![]()
யாழ்ப்பாணத்திலிருந்து 260 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 20 லொறிகள் இன்று கொழும்பு புறப்படுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். வெங்காயம், பீற்றூட், கடுவாடு, இறால் உட்பட அத்தியாவசிய உற்பத்திப் பொருட்கள் இந்த லொறிகளில் ஏற்றப்படுவதாக அவர் கூறினார்.
ஏ-9 வீதியினூடாகவே இந்த லொறிகள் பயணம் செய்யும். வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ், 20 லொறிகளில் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்கள் வியாழனன்று கொண்டு செல்லப்பட்டன. அதே லொறிகளிலேயே கொழும்புக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. யாழ். குடா வர்த்தகர்களுக்கென கொண்டு செல்லப்பட்ட மேற்படி பொருட்களை விடவும் பெருமளவு பொருட்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
தனியாருக்கு அத்தியாவசிய பொருட்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளமையினால் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படுமென யாழ். வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் யாழ். நகரம் கோப்பாய், மிருசுவில், கொடிகாமம், கைதடி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5400 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.