2010

2010

அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

parliment.jpgஇலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் வாக்கெடுப்பு இன்றி மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தாம் உட்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் வெளியேறினார்.

இதன் பின்னர் அவசரகால சட்டம் தொடர்பில் வாக்களிப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இல்லைமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது.

உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

w-t-c.jpgபுனித குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அமெரிக்க தேவாலயத்தின் தீர்மானத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஒழிக, ஏகாதிபதியம் அழிக, மதக் குரோதத்தை வளர்க்காதே எனப் பலவகையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இந்நிலை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளை மேலும் ஆபத்துக்கள்ளாக்கும் என அங்குள்ள நேட்டோ படைத்தளபதி எச்சரித்துள்ளார். அத்துடன் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க தேவாலயம் கைவிட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம் செப்டம்பர் 11 இல் நினைவு கூரப்படவுள்ளது. இது 2001 செப்டம்பர் 11 இல் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலைக் கண்டித்தும் இதற்குத் தூபமிட்டதாக தேவாலயம் கருதும் புனித குர்ஆன் வசனங்களை எரிக்கவும் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் எண்ணியுள்ளது.

இதைக் கண்டித்தே ஆப்கானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் எதிரொலிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டிய நேட்டோ தளபதி அரபுலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இது தவிடு பொடியாக்கும் என்றும் கூறினார். உலகிலுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களின் மனங்களையும் புண்படச் செய்யும் இவ்வாறான வேலைகளால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நீண்ட கால சமாதானக் கனவு சிதைக்கப்படும் ஆபத்துக்களையும் விளக்கினார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களைத் தோற்கடிக்க பொது மக்களின் ஆதரவு அமெரிக்க இராணுவத்துக்குத் தேவைப் படுகின்றது.  தலிபான்களையும், ஆப்கான் பொதுமக்களையும் வேறுபடுத்தி தலிபான், அல் கைதாக்களை தனிமைப்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை குர்ஆன் பிரதிகளை எரிக்கும் இச்செயல் சீரழிக்கும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மற்றும் தலிபான், அல் கைதா அமைப்புகள் தேவாலயத்தின் இத் தீர்மானத்தை சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் நேற்று வரலாறு காணாத ஜன சமுத்திரம்

nallur01.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது. தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

18ஆவது திருத்தத்துக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள்

ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தக்கூடிய உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தே பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., ஜே.வி.பி.கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தன.

இன்று புதன்கிழமை உத்தேச திருத்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்த அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தடவையேனும் போட்டியிடுவதற்கு வழிசெய்யும் வகையிலான இந்தத் திருத்தங்களை ஐ.தே.க., ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

”துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.” வேலும்மயிலும் மனோகரன் (தவிபு இன் சர்வதேசப் பிரிவின் மூத்த உறுப்பினர்)

மே 18க்குப் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் பலத்த பிளவுகள் ஏற்பட்டு குழுவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இக்குழுக்கள் இரு பிரதான அணிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளன. ஒன்று உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற அணி. மற்றையது உருத்திரகுமாரனின் தலைமையை அல்லது நாடுகடந்த தமிழீழத்தை எதிர்க்கின்ற அணி.

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைக்கான போட்டியில் உருத்திரகுமாரனுடன் பிரித்தானியாவில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜெயானந்தமூர்த்தியும் போட்டியிட இருந்தார். ஆனால் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரினதும் ஆதரவைத் தக்க வைத்து தன் வெற்றியை உருத்திரகுமார் உறுதிப்படுத்தியதால் ஜெயானந்தமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசை ஜெயானந்தமூர்த்தியின் ஊடாகக் கைப்பற்ற திட்டமிட்ட ஐரோப்பிய அணி தற்போது உருத்திரகுமாரனுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எதிராக இணைய யுத்தம் ஒன்றைத் தொடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே இந்நேர்காணல் ‘தாய்நிலம்’ இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இப்போதைய காலப் பொருத்தம் கருதி தேசம்நெற் வாசகர்களுக்காக இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. – நன்றி தாய்நிலம்.
._._._._._.

விடுதலைப் புலிகளின் சர்வ தேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன் அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரங்கள் என்பனவற்றினைப் பற்றிய பலதரப்பு கேள்விகளுக்கு பதில் தருகின்றது.
 
அறிமுகம்:

1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்தியில் இவர் வழங்கினார்.

இயக்கத்தின் சார்பில் சர்வதேச தரப்புக்களுடனான பேச்சுக்கள் பலவற்றின் ஆரம்பகட்டங்களை மனோகரன் அவர்களே தலைமையின் வழிகாட்டலில் நடத்தினார்.

புலம்பெயர்ந்த தமிழர் தரப்புக்குள் இவேர் விட்டுள்ள நச்சு சக்திகள் என்பனவற்றின் நெருக்கடிகளை மீறி பிரான்சில் நாடுகடந்த அரசுக்கான சனநாயக பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட செயற்குழுவுக்குத் தலைமை தாங்கி தேர்தலை நடாத்தி முடித்தார்.

._._._._._.

கேள்வி:  இன்றுள்ள தாயக நிலவரங்களை ஒரு மூத்த இயக்க செயற்பாட்டாளனாக எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள் வலுவில் நாங்கள் பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப் பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம் தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.
 
கேள்வி: எவ்வாறு இந்தச் சிக்கலை தமிழ்சமூகம் எதிர்கொள்ளலாம் என எண்ணுகின்றீர்கள்?

பதில்: இதுவொரு நீண்டகால வியூகத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய விவகாரமாகும். வெறும் பிரகடனங்களும் வெற்றுத் தந்திரங்களும், உணர்ச்சிவயப்பட்ட பேச்சுக்களும் இன்றைய ஆபத்தான நிலையிலிருந்து எமது அரசியலை, இருப்பை மீட்டெடுக்காது என்றே நான் நம்புகின்றேன். இவ்வாறான நீண்டகால போராட்டத்திற்கு, அல்லது சந்ததி சந்ததியாக நடத்தப்பட வேண்டியும் வரக்கூடிய ஒரு போராட்டத்திற்கு தேவையான அடிப்படைகளை நாங்கள் இப்போது அத்திவாரமாக இடுதல் வேண்டும். இதற்கான மூலமான தரப்பாய் இருப்பவர்கள் தாயகத்தில் வாழும் மக்கள். புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் அந்த மூலத்தினை பலப்படுத்தும் அடுத்த வட்டம் என்றே நான் கணிப்பிடுகின்றேன். இந்த அடிப்படையில்,

முதலாவது, தாயகத்தில் வாழும் மக்களின் உடனடிப்பிரச்சனைகளை புறக்கணிக்காது, அதற்குரிய முக்கியத்துவத்தினை உணர்ந்து நாங்கள் செயற்படல் வேண்டும்.
இரண்டாவது, சிறைப்பட்டுக் கிடக்கும் எமது போராளிகளைப் பாதுகாத்து அவர்களை வெளியில் எடுத்துவிடும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
மூன்றாவது, தாயகத்தில் செயற்படும் அரசியல் சக்திகளிடையே ஒருங்கிணைப்பினையும், பொது வேலைத்திட்டத்தினையும் ஏற்படுத்தி எதிர்காலம் தொடர்பான நீண்டகாலப் பார்வை கொண்ட போராட்டப் பாதையை வகுக்க வேண்டும். நான் அரசியல் போராட்டத்தினைத்தான் முன்வைக்கின்றேன்.

கேள்வி: புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: முள்ளிவாய்க்கால் என்கின்ற பேரவலத்தினை தந்த சக்திகள் அதன் அடுத்த கட்டமாக புலத்துத் தமிழர்களை அடுத்த முள்ளிவாய்க்கால் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் என்றுதான் நான் மதிப்பிடுகின்றேன். புலத்தில் வாழும் தமிழ்மக்கள் விடுதலைப் போருக்கு தமது பங்களிப்புக்களை நிறைய வழங்கியவர்கள். நிறைந்த கனவுகளைக் கொண்டிருந்தவர்கள். மே18 வரையான இழப்புக்களால் அல்லது தோல்விகளால் துவண்டு, விரக்தியுற்று சோர்ந்து போயுள்ளனர். அவர்களை இன்னமும் துன்பப்படுத்தும் விதத்தில் இணையங்கள், ஊடகங்கள் என்கின்ற பெயரில் மக்கள் விரோத, சக்திகள் நடத்தும் மனோவியற் போரினை இந்த முள்ளிவாய்க்கால் இரண்டிற்கான மூல தந்திரமாக நான் பார்க்கின்றேன்.

கேள்வி: இன்று புலம்பெயர்ந்த நாடுகளின் ஊடகங்களைப் பொறுத்தவரை கே.பி விவகாரமே முக்கியத்துவமான தாக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த கே.பி விவகாரத்தினை துரோகமாக்கி, நீண்டகால செயற்பாட்டாளர்கள், நீங்கள் எனப் பலதரப்பும் கடும் வசைபாடல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: எம் மீதான இவர்களின் வசைபாடல்களை கெட்ட உள்நோக்கம் கொண்டவையாகத் தான் நான் கருதுகிறேன். தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் சிலர் தேசியம் சார்ந்த செயற்பாடுகள் தாம் சார்ந்தோரின் ஏகபோகமாக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அனைவரும் தமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் தமது கட்டமைப்புக்கு வெளியில் தேசியம் சார்ந்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதனை இவர்கள் இப்போது தமது முதன்மைப்பணியாகக் கொண்டுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதனை அவர்கள் எதிர்த்தமைக்கும் இதுதான் காரணமாக அமைந்தது. நாம் இவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு உறுதுணையாக நின்றோம். இப்போதும் இவர்களின் ஏகபோக தேசிய அரசியலுக்கு நாம் உண்மையோடு அச்சுறுத்தலாக உள்ளோம். அதனால் இத்தகைய வசைபாடல்கள் மூலம் எம்மை அரங்கில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் முனைகிறார்கள். இப் பின்னணியில் இருந்துதான் இவர்களின் வசைபாடல்களை நாம் நோக்க வேண்டும்.

நாம் தமிழீழம் பற்றிப் பேசிக்கொண்டு தாயகத்தில் தற்போது கால் வைக்க முடியாது. தாயகத்தில் எதுவும் பரந்த சமூக மட்டத்தில் செய்வதானால் சிறிலங்கா அரசினை மீறியும் செய்ய முடியாது. இது இன்று ஈழத் தமிழர் சமூகம், அதுவும் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சவால். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் தமிழ்மக்களும் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு எந்த வகையான அரசியல் வெளியும் இப்போது அங்கு இல்லை.

புலத்திலுள்ள நாம் தாயகத்தில் வாழும் மக்களுக்காக அவர்களை நெருங்கிச் சென்று கைகொடுக்க முடியாதுள்ளோம். இதனை நடைமுறைச்சாத்தியமாக்குவது எவ்வாறு? இவற்றினைப் பற்றிப் பேசுவதும்இ இவற்றிற்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதிப்பதும்இ இவை பற்றிய கவனத்தினை ஏற்படுத்துவதுமே முதிர்ச்சியான ஊடக அல்லது அரசியல் அணுகுமுறை. இதனை விட்டு விட்டு மக்களின் கவனத்தினை திசைதிருப்புவோரை என்ன வென்று சொல்லது?.

கே.பி இயக்கத்தின் மூத்த போராளி. கைதுக்குப் பிற்பாடு சிங்களத்துடன் ஏதோவொரு தொடர்பாடலைப் பேண வேண்டிய நிலையில் உள்ள ஒரு அரசியல் கைதி. அவரை துரோகி என்பவர்கள் மக்களுக்கும், தியாகத்தினால் கட்டியெழுப்பப்பட்ட எங்கள் தேசத்தின் வரலாற்றிற்கும் பதில் கூறட்டும். அதற்கான பதிலை கே.பி தனது சொல்லாலோ, செயலாலோ வழங்கட்டும். துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

எங்களுக்கு எமது தேசியத் தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன். இன்று குறித்த இணையத்தளங்கள் ஊடாகவும், ஒரு பத்திரிகை ஊடாகவும் சிறீலங்கா அரசின் ஏஐண்டுகளாக செயற்பட்டு மக்களைக் குழப்பும் தீயவர்கள் பற்றி தேவைப்பட்டால் நான் எதிர்காலத்தில் பேசுவேன்.

கேள்வி:  உங்களுக்கு எதிரான தாக்குதலை நாடுகடந்த அரசாங்கத்தினை குழப்ப முன்பு முற்பட்ட அதே ஊடகங்களே நடத்துகின்றன. இன்றும் மீண்டும் உங்களுக்கு எதிராகவும், உருத்திரகுமாரனிற்கு எதிராகவும் வசைபாடல் நடத்தப்படுவதால், இது நாடுகடந்த அரசினை குழப்பும் சதி என்று சொல்லலாமா?

பதில்: எனக்கும் அவ்வாறான ஊகம் உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் ஒரு அரசியல் வேலைத்திட்டம். இன்று ஏற்பட்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்புபட்ட இடைவெளியினை நிரப்பும் ஒரு திட்டமாகவே இதனை பார்க்கின்றேன். நாடுகடந்த அரசாங்கத்தினை எதிர்ப்பது, கொச்சைப்படுத்துவது, இயங்கவிடாது தடுப்பது, தமது கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க வேண்டும் என்று கூறுவது எல்லாமே இந்த அரசியல் வேலைத்திட்டத்தினை தோற்கடிக்கும் நடவடிக்கைகளாகும்.

இதனைத் தேசியத்தின் பெயரால் எதிர்க்கும் தரப்புக்களிடம் எதுவித மாற்று வேலைத்திட்டங்களும் கிடையாது. வெறுமனே பொய்யால் புனையப்பட்ட அறிக்கைகளை விடுவதும், ஒரு சாதாரண தமிழ் சங்கம் செய்யக்கூடிய குடிமக்கள் நடவடிக்கைகயை பெரும் அரசியல் நடவடிக்கையாக கூறுவதும் என்னைப் பொறுத்தவரை உச்சபட்ட ஈகத்தினைச் செய்த மாவீரர்களுக்கு செய்யப்படும் துரோகமாக அல்லது எமது இயக்கத்திற்கு செய்யப்படும் துரோகமாகக் கருதுகின்றேன். நானும், உருத்திரகுமாரனும் இயங்குவது தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் சிலரை அசெளகரியப்படுத்துகின்றது என்பது எனக்கு விளங்குகின்றது.

தலைவர் முன்பொருமுறை கூறியது போன்று உண்மை வெளிக்கிட்டு புறப்படும் முன்னர் பொய் ஒருமுறை ஊர்வலம் வந்து சேரும், ஆனால் உண்மைகள் வெளிவரும் போது அதுவே நிலைத்து நிற்கும்.

கேள்வி: மக்களின் குழப்பத்தினை தீர்ப்பதற்காக சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை ஒருங்கிணைக்கிறீர்களா? கேபிக்கும் உங்களுக்கும், கேபிக்கும் ருத்திரகுமாரனுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

பதில்: கேபி தற்போது முன்னெடுக்கும் பணிகளை நான் ஒருங்கிணைப்பதாக வெளிவந்த தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. அதே போல கே.பி க்கும் உருத்திரகுமாரனுக்கும் தற்போது தொடர்பிருப்பதாக செல்வதிலும் உண்மை இல்லை. தி ஐலன்ட் பத்திரிகையில் கே.பி அவர்களை செவ்வி கண்டதாகக் கூறி அதனைப் பிரசுரித்த அதன் ஊடகவியலாளர் குறிப்பிட்ட ஒரு தகவலினை கே.பி கூறியதாக திரித்து உள்நோக்கம் கொண்ட குழுவொன்று நடத்தும் கேவலமான அரசியலை ஓரமாக வைத்துவிடுங்கள்.

கே.பி கைதுசெய்யப்பட்டு கொழும்பில் இருக்கையில் எனது தலைமையில் கே.பியுடன் செயற்பட்டவர்கள் செயற்படுவதாக தி ஐலன்டின் செய்தியாளர் எழுதுகின்றார். அது கே.பி சொன்னதாக கூட எழுதப்பட்ட செய்தியல்ல. இந்த ஊடகவியலாளர் எதற்காக இவ்வாறு குறிப்பிட்டார் என்பதனையும் அதற்கு இருக்கக்கூடிய உள்நோக்கங்களையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களை முட்டாள்களாக நடத்தும் இந்த இணையப் புலிகளுக்கு மக்கள் தான் பதில் கூற வேண்டும்.

எனக்கு கே.பியினை அறிமுகப்படுத்தியது எனது தலைவர். 1984ல் ஒரு பட்டியலுடன் தலைவர் அவரை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார். 2003 ம் ஆண்டு வரை அவர் இயங்கினார். அவருடன் நாங்கள் இயங்கினோம். சுமார் 18 வருடமாக பொறுப்பில் இருந்த மூத்த உறுப்பினர் அவர். அவருடன் இயக்கத்தின் வெளிநாட்டுக் கட்டமைப்பில் செயற்பட்ட அனைத்து மூத்த செயற்பாட்டாளர்களுக்கும் பல்லாண்டு தொடர்புகள் இருந்துள்ளது. 2003ல் அல்லது 2009 மே19 ற்குப் பிறகு இயக்கத்திற்குள்? புகுந்தவர்களுக்கு அவரைத் தெரியாது.

நான் அனைத்துலக செயலகப் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்ட பிற்பாடு பணிசார்ந்து கே.பி உடன் நெருங்கிய உறவு நிலையை பேணினேன். பிற்பாடு 2009 சனவரியில் கே.பி மீள தலைவரால் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்ட போது அந்த தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 2009 மே18 ற்குப் பிற்பாடு அடுத்த கட்டம் பற்றிய கலந்துரையாடல்களில் உலகின் பல மூலைகளிலிருந்தும் போராளிகள், மூத்த செயற்பாட்டாளர்களை கே.பி ஈடுபடுத்திய போது நானும் அந்த நடவடிக்கைகளிற்காக அழைக்கப்பட்டேன். ருத்திரகுமாரனும் அழைக்கப்பட்டார். கே.பியின் கைதுக்குகுப் பிற்பாடு அவரின் விடுதலைக்காக பிரான்சின் மிக முன்னணியான சட்டத்தரணியினை நான் ஏற்பாடு செய்த போதும் சட்டத்தரணிக்கு கொடுக்கப் பணமில்லாமையால் அது கைவிடப்பட்ட துன்பமும் நிகழ்ந்தது.இதுவே எங்களிற்கு இடையேயான தொடர்பு.

கேள்வி: கேபி குழு என்ற ஒன்று குறித்த ஊடகங்களினால் சொல்லப்படுகின்றதே. அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இது மே18 ற்குப் பிறகு கட்டப்பட்ட கதை. இயக்கத்தினை தெரிந்தவர்களுக்குத் தெரியும் இயக்கத்தினுள் குழுவாதம் அனுமதிக்கப்படுவதில்லை. வேலை சார்ந்த பொறுப்புகளே வழங்கப்படும். கே.பி 20 வருடங்கள் வெளிநாட்டு கட்டமைப்புக்களை கட்டியெழுப்பியவர் என்பதால் பெருந்தொகையான மூத்த உறுப்பினர்களின், அனுபவம் மிக்க உறுப்பினர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தவர். மே18 ற்குப் பிறகு புலிகள் இயக்கத்தினை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்த முற்படும் சக்திகள் இந்த மூத்த, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களை ஓரங்கட்டுவதற்காக் கண்டுபிடித்த சொல் தான் கேபி குழு என்று நான் கருதுகின்றேன்.

இவர்கள் தாம் குழுவாக இயங்கும் காரணத்தினால் என்னவோ எல்வோர் மீதும் குழு என்ற முத்திரை குத்த முற்படுகிறார்கள். இயக்கத்தில் நீண்டகாலம் செயற்பட்டவர்கள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் என்று தம்மை அடையாளப்படுத்தவே விரும்புவார்கள். வேறு ஒரு தனி நபர் பெயரையும் ஏற்றுக் கொள்ளாத மரபு எம்முடையது.

கேள்வி: இயக்கத்தினை சர்வதேச ரீதியாக வழிநடத்தியவரான நீங்கள் இன்றுள்ள செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரை எனக்கு தலைவர் சொல்லித்தந்தது, மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பதே முக்கியமானது என்பது. அதனையே உங்களுக்கும் சொல்ல விரும்புகின்றேன்.

இரண்டாவது விழிப்புடன் இருங்கள். எமக்குள் இருக்கும் புல்லுருவிகள் பலரும் மே18ற்குப் பிற்பாடு தீவிரமாகியுள்ளனர். எனவே விழிப்பு முக்கியமானது.

மூன்றாவது, தலைவர் ஒரு உயரிய பண்பாட்டினை தந்துள்ளார். அது மதிப்பது. மக்களை மதிப்பது, சக உறுப்பினர்களை மதிப்பது என அந்த மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்.
 
கேள்வி: நாடுகடந்த அரசுவின் தேர்தல் முடிவுகள் இரண்டு தொகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான சர்ச்சையும் உங்களுடன் தொடர்புபட்டது. அதுபற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இத் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை உத்தியோக பூர்வமாக வெளியிடாது உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்டோம். அதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு மனேகரனிடம் நம்பிக்கையில்லை என்று பேசினார்கள். நாம் கலந்து பேசி முடிவில் தமிழர் அல்லாத மாற்றினத்தவர்களைக் கொண்ட சுயாதீனமான குழுவொன்றினால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இதற்கான குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சுயாதீனக்குழு பிரான்சுக்கார நிபுணர்களைக் கொண்டது. அதன் விசாரணைகளுக்கு அனைவரும் ஒத்தழைப்புக் கொடுத்தனர். குறித்த இருவர், அதாவது நடுநிலைக்குழுவின் விசாரணையைக் கோரிய இருவர் ஒத்துழைக்கவில்லை. விசாரணை அறிக்கைகள் இப்போது தேர்தல் ஆணைக்குழு மற்றும் உருத்திரகுமாரனின் கைகளில் உள்ளது. அதன் முடிவுகள் விரைவில் மக்களின் முன்பாக வைக்கப்படும்.

எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப் போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப் பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்.

ஸ்ரீ ரங்காவும் ஆதரவு?

sriranga.gif18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல ஊடகவியலாளரான ஜெய் ஸ்ரீ ரங்கா ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை.

parliment.jpgஅரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிராக ஜேவிபி உச்சநீதிமன்றில் வழக்கு பதிவு செய்திருந்தது. அவ்வழக்கில் யாப்பில் மாற்றம் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டு மக்களின் ஆணையை பெறவேண்டும் என வேண்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பினை உச்ச நீதிமன்று அறிவித்துள்ளதாகவும் , அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும் பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையின் அங்கீகாரத்துடன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்சா அரசின் பக்கம்

upeksha.gifபபா என அழைக்கப்படும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்சா சுவர்ணமாலி சற்றுமுன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது 18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஆதவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தின் முன்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்யாப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது

Operation Loan Shark கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தமிழர் சிலர் கைது!!!

Operation_Loan_Shark‘ஒப்ரேசன் லோன் சார்க்’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ்  ஈஸ்ற்ஹாமில் சில தமிழர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் பொருளாதார அறிவு குறைந்தும் வேறு வழிகளில் பொருளாதார உதவியைப் பெற முடியாதவர்கள் சில தனிப்பட்டவர்களிடம் இருந்து கடன் (லோன்) பெறுகின்றனர். வங்கிகள் போன்ற நிறுவனங்களிலும் பார்க்க அதிகப்படியான வட்டிக்கு கடன்பெறுகின்ற இவர்கள் இக்கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தங்கள் கடன் அதற்கான வட்டி மாதாந்தம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் கடன் வழங்கியவர் பல்வேறு அழுத்தங்களையும் மிரட்டல்களையும் கடன் வாங்கியவர்கள் மீது செலுத்துகின்றனர். இதற்கு வன்முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கடன் மற்றும் அதனுடன் தொடர்பான பிரச்சினைகளை பொலிஸ் பிரிவின் ‘ஒப்பிரேசன் லோன் சார்க்’ கையாண்டு வருகின்றது.

சில மாதங்களாக லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஒப்பிரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில தமிழர்களும் வர்த்தக நிறுவனங்களும் மாட்டியுள்ளனர். வட்டி மகேஸ், கணக்காளர் தர்மலிங்கம் போன்றவர்கள் இந்த ஒப்ரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில மாதங்களுக்கு முன்பாக மாட்டிக் கொண்டனர். இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

இந்தப் பொலிஸ் நடவடிக்கையின் உதவியால் நாடு முழுவதும் 13500 பேரின் 25 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சட்ட விரோதமான கடன்கள் இல்லாமற் செய்யப்பட்டு உள்ளது என இந்நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

லண்டன் குரலில் இச்செய்தி வெளியான பின் லண்டன்குரல் உடன் தொடர்பு கொண்ட திருமதி தர்மலிங்கம் தனது கணவர் தவறான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் காணப்பட்டு அவரூடைய பெயர் மீது இருந்த களங்கம் நீக்கப்பட்டதாகவும் திருமதி தர்மலிங்கம் தெரிவித்தார். தனது கணவர் தற்போது தொடர்ந்தும் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாமில் இது தொடர்பான மற்றுமொரு வழக்கு தற்போது நடந்து கொண்டுள்ளது. இவ்விசாரணை வழக்கு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ஹாமில் வதியும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பவர் மீதே ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடராஜா வட்டிக்குப் பணம் கொடுத்ததாகவும் அது பற்றி கடன் பெற்ற ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நடராஜா ஏப்ரல் 2010ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் மறுநாளே விடுவிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இவர் தீபம் தொலைக்காட்சி சித்திரா நாடகம் மூலம் அறியப்பட்டவர். இந்நாடகத்தில் இவரது மனைவியும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இவ்வழக்குத் தொடர்பான காரணங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் பற்றித் தெரியவருவதாவது புகார் வழங்கியவர் நிதி நெருக்கடியில் இருந்த போது தனது இரண்டாவது வீட்டை  வாடகைக்கு வழங்கி முகாமைத்துவம் செய்ய அதனை செலெக்ற் புரொப்பற்டீக்கு வழங்கி உள்ளார். அதன் மூலம் ஏற்பட்ட நட்பினால் தனது நிதி நெருக்கடிக்கு செலக்ற் புரப்பற்டீயின் உரிமையாளர் வி ஜே போஸை அணுகியுள்ளர். அதற்கு முன்னர் சிறு சிறு உதவிகளைச் செய்துவந்த போஸ் தற்போது கேட்ட 5000 பவுண் உதவியை வழங்க முடியாதுள்ள நிலையை விளக்கி உள்ளார். ஆனால் தனது நிதிநெருக்கடியை வலியுறுத்தி வற்புறுத்திக் கேட்கவே வி ஜே போஸ் நடராஜாவை அறிமுகப்படுத்தினார்.

நிதி நெருக்கடியில் இருந்தவர் நடராஜாவுக்கு அறிமுகமில்லாதவராகையால் நடராஜா ஆரம்பத்தில் பணத்தை வழங்கத் தயங்கினார். பின்னர் நகைகயை பொறுப்பு வைத்து 5000 பவுண்களைப் பெற்றுக்கொண்டார். இப்பரிமாற்றம் இடம்பெற்றது 2007ல்.

இந்தப் பரிமாற்றத்தில் நடராஜா கைது செய்யப்படுவதற்கு அண்மை வரை கடனைப் பெற்றுக் கொண்டவருக்கு வழங்க வேண்டிய வீட்டு வாடகையில் இருந்து 150 பவுண்களை செலக்ற் புரப்பற்டீஸ் கழித்து வந்துள்ளது.

மாதங்கள் ஓடியது. தவணைகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்தது. இந்நிலையில் கடனைப் பெற்றுக் கொண்டவர் செலக்ற் புரப்பற்டீஸிடம் வாடகை முகாமைத்துவத்திற்கு வழங்கிய வீட்டை அவர்களிடம் இருந்து மீளப் பெற்றுக்கொண்டார். மாதாந்தம் வழங்கிய 150 பவுண்கள் நடராஜாவுக்கு செல்வது தடைப்பட்டது. கடனை மீளளிக்காத பட்சத்தில் நகைகள் விற்கப்படும் என கடன் பெற்றவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதித் தவணையும் வழங்கப்பட்டது.

இறுதித் தவணை வழங்கப்பட்ட அன்று ஏப்ரல் 2010ல் ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள செலக்ற் புரப்பற்டீஸ், லக்ஸ்மி ஜிவலர்ஸ், மற்றும் நடராஜா வீடு ஆகிய இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்ட ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் அங்கிருந்த ஆவணங்கள் பதிவேடுகள் சிலவற்றை குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர். நடராஜாவும் கைது செய்யப்பட்டார்.

இவ்வட்டிக்கடன் விவகாரத்தில் கடன் பெற்றவரிடம் பொறுப்பாகப் பெற்றுக்கொண்ட நகைகள்  லக்ஸ்மி ஜீவலர்ஸில் விற்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதனாலேயே லக்ஸ்மி ஜீவலர்ஸ் இவ்விவகாரத்தில் தொடர்புபட்டதாகவும் தெரிய வருகின்றது.

இப்பின்னணியில் வழக்குத் தொடர்கின்றது.

தீர்ப்பு: பிரசவத்தின் போது ஏற்பட்ட மரணத்திற்கு கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல.

Kingston_Hospitalசுகதேகி யான ஆண் குழந்தையொன்றை கிங்ஸ்ரன் வைத்தியசாலையில் பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக இறந்தமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுள்ளது. சிறிலங்கா போக்குவரத்து இணைப்பாளர் சசித்ரா கலேலுவ (38) பிராங் அவன்யூ நியுமெய்டனில் வசிக்கும் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் திகதி 1 மணியளவில் இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து மரணமானார். மரணவிசாரணை அதிகாரி டொக்டர் பீற்றர் எலியாஸ் வாக்கு மூலத்தை நெறிப்படுத்தினார்.  திருமதி சசித்ரா கலேலுவவின் மரணத்தைப் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார். அந்நேரம் சசித்ரா கலேலுவவின் கணவரும் பிரசன்னமாயிருந்தார்.

லண்டன் தென்மேற்கு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் போது டொக்டர் மற்றும். பிரசவ வைத்திய நிபணர், பதிவாளர் போனறோர் குழந்தையின் பிரசவத்திற்கு சுகாதார முறைப்படி கருவிகளை பாவித்ததைத் தெளிவு படுத்தினர்.

ஓர் பாதூரமான விசாரணை இந்த மரணம் தொடர்பாக நடந்துள்ளது. டொக்ரர் அந்த நோயாளியின் பெண்ணுறுப்பில் உள்ள ஒரு சிறு நரம்பு இரத்த ஓட்டமின்றி தடைப்பட்டதை விசாரணையின் போது தெரிவித்தார். இந்த முறைப்பாட்டின் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என டொக்டர் எலியாஸ் சசித்திரா கலேலுவவின் கணவரை வினவிய போது, இந்த விசாரணை முடிவை மாற்றியமைக்க முடியுமென்று தான் எண்ணவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்  ஒரு தாதி மாணவியை இரத்தம் ஏற்றுவதற்கு உடனடியாக அதனைக் கொண்டு வரும்படி அழைத்தபோது அவர் 35 நிமிடங்கள் கழித்தே கொண்டு வந்துள்ளார். எப்படி இருப்பினும் இறுதித்தீர்ப்பில் கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல. இங்கு நடைபெற்ற விசாரணையில் கடும் தண்மையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் சமாதானமாகின்றோம் எனத்தெரிவித்தார். கிங்ஸடன் வைத்தியசாலை பேச்சாளர் தமது ஆழந்த அனுதாபங்களை திருமதி கலேலுவ குடும்பத்தினருக்கு தெரிவித்ததுடன் இது ஒரு துரதிஸ்ட விதமான சம்பவம் என்றும் தெரிவித்தார்.

நோயாளிகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் முன்னுரிமையிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது. ஜனவரி மாதம் இவ்வைத்தியசாலை நிர்வாகம் இத்தவறுக்கும், பாதுகாப்பின்மைக்கும் மன்னிப்புக் கேட்டது.