சீனாவின் பல்வேறு துறைகளையும் சார்ந்த முதலீட்டாளர்கள் 50 பேர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவைக் கொழும்பில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சீன நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்புகளைச் செய்துவரும் பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்களான 50 முக்கியஸ்தர்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்தது.
இதன்போது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இத்துறைகளில் சீன வர்த்தகர்கள் முதலீடுகளை மேற் கொள்ளும் வகையில் முதலீட்டுச் சலுகைகளை விரிவு படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சீனத் தூதுக் குழுவினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையில் முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான காலமொன்று உருவாகியுள்ளதாகவும் இலங்கையின் முக்கிய துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் 35 சீன நிறுவனங்கள் இலங்கை முதலீட்டுச் சபை மூலம் முதலீடுகளை மேற் கொண்டுள்ளதுடன் மேலும் 46 நிறுவனங்கள் இலங்கை யின் பொது சட்ட திட்டங்களிற்கமைவாக தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சீன முதலீட்டாளர்களைக் கவனத்திற்கொண்டு விசேட பொருளாதார வலயமொன்றை கொழும்புக்கு அண்டிய பகுதியில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முதலீட்டுச் சபை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.