2009

2009

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

vavuniyatents.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ மனிதநேய அமைப்புக்களுக்கு 8,000 மில்லியன் ரூபா நிதியுதவி

vanni-0001.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, தற்காலிக கூடாரங்கள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவியில் பெருந்தொகையான நிதியுதவி ஐக்கிய நாடுகள் உடனடி மத்திய நிதியத்திலிருந்து வழங்கப்பட்டிருப்பதுடன், உதவிவழங்கும் நாடுகள் பலவும் இதில் பங்களிப்புச் செய்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதநேய நிறுவனங்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அரசசார்பற்ற நிறுவனங்கள் தேசிய செயற்திட்டத்தின் கீழேயே செயற்படவேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளித்து எந்தவொரு அமைப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

குறிப்பிட்ட செயற்திட்டங்களுக்கே முதலில் முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டுமென கடந்த வியாழக்கிழமை தன்னைச் சந்தித்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமையையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.“செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்னர் அவர்கள் (அரசசார்பற்ற நிறுவனங்கள்) என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்” என அமைச்சர் கூறினார்.

புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் விஜயம்

saran.jpg முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

கடந்த காலங்களைப் போன்ற இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களைப் பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.

மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் செய்து கொடுத்திருந்தார்.

கம்பஹா மாவட்டத்தில் அம்பேபுஸ என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் 54 இளைஞர்களும் 41 யுவதிகளுமாக 95 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயது குறைந்த சிறுவர் சிறுமிகள் அதிகமுள்ளனர்.

இவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் கணனிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி என்பவற்றையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது பெண் பிள்ளைகளுக்கான புதிய உடுபுடவைகள், கைக்கடிகாரங்கள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைப் போராளிகள், இளைஞர், யுவதிகளின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கண்டி மாவட்டம் பள்ளேகல என்னுமிடத்தில் 800 இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பிஸ்கட் வகைகளையும் கையளித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளருமான சுசரித கம்லத், உங்களது கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். ஆனால் அதனை மறந்து எதிர்காலத்தில் உங்களது நல்வாழ்வுக்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தலிபான்களுக்கு எதிராக பாரிய படை நகர்வு; 143 பேர் பலி

w_news.jpgபாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 143 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த தகவலை இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார். தீவிரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் அப்பாவிகள் தப்பிச் செல்லும் வழிகளை அடைத்து வைத்து உள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 15 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஸ்வாட் பகுதியில் சண்டை நடப்பதால் அப்பாவி பொதுமக்கள் வீடுகளை காலிசெய்து விட்டு வெளியேறி வருகிறார்கள். ஏற்கனவே 5 இலட்சம் பேர் வெளியேறி விட்டனர். இப்போது மேலும் 2 இலட்சம் பேர் அந்த பகுதியை விட்டு வெளியேறி வருகிறாரகள். மேலும் 3 இலட்சம் பேர் வெளியேற தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் செயற்படும் தலிபான்களின் தலைவர் பைதுல்லா மஷ¤தைக் கைது செய்ய இராணுவம் கடும் முயற்சிகளை எடுத்துவருகிறது. அவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு சன்மானத் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தொகையை அமெரிக்கா வழங்கவுள்ளது. அரபு நாடுகளிலுள்ள ஏராளமானோரை புனிதப் போருக்கு அழைக்கும் பணிகளில் பைதுல்லா மெசூத் ஈடுபடுவதாக பாகிஸ்தான் உளவுத்துறை நம்புகின்றது. இதனால் இவரின் மறைவிடங்கள், நடமாட்டங்களுள்ள பிரதேசங்களைத் தெரிந்துகொள்வதில் இராணுவ உயர் மட்டம் ஆர்வமாயுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஸ்வாட் பகுதியில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க பாரிய இராணுவ நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்படியும் அரசாங்க அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குலகின் கைப்பிள்ளையான பாகிஸதான் அரசை அகற்றப் போவதாக தலிபான்கள் சூளுரைத்துள்ளனர். அமெரிக்க இராணுவமும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு உதவியளிக்கின்றது.

மதவாச்சி சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

sri-lanka-army.jpgஏ9 வீதியில் மதவாச்சி பிரதான சோதனை நிலையத்தில் பணிபுரிந்த 126 பொலிஸார் வேறு பகுதிகளுக்குத் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலகவின் உத்தரவின் பேரில் இவர்களுக்கு இந்த திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து தென்பகுதிக்கு வருகின்ற வாகனங்களுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கையில் அனுமதி பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் பல மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த புகாரையடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இவர்களின் இடமாற்றங்கள் நடைபெற்றுவருவதுடன் புதியவர்கள் அவர்களின் இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடபகுதியில் இருந்து தெற்கு நோக்கி எந்த வாகனங்களும் வருவதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருவதனால் விசேட அனுமதி பெற்று வரவேண்டும். அதேபோல தெற்கில் இருந்தும் வடக்கு நோக்கி வாகனங்கள் செல்லவும் அனுமதி பெறவேண்டும்.

இந்த பாதுகாப்பு நடைமுறையை மீறி சில வாகனங்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்படும் நிலையில் இனவாதம் பேசும் இடதுசாரிகள் தேர்தல் மேதினம் நடத்துகின்றனர்

mayday01.jpgஅகதிகளின் புலம்பலால் நாடு அல்லோலகல்லோலப்பட்டு கிடக்கிறது. இனவாதம் பேசியே சில இடதுசாரிகள் தம்மை தொழிலாளர்களது தோழனாக காட்டிக் கொண்டிருக்கின்றனர். வேதனக் குறைவால் தோட்டத் தொழிலாளர் பலர் வேதனைக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்து வரவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலை மையமாகக் கொண்டு சிலர் தேர்தல் மேதினம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம், வடக்கில் வாடுவோருக்கு உதவுவோமென இன்னொரு பகுதியினர் கூறி வருகின்றனர். ஆனால், அந்த மக்களின் நிர்க்கதி நிலைக்கு காரணமானவற்றை களைந்தெறியவோ அதைப் பற்றி பேசவோ தொழிலாளர் தலைமைகள் பேசத்தயங்குவதும் மௌனிப்பதும் கவலைக்குரியதே. எனவே ஐக்கிய உணர்வோடு அவலங்களை கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு நுவரெலியா கூட்டுறவுச் சங்க விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.

மலையக சோசலிச சக்திகளினதும் இடதுசாரி தொழிற்சங்கங்களினதும் அரசியல் அமைப்புகளினதும் சார்பில் இடம் பெற்ற இம் மேதினக் கூட்டத்தை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை செங்கொடிச் சங்கம், ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மௌனஞ்சலியும் செலுத்தப்பட்டது. செங்கொடிச் சங்க பொதுச் செயலாளர் ஒ.ஏ.இராமையா உரையாற்றுகையில்;

இலங்கையில் ஒருபக்கம் பொருளாதாரப்பிரச்சினை. மறுபுறம் யுத்தப் பிரச்சினை. இவ்விரண்டுமே இன்று சர்வதேச பிரச்சினையாகிவிட்டது. யுத்தம் முடிந்து விட்டதாக அரசு கூறுகிறது.வரலாறு காணாதளவு யுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கில் சோசலிச இயக்கம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுவும் அரசுக்கு ஆதரவான குழுவும் அங்குள்ளன. வடக்கில் இன்று காணப்படும் நிலை நாளை எமக்கும் வரலாம். இதனை மறந்த நிலையில்தான் மலையகத்தில் பலர் வரலாற்றுத் துரோகம் இழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

மலையகத்திலும் வடகிழக்கிலும் புதிய சோசலிச இயக்கம் உருவாக வேண்டும். எங்களது சக்தி உதிரியாக சிதறி இருக்காமல் அனைவரும் சேர்ந்து உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.  நாங்கள் நாட்டைப் பிரிக்கும் ஆதரவாளர் அல்ல. ஐக்கியப்பட்ட இலங்கையில் சமத்துவம் கோருகிறோம். தமிழர்கள் செறிந்து வாழுமிடத்தில் சுயாட்சியோடும் சுதந்திரத்தோடும் வாழவேண்டும். பொருளாதார நிலை அனைவரையும் பாதிக்கின்றது. எனவே அந்த வீழ்ச்சியிலிருந்து மீட்சி வேண்டும் என்றார்.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தனதுரையில்;  உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற மார்க்சின் குரலை பலர் மறந்துவிட்டார்கள்.ஆனால் முதலாளிமார் மறக்கவில்லை.உலக முதலாளிகளே ஒன்றுபடுங்களென அவர்கள் அதனைப் பின்பற்றுகின்றார்கள். தொழிலாளர்களிடையே பிளவுகள், முதலாளிகள் ஐக்கியப்படுகிறார்கள். மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினை தீரவேண்டுமானால் சகல சங்கங்களும் ஒன்றுபடல் வேண்டும். ஒற்றுமை மூலம்தான் தொழிலாளியால் தலை நிமிர முடியும் என்றார்.

ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.ஜோதிவேல் உரையாற்றுகையில்;  மறைந்துபோன இடதுசாரி இயக்கம் மலையகத்தில் மீண்டும் துளிர்விட இம்மேதினம் அடிகோலுகிறது. தோட்டத் தொழிலாளரின் அடிப்படை உரிமைகள் பல்வேறு வழிகளில் பறிக்கப்படுகிறது.பலவந்த வெளியார் குடியேற்றத்தால் காணிகள் பறிபோகின்றன. தோட்ட வைத்தியசாலைகளில் மருந்தில்லை. கொழுந்துக்கு விலை அதிகரிப்பில்லை. தோட்ட சேவையாளர்களுக்கு மனிதாபிமான ரீதியாக ஏழுபேர்ச்சஸ் காணி கூட வழங்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அரசு யுத்தத்தை காரணங்காட்டி தொழிலாளர்களை நசுக்கும் அதேவேளை, அமைச்சர்களது ஆடம்பர சொகுசு வாழ்வுக்கு வழி வகுக்கிறது. கேட்டால் யுத்தமென போலி முத்திரை ஒட்டப்படுகிறது என்றார்.

இக்கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் மரக்கறிக் தோட்டங்களும் சட்டரீதியாக அவர்களுக்கே உரித்தாக வேண்டும். பெருந்தோட்டங்களில் பெண்களே பெரும்பான்மையாக தொழில் புரிகின்றனர்.ஆனாலும் அவர்களுக்கு தகுந்த வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு உடை, மேலங்கி, தொப்பி, பாதணி உட்பட சீருடைகள் வழங்கப்பட வேண்டும்போன்ற தீர்மானங்களுடன் இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சர்வதேச உரோமர் கலாசார தினம்.( April 8: International Day of Roma ) – புன்னியாமீன்

international-day-of-roma.jpgஒவ் வொரு ஏப்ரல் மாதமும் 08ஆம் திகதி சர்வதேச உரோமர் கலாசார தினம் கொண்டாடப்படுகின்றது. உரோமர் கலாசாரம், உரோமப் பாரம்பரியங்கள்,  மற்றும் உரோமர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

20ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதிகளில்,  குறிப்பாக 1960களில் உரோம கலாசாரத்தைப் பேணுவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் பல இயக்கங்களும், அமைப்புகளும் அதிகளவில் உருவாகின. இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1971ஆம் ஆண்டில் லண்டனுக்கருகே ஓப்பிளிங்டன் Orpington    எனுமிடத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச உரோமானிய அமையத்தை International Romani Union (IRU),  உருவாக்கினர்.

1990ஆம் ஆண்டு போலாந்தில் உள்ள ‘செரொக்’ எனுமிடத்தில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச உரோமானிய அமையத்தின் International Romani Union (IRU),  கூட்ட முடிவின்படியே ஏப்ரல் 08ஆம் திகதி சர்வதேச உரோம கலாசார தினத்தை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

பொதுவாக இத்தினத்தை உரோம கலாசாரங்கள், உரோம பாரம்பரியங்கள்,  மரபுகள் என்பவற்றை வலியுறுத்தக்கூடிய வகையில் போட்டிகள்,  கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்பவற்றை நடத்தி இத்தினத்தை கொண்டாடுவர். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சோனியாவை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 220 பேர் கைது

06-sonia.jpgதேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னையில் இன்று நடைபெற்ற கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களில் 220 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – சோனியா

06-sonia.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சோனியா காந்தியின் பேச்சு..

இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதி்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.

இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.

என்றார் சோனியா காந்தி.

சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் வடக்கே கடும் தாக்குதல்: 378 பேர் பலி, 1122 பேர் காயம்

vanni-manitharkal.jpg இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவும், இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் வரை இடம் பெற்ற கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதலில் 378 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார் என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்தத் தாக்குதல்களில் 1122 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ள 378 உடல்களில், 106 உடல்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்தவர்கள் மேலும் பல சடலங்கள் வீதிகளில் இருப்பதாக தம்மிடம் கூறியதாகவும் அந்த அரச மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரச மருத்துவர் கூறுகிறார்.

அப்பகுதியில் ஷெல் தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது விடுதலைப் புலிகள் ஒரு பிரச்சாரமே என்றும் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் தங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த விதமான அழுத்தங்களையும் சந்திக்கவில்லை என்று அந்த அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போர் நடக்கும் பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் தகவல்களை சுயாதீனமான வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.