கடந்த மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்;
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த போதும் எம்மால் 47 சம்பவங்களையே உறுதிசெய்ய முடிந்துள்ளது. இதில் 37 சம்பவங்கள் பெரியளவானதாகும்.
அதாவது கம்பஹாவில் ஜே.வி.பி. உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆதரவாளர் பலியாகி மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன் மேலும் 16 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் பதிவுசெய்துள்ளோம்.
நாம் சிறிய சம்பவங்களாக 10 முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். இது சட்டவிரோத முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன அடங்குகின்றன.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மொத்தமாக நாம் 47 முறைப்பாடுகளைப்பெற்ற நிலையில் மேல்மாகாண சபையில் தேர்தல் நடைபெற 6 தினங்கள் இருக்கையில் 47 முறைப்பாடுகளைப்பெற்றுள்ளோம். எனவே கடந்த மாகாண சபை தேர்தலுடன் இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் சமனாக உள்ளபோதும் தேர்தல் நெருங்கும் போது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.