26

26

அரச பகுதிக்கு செல்ல விரும்பும் மக்களின் விருப்பத்தை புலிகள் நிராகரிக்க கூடாது;

yasusi.jpgவடக்கில் சிவிலியன்களை பாதுகாப்பதற்கும் இடம் பெயர்ந்தோருக்கு நிவாரணமளிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜப்பானிய தூதுவர் யசூசி அகாஷி திருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யசூசி அகாஷி திருகோணமலைக்கும் வவுனியாவுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்து விட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனது விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய யசூசி அகாஷி, அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு செல்லவிரும்பும் பொதுமக்களின் சுதந்திரத்தை புலிகள் நிராகரிக்கக் கூடாதெனவும் கேட்டுக் கொண்டார். சிவிலியன்களையும், ஐ.நா பணியாளர்களையும் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் முடக்கி வைத்திருக்கும் புலிகளின் செயல்பாடுகள் குறித்து தமது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களின் சுதந்திரமான வெளியேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அகாஷி சுட்டிக்காட்டினார். இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் அபிவிருத்திக்கும் ஏனைய சர்வதேச நாடுகளோடு இணைந்து ஜப்பான் தொடர்ந்து முக்கிய பங்காற்றுமென்றும் அகாஷி தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்புக் குறித்தும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் ஜப்பான் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமென்றும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சர்வதேச பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.சமாதான முன்னெடுப்பு தொடருமென நம்பிக்கை தெரிவித்த அகாஷி, அரசியல் தீர்வொன்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியுமென வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். தென்னிலங்கை கட்சிகள் மத்திய முரண்பாடுகள் இருப்பின் அதனை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும் வெளியில் சென்று அதனை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும் யசூசி தெரிவித்தார்.

இதேவேளை 61 நாடுகள் மற்றும் 21 தொண்டு நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் மாத்திரமே டோக்கியோவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டது. அந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளும் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தனர். இது தொடர்பில் தாம் கவலையடைவதாக தெரிவித்த யசூசி அகாசி காரணம் அந்த மாநாட்டின் போது 4. 5 மில்லியன் டொலர் நிதிகள் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் இதில் கலந்து கொண்டிருந்தால் அது தமிழர்களுக்கு மாத்திரம் இன்றி ஏனைய இனங்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருந்திருக்கும் என அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

புலிகளின் யுத்த தாங்கியை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

mi24-1301.jpgவிசுவமடு பகுதியிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் நேற்று தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப்படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விசுவமடு குளத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் யுத்த தாங்கியொன்றை இலக்கு வைத்து விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விமானத் தான்குதலுக்கு இலக்கான யுத்த தாங்கியை மீட்கும் நோக்கில் முன்னேறிய இராணுவத்தின் 58வது படையணிக்கு உதவியாக நேற்று நண்பகல் மீண்டும் எம். ஐ. 24 ரக விமானம் மூலம் விமானத் தாக்குதலை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இலங்கையின் இனமோதல்கள் குறித்து பாரிஸ்,லண்டனில் நூல்கள் வெளியீடு

இலங்கையில் நடைபெற்று வரும் “இனமோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன, என்பதனை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமும், 2002 2006 காலப்பகுதியில் நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் வெளியிடப்படவுள்ளன. இலங்கை இன மோதுகையானது தமிழ் சிங்கள தேசங்களுக்கு இடையேயான போர் மட்டுமல்ல, அனைத்துலக ஈடுபாடும், நோக்கங்களும் கொண்டதொரு அனைத்துலக விவகாரம் என கற்கையாளர்களும் சிந்தனையாளர்களும் விபரித்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்த மோதுகையின் அனைத்துலக பரிமாணம் என்ன என்பதை முழுமையாக ஆய்வு செய்யும் தமிழ் ஆவணமான “இலங்கை இனமோதுகையின் சர்வதேச பரிமாணம்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது.

“குல்ரங்’ மூத்த பேராசிரியர் சத்தியேந்திரா, கலாநிதி சதானந்தன் உட்பட பல அனைத்துலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பாக இது வெளியாகின்றது. இதேவேளை, 2002 2006 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை நடைபெற்ற சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள், அரசியல் வியூகங்கள் என்பனவற்றை ஆய்வு செய்யும் நூலாக “”மாற்றுநிலைப்படுத்தலின் அரசியல்’ எனும் நூல் வெளியிடப்படுகின்றது. சுதாகரன் நடராஜா, லக்சி விமலராஜா ஆகியோரின் ஆய்வுகளின் தமிழ் தொகுப்பாக இது வெளியாகின்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் சனிக்கிழமை 31.01.09.மாலை 4 மணிக்கு இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. பிரித்தானியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (01.02.2009) மாலை 5.30 மணிக்கு லண்டனில் இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன. இரு நிகழ்வுகளிலும் நடேசன் சத்தியேந்திரா (தமிழ் புத்திஜீவி, தமிழ்நேசன் இணையத்தள முதன்மை ஆசிரியர்), அ.இ.தாசீசியஸ் (மூத்த புலத்தமிழ் ஊடகவியாளர் லண்டன்), ம.தனபாலசிங்கம் (தமிழ் சிந்தனையாளர், ஆய்வாளர் அவுஸ்திரேலியா,சிட்னி), கி.பி.அரவிந்தன் (பல்துறை செயற்பாட்டாளர், எழுத்தாளர் பாரிஸ்) ந.ஓ.பற்றிமாகரன் (ஆசிரியர், பத்திரிகையாளர், ஆய்வாளர் லண்டன்) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுகள்

muttaih_muralitharan.jpgஉலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.  இன்னும் முன்று விக்கெட்டுக்களைப் அவர் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக கூடிய விக்கெட்டக்களை கைப்பற்றிய வீரர் இவராகத் திகழ்வார்.

37 வயதான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராகவும் திகழ்கிறார். 125 டெஸ்ட் போட்டிகளில் 769 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டியின் பந்துவீச்சு ஜாம்பவானாகத் திகழ்கின்றார்.  ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முரளிதரன் 2ஆவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக (24)நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முத்தையா முரளிதரன் 500 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.

ஒபாமாவின் திட்டத்துக்கு போப் ஆண்டவர் கண்டனம்

pope_benedict.jpgஅமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .இதன் ஒரு பகுதியாக குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அவர் தீவிரப்படுத்தி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கருக்கலைப்பு, செய்து கொள்ள ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கான உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

புஷ் ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு செய்ய உதவும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இப்போது அந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஒபாமாவின் இந்த முடிவுக்கு போப் ஆண்டவர் பெனடிக்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் சார்பில் வாடிகன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இது வாழ்வு பிரச்சினை. உயிர் பிரச்சினை அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். இத் திட்டம் கத்தோலிக்க மத ஈடுபாடு உள்ளவர்களின் முதுகில் குத்துவதாகும். படைக்கப்படும் உயிர்களை முளையிலேயே கிள்ளி எறியும் இந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பது வேதனை தரும் விஷயம். இவ்வாறு வாடிகன் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகளில் பொலிஸார் தேடுதல்; 9 சிறுவர் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகளில் இடம் பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போது வேலைக்கமர்த்தப்பட்டிருந்த ஒன்பது சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் தொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து  வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நடத்திய தேடுதலின் போது குறிப்பிட்ட இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டதாக கொழும்பு மத்திய குற்றப்பிரிவின் பொலிஸ் அதிகாரியான ஜயவர்த்தன தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவர்களை மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ததாக தெரிவித்த அவர், இச்சிறுவர்களின் பெற்றோருக்கு இச்சம்பவம் தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த தேடுதலை கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தயா சமரவீர, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜயவர்த்தன, பொலிஸ் காண்டபிள்களான திஸாநாயக்க, வாஹித் மற்றும் இணவர்த்தன ஆகியோர் மேற்கொண்டனர்

கிழக்கு முதலமைச்சரின் கோரிக்கையை கொழும்பின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அகாசி உறுதியளிப்பு

yasusi.jpgநேற்று முன்தினம் சனிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாசி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார். கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தவும் அபிவிருத்தி வேலைகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் ஜப்பான் அரசாங்கத்தின் பயங்களிப்பு காத்திரமானதாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜப்பானிய தூதரிடம் தெரிவித்தார்.

ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடப்பட்ட அபிவிருத்திகளில் முன்னேற்றங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றது. எனினும் ஒரு சல சம்பவங்கள் அவற்றை மூடி மறைக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் ஜப்பானிய தூதரிடம் குறிப்பிட்டார்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். விடுவிக்கப்படும் வடக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் ஏற்படவும் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணவும் ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்பு அத்தியாவசியம் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் அளித்து வந்துள்ள நிதி உதவிகளுக்கு ஜப்பானிய தூதரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். பதினாறு தடவைகளுக்கு மேல் இலங்கை வந்துள்ள தமக்கு தற்போதைய வருகை வித்தியாசமானதொன்றாக அமைவதாக ஜப்பானிய தூதர் அகாசி குறிப்பிட்டார். ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள கிழக்கு மாகாணத்தின் மாகாண நிர்வாகத்துக்குப் பொறுப்பான முதலமைச்சர் மற்றும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதி நிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பை தற்போதைய விஜயம் தமக்குத் தந்திருப்பதாகவும் அகாசி கூறினார்.கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் நிலவுவது, அதனூடாக சமாதானத்தை வலுவானதாக ஏற்படுத்துவதற்கு உதவும் என்றும் அகாசி கூறினார். 13 ஆவது சரத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதன் அவசியம் பற்றிய கோரிக்கையை கொழும்பில் அரச தலைமைப்பீடத்துடன் நடத்தும் பேச்சுகளின் போது முன்வைப்பதாகவும் அகாசி கூறினார். அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் ஜப்பானிய தூதர் அகாசி கலந்துரையாடினார். இச்சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது.

ரி.எம்.வி.பியில் மிகுதியாக இருக்கும் சிறுவர்களை ஐ.நா. சிறுவர் நிதியத்திடம் ஒப்படைப்போம்! -பிரதீப் மாஸ்டர்

அடுத்துவரும் தினங்களில் ரி.எம்.வி.பி. அமைப்பில் மிகுதியாக இருக்கின்ற சிறுவர்களையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளிடத்தில் ஒப்படைக்கவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் தெரிவித்தார்.

22. 01. 2009 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர்களை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதீப் மாஸ்டர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி எமது அமைப்பிலுள்ள சிறுவர்களை நாங்கள் விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வழிசெய்துள்ளோம் இச்சிறுவர்கள் கடந்தகாலயுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு எமது அமைப்பில் வந்து இணைந்து கொண்டவர்கள். இவர்களை எமது அமைப்பை விட்டு விடுவித்து இவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை மேற்கொள்வதற்கு எமது தலைமைப்பீடம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இச்சிறுவர்களுக்கு சிறந்த தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதுடன் இவர்களுக்கான உரிய முன்னேற்ற வழிகாட்டல்களையும் இச்சிறுவர் நலன்புரி நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதன்மூலம் பெற்றோர்களுடன் இவர்கள் இணைந்து தமது மகிழ்ச்சியான வாழ்வை கழிக்க முடியும். இச்சிறுவர்களுக்கு அறிவினை புகட்டி கல்வியாளர்களாக மாற்றுவதும் அவசியமாகும் என்றார்.

இவ்வைபவத்தில் நீதியமைச்சின் செயலாளர் சுதத் கம்லத் உரையாற்றுகையில், இன்று விடுவிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் நாட்டின் நலத்திற்காக நற்பிரசைகளாக வாழவேண்டும். எனது பிள்ளைகளைப் போலவே இச் சிறுவர்களையும் நான் பார்க்கின்றேன். நாட்டின் நலனில் அக்கறை கொண்டு சிறந்த நற்பிரஜைகளாக வாழ்வதே இச் சிறுவர்களுக்கு முக்கியமானதாகும்.

இன்று இங்கு திறக்கப்பட்டுள்ள சிறுவர் நலன்புரி நிலையம் இவ்வாறான சிறுவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை மேற்கொள்ளும். இன்றைய இச்சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள். சிறந்த நற்பிரஜைகளாக இவர்களை மாற்றி எடுப்பதில் நாம் முழுமையான பங்களிப்பை செய்யவேண்டும்

சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்கள் மாநாடு

சார்க் நாடுகளின் மின்சக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு எதிர்வரும் 28ஆம் 29ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி. ஜே. செனவிரத்ன மற்றும் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் வலய மின்சக்தி பாதுகாப்பு திட்டம் மற்றும் மின்சக்தி செயற்திரனை மேம்படுத்தல் என்பன குறித்து ஆராயப்படும். இந்த மாநாட்டில் சார்க் நாட்டு மின்சக்தி அமைச்சர்கள் மின்சக்தித்துறை சார்ந்த நிபுணர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

வலய ஒத்துழைப்பினூடாக மின்சக்தி பரிமாற்று திட்டமொன்றை முன்னெடுப்பது மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான கூட்டு மின்திட்டம் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி சார்க் மின்சக்தி அமைச்சு செயலாளர்களில் மாநாடும் 29ஆம் திகதி மின்சக்தி அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும்.