2010

2010

இடம்பெயர்ந்த சகல வாக்காளர்களும் வாக்களிக்க விசேட நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த அறிவிப்பு

Commissioner of Elections Dayananda Dissanayakeஇடம் பெயர்ந்த சகல வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல்கள் தலைமையகம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லையென்றும் தலைமையகம் தெரிவித்தது. யுத்தத்தினால் உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளானவர்களும், தேர்தல் தொகுதிக்கு வெளியில் இடம்பெயர்ந் தவர்களும் வாக்களிக்கவென வெவ்வேறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஷாநாயக்க தெரிவித்தார்.

நலன்புரி முகாம்களிலிருந்து சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்ந்தவர்கள் தாம் வாழும் பகுதியில் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச் சாவடி அமைக்கப் படுவதுடன், ஏனையவர்களுக்குக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப் படுமென்றும் ஆணையாளர் கூறினார்.

தேர்தல் தொகுதிகளுக்கு வெளியில் கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், களுத்துறை உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள், வாக்களிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனினும் அவர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்திருக்க வேண்டுமென்று ஆணையாளர் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேசத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களுக்குத் தனியாகவும், யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்தவ ர்களுக்குத் தனியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் மீளக் குடியமர்ந்தவர்கள் அங்கேயே வாக்களிக்க முடியும்.

சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம்

sarath-jaffna.jpgஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் ஒய்வு பெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

இவருடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க, மேலக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரம் எம் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா தான் பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன் என தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இருப்பதால் அப்பகுதியில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்க வேண்டும் என கூறினார். தேவை ஏற்பட்டால் இராணுவ முகாம்களை இடம்மாற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்யலாம், யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு வலயம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசிய ரணில் விகரமசிங்க, தான் ஒரு சர்வ கட்சி குழுவை அமைத்து அனைத்து இன மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ கூடிய சூழலை ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்.

பாராளுமன்றம் 5 ஆம் திகதி கூடுகிறது

பாராளுமன்றம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை அன்றைய தினம் சமர்பிக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரேரணை முன்னறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு – யாழ்ப்பாணம் – கொழும்பு: தினகரன் சொகுசு பஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்

lax-bas.jpgகொழும்பு – யாழ்ப்பாணம் – கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘தினகரன் அதி சொகுசு பஸ் சேவை’ நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான முதலாவது பஸ் நாளை இரவு 11.00 மணிக்கு புறப்படுகிறது. ஆசன முன்பதிவுகளுக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் 011-2429673 ஆகும். யாழ்ப்பாணத்தில் 021-2225361 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு செய்துகொள்ளலாம்.

ஒரு வழிப் பயணக் கட்டணமாக 1800 ரூபா அறவிடப்படும். இருவழிக்கும் ஆசனப் பதிவு மேற்கொண்டால் 5% வீத கட்டணக் குறைப்பும் வழங்கப்படவுள்ளது. யாழ் – கொழும்பு, கொழும்பு – யாழ் தினகரன் சொகுசு பஸ் சேவையினூடாக குழுக்களாக செல்ல விரும்பும் பயணிகளுக்கு விசேட கட்டண குறைப்பும் வழங்கப்படும்.

யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இலகுவில் செல்ல ஏற்பாடு

யாழ். குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் இலகுவில் சென்று வருவதற்கான நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள ஏனைய பாடசாலைகளைத் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வட மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, பருத்தித் துறை ஹாட்லி கல்லூரி, மெதடிஸ்ட் கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கான போக்குவரத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இளங்கோவன் குறிப்பிட்டார்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் சிறிது தூரத்தை நடந்துசெல்ல வேண்டியுள்ளதால், அவர்களின் அசெளகரியத்தைக் களைய அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உயர் பாதுகாப்பு வலயங்களில் இன்னமும் 51 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட வேண்டியுள்ளன.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பு – சு.க. அமைப்பாளர் ஹில்மி கரீம்

canthira.jpgஅமைச்சர் சந்திரசேகரனின் திடீர் மறைவு இந்நாட்டு தமிழர்களுக்கு மாத்திரமன்றி தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என மாத்தளை மாநகர முதல்வரும் ஸ்ரீல.சு.கயின் கண்டி – மாத்தளை மாவட்ட அமைப்பாளருமான ஹில்மி முஹம்மது கரீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் சந்திரசேகரன் எனது நீண்டகால நண்பன். இந்நாட்டில் வாழும் தமிழ்மொழி பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகுவதுடன் ஒரு புதிய அரசியல் வரலாறும் எழுதப்படும் என்பதில் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்.

மலையக மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருந்த அவர் மலையகத் தமிழர்களுக்கு மாத்திரமல்லாது நாட்டின் அனைத்துத் தமிழர்களுக்காக வேண்டி பாராளுமன்றத் திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் குரல் கொடுத்த ஒரு சிரேஷ்ட தலைமைத்து வத்தை நாடும் குறிப்பாக மலையக மக்களும் இழந்து விட் டார்கள் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.தே.க. அமைப்பாளர் திலக் கருணாரட்ன ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொருளாளரும், பண்டாரகம தொகுதி அமைப்பாளருமான திலக் கருணாரட்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார்.

தமது ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்த களுத்துறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமது ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்பதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

வார்த்தை ஜாலங்களை நம்பி ஏமாற தோட்ட தொழிலாளர் இனியும் தயாரில்லை – பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

vote.jpgமலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது பெறும் சம்பளத்தைக் குறைத்து அவர்களை ஒரே இடத்தில் முடக்கும் வகையிலான கருத்துக்களை எதிர்க் கட்சியினர் முன்வைப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் விசனம் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பெற்றுத் தருவதாகக் கூறும் தொகையைவிடக் கூடுதலான தொகயைத் தொழிலாளர்கள் தற்போது பெற்றுக் கொண்டிருப்பதை குறைக்கப்பார்க்கிறாரா? தொழிலாளர் பெற்றுக் கொண்டிருக்கும் தொகையிலும் கூடுதலான தொகையை மேலும் பெற்றுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், காங்கிரஸைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கொரு தடவை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடு க்கவும் வழிவகுத்துள்ளதாகவும் குறிப் பிட்டார்.

மலையகத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக 10,125 ரூபாவைப் பெற்றுத் தருவதாக எதிர்க் கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். ஆனால், தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாளாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், பொன்சேகா பெற்றுத் தருவதாகக் கூறும் தொகையைவிடவும் தற்போது தொழிலாளர்கள் அதிகமாகவே பெற்று வருகிறார்கள்.

தொழிலாளர்கள் ஒரு மாத்தில் 25 நாட்கள் வேலை செய்தாலே, பொன்சேகா கூறும் தொகையைவிடக் கூடுதலான சம்பளம் கிடைக்கின்றது. எனவே வெறும் வார்த்தை ஜாலங்களை நம்புவதற்கு நம் மக்கள் தயாராக இல்லை. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறுகிறார்கள் என்றும், அதனைவிடக் கூடுதலான தொகையை எதிர்காலத்தில் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கும் என்றும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

ஜனவரி 7 இல் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு ஐ.தே.மு., ஜே.வி.பி. இணைந்து தயாரிப்பு

pr-can.jpgஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனமான பொது வேலைத்திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. இந்த பொது வேலைத்திட்டமானது ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. இரு கட்சிகளும் இணைத்துத் தயாரிக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பி.யோ யார் அதிகாரத்துக்கு வந்தாலும் இந்த பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடத்தப்பட வேண்டுமென்பதில் இரண்டு கட்சிகளும் உறுதிபூண்டிருக்கின்றன.

பொது வேலைத்திட்டத்தில் முக்கியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சந்திரசேகரனின் வெற்றிடத்துக்கு அருள்சாமி?

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் திடீர் மறைவையடுத்து அவருக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் யார் தெரிவு செய்யப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பெ. சந்திரசேகரன் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டார்.

அவருக்கு அடுத்ததாக அப்போது ம.ம.மு. உறுப்பினராக இருந்த முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் அருள்சாமி அதிக விருப்பு வாக்குகள் பெற்றிருந்ததால் இலங்கைத் தேர்தல் சட்டத்தின் கீழ் காலியாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்துக்கு நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார். இது தொடர்பாக அருள்சாமியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டியலில் தனது பெயரே முதலாவதாக உள்ளதாகவும் எனவே தேர்தல் ஆணையாளர் முறைப்படி வர்த்தமானி அறிவித்தல் விடுத்து தன்னை அழைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இதேசமயம் ம.ம.மு. பொதுச் செயலாளர் விஜயகுமார் இது தொடர்பாக அவசரப்படத் தேவையில்லை என்றும் கட்சியின் செயற்குழு கூடி இது தொடர்பாக முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார். அருள்சாமி தற்போது ஜனாதிபதியின் இணைப்பாளராக கடமை யாற்றுவது குறிப்பிடத்தக்கது. மலையக மக்கள் முன்னணி வட்டாரங்களில் அடுத்த சில மாதங்களில் பாராளுமன்றம் தன் ஆயுள் காலத்தை இழக்கவிருப்பதால், அதுவரை அந்த ஆசனத்தை மறைந்த தலைவரை கெளரவிக்கும் வகையில் காலியாகவே விட்டுவிட வேண்டும் என்ற ஒரு அபிப்பிராயம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.