2009

2009

மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சியில் சிறிய முன்னேற்றம்

vijaynambiar.jpgஐ.நா.  செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் விஜே நம்பியார் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது.

“அரச அதிகாரிகளுடன் அவர் (நம்பியார்) மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக மோதல் பகுதியில் தற்போது சிக்கியுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம்’ என்று பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

“ஆனால் அந்த முயற்சிகள் மேலும் தொடரவேண்டிய தேவை இருப்பதாகவும் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

இரு வேறுபட்ட மட்டங்களில் ஐ.நா. வின் முயற்சி சம்பந்தப்பட்டது. கனரக ஆயுதங்களையும் மற்றும் ஆட்லறிகளையும் பிரயோகிக்க வேண்டாம் என்று இலங்கை அரசை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திக் கேட்டுவருகிறோம். அப்பாவிப் பொதுமக்கள் வெளியேறுவதற்கான முயற்சிகளில் ஓரங்கமாக இதனை நாம் மேற்கொண்டுள்ளோம்’ என்று ஹக் கூறியுள்ளார்.

“முயற்சியின் மற்றொரு பகுதியாக, பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் இடமளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்புடனும் இது தொடர்பாக பகிரங்கமான அறிக்கைகள் மூலம் நாம் முயற்சிகளை மேற்கொண்டுளோம் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் நம்பியார் தொடர்பு கொண்டுள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, “இந்தத் தருணத்தில் என்னால் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை’ என்று ஹக் கூறியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.

மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பாக ஐ.நா.ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோரின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் மோதல் வலயப் பகுதிக்குள் இருப்போரின் நிலைமையைப் போன்றே கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் ஹக் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

election.jpgகடந்த மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அவ்வமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்;

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த போதும் எம்மால் 47 சம்பவங்களையே உறுதிசெய்ய முடிந்துள்ளது. இதில் 37 சம்பவங்கள் பெரியளவானதாகும்.

அதாவது கம்பஹாவில் ஜே.வி.பி. உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆதரவாளர் பலியாகி மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன் மேலும் 16 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் பதிவுசெய்துள்ளோம்.

நாம் சிறிய சம்பவங்களாக 10 முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். இது சட்டவிரோத முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன அடங்குகின்றன.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மொத்தமாக நாம் 47 முறைப்பாடுகளைப்பெற்ற நிலையில் மேல்மாகாண சபையில் தேர்தல் நடைபெற 6 தினங்கள் இருக்கையில் 47 முறைப்பாடுகளைப்பெற்றுள்ளோம். எனவே கடந்த மாகாண சபை தேர்தலுடன் இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் சமனாக உள்ளபோதும் தேர்தல் நெருங்கும் போது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கொணாமுல்லையில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவரது சடலம்

அக்மீமன நுகேகந்த கொணாமுல்லைப் பகுதியில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களில் ஒரு சிறுமியினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி 10 வயதுடைய சிறுமியினது சடலம் காணாமல் போன இரு சிறுவர்களின் வீடுகளுக்கிடையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரு சிறுவர்களும் கடந்த 15 ஆம் திகதி சைக்கிளுடன் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்திய வேளையிலேயே சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை மற்றும் விசாரணைகளில் பொலிஸார் மோப்ப நாய்களையும் மகளிர் பொலிஸ் பிரிவுகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். இதன் போது சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரணை நடத்த ஆரம்பித்த பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை நடத்திய சோதனையிலேயே முதலாவது சிறுமியினது சைக்கிளைக் கண்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் குப்பைகளை தோண்டிய போது காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது கொலையாக இருக்கலாமென சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பிரதாபசிங்க சந்தேகம் வெளியிட்டார். இதேவேளை, பொலிஸார் விசாரணைகளையும் சோதனைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட லண்டன் ரைம்ஸ் பத்திரிகையாளர்

london-times.jpgகொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. “இந்த வழியால் வாருங்கள்’ என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கணினியில் என்னைப்பற்றிய விபரத்தை அவரின் சகா ரைப் செய்தார்.

அவரின் திரையில் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வந்தது. எனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தடுப்பு அறைக்கு காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டேன்.

இரவு முழுதும் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் திருப்பி அனுப்பப்பட்டேன்.

நான் வியப்படைந்தேன் என்று என்னால் கூற முடியாது. சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் தெற்காசியாவில் 12 வருட செய்தி நிருபராக பணியில் ஈடுபட்ட நான் முதலாவதாக திருப்பி அனுப்பப்பட்ட போதும் நான் ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறமுடியாது என்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் தெற்காசியாவுக்கான நிருபர் ஜெரமி பேஜ் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக “தமிழ்புலி மோதல் தொடர்பாக செய்தி சேகரிப்பதிலிருந்தும் எவ்வாறு நான் தடுக்கப்பட்டேன்’ என்ற தலைப்பில் “லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பல்வேறுபட்ட விண்ணப்பங்களின் மத்தியிலும் ஆகஸ்டின் பின்னர் இலங்கைக்கான பத்திரிகையாளர் விசா எனக்கு மறுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்களாக சுயாதீனமான பத்திரிகையாளர்கள் தமிழ்புலிகளுக்கு எதிரான இராணுவநடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பதை இலங்கை அரசாங்கம் தடுத்திருந்தது.

அதனால் உல்லாச பயணியாக செல்ல முயற்சித்தேன். மோதல் சூன்யப் பகுதியில் ஐ.நா. புள்ளி விபரத்தின் பிரகாரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அகப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக எழுத முயற்சித்தேன்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உல்லாசப் பயணிகளாக செல்லும் ஏனைய நாடுகள் சிம்பாப்வே, துர்க்மெனிஸ்தான், வடகொரியா என்று நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பத்திரிகைகள் புலிகளுக்கு ஆதரவானவை எனவும் ஏனென்றால் அங்கு அதிகளவில் தமிழ் சமூகம் இருப்பதாகவும் அரசாங்கம் நினைப்பதால் நான் சந்தேகப்படுவோர் பட்டியலில் இருந்தேன்.

அது அபத்தம்.

இந்த 26 வருட உள்நாட்டுப் போரில் எந்தத் தரப்புடனும் நான் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. புலிகள் அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுவென தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று “த ரைம்ஸ்’ திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு வந்துள்ளது. அத்துடன் அரசின் தந்திரோபாயம் மற்றும் தமிழர், சிங்களவர்களின் உபாயங்கள் தொடர்பாகவும் விமர்சன ரீதியான செய்திகளை “த ரைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.

இது ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் செய்யும் விடயமாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் உறுப்பினர்களை நான் கிரமமாக பேட்டி கண்டுள்ளேன். ரஷ்யாவில் செச்னிய மோதல் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் செய்திகளை வெளியிட்டுள்ளேன். சீனாவில் மாற்றுக் கருத்துடையவர்களையும் திபெத் சுதந்திரத்திற்கான பணியாளர்களையும் நான் பேட்டி கண்டுள்ளேன். இதே விடயத்தை இலங்கையில் செய்வது தடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி மிகவும் அபாயகரமானதாகவும் உள்ளது.

கடந்த தடவை நான் இலங்கைக்கு சென்றது லசந்த விக்கிரமதுங்க பற்றி எழுதுவதற்கு. பத்திரிகை ஆசிரியரான அவர் கடந்த ஜனவரியில் கொலை செய்யப்பட்டார்.

மற்றொரு செய்தியானது மோதல் பகுதிகளிருந்து வெளியேறும் மக்களை அரசாங்கம் முகாம்களில் வைத்திருக்க திட்டமிடுகின்றது என்பது பற்றியே செய்தியாகும். முட்கம்பி வேலியடைத்த முகாம்களுக்குள் மூன்று வருடங்களுக்கு அவர்களை வைத்திருக்க போகும் திட்டம் பற்றியதாகும். செய்தியாளர் மாநாட்டில் என்னை அரசு கண்டித்திருந்தது. அதேசமயம் அரசாங்க சமாதான செயலகத் தலைவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. முகாம்களில் முட்கம்பி வேலியை பயன்படுத்துவதை நான் உணர்ச்சி வசப்பட்ட விடயமாக்கியிருந்ததாக அவர்குற்றம்சாட்டியிருந்தார்.

“துரதிர்ஷ்டவசமாக குளிரான காலநிலைப் பகுதியிலிருந்து வந்த ஒரு மனிதரால் உபகண்டத்தில் முட்கம்பியானது சாதாரணமான பொதுவான பொருள் என்பதையும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் காற்றோட்டத்திற்கும் பார்க்கவும் இது இடமளிக்கின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை’ என்று அவர் எழுதியுள்ளார்.

வவுனியா இடம்பெயர் மக்கள் நலன்புரி முகாம்களில், திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், கொலைகள் இடம்பெறுகின்றன: ஜேர்மனிய எழுத்தாளர்

thomas.jpgவவுனியாவில் வன்னியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மருத்துவ வசதியற்ற முகாம்களாக இருப்பதுடன்,  திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், என்பனவும் இடம்பெறுவதாக பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான சுற்றுலாவை மேற்கொண்டு விட்டு அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார். அத்துடன் அவர் வன்னியில் இருந்து வந்த மக்களிடம் தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் இருந்து தப்பி வந்துள்ளனர். அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதும் சாதாரண நிகழ்வுகள் என தோமஸ் சேய்பேட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினர் இந்த முகாம் பகுதிகளை பல ஆண்டுகளுக்கு நடத்தும் வகையில் விஸ்தரிக்க திட்டம் கொண்டுள்ளனர். அத்துடன், 15 சதுர கிலோமீற்றர் பகுதியில், வன்னியில் வசித்து வரும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், நாள்தோறும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி இதனை தடுக்காவிட்டால், வன்னியில் பாரிய படுகொலைகள் இடம்பெறும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தோமஸ் எச்சரித்துள்ளார்.

இலங்கைப்போரை நிறுத்த ஐ.நா. நிர்ப்பந்திக்கவேண்டும்- இலங்கை எம்.பிக்கள்

tna_.jpgமத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ள ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்து பேசினார்கள். நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது, இலங்கையில் பாதுகாப்பு பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள தமிழர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து விளக்கி அவர்கள் விளக்கி கூறினார்கள். பின்னர் ஆர்.சம்பந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : 

இலங்கையில் தற்போது நடந்து வரும் மோதல்கள் குறித்த உண்மையான விவரங்களை இந்திய அரசிடம் விளக்கி கூறி உள்ளோம். எங்களுடைய கருத்துக்களை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு உள்ளது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை இந்தியா புரிந்து கொண்டு உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை யொட்டியுள்ள 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிக்கி இருக்கும் தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை இந்தியாவும் சர்வதேச சமுதாயமும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். பாதுகாப்பு வளைய பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள 2  1 /2 லட்சம் தமிழர்கள் அபாயகரமான நிலையில் உள்ளனர். அவர்கள் கொல்லப்படும் ஆபத்து இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது. பாதுகாப்பு வளைய பகுதியில் உள்ள எல்லா தமிழர்களும் அங்கிருந்து வெளிவர விரும்பவில்லை. சிலர் வெளியே வர விரும்பினாலும் பலர் தங்களுக்கு ஆபத்து என்று கருதி வெளியே வர விரும்பவில்லை.

வன்னி பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்த இலங்கை ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். ராணுவம் ரசாயன குண்டுகளையும், நரம்புகளை செயல் இழக்க செய்யும் விஷவாயு குண்டுகளையும் வீசுகிறது. சர்வதேச அளவிலான மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. எனவே அழிவில் இருந்து தமிழர்களை காப்பாற்ற இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசின் அழுத்தமான நடவடிக்கைகளை பின்பற்ற இலங்கை அரசு தவறினால் ஐ.நா. சபை மூலம் நிர்பந்திக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறல் குறித்து ஐ.நா. மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. இலங்கை தமிழர்களின் நலன் கருதி தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்தியா அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கப்பலில் பிறந்த குழந்தை

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் நேற்று 484 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அழைத்து வரப்படுகையில் கப்பலில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் தாய் ஒருவர் குழந்தை ஒன்றையும் பிரசவித்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

புதுமாத்தளன் பகுதியில் இருந்து 22 வது தடவையாக கீறீன் ஓஷியன் கப்பல் நேற்று பிற்பகல் 4 மணியளவில் புல்மோட்டைக்கு வந்தடைந்துள்ளது. அழைத்து வரப்பட்டவர்களுள் சுமார் 150 பேர் காயமடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி நாளை கொழும்பு வருகிறார்.

இந்தியா வின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிலையத்தின் நிறுவுநருமான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை கொழும்பு வருகிறார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் பௌத்த மதத்தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்துவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும் அவர் வவுனியா சென்று நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர் களையும் சந்தித்து அவர்களின் கஷ்டங் களையும் கேட்டறிவார்.
 

திஸ்ஸ அபேயசேகர காலமானார்

thissa-abeysekara.jpgசிங்கள திரைப்படத் துறையின் பிரபல இயக்குநர் திஸ்ஸ அபேயசேகர (வயது 70) நேற்றுக் காலமானார். திடீர் சுகவீனமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் திரைப்படத் துறையில் வசனகர்த்தாவாக கால்பதித்த அவர், பின்னர் இயக்குநரானார். கறுமக்காரையோ, மஹாகெதர, வீரகாய போன்ற சிறந்த சிங்கள வெற்றிப் படங்களை இயக்கிய இவர் அரசாங்கத்தினால் தேசபந்து பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.

தேசபந்து அபேயசேகர 1996ல் ஆங்கிலத்தில் சிறந்த படைப்புக்காக புகழ்பெற்ற கிரேஷியன் விருதைப் பெற்றார். இதன் மூலம் உள்ளூர் ஆங்கில இலக்கிய வட்டாரங்களில் பிரபல்யம் பெற்றார்.

இலங்கை தமிழர் பிரச்சினை: அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. – ஐகோர்ட்டில் வழக்கு

india-election.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்நகரை சேர்ந்தவர் வி.கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மதுரை ஐகோர்ட்டில் அவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தலின் போது முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நிலையான அரசு வேண்டும் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்த பின்பு தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியுடன் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மக்கள் நலனில் அரசியல் கட்சியினருக்கு அக்கறை இல்லை.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எந்த கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பது இல்லை. தற்போது அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர் பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தமட்டும் அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறிந்த அரசியல்வாதிகள் அந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்றனர். இதற்காக பலமுறை வக்கீல்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில தேர்தல் கமிஷனுக்கு 11.4.2008 அன்று மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கோபால்சாமி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது நீதிபதிகள், “மனுதாரர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி 6 நாட்கள் தானே ஆகிறது. அந்த மனு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்னும் கிடைத்து இருக்காதே. அதற்குள் எப்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றனர். அதன்பின்பு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈழத்துக்கு குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள்: வைகோ

india-elc-2009.jpgஈழத் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோ சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. ஈழத்தமிழர்களை அழிக்க ராஜபக்சே முடிவு எடுத்து உள்ளார். இப்போது போரை நிறுத்துங்கள் என்றால் அவர் எப்படி நிறுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. எனவே ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றார்.