2009

2009

ப.நோ.கூ. சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.55 கோடி கடனை ரத்துச் செய்ய அரசு முடிவு

கூட்டுறவுத்துறை கடன்களையும், வட்டி நிலுவையையும் ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 55 கோடி ரூபாய் கடன்களை ரத்துச் செய்வதற்கு கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக வர்த்தக நுகர்வோர் விவகார, கூட்டுறவுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறையில் 12 கோடி ரூபாய் பெறுமதியான கடன்களை ரத்துச் செய்யும் நடவடிக்கை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டுறவுத் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, “கூட்டுறவுத்துறைக்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையாளர்களை ஜனாதிபதி தமது மாளிகைக்கு அழைத்துள்ளார்.

நாட்டில் நிலவளமும், நீர்வளமும் நிறைந்த ஒரு பகுதியைப் பிரித்துத் துண்டாடுவதற்காக புலிகள் இயக்கத்தின் முயற்சி உக்கிரமடைந்த வேளையில், அதனை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களின் வரிப்பணத்தில் 177 பில்லியன் ரூபாய் யுத்தத்திற்காக செலவிடப்பட்டது.

இது மூன்று மகாவலித் திட்டங்களை மேற்கொள்வதற்கான தொகையாகும். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றார். உலகில் எந்தவொரு தலைவரும் இவ்வாறு ஒரே நேரத்தில் பல சவால்களை எதிர்நோக்கியதில்லை.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கூட்டுறவுக் கடன்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 363 கோப் சிற்றிகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கூட்டுறவுக் கடைக்கும் ஜனாதிபதி நிதி வழங்கியிருக்கின்றார். இலங்கையில் பாரிய விநியோக வலையமைப்பைக்கொண்ட நிறுவனமாக கூட்டுறவுத்துறை விளங்குகின்றது.

கூட்டுறவுக் கடனை ரத்துச் செய்வதற்கு கடந்த புதன்கிழமை கூடிய அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு 26800 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதுபோல், மகநெகும, கமநெகும உள்ளிட்ட அபிவிருத்திக்கென இவ்வருத்தில் 36800 கோடி ரூபாய் செலவிடப்படு கிறது. என்றாலும், கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்கு வரலாற்றில் முதற்தடவையாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றார்.

இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் இடையே உக்கிர மோதல்கள்

srilanka_army.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் உட்பட விடுதலைப்புலிகள் வசம் தற்போது உள்ள 21.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வியாழன்று இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 29 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அது கூறியிருக்கின்றது.

கொல்லப்பட்டவர்களில் 13 விடுதலைப்புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இராணுவத்தினரிடம் வந்துசேர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.

சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கிய மருந்தகங்கள் பல கண்டுபிடிப்பு

சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இயங்கி வந்த மருந்து விற்பனை நிலையங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்காக்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.  நவீன சந்தைத் தொகுதிகள் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட மொத்தம் 15 நிலையங்களில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலிலேயே 14 விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கிவந்தமை தெரிய வந்துள்ளதாக தேசிய மருந்து ஒழுங்காக்கல் அதிகார சபையின் தலைவர் பி.வி.எஸ்.எச். பெனரகம தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ, கொகுவல ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட இத் தேடுதலில் சிரேஷ்ட மருந்து தயாரிப்பாளர் உணவுப் பரிசோதகர் மருந்துக்கலவை உத்தியோகத்தர் உள்ளடங்கலாக இரு குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டன.

இத்தேடுதலின் போது 15 விற்பனை நிலையங்களில் ஒரு மருந்தகம் மாத்திரம் ஒழுங்கு விதிகளுக்கமைவாக உரிய பதிவுகள் மற்றும் அனுமதிப்பத்திரம் என்பவற்றைக் கொண்டிருந்ததாக டாக்டர் பெனரகம தெரிவித்தார்.

உரிய தகைமைகளைக் கொண்டிராத ஊழியர்களை மருந்து விற்பனையில் ஈடுபடுத்தியமை மருந்துக்கம்பனிகளால் வைத்தியர்களுக்கு மருந்தின் மாதிரிகள் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை ,காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டமை , வைத்தியரின் மருந்து அறிக்கை இல்லாது மருந்துகளை விற்பனை செய்தமை போன்ற முறை கேடுகள் தேடுதலின் போது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 1980 ஆம் ஆண்டின் அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தின் கீழ் இந்த நிலையங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான தேடுதல் பணிகளை நாடுமுழுவதும் மேற் கொள்வதற்கு அதிகார சபை எதிர் பார்க்கின்றது. ஆனால். இப்பணியை முன்னெடுப்பதற்கான ஊழியர் பற்றாக்குறையினை அதிகாரசபை எதிர் நோக்குவதாக பெனரகம மேலும் குறிப்பிட்டார்.

எனினும் இவ்வாறான முறை கேடுகள் தொடர்பாக தினந்தோறும் நூற்றுக் கணக்கான முறைபாடுகள் பொதுமக்களிடமிருந்து எமக்குக் கிடைத்து வருவதால் தற்போதுள்ள ஊழிய வளத்தைக் கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தேடுதல்களை முன்னெடுப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 20 லொறிகளில் 260 மெ.தொ.உணவு பொருட்கள் கொழும்பு வருகை

a9-food.jpg
யாழ்ப்பாணத்திலிருந்து 260 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 20 லொறிகள் இன்று கொழும்பு புறப்படுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். வெங்காயம், பீற்றூட், கடுவாடு, இறால் உட்பட அத்தியாவசிய உற்பத்திப் பொருட்கள் இந்த லொறிகளில் ஏற்றப்படுவதாக அவர் கூறினார்.

ஏ-9 வீதியினூடாகவே இந்த லொறிகள் பயணம் செய்யும். வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ், 20 லொறிகளில் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்கள் வியாழனன்று கொண்டு செல்லப்பட்டன. அதே லொறிகளிலேயே கொழும்புக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. யாழ். குடா வர்த்தகர்களுக்கென கொண்டு செல்லப்பட்ட மேற்படி பொருட்களை விடவும் பெருமளவு பொருட்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

தனியாருக்கு அத்தியாவசிய பொருட்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளமையினால் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படுமென யாழ். வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் யாழ். நகரம் கோப்பாய், மிருசுவில், கொடிகாமம், கைதடி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5400 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கட்டட நிர்மாணங்களுக்கு கடல் மணலை உபயோகிக்கும் திட்டம் ரூ. 2850 மில். செலவில் சுத்திகரிப்பு நிலையம்

கட்டட நிர்மாணங்களுக்கென ஆற்று மணலுக்கு பதிலாக கடல் மணலை உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக ஹங்கேரி அரசு 2850 மில்லியன் ரூபா செலவில் புதிய மணல் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. கடல் மணலை சுத்திகரிப்பு செய்து கட்டட நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய பாரிய வேலைத்திட்டம் களுத்துறையில் அமையவுள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஆற்றுமணல் அகழ்வினால் சூழல் மாசடைகிறது என்ற காரணத்தினால் ஆற்றுமணல் அகழ்வு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணலின் விலை அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்தும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான மணலின் கேள்வியும் அதிகரித்துள்ளது.

இதனை போக்கும் வகையிலேயே ஹங்கேரி அரசின் உதவியுடன் கடல் மணல் சுத்திகரிப்புக்கான பாரிய தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

திருமலையில் பேக்கரிகளைத் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

foods.jpg
திருகோணமலை நகர பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள பேக்கரிகளை 27 முதல் மீண்டும் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் நகர சபை அனுமதி அளித்துள்ளது. நகர சபை மண்டபத்தில் பேக்கரி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தலைவர் எஸ்.கௌரி முகுந்தன் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சான சம்பவத்தையடுத்து, அவை சீல் வைக்கப்பட்டன. குறிப்பிட்ட இரண்டு பேக்கரிகளைத் தவிர ஏனையவற்றைத் திறப்பதற்கே நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதியளிக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர்களிடம் மறு அறிவித்தல் வரை மரக்கறி பனிஸ், முட்டை பனிஸ்,சீனி சம்பல் பனிஸ் போன்ற தயாரிப்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சானதன் காரணமாக மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் 62 வயது மீனவரின் உடலின் சில பகுதிகளை கொழும்பிலுள்ள பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்க இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் காமினி குமாரதுங்க தெரிவித்தார்.

கலாமுக்கு ஹோவர் மெடல்: அமெரிக்கா வழங்குகிறது

அமெரிக்காவில் உள்ள 5 என்ஜினீயர்கள் அமைப்புகள் சேர்ந்து ஒரு கமிட்டியை அமைத்து உள்ளன. அந்த அமைப்பின் சார்பில் உலக அளவில் சிறந்த மனிதாபிமான சேவை, தன்னலமற்ற பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் என்ஜினீயர்களுக்கு, ஆண்டு தோறும் ‘ஹோவர் மெடல்” வழங்கி வருகிறது.

இதில் 2008-ம் ஆண்டுக்கான ஹோவர் மெடலுக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக, நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவரே. விருது வழங்கும் விழா, ஏப்ரல் 28-ந் தேதி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு தாக்குதல்; 56 பேர் பலி 80 பேர் காயம்

moq-pak.jpgபாகிஸ்தானின் வடமேற்கே கூட்டம் நிறைந்த பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை ஆரம்பமான நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப்பட்டும் 80 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்

இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது மேற்படி பள்ளிவாசலில் 250 பேர் வரை வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  தாக்குதலின் உக்கிரத்தில் பள்ளிவாசல் கட்டிடம் சேதமடைந்தது. ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே இருக்கும் ஜம்ருத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐ. ம. சு. மு வேட்பாளர் இராஜரட்னத்தின் அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் கலாநிதி ரி. சீ. ராஜரட்னத்தின் அலுவலகம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக வேட்பாளர் ராஜரட்னம் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி சாகர வீதியிலமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

தனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் கொடுத்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர் தொடர்ந்தும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 25 இரவு சுமார் 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையே சிலர் வந்து அலுவலகம் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இச் சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ரி சி. ராஜரட்னம் தெரிவித்தார். தொடர்ச்சியாக தனக்குள்ள அச்சுறுத்தல் காரணமாக தனது மகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் டாக்டர் ரி. சி. ராஜரட்னம் மேலும் தெரிவித்தார்.பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் கொழும்பில் போட்டியிடும் குறிப்பாக அரசின் சார்பில் போட்டியிடும் தமிழ் உறுப்பினர் தான் என்பதால் அதனை பொறுக்காத சிலரே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

காதல் தகராறு பெண் பொலிஸை சுட்ட கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை

pisto.jpgகொழும்பு,  நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

பொலிஸ் ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலுள்ள பெண்கள் வார்ட்டினுள் ரி56 ரக துப்பாக்கியுடன் நுழைந்த கான்ஸ்டபிள் ஒருவர், முதலில் அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஆயுதத்துடன் வந்த இவர் தன்னை இலக்கு வைப்பதை அவதானித்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கிடையில் மூன்றாவது மாடி ஜன்னல் ஊடாக 2 ஆவது மாடிக்கு குதித்துள்ளார்.

இதேநேரம், அந்த கான்ஸ்டபிள் அங்கு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதனால், அந்த பெண் கான்ஸ்டபிள் கையில் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, அவ்விடத்திற்கு விஷேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அதிரடிப்படையினர் 3 ஆவது மாடியிலிருந்த வார்ட்டினுள் நுழைந்து அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரை அவ்விடத்திலேயே கொன்றுள்ளனர்.

ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே, வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிளுடனான காதல் தகராறால் இவ்வாறு நடந்துகொண்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் கான்ஸ்டபிள் உடனடியாக அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.