2009
2009
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கால்நடைப் பண்ணையாளர்கள் பல வருட காலமாக மேச்சல் நிலமற்ற நிலையில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியதுடன் அவர்களது நாளாந்த வருமானமும் மிகக் குறைந்த நிலையிலே மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், பால் உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இப் பண்ணையாளர்கள் மேச்சல் நிலம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து அவர் அபிவிருத்தியமைச்சர் சி.பி. ரத்னாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பாற்பண்ணையாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் கூடிய பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு கால்நடை பண்ணையாளர்களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் பிரதேச செயலாளர், கால்நடை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வியட்நாம், காஸா பகுதிகளில் படுகொலைகளை புரிந்தவர்கள் இன்று இலங்கைக்கு உபதேசம் செய்ய முற்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கையிலுள்ள கனிய வளங்களை அபகரிக்கவே இன்று பல வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட போட்டி போடுகின்றன. அதற்காகவே இலங்கையை இரண்டாக்க முயற்சிக்கின்றனர்.
வியட்நாம், காஸா போன்ற இடங்களில் படுகொலைகளை புரிந்தவர்கள் கூட இன்று எமது நாட்டுக்கு உபதேசம் செய்கின்றனர்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இங்கே ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் தமது சுயநலத்துக்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனரே தவிர இங்குள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.
நாம் எம்மை, எமது நாட்டை நேசிக்கும் தொண்டர் அமைப்புகளுக்கு மட்டுமே இங்கே சேவையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம். ஏனையவர்களுக்கு வழங்க நாம் தயாராயில்லை.
அகதி முகாம்களில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க ஜனாதிபதி விரைவில் அனுமதி வழங்குவார்.
பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது குறித்து சுகாதார அமைச்சு எச்சரித்திருப்பதால் தென் பகுதிகளில் உள்ள உல்லாசப் பயணிகள் ஹோட்டல்களில் பன்றி இறைச்சி உணவுக்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு காட்டுப் பன்றி வேட்டையும் நிறுத்தப்பட்டு வருகிறது.
பன்றி இறைச்சி இங்குள்ள விடுதிகள், ஹோட்டல்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இங்குள்ள ஹோட்டல்களுக்கு பன்றி இறைச்சியை விரும்பி அதிகம் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல வீதிகளில் விற்கப்படும் பண்ணை வளர்ப்பு பன்றி இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் காணி, வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இத்தண்டனை தண்டப்பணமாக மட்டுமன்றி சிறைத் தண்டனையாகவும் இருக்குமெனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், உங்கள் வீட்டிலுள்ள நுளம்பு உங்களுக்கு கடித்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நாம் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாதென்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நுளம்பு பரவலைத் தடுக்கும் கட்டளைச் சட்டப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோதனைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், காணி உரிமையாளர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும். இது குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறைத்தண்டனை வரை அதிகரிக்கும்.
மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் 640 பேரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் வன்னியிலுள்ள படையினராவர். விரைவில் மலேரியாவை முற்றாக ஒழித்து விடுவோம். டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் ஒரேவகை நுளம்பினாலேயே பரவுகின்றன. இலங்கையில் தற்போது டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 ஆம் ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் தொகை 1,540 ஆக இருந்தது. இது முறையே 2005 இல் 820 பேரும் 2006 இல் 16, 972 பேரும் 2007 இல் 7,320 பேரும் 2008 இல் 6,431 பேரும் 2009 இல் இன்றுவரை 3,864 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், நுளம்புகளின் பரம்பல் அதிகரித்தல் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் வெப்ப நிலை அதிகரிப்பு மற்றும் மாற்றங்களினாலேயே இந்நோய்கள் ஏற்படுகின்றன. இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல. முழு உலகத்துக்குமுள்ள பிரச்சினை. இதனை வெற்றி கொள்ள மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “போதையற்ற வாழ்வு’ என்னும் தலைப்பிலான ஓவியப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டி பிரதேச செயலக மட்டம், மாவட்ட மட்டம், மாகாணமட்டம் ஆகிய மட்டங்களில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் பத்து ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டப் போட்டி இடம்பெறும். மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 15 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப் போட்டி இடம்பெறும்.
மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் முதலாவது ஓவியத்துக்கு 15 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 7,500 ரூபாவும் மேலும் ஐந்து சிறந்த ஓவியங்களுக்கு தலா ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் மாவட்ட மட்டத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. போட்டி சம்பந்தமான விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக யுத்தம் என்ற கொடிய தீயினால் வெந்து நொந்த மக்களின் வெளிக்காயங்களுக்கு மருந்து போடலாம் ஆனால் அவர்களின் உள்காயங்களுக்கு மருந்து போடும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதல்லவென ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.
மக்கள் மத்தியில் இனப்பிரிவினை கறைகளை துடைத்தெறிந்தது மக்கள் விடுதலை முன்னணிதான் நலன்புரி முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத்துயரங்களை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்த வரலாறுகளையும் கலாசார பண்புகளையும் கொண்ட தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையடைந்துள்ளனர். இந்த துன்பங்களை களைய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
நரகலோகத்திற்கு செல்பவர்களுக்கு யமனின் ஆட்சியில் என்னென்ன கொடிய தண்டனைகள் வழங்கப்படும் என்ற கற்பனைக் கதைகள் பல பள்ளியில் படித்ததுண்டு. ஆனால் அந்தக் கதையிலும் கெட்டவர்களுக்குத்தான் அந்தத் தண்டனை என்றே கூறப்பட்டது. ஆனால் இவ்வாண்டு ஜனவரி முதல் முல்லைத்தீவு நரகலோகம் ஆக்கப்பட்டுவிட்டது. 250 000 வரையான அப்பாவித் தமிழ் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். கற்பனைக் கதையிலேயே நரகலோகத்தில் ஒரு யமனின் ஆட்சி தான் இருக்கும். ஆனால் வன்னி மக்களோ இரு யமன்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் நிலை:
முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இலங்கைப் படைகள் நெருங்க மோதல்கள் மேலும் தீவிரமடைந்து உள்ளது. 5 சதுர கி மீ பரப்பளவேயுள்ள இப்பிரதேசத்தில் 40 செல்சியஸ் வரை அனல் வீசும் வெப்பத்தில் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழுகின்ற கொடுமை நினைத்துப் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.
அதற்குள் கர்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். கைக் குழந்தைகள் பாலின்றித் தவிக்கின்றன. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்காவது ஏதாவது கொடுக்க முடியாதா, அவர்களது பசியாற்ற முடியாதா என்று அந்த அம்மாக்களும் அப்பாக்களும் தவிக்கின்ற தவிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. குடிப்பதற்கே தண்ணீரில்லாத போது குளிப்பது எப்படி? ஏப்ரல் 20 – 21ல் 100 000ற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய போது அவர்களது அவலங்களை விபரிக்க வார்த்தைகள் இல்லையென சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த மக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு அனுப்ப்படுகின்ற போது பஸ்வண்டிகளிலேயே உயிர் பிரிந்துள்ளனர்.
இப்போது இன்னும் மூன்று வாரங்கள் கடந்துவிட்டது. இன்னமும் புலிகளின் அரண்களாகப் பாவிக்கப்படும் அந்த மக்கள் தங்கள் உயிரைத் தாங்கி வருவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த மக்கள் தவிட்டை தண்ணீரில் கரைத்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இலங்கை அரசு உலக உணவுத்திட்டம் மூலம் அனுப்புகின்ற உணவு அவர்களுடைய தேவைக்கு மிகமிகக் குறைவானது. அதனையும் புலிகள் மக்களுக்கு விற்பனை செய்கின்ற நிலைதான் அங்கு உள்ளது. அந்த உச்சவிலைக்கு தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அன்று வெளியேறியவர்கள் தம் இயலாமையை விபரித்து இருந்தனர்.
வன்னி முகாம்கள் பற்றிய வாக்கு மூலங்கள்:
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமை இவ்வாறு மரணப் போராட்டமாக இருந்தால், அங்கிருந்து தப்பி வருகின்ற மக்களுக்கு இலங்கை அரசு அடிப்படைத் தேவைகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. Hurricane Katrina -ஹரிக்கேன் கத்ரீனா அமெரிக்காவின் நியூஓர்லினைத் தாக்கிய போது அங்கு நிவாரணப் பணிகள் எதனையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிபிசி செய்தியாளர் மக் பிரைட், மூன்றாம் உலக நாடான இலங்கை சுனாமி நடந்த 48 மணி நேரத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைய ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படியான எதிர்பாராத சுனாமி அவலத்தின் போதே மக்களை உதவிகள் சென்றடைந்தன. ஆனால் இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட மனித வெளியேற்றம் ஒன்று இடம்பெற்ற போது அரசு தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.
இது தொடர்பாக வன்னி முகாம்களுடன் தொடர்புடையவர்கள் தேசம்நெற்றுக்கு அளித்த வாக்குமூலங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. தகவல்களை வெளியிட்டவர்களது விபரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
அரசு தயார் நிலையில் இருக்கத் தவறிவிட்டது. – வைத்தியர்:
”இந்த யுத்தத்தின் போது மக்கள் யாரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை என்பது அரசுக்கு நன்கு தெரியும். அப்படி என்றால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எல்லாம் எங்கு போனார்கள்? அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான் இருந்திருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா? அவ்வளவு மக்களும் வெளியேறி வந்தால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கவனிக்க வேண்டியது அரசினுடைய பொறுப்பு. என்ஜிஓக்களை முன்னரேயே அங்கு அனுமதித்து தயார்நிலையில் அல்லவா வைத்திருந்திருக்க வேண்டும்.
மக்கள் வெளியேறி வந்தபோது அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு என்பனவற்றுக்கு மணித்தியாலக் கணக்கில் தவிக்கவிடப்பட்டனர். உடனடி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கான போக்குவரத்துகள் ஒழுங்கற்று இருந்தது. பல மணிநேரம் மக்கள் பஸ் வண்டிகளிலேயே விடப்பட்டனர். சில சமயங்களில் அம்மக்கள் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர்.
ஏற்கனவே வந்தவர்கள் ஓரளவு அங்கு பரவாயில்லாமல் உள்ளனர். ஆனால் புதிதாக முகாம்களில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உடல் பலவீனப்பட்டு இறந்துள்ளனர். இவர்களது உடல்கள் கொழுத்தும் வெய்யிலில் பல மணிநேரமும் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே விடப்படுகின்றது. அதனால் உடல் பழுதடைந்து துர்நாற்றம், தொற்று கிருமிகள் என பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.
புலிகளும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். தங்களது பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடாமல் இன்று தமிழ் மக்களை பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். எல்லா இடங்களையும் கைவிட்ட அவர்கள் இந்த துண்டு நிலத்தில் என்னத்தை சாதிப்பதற்காக மக்களை இப்படிப் பலிகொடுக்கின்றனர். நாம் இவ்வளவு இழந்து இவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து கண்டது தான் என்ன?”
மக்கள் விலங்குகளாக நடத்தப்படுகிறார்கள். – வங்கி அலுவலர்:
”நான் மக்களுடைய வங்கித் தேவைகளுக்காக இந்த முகாம்களில் பணியாற்றினேன். அங்கு மக்கள் படும் அவலங்கள் நெஞ்சைப் பிழிகின்றது. வெப்பநிலை காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சில சமயம் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றது. அதனை உண்டாவது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனையும் நெருக்குவாரப்பட்டு மிதிபட்டு வாங்க வேண்டி உள்ளது. சிலர் அதனை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். நான் சந்தித்த ஒருவர் இரு நாட்களாக தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நான் சென்ற முகாம் மிகவும் பரந்த பிரதேசம் அதனைச் சுற்றிவர மூன்று மணிநேரம் எடுக்கும். காடுகள் அழிக்கப்பட்டு வெட்ட வெளியிலே கொளுத்தும் வெய்யிலைத் தடுக்க ஒரு ரென்ற் கூட அவர்களுக்கு இல்லை. கிழிந்து கந்தலான ஆடைகளுடன் தான் வந்துள்ளனர். ”
பாலியல் வல்லூறவுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளது. – உதவிகள் மேற்கொள்ளும் அரச அலுவலர்:
”நான் அடிக்கடி முகாம்களுக்கு சென்று வருவேன். ஒரளவு தொடர்புகளை ஏற்படுத்தி சில உதவிகளையும் வழங்கி வருகிறேன். முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. பெண்கள் மீதான கொடுமைகள் சில இடம்பெற்று உள்ளதை நான் அறிந்திருக்கிறேன்.
குறிப்பாக செட்டிகுளம் முகாம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றில் பொழுதுசாய குளிக்கச் சென்ற சில பெண்களின் (1 – 9) உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் குளிப்பதற்கு மறைவிடம் இல்லாததால் பொழுதுசாய இருட்டில் குளிப்பதற்குச் சென்று உள்ளனர். அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடந்தது என்று தெரியவில்லை ஆனால் பத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கலாம்.
இதனைச் சென்று முறையிடுவதற்கோ விசாரிப்பதற்கோ மக்கள் பயப்படுகின்றனர். இச்சம்பவங்கள் பரவலாக நடக்கின்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இச்சம்பவத்தையடுத்து அம்முகாம்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் இருந்து பொலிசாரிற்கும், STF ற்கும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொழுதுசாய்ந்த பின் ஆற்றுப் பக்கம் செல்ல வேண்டாம் என அவர்களுக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது.
நூற்றுக் கணக்காணவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டாலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை. புலிகளைக் களையெடுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களும் அது பற்றிய சில தகவல்களை வழங்கியும் வருகின்றனர்.”
சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை. – மற்றுமொரு வைத்தியர்;
”நான் பணியாற்றும் முகாமிலும் பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வருகின்றனர். அவர்கள் அங்குள் சிங்கள மருத்தவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் மொழிப் பிரச்சினை காரணமாக முழுமையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிடும் போது பல பிரச்சினைகளையும் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாமல் உள்ளது. எந்நேரமும் இராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பார். நோயாளியுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி எல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் அருகில் நிற்கும் போது அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இயலுமானவரை முகாமிற்கு சென்று கடமையைச் செய்துவிட்டு வருவதையே செய்கிறேன். இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவது ஆபத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் யுவதிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஆராய முடியாது.”
பொம்பிளைப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் மோசம் – உதவிகள் வழங்கிவரும் வயதான தாயார்:
”நான் இந்த யுத்தத்தில் ஆரம்பத்திலேயே வந்துவிட்டதால் முகாமில் இல்லை. ஆனால் வவுனியா வைத்தியசாலைக்கு தினமும் சென்று வருகிறேன். அங்கு தான் மிகவும் காயப்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பஸ்நிறைய நோயாளிகள் கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அவர்கள் குளித்து பல் விளக்கி பல நாட்களாக இருக்கும். கிழிந்த அழுக்கான உடைகளுடன் வருவார்கள். அவர்களுக்கான சோப், பற்பசை, ஆடைகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறேன்.
பொம்பிளைப் பிள்ளைகளுடைய நிலைதான் மிகவும் கஸ்ரமானது. அவர்களுடைய இயற்கை உபாதைகள் ஒருபுறம். வன்னியில் புலிகள் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால் சின்னஞ் சிறுசுகளுக்கெல்லாம் கலியாணம் செய்து வைத்திடுவினம். பதினைந்து பதினாறு வயசிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு கைக் குழந்தையும் வந்திடும். முந்தி கலியாணம் கட்டின பெடியளை பிடிக்காயினம். இப்ப என்னென்றால் கடைசி நேரத்தில கலியாணம் கட்டினவையையும் பிடித்துக் கொண்டு போய் அதுகளும் செத்துப் போக இந்தப் பிள்ளையள் கைக்குழந்தையோட முகாம்களில தவிக்குதுகள். (முகாம்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைப் பேற்றிக்கு தயாராக இருக்கிறார்கள் என அரசாங்க அதிபரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.)
புலிகளோடு தொடர்புடையவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தாய் தகப்பன் இருந்தால் அவர்களிடம் கூறிவிட்டே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் விசேட முகாம்களில் வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
முதலில் வந்து தங்க வைக்கப்பட்டவர்களின் நிலைகள் பரவாயில்லை. அவர்களுக்கு அடிப்படையான விடயங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20லும் அதற்குப் பிறகும் வந்தவர்களுடைய வசதிகள் சரியான மோசமாக உள்ளது.”
இந்த நேரடிச் சாட்சியங்கள் வன்னி முகாம்களின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. விலங்குகளைக் கூட இவ்வளவு மோசமான சூழலில் வைத்திருக்க முடியாத நிலையில் வன்னி மக்களை அரசு இவ்வாறு வைத்திருப்பது வன்மையான கண்டணத்திற்கு உரியது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் கீழ்மைப்படுத்தும் வகையிலேயே அரசு நடந்து கொள்கிறது.
ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்காண மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பான முன் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம் அதற்கான பரவலான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும் கீழுள்ள விடயங்களை மேற்கொள்வதற்கான அழுத்தக் குழுவொன்று குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனை ஒரு பொது வேலைத்திட்டமாக பரவலாக முன்னெடுப்பது மிக அவசியம்.
1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும்.
2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.
4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் தடைசெய்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கை தொடர்பாக பொய்யான தகவல்களை சர்வதேசத்திற்கு வழங்கியுள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
ஹெனா, சுற்றுலா வீசா அனுமதியுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து வவுனியாவுக்குச் சென்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை சேகரித்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யரான ஹெனா, தம்மை சட்டத்தரணியென கூறி, இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை ஏமாற்றியுள்ளதாக புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கிய 45 பக்க அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்பித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.