வன்னி தடுப்பு முகாம்களில் வசித்து வரும் தமிழ் மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் நடவடிக்கையாக ஸ்ருட்காட்டில் ஒரு மகாநாடு என்றபோது பொதுவாகவே இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு இருக்கும் எனவே இந்த மகாநாடு சம்பந்தமாக எனக்கும் பல கேள்விகள் எழுந்து மறைந்தது. ஆனால் இந்த மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எல்லாம் புலிப் பாஸிஸ எதிர்ப்பாளர்கள் ஆவர். எனவே பத்தரை மாற்று தங்கத்தை உரசிப் பார்ப்பது தகுமா? அனாவசியமாக புலி முத்திரை குத்தவும் வாய்ப்புள்ளது.
யார் இந்த 21 நபர்கள். நானும் விசாரித்த வண்ணமே இருக்கிறேன். பதில் இன்றுவரை கிடைக்கவில்லை. சரி! இவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்? இவர்களாக போனார்களா? அல்லது தெரிந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டார்களா? போய் வந்தவர்கள் கண்டு பிடித்தவை என்ன? ஒரு கூட்டு அறிக்கை (21நபர்) விடப்பட்டதா?
இவர்களாகப் போனால் 70 நபர்களிடம் (அதுவும் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என தெரியவில்லை) அதற்கான அங்கீகாரத்தை கோருவது நியாயமல்ல என லாஜிக்காக பேசும் இவர்களுக்கு புரியாததல்ல. சரி அரசு தேர்ந்தெடுத்து அழைத்தால் என்ன அடிப்படையில் அரசு அழைக்கின்றது என விசாரித்தார்களா? அல்லது இவ்வாறு அரசின் விருந்தாளிகளாக செல்வது தம்மேல் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என்பதை அறியாதவர்களா? தமது கண்டு பிடிப்புக்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது புரியாதவர்களா?
மனிதநேயம் என்ற குறிக்கோளுடன் மக்கள் சேவையாற்ற களம் இறங்கிய இவர்கள் இலங்கை அரசின் மேலும் அதன் படையின் மேலும் தமிழ் மக்கள் கேட்கும் கேள்விகள் பற்றி விசாரித்தார்களா?
1)முகாம்களில் இருப்போரின் எண்ணிக்கையும் அவர்களின் விபரமும் தேவை ஏற்படின் இதை இணையங்களில் வெளியிடுவது – இதன் மூலம் காணாமல் போவது மற்றும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள உறவினர்கள் தமது சொந்தங்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
2)போரின் போது மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை – இலங்கை அரசின் கருத்துப்படி சர்வதேசம் இலங்கை அரசிற்கு எதிராக தொழிற்படுவதாகவும் ஏனெனில் மேற்கத்தைய நாடுகள் இலங்கை முற்போக்கு அரசிற்கு எதிராக கங்கணம் கட்டி வேலை செய்வதாக கூறுகின்றது. ஏற்றுக் கொள்கிறோம். அப்படியாயின் இளைப்பாறிய நீதிபதி வி.ஆர். கிருஸ்ண அய்யர் போன்ற சமூக நன்மதிப்பு பெற்றவர்களைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளலாம்.
3)முகாங்களின் வசதி பற்றி- 21 நபர் கொமிற்றி எல்லா முகாம்களுக்கும் சென்றதா? அதிகாரிகள் அற்ற நிலையில் யாரிடமாவது விசாரித்தீர்களா? அப்படி இருப்பினும் முகாம்களில் இருப்போர் உண்மையான கஸ்டங்களை பயமின்றி கூறுவார்கள் என நினைக்கின்றீர்களா?
4)இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வது – இதற்கான தடைகள் என்ன? எவ்வளவு காலம் தேவை? எவ்வாறு விரைவாக குடியேற்றலாம்? முக்கியமாக கூறப்படுவது மிதி வெடிகளைப் பற்றியே. மிகத்திட்டமிட்டு பகுதி பகுதியாக செய்தால் கடந்த இரண்டு மாதமாக நிறைய மக்கள் குடியிருப்புள்ள இடங்களை துப்பரவு செய்திருக்க முடியும். நாம் உறுதியாக நம்புகின்றோம் அரசிடம் வேறு மறைமுகத்திட்டம் இருக்கின்றது என. இந்த சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா?
5)இந்த முகாம்களுக்கு மேஜர் சந்திரசிறி நியமிக்கப்பட்டதும் மேலும் வடகிழக்கு மாகாணங்கள் இராணுவ மயப்படுவதும் உங்களுக்குப் புரியாததா? மிகச்சிறந்த சிங்கள சிவில் சேவையாளர் விமல் அமரசேகர (முன்னாள் யாழ். அரச அதிபர்) போன்றவர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை உருவாக்குவது பற்றி நீங்கள் பேசவில்லையா?
6)சிங்கள, தமிழ், முஸ்லிம் நல் சக்திகளைக் கொண்ட சில கண்காணிப்பு குழுக்களை அரசின் ஏற்பாட்டுடன் செய்து முகாம்களின் நிலைபற்றி கவனம் எடுப்பது என்றெல்லாம் நிறைய விடயங்கள் உள்ளது.
சிவில் சேவையுடன் சம்பந்தப்படாத எனக்கே இவ்வளவு கேள்விகளும் யோசனைகளும் இருக்கும் போது அறிஞர் குழுவில் உள்ள உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் எழுந்திருக்கும்? இவைகள் பற்றி நீங்கள் கேட்டிருந்தீர்களா? பதில் கிடைத்ததா?
மூன்று லட்சம் மக்களை முகாம்களில் வைத்துப் பார்ப்பது இலகுவான விடயமல்ல என்பது எமக்கு தெரியும். அதற்காக அவர்களை துன்பத்திற்குள்ளாக்குவது முறையாகுமா? அதை விடுத்து மக்கள் நன்றாக இருக்கிறார்கள் எனக் கூறுவது…….?சிங்கள முற்போக்கு சக்திகளே (வாசுதேவ நாணயக்கார) அங்கு பிரச்சினை உள்ளது எனக் கூறும்போது நீங்கள் இங்கிருந்து சென்று நற்சான்றிதழ் கொடுப்பது நல்லதல்ல. மேலும் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிருக்கும் உங்களுக்கு, இலங்கையில் இருந்து வரும் புலி எதிர்ப்பாளர்களை மாத்திரம் சந்திக்கும் உங்களுக்கு, அங்கு சாதாரண மக்கள் படும்பாடு புரியுமா? அல்லது உங்களது நெருங்கிய உறவினர்கள் (இங்கும் அங்கும்) உங்களது இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா?
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னியில் இருந்து வந்த இந்த அகதி மக்களை அரசு சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது ஓரளவிற்கு ஏற்கப்படக் கூடியது என்ற காரணத்தை நீங்களும் நாங்களும் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், பிரபாகரனுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக ஏராளம் கொலைகள் புரிந்த, கொலைகள் மாத்திரம் புரிந்த கருணா போன்றோரும் அரசிலும் அதற்கு நெருக்கமாயும் இருப்பது பற்றி விரல் நுனியில் எல்லா விபரங்களையும் வைத்திருக்கும் பசில் ராஜபக்சேவிடம் வினவினீர்களா?
உங்களது (21 பேர்) இலங்கை விஜயம் வன்னி மக்களின் நலன்சார்ந்தது மாத்திரமா? உங்களில் எத்தனை பேர் வன்னிப் பிரதேசத்துடன் தொடர்புடையவர்கள்? இனப் பிரச்சனையின் ஒரு பகுதிதான் இந்த வன்னி அவலம் என்பது உங்களுக்கு புரியாததா? காயங்களின் ஒரு பகுதியை குணமாக்குவது சரிப்படும் என நினைக்கிறீர்களா?
நிபந்தனை அற்ற ஆதரவு எங்கு கொண்டு போய் விடும் என்பதை நமது கண்களின் முன்னாலேயே புலிகள் செய்து காட்டினார்கள். (எந்தக் கேள்வியும் இன்றி மக்கள் புலிகளை ஆதரித்து விட்டு இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்) எனவே மக்கள் நலன் சார்ந்து ஆதரவு கொடுப்பது தவறல்ல. ஆனால் மனதில் சந்தேகக் கண்ணுடன் ஆதரவு தருவது சரியாகுமா? புலிகள் இருந்த போது புலிக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதின் அளவுகோல் வேறு. இப்போது இதற்கான அளவுகோல் வேறு என்பது உங்களுக்குப் புரியாததல்ல! யதார்த்ததத்தின் அடிப்படையில் புலிக்கெதிரான போரில் உயர் பாதுகாப்பு வலயம் மீன்பிடித்தடை போன்ற மனித உரிமை மீறல்கள் கண்டும் காணாமலும் விடப்பட்டன. ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் மனித உரிமை மீறல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுகளின் கடந்த காலங்கள் அப்படியானவை என்பது உங்களுக்கு புரியாதவை அல்ல.
இனப்பிரச்சினைக்குரிய தீர்வை கண்டு பிடிப்பதில் தொடர்ச்சியாக வந்த அரசுகள் விட்ட பிழைகளை பாஸிஸ புலிகளின் தவறுகளைக் கொண்டு மூடி மறைக்கக் கூடியதாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். மேலும் எவ்வளவு காலம் தீர்வை கண்டுபிடிக்கத் தேவை என்பதை உங்களால் (21பேர்) அறிய முடிந்ததா? அறிஞர் குழுவில் பெரும்பான்மை அறிக்கை என ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வெளியாக நாங்களும் நீங்களும் வாயைப் பிளந்து நின்றது உங்களுக்கு மறந்து போய்விட்டதா? அடிக்கடி திஸ்ஸ விதாரண இதோ முடித்து விடுவோம், இன்னும் கொஞ்சம் இருக்கிறது என அறிக்கை விடுவது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?
இன, மத ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு புலி செய்த பாவங்கள் போதும். தயவு செய்து நீங்களும் அவர்களுக்கு மேலதிக துன்பத்தைக் கொடுக்காதீர்கள்! வடக்கு, கிழக்கு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை இன்னும் உங்களுக்கு விளங்க முடியவில்லை எனில், நீங்கள் கூறியது மாதிரி மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
95இல் இருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ் குடாநாட்டு மக்கள் போர் முடிந்து இரண்டு மாதங்களாகியும் நாட்டின் வேறு பகுதிக்கு போவதற்கு இராணுவத்தின் அனுமதி கோரி நிற்பது வெட்கப்பட வேண்டிய விடயம். அத்தோடு தமது அவசர தேவைகளுக்கு தலைநகர் கொழும்பிற்கு வருவதற்கு விமானப் பயணத்தையே இன்னமும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து செல்ல இருப்பவர்களும் இதே நிலையிலேயே உள்ளதோடு உள்ளுர், வெளிநாட்டு மக்கள் அந்தப் பயணங்களுக்குரிய கட்டணங்களை கேட்டு தலையில் கைவைத்தபடி உள்ளார்கள். எவ்வாறு புலி கடந்த காலங்களில் பொது மக்களின் பணத்தை பகற் கொள்ளையடித்ததோ அதே பாணியில் இன்றும் அவை நடைபெறுவதாக குமுறுகின்றனர் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு கடந்த காலங்களில் புலி எதிர்ப்பு போராட்டத்தில் உங்களுக்கு தோள் கொடுத்த எங்களுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான நிலையை நீங்கள் எடுப்பதன் மூலம் எங்கள் உறவுகளின் முன்னால் எம்மை அவமானப்படுத்தி விடாதீர்கள் என கோருகின்றோம்.