சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இயங்கி வந்த மருந்து விற்பனை நிலையங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்காக்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது. நவீன சந்தைத் தொகுதிகள் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட மொத்தம் 15 நிலையங்களில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலிலேயே 14 விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கிவந்தமை தெரிய வந்துள்ளதாக தேசிய மருந்து ஒழுங்காக்கல் அதிகார சபையின் தலைவர் பி.வி.எஸ்.எச். பெனரகம தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ, கொகுவல ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட இத் தேடுதலில் சிரேஷ்ட மருந்து தயாரிப்பாளர் உணவுப் பரிசோதகர் மருந்துக்கலவை உத்தியோகத்தர் உள்ளடங்கலாக இரு குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டன.
இத்தேடுதலின் போது 15 விற்பனை நிலையங்களில் ஒரு மருந்தகம் மாத்திரம் ஒழுங்கு விதிகளுக்கமைவாக உரிய பதிவுகள் மற்றும் அனுமதிப்பத்திரம் என்பவற்றைக் கொண்டிருந்ததாக டாக்டர் பெனரகம தெரிவித்தார்.
உரிய தகைமைகளைக் கொண்டிராத ஊழியர்களை மருந்து விற்பனையில் ஈடுபடுத்தியமை மருந்துக்கம்பனிகளால் வைத்தியர்களுக்கு மருந்தின் மாதிரிகள் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை ,காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டமை , வைத்தியரின் மருந்து அறிக்கை இல்லாது மருந்துகளை விற்பனை செய்தமை போன்ற முறை கேடுகள் தேடுதலின் போது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 1980 ஆம் ஆண்டின் அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தின் கீழ் இந்த நிலையங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான தேடுதல் பணிகளை நாடுமுழுவதும் மேற் கொள்வதற்கு அதிகார சபை எதிர் பார்க்கின்றது. ஆனால். இப்பணியை முன்னெடுப்பதற்கான ஊழியர் பற்றாக்குறையினை அதிகாரசபை எதிர் நோக்குவதாக பெனரகம மேலும் குறிப்பிட்டார்.
எனினும் இவ்வாறான முறை கேடுகள் தொடர்பாக தினந்தோறும் நூற்றுக் கணக்கான முறைபாடுகள் பொதுமக்களிடமிருந்து எமக்குக் கிடைத்து வருவதால் தற்போதுள்ள ஊழிய வளத்தைக் கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தேடுதல்களை முன்னெடுப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.