வியட்நாம், காஸா பகுதிகளில் படுகொலைகளை புரிந்தவர்கள் இன்று இலங்கைக்கு உபதேசம் செய்ய முற்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கையிலுள்ள கனிய வளங்களை அபகரிக்கவே இன்று பல வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட போட்டி போடுகின்றன. அதற்காகவே இலங்கையை இரண்டாக்க முயற்சிக்கின்றனர்.
வியட்நாம், காஸா போன்ற இடங்களில் படுகொலைகளை புரிந்தவர்கள் கூட இன்று எமது நாட்டுக்கு உபதேசம் செய்கின்றனர்.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இங்கே ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் தமது சுயநலத்துக்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனரே தவிர இங்குள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.
நாம் எம்மை, எமது நாட்டை நேசிக்கும் தொண்டர் அமைப்புகளுக்கு மட்டுமே இங்கே சேவையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம். ஏனையவர்களுக்கு வழங்க நாம் தயாராயில்லை.
அகதி முகாம்களில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க ஜனாதிபதி விரைவில் அனுமதி வழங்குவார்.