கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
பொலிஸ் ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலுள்ள பெண்கள் வார்ட்டினுள் ரி56 ரக துப்பாக்கியுடன் நுழைந்த கான்ஸ்டபிள் ஒருவர், முதலில் அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஆயுதத்துடன் வந்த இவர் தன்னை இலக்கு வைப்பதை அவதானித்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கிடையில் மூன்றாவது மாடி ஜன்னல் ஊடாக 2 ஆவது மாடிக்கு குதித்துள்ளார்.
இதேநேரம், அந்த கான்ஸ்டபிள் அங்கு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதனால், அந்த பெண் கான்ஸ்டபிள் கையில் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, அவ்விடத்திற்கு விஷேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அதிரடிப்படையினர் 3 ஆவது மாடியிலிருந்த வார்ட்டினுள் நுழைந்து அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரை அவ்விடத்திலேயே கொன்றுள்ளனர்.
ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே, வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிளுடனான காதல் தகராறால் இவ்வாறு நடந்துகொண்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் கான்ஸ்டபிள் உடனடியாக அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.