ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் கலாநிதி ரி. சீ. ராஜரட்னத்தின் அலுவலகம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக வேட்பாளர் ராஜரட்னம் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி சாகர வீதியிலமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
தனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் கொடுத்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர் தொடர்ந்தும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 25 இரவு சுமார் 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையே சிலர் வந்து அலுவலகம் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இச் சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.
ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ரி சி. ராஜரட்னம் தெரிவித்தார். தொடர்ச்சியாக தனக்குள்ள அச்சுறுத்தல் காரணமாக தனது மகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் டாக்டர் ரி. சி. ராஜரட்னம் மேலும் தெரிவித்தார்.பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் கொழும்பில் போட்டியிடும் குறிப்பாக அரசின் சார்பில் போட்டியிடும் தமிழ் உறுப்பினர் தான் என்பதால் அதனை பொறுக்காத சிலரே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.