![]()
திருகோணமலை நகர பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள பேக்கரிகளை 27 முதல் மீண்டும் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் நகர சபை அனுமதி அளித்துள்ளது. நகர சபை மண்டபத்தில் பேக்கரி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தலைவர் எஸ்.கௌரி முகுந்தன் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சான சம்பவத்தையடுத்து, அவை சீல் வைக்கப்பட்டன. குறிப்பிட்ட இரண்டு பேக்கரிகளைத் தவிர ஏனையவற்றைத் திறப்பதற்கே நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதியளிக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர்களிடம் மறு அறிவித்தல் வரை மரக்கறி பனிஸ், முட்டை பனிஸ்,சீனி சம்பல் பனிஸ் போன்ற தயாரிப்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சானதன் காரணமாக மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் 62 வயது மீனவரின் உடலின் சில பகுதிகளை கொழும்பிலுள்ள பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்க இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் காமினி குமாரதுங்க தெரிவித்தார்.