கோப் சிற்றிகள் ஊடாக ஆயுர்வேத மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருத்துக் கூட்டுத்தாபனத்தின் நாற்பதாவது வருட நிறைவின் நிமித்தமே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
இந்த கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 11ம் திகதியுடன் நாற்பது வருடங்கள் நிறைவடைகின்றன. இதன் நிமித்தம் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அம்சமாகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது விடயமாக வர்த்தக, வாணிப, கூட்டுறவு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் இதன்படி கோப் சிற்றிகள், கூட்டுறவு கடைகள், சனச அமைப்புகள் என்பவற்றின் ஊடாகவும் இம் மருந்துப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை நீண்ட நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கற்றாளை சம்போவையும் இந்த நாற்பதாவது நிறைவு தினத்தின் நிமித்தம் சந்தைப்படுத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.