ரி.எம்.வி.பியில் மிகுதியாக இருக்கும் சிறுவர்களை ஐ.நா. சிறுவர் நிதியத்திடம் ஒப்படைப்போம்! -பிரதீப் மாஸ்டர்

அடுத்துவரும் தினங்களில் ரி.எம்.வி.பி. அமைப்பில் மிகுதியாக இருக்கின்ற சிறுவர்களையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளிடத்தில் ஒப்படைக்கவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் தெரிவித்தார்.

22. 01. 2009 வியாழக்கிழமையன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலுள்ள சிறுவர்களை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதீப் மாஸ்டர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி எமது அமைப்பிலுள்ள சிறுவர்களை நாங்கள் விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வழிசெய்துள்ளோம் இச்சிறுவர்கள் கடந்தகாலயுத்தம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு எமது அமைப்பில் வந்து இணைந்து கொண்டவர்கள். இவர்களை எமது அமைப்பை விட்டு விடுவித்து இவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை மேற்கொள்வதற்கு எமது தலைமைப்பீடம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இச்சிறுவர்களுக்கு சிறந்த தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வதுடன் இவர்களுக்கான உரிய முன்னேற்ற வழிகாட்டல்களையும் இச்சிறுவர் நலன்புரி நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதன்மூலம் பெற்றோர்களுடன் இவர்கள் இணைந்து தமது மகிழ்ச்சியான வாழ்வை கழிக்க முடியும். இச்சிறுவர்களுக்கு அறிவினை புகட்டி கல்வியாளர்களாக மாற்றுவதும் அவசியமாகும் என்றார்.

இவ்வைபவத்தில் நீதியமைச்சின் செயலாளர் சுதத் கம்லத் உரையாற்றுகையில், இன்று விடுவிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் நாட்டின் நலத்திற்காக நற்பிரசைகளாக வாழவேண்டும். எனது பிள்ளைகளைப் போலவே இச் சிறுவர்களையும் நான் பார்க்கின்றேன். நாட்டின் நலனில் அக்கறை கொண்டு சிறந்த நற்பிரஜைகளாக வாழ்வதே இச் சிறுவர்களுக்கு முக்கியமானதாகும்.

இன்று இங்கு திறக்கப்பட்டுள்ள சிறுவர் நலன்புரி நிலையம் இவ்வாறான சிறுவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை மேற்கொள்ளும். இன்றைய இச்சிறுவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள். சிறந்த நற்பிரஜைகளாக இவர்களை மாற்றி எடுப்பதில் நாம் முழுமையான பங்களிப்பை செய்யவேண்டும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *