரையென இது தொடர்பாக காத்திருக்க முடியாது.

தொடர்ந்து ஆட்சி செய்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த “சிங்களவர்களுக்கே பிரத்தியேகம்’ என்ற கொள்கைகளாலேயே தமிழர்களின் போராட்டம் தோன்றியது. தமிழர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்த குழுவினர் புலிகள் அல்ல. அதேசமயம், இனநெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அதற்குப் பரிகாரம் காணாவிடின் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் இறுதியான குழுவாகவும் புலிகள் இருக்கப் போவதில்லை. ஆதலால் தமிழ் மக்களின் அபிலாசைகளுடன் புலிகளின் அரசியல் இலக்குகளை ஒன்றுபடுத்தாமல் இருப்பது முக்கியமானதாகும்.

புலிகளின் முடிவானது தமிழ்ப் பிரிவினைவாதத்தின் முடிவாக அமையும் என பார்க்க முடியாது. புலிகள் மறைந்தாலும் சமாதானம் நழுவிச் சென்று விடும் என்பது நிரூபணமாகக் கூடும். புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சிறப்பான மாற்றீடாக இருக்குமென நிச்சயப்படுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். இலங்கை அரசானது சிங்கள இனமேலாதிக்கவாதத் தன்மையைக் கொண்டிருப்பதாக தமிழர்கள் பார்க்கின்றனர். சிறுபான்மையினங்களின் உண்மைகளுக்கு அது அங்கீகாரம் வழங்காதென அவர்கள் கருதுகின்றனர். தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமானால் தனது சிந்தனைகளை அதிகளவுக்கு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் மரபு ரீதியான கட்டமைப்புக்கு அப்பால் இந்த மோதலைப் பார்க்க வேண்டிய வேளை வந்துள்ளது. பிராந்தியத்திற்கான புனர்நிர்மாண மீள் நல்லிணக்கத் தீர்வுத் திட்டம் குறித்து கொழும்பு அறிவிக்க வேண்டும். ஒருதலைப் பட்சமான சமாதான முயற்சிகள் கேள்விப்படாத ஒன்றாக அமையலாம். ஆனால், இலங்கை முன்நோக்கிச் செல்வதற்கு இதுவே ஒரேயொரு வழிமுறையாகும். இலங்கை உண்மையாகவே சகல தரப்பினரையும் உள்ளீர்த்துள்ள தேசம் என்ற நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை கொழும்புக்குள்ளது. அத்துடன், தமக்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எல்லைகளுக்கான யுத்தத்துடன் இணைந்து மனங்களை வென்றெடுப்பதற்கான போரையும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை மின்சார சபை சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற அனுமதியோம் – தொழிற் சங்க கூட்டமைப்பு தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgஇலங்கை மின்சக்தி சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லையென மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிக்கையில்; எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கை மின்சக்தி சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்து சட்டமாக்குவதற்கு எதிர்பார்த்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின் பொதுமக்கள் சிக்கல் நிலைக்கு தள்ளப்படுவர்.

இந்நிலையில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இது ஒரு சட்டமல்லவெனவும் வெறும் எழுத்தெனவும் கூறுவதுடன் இது பணம் திரட்டும் ஒரு வழியெனவும் கூறுகின்றார். இதனால் அரசாங்கத்தினால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார். மின்சாரசபை ஊழியர்கள் கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனால் மக்களும் பாதிக்கப்படுவர்.

இது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அது எரிபொருள் சக்தித் துறைக்கான அடிப்படைச் சட்டமாக அமையுமென்பதால் இதனை எதிர்க்கின்றோம். இச்சட்டமூலம் சட்டமாக்கப்பட்ட பின் இதனை இனி யாராலும் திரும்ப வாபஸ் பெற முடியாது. இந்த சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தான் மேலும் பாதிப்பை எதிர்கொள்வர். இந்நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றத் தவறினால் எதிர்காலத்தில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.

அரசாங்கம் இயலுமானால் இதனை சட்டமாக்கிக் காட்டட்டுமென சவால் விடுக்கின்றோமெனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இது தொடர்பாக சக்திவள அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவிக்கையில்; மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பானது ஜே.வி.பி.யினுடைய தொழிற்சங்கமாகும். இவர்கள் இலங்கை மின்சக்தி சட்டத்தை மட்டுமன்றி எந்தக் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். இந்த சட்டமூலத்தால் மின்சார சபை தனியாருக்கு விற்கப்படப் போவதில்லை. இதனை சட்டமாக்குவதற்குத் தேவையான பெரும்பான்மையை பெற முடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைவரம்- மார்ச் முதல்வாரம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை

civilians-1002-09.jpgஇலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா ஆகியோர் அடங்கலாக குழுவொன்று மார்ச் மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவுக்கு பயணமாகிறது. ஜெனீவாவுக்கான இந்த பயணத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் உறுதிப்படுத்தினார்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐ.நா. அமைப்பு உட்பட உலக நாடுகள் யாவும் கவலை வெளியிட்டுவரும் தருணத்திலேயே, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் இலங்கை சார்பான அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் விடுக்கப்படவுள்ளது. அண்மையில் கூட நியூயோர்க்கில் பிரிட்டிஷ் பிரெஞ்சு தூதுவர்கள் இலங்கை நிலைவரம் தொடர்பாக கடும் கவலையை வெளியிட்டிருந்தனர். அத்துடன், அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா.மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ், அவரது அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்குமென அந் நாட்டுத் தூதுவர் ஜோன் சாவர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இவற்றுக்கெல்லாம் இலங்கை அரசாங்கம் தரப்பில் பதிலளிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான மஹிந்த சமரசிங்கவின் அறிக்கை இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட பிரிவுக்கான அமர்வில் கலந்துகொள்ளவே ஜெனீவா செல்வதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அதற்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் பற்றி கலந்து பேசவிருப்பதாகவும் கூறினார்.

கிளிநொச்சிக்கான மின் விநியோகத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டம்

electricitypowerlinesss.jpgகிளிநொச்சி மாவட்டத்துக்கான மின் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுமார் 500 மில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டிருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இம் மாவட்டத்திற்கான மின் விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்ய சுமார் ஒரு வருட காலம் தேவையென மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து மாங்குளத்திற்கான மின் விநியோக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், புளியங்குளத்தில் அதிசக்திவாய்ந்த மின்சார கேபிள்கள், மின் கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜப்பானின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், புளியங்குளத்துக்கும் வவுனியாவுக்கு மிடையே 66 கிலோ மீற்றர் நீளத்துக்கு மின் இணைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்துக்கான முழு மின்விநியோகம், அங்கு உப மின்நிலையம் ஒன்று நிர்மாணப்படுத்தப்பட்டதன் பின்னரே இடம் பெறுமெனவும், அதற்கு முன்னர் தற்காலிக மின் இணைப்புக்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மோதல் காரணமாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த உப மின் நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், மீண்டும் அதே இடத்தில் அதனை மீள நிர்மாணிப்பதற்கும் மின்சார சபை திட்டமிட்டுள்ளது. அதேசமயம், இடம் பெயர்ந்த மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கு முன்பதாக, அம்மக்களுக்கான குடிநீர், மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

135 பேருடன் துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது.

flight_.jpg135 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 3 துண்டுகளாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். விமானம் தீ பிடிக்காததால் விமானத்தில் பயணம்  செய்த பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த தொண்டர் கோகுல்ரத்தினம் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் இதுபோல தீக்குளித்து உயிரிழந்த இரண்டாவது திமுக தொண்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு, சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற திமுக தொண்டர், சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்னும் ஒரு திமுக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார். உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர்.  ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.