2009

2009

லிபிய வர்த்தக பிரதிநிதிகளுடன் இலங்கை உயர்மட்டக் குழு சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றுக்காலை லிபிய வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். லிபிய பிரதமர் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் லிபிய பிரதமருடன் லிபிய முதலீட்டாளர்கள், பொருளாதார ஆலோசகர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் போன்றோரும் இலங்கை வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளும், வர்த்தகர்களும் பங்குபற்றினர். இரண்டு நாடுகளுக்கிடையிலும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல், வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்தல், இரண்டு வர்த்தக சம்மேளனங்களுக்குமிடையிலும் நேரடி அன்னியோன்ய ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்து இருதரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இச்சந்தர்ப்பத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்நாட்டில் சுற்றுலா, தொலைத் தொடர்பு மற்றும் கைத்தொழில் துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் தொடர்பாக எடுத்துக் கூறினர். விசேட முதலீட்டுத் திட்டங்களின்போது அரசாங்க மட்டத்தில் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பாக ஜனாதிபதியும், லிபியப் பிரதமரும் இச்சந்திப்பில் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

இரு நாடுகளுக்கிடையிலும் அன்னியோன்ய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கூட்டு ஆணைக்குழு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பயனாக இரு நாடுகளுக்குமிடையிலும் விவசாய, மாணிக்கக்கல் தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளில் நன்மைகள் கிடைக்கப்ப பெறும்.

பாதுகாப்பு வலயத்தினுள்ளிருந்து புலிகள் தொடர்ந்தும் மோட்டார் தாக்குதல்

udaya_nanayakkara_brigediars.jpgபாது காப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புப் படையினரை இலக்குவைத்து புலிகள் தொடர்ச்சியாக மோட்டார் தாக்குதல்களை மேற் கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து படையினரை இலக்குவைத்து மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அங்குள்ள பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சுமார் 40 ஆயிரம் பொது மக்களையே புலிகள் கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனரென படையினர் சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் படையினர் முற்றாக கைப்பற்றியதையடுத்து முல்லைத்தீவின் கரையோரப் பகுதியில் மிகவும் ஒடுக்கமான பிரதேசமான பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் புலிகள் முற்றாக ஊடுருவி அங்குள்ள பொதுமக்கள் மத்தியிலிருந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டுத் தம்மிடம் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு நேற்று முன்தினம் இறுதி அறிவிப்பு விடுத்தனர். இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதிலிருந்து சில மணி நேரத்திலேயே புலிகள் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் இந்த இறுதி அறிவிப்பை அடுத்து அங்குள்ள பொது மக்கள் தப்பி வருவதை தவிர்க்கும் வகையிலேயே புலிகள் இந்த எச்சரிக்கை வேட்டுக்களை விடுத்துவருவதாக படையினர் சந்தேகிப்பதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களின் எண்ணிக்கைகளை அவதானித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை படையினர் முன்னெடுக்கக் கூடும் என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தவறுதலாக ரகசியம் கசியவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி இராஜினாமா

robert_quick.jpgபிரிட்ட னின் மிக மூத்த பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறை அதிகாரியான பாப் குவிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஆவணம் ஒன்றை வெளியிலே தெரிவது மாதிரி அவர் தவறுதலாக கையிலெடுத்து சென்றமை புகைப்படம் எடுக்கப்பட்டதையடுத்து அவர் பதவி விலகினார்.

புதன்கிழமை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அவர் செய்த இந்த பிழையின் விளைவாக, வடமேற்கு இங்கிலாந்தில் பயங்கரவாத சந்தேக நபர்களை பொலிஸார் கண்காணித்துவந்த நடவடிக்கையை அவர்கள் கைவிடவும், திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பாக அவர்கள் அதிரடி சோதனைகளை மேற்கொள்ளவும் நேர்ந்தது.

இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 11 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் இருந்த ஒரு பெரிய பயங்கரவாதச் சதித் திட்டத்தினை தாங்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும் இந்தச் சதியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அல்கைதாவினருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

ராஜஸ்தானில் நிலநடுக்கம்; 5.3 ரிக்ஸ்டர் அளவு

ராஜஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.  காலை 7.17 மணயிளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்ஸ்டர் அளவுகோலில் 5.3 என பதிவானதாக அந்த ஆய்வுமையம் தெரிவித்தது.

டில்லிக்கு தென்மேற்கே 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான ஜெய்சால்மிர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லையில் ஒரு பூகம்பம் தாக்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற இந்த பூகம்பத்ததால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், இருவர் பலியாகியும் உள்ளனர்.

பாதுகாப்பு வலயம் படையினரால் நான்கு முனைகளில் சுற்றிவளைப்பு

army-wanni.jpgஅரசாங் கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் அப்பகுதியை நோக்கி தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர் என்று படைத்தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் பாரியளவான இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.

மோதல்கள் தொடர்பில் ஊடக நிலையம் மேலும் கூறியதாவது

அண்மையில் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் படையினருக்கு எதிராக பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மறைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மோட்டர் எறிகணை மற்றும் சிறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர் விடுதலைப் புலி உறுப்பினர்களின் நான்கு சடலங்கள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கடற்புலிகளின் தற்கொலைப் படகொன்று யுத்த தாங்கி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை பாதுகாப்பு வலயப்பகுதியை நான்கு முனைகளினூடாக சுற்றிவளைத்துள்ள படையினர் பாதுகாப்பு வலயப் பகுதியை அண்மிக்க முடியாதவாறு புலிகளால் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்மேடுகள் சிலவற்றை இனங்கண்டுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான பதுங்கு குழிகள் சிலவும் அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் புலிகளின் இந்த மண்மேடுகளை உடைத்தெறிந்தவாறு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி அங்குள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவில் மேலும் பலர் பலி

இலங்கையின் வடக்கே மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜ தெரிவித்துள்ளார்.

மோதல்களில் பலியான பலரது சடலங்கள் தமது புதுமாத்தளன் மருத்துவமனைக்கு வந்ததாக் கூறுகிற அவர், இருந்தபோதிலும் பலியான பலரது சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாத்திரம் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து தமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்கள் தங்கியுள்ள இடத்துக்கு ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலேயே சண்டைகள் நடப்பதாகவும், ஆயினும் தமது பகுதியை நோக்கி ஏவப்படுகின்ற எறிகணைகளாலேயே பல மக்கள் இறப்பதாகவும் அவர் கூறினார்.

ஆயுர்வேத மருந்துகளை சந்தைப்படுத்த அரசு முடிவு

tissa_karaliyaddda.jpgகோப் சிற்றிகள் ஊடாக ஆயுர்வேத மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை ஆயுர்வேத மருத்துக் கூட்டுத்தாபனத்தின் நாற்பதாவது வருட நிறைவின் நிமித்தமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

இந்த கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 11ம் திகதியுடன் நாற்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இதன் நிமித்தம் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அம்சமாகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது விடயமாக வர்த்தக, வாணிப, கூட்டுறவு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் இதன்படி கோப் சிற்றிகள், கூட்டுறவு கடைகள், சனச அமைப்புகள் என்பவற்றின் ஊடாகவும் இம் மருந்துப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை நீண்ட நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கற்றாளை சம்போவையும் இந்த நாற்பதாவது நிறைவு தினத்தின் நிமித்தம் சந்தைப்படுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போரை நிறுத்தக் கோரி முன்னாள் த.தே.கூ. எம்.பி. ஈழவேந்தன் தென்னாபிரிக்காவில் உண்ணாவிரத போராட்டம்

eelaventhan_.jpgஇலங் கையில் போரை நிறுத்த அனைத்துலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தென்னாபிரிக்காவின் டேர்பனில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் பின்வரும் ஆறு கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்து அவர் தனது உண்ணாநிலை போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

1. உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவாறான நிரந்தரமான போர் நிறுத்தம் மேற்கொள்ளக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2. அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும்.

3. இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பு முகாம்களுகக்கு சுதரந்திரமான அனைத்து மனிதாபிமான நிறுவனங்களும் எந்தவித தடைகளும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

4. தமிழர்களின் சுயநிர்ணய அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடனடியான பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும்.

5. தென்னாபிரிக்க தமிழ்ச் சமூகத்தினர் இவரின் உண்ணாநிலைப் போராட்ட முயற்சியில் தங்களையும் இணைத்துகொள்வதற்கு முன்வந்துள்ளனர்.

6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் இவ்வாறான நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளில் ஈடுபடுமாறு உலகத் தமிழ்ச் சொந்தங்களிடம் கோரிக்கை.

76 அகவையுடைய மா.க.ஈழவேந்தன் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் ஈடுபட்டு வந்தவர்.

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் மேலும் ஒரு கப்பல் கடத்தல்

somaliya-robbery.jpgஉணவு உதவிப் பொருட்களடங்கிய கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 20 மாலுமிகளுடன் சேர்த்து சோமலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வாரத்தில் இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பிந்தியது இதுவாகும்.

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களின் படகுகளால் இந்த டச்சுக் கப்பலின் மீது இரவு நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் நிலைமை குறித்து தாம் அவதானித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, அந்த மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்து தாம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் இத்தகைய தாக்குதல்கள் வர வர மிகவும் துணிச்சலானவையாகவும், நுட்பமானவையாகவும் மாறி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

கொழும்பு மாநகரசபை அதிகாரி சுமணபால பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் கடமைகளை நிறைவேற்றவும் நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தரான சுமணபால அப்பதவியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே சுமணபால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு பத்வானி ஜெயவர்த்தன என்பவர் ஆளுநர் அலவி மௌலானாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை மற்றும் மேல்மாகாண சபையின் 1991 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க உள்ளூராட்சி நிர்வாக கண்காணிப்பு சட்ட பிரகாரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.