பாது காப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புப் படையினரை இலக்குவைத்து புலிகள் தொடர்ச்சியாக மோட்டார் தாக்குதல்களை மேற் கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பாதுகாப்பு வலயத்திற்குள் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து படையினரை இலக்குவைத்து மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அங்குள்ள பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சுமார் 40 ஆயிரம் பொது மக்களையே புலிகள் கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனரென படையினர் சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் படையினர் முற்றாக கைப்பற்றியதையடுத்து முல்லைத்தீவின் கரையோரப் பகுதியில் மிகவும் ஒடுக்கமான பிரதேசமான பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்குள் புலிகள் முற்றாக ஊடுருவி அங்குள்ள பொதுமக்கள் மத்தியிலிருந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உடனடியாக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டுத் தம்மிடம் சரணடையுமாறும், சிவிலியன்களை விடுவிக்குமாறும் இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு நேற்று முன்தினம் இறுதி அறிவிப்பு விடுத்தனர். இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதிலிருந்து சில மணி நேரத்திலேயே புலிகள் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இராணுவத்தின் இந்த இறுதி அறிவிப்பை அடுத்து அங்குள்ள பொது மக்கள் தப்பி வருவதை தவிர்க்கும் வகையிலேயே புலிகள் இந்த எச்சரிக்கை வேட்டுக்களை விடுத்துவருவதாக படையினர் சந்தேகிப்பதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களின் எண்ணிக்கைகளை அவதானித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை படையினர் முன்னெடுக்கக் கூடும் என்றும் பிரிகேடியர் மேலும் சுட்டிக்காட்டினார்.