இலங் கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, தற்காலிக கூடாரங்கள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவியில் பெருந்தொகையான நிதியுதவி ஐக்கிய நாடுகள் உடனடி மத்திய நிதியத்திலிருந்து வழங்கப்பட்டிருப்பதுடன், உதவிவழங்கும் நாடுகள் பலவும் இதில் பங்களிப்புச் செய்துள்ளன.
இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதநேய நிறுவனங்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அரசசார்பற்ற நிறுவனங்கள் தேசிய செயற்திட்டத்தின் கீழேயே செயற்படவேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளித்து எந்தவொரு அமைப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
குறிப்பிட்ட செயற்திட்டங்களுக்கே முதலில் முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டுமென கடந்த வியாழக்கிழமை தன்னைச் சந்தித்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமையையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.“செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்னர் அவர்கள் (அரசசார்பற்ற நிறுவனங்கள்) என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்” என அமைச்சர் கூறினார்.