2010

2010

சனல்4 தொலைக்காட்சிக்கு ஜெனரல் அனுப்பிய இரகசிய கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. – அரசாங்கம் குற்றச்சாட்டு

இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பிரிட்டனின் “சனல்4” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்த கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக அரசாங்கம் பூடகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் குறித்து கடுமையாக விமர்சித்து ஜெனரல் பொன்சேகா சனல்4க்கு அனுப்பியிருக்கும் கடிதம் தொடர்பிலேயே அரசாங்கம் இந்த சந்தேகத்தை வெளியிட்டிருக்கிறது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விவகாரம் பற்றி கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும;

“முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்து சரத் பொன்சேகா கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பி.பி.சி.செய்திச் சேவைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் வார ஆரம்பத்தில் அவர் சனல்4  (தொலைக்காட்சிச் சேவை)க்கு இரகசிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு வெந்நீர் மற்றும் குளிரூட்டி வசதிகள் இல்லையென அவர் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூக விடயங்கள் முக்கியமானவையாகும்.

சனல்4 ஐ பார்க்கும் போது, அது கடந்த காலங்களில் புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஆங்கில ஒலிபரப்பாகச் செயற்பட்டுள்ளது என்பதே எமது நம்பிக்கை. அதுமட்டுமல்லாது, இலங்கைப் படையினரை அவமதிக்கும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியதும் அந்த நிறுவனமே. எனினும் அது போலியானதென அரசாங்கம் உறுதி செய்திருந்தது.

தமிழீழ யுத்த வீரனாக கருதப்படும் பிரபாகரனின் ஊடகமான சனல் 4, ஜே.வி.பி. கூறுவது போல் சிங்கள யுத்த வீரனான சரத்பொன்சேகாவின் ஊடகமாக முடிந்தது எப்படி என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. சனல்4 வீடியோவின் இயக்குநர் சரத்பொன்சேகா என்று சந்தேகத்தில் இருந்து கேட்கிறோம்.

சரத்பொன்சேகா கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கடிதத்தில் சோவியத் வழக்கமொன்று இருக்கிறது. இதன் உருவாக்கத்தின் பின்னணி யார் என்பது எமக்கு தெரியும். அந்த கடிதத்தில் சோசலிசப் போக்கொன்று இருக்கிறது. அதில் சரத்பொன்சேகா தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அமைப்பையும் வரைபடமாக வரைந்து அனுப்பியுள்ளார்.

ஜே.வி.பி.யினர் ஒன்றும் இல்லாத நிலையில் ஏனையவர்களை சுரண்டி பிழைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுபோல் இப்போது சரத்பொன்சேகாவையும் அனோமா பொன்சேகாவையும் வைத்து சுரண்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஏனையோரை சுரண்டி பிழைப்பு நடத்துவதற்கு எதிரானதே மார்க்சிஸ கொள்கை. அந்த கொள்கையை பின்பற்றுவதாக கூறும் ஜே.வி.பி.யினர் அதையே மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனக்கு வசதிகள் வழங்கப்படவில்லையென சனல்4 க்கு கூறியதன் மூலம் சரத்பொன்சேகா, அவருக்கு மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த கடிதத்தின் மூலம் அவரது ஒழுக்கம், சட்டம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

மன்னார் பாலம், தாம்போதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைப்பு

mannar.jpgபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் இப்பாலமும், தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன்கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை (தள்ளாடி சந்தி), தாம்போதியும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், இலங்கையில் கடமையாற்றும் ஜப்பான் தூதுவர் குனியோ தகஹசி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு இப் பாலத்தைத் திறந்து வைத்தனர். இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மதவாச்சி, மன்னார், தலைமன்னார் வரையிலான ஏ-14 வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இப் பாலமும், தாம்போதியும் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இரு தசாப்தங்களுக்கு மேலாக அழிவுற்றிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இப்பாலம் இரு வருட காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தையும் தாம்போதியையும் நிர்மாணிப்பதற்கும் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. இதனால் நிர்மாணப் பணிகளை சுமார் நான்கு மாதங்கள் இடை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட் டிருந்தது.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பயனாக இதன் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் பயனாக மன்னார் தீவுப் பகுதியில் வாழுகின்ற மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்த போக்கு வரத்துப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூனின் கூற்று ஐ.நா சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயல் இலங்கைக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது – ஜீ.எல்.

gl-p.jpgஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சகல நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டுமென்பது ஐ.நா. சாசனத்தின் ஜீவநாடியாக உள்ளது. சிறிய நாடுகளின் பாதுகாப்புக்காகவே ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக செயற்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாதென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு அவசியமில்லையென வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொறுப்புகள்’ தொடர்பாக ஆராய்வதெனின், 118 நாடுகளின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாமல், நிராகரிக்க முடியாது. சில நாடுகளின் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான சாட்சியங்கள் இருந்தும், அந்த நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள வெற்றி இன்று சர்வதேச சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கும் இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக ‘நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள் குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இன்னமும் தமிழீக் கோட்பாட்டைக் கைவிடவில்லை.

ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் மாறுபாடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் இவர்கள் இங்கு அரசியல் கட்சிகள் மூலம் மாத்திரமன்றி சிறு அமைப்புகள் ஊடாகவும் முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

2 வது இராணுவ நீதிமன்றுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க முடிவு – இராணுவத் தளபதி தகவல்

jj.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய புதிய நீதிபதிகளின் பெயர்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று பரிந்துரைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள் இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளனரென்றும் குறிப்பிட்டார். இராணுவ சட்டத்திற்கு அமைய இரு இராணுவ நீதிமன்றங்களுக்கு ஒரே நீதிபதியை நியமிக்க அனுமதி இருக்கின்ற போதிலும் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியாயமும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெட்டிக்கொன்று கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரம் நூற்றுக்கணக்கானோர் பார்த்திருக்க சம்பவம்

நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒருவரை மீன்வெட்டும் கத்தியால் வெட்டிக்கொலை செய்த சிலர் கொலையுண்டவரின் இரு கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கண்டி மத்திய சந்தையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பழவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இவ்வாறு பயங்கரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

நண்பகல் 12 மணியளவில் ஆட்டோவில் திடீரென அங்கு வந்த சிலர் அந்த வியாபாரியைப் பிடித்து இழுத்து கத்தியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்தனர்.பின்னரும் ஆத்திரம் தாங்காமல் அவரின் இரு கைகளையும் இறைச்சிக் கடையில் விலங்கை வெட்டுவது போல வெட்டி எடுத்துச் சென்றனர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கி.டீ.பிரேமந்திர (38 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டவராவார்.

கண்டி நீதிவான் சம்பவ இடத்துக்கு மாலை 3 மணியளவில் வந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

மாற்றத்திற்காகத் தமிழர் வாக்களிக்கவில்லை : சுரேன் சுரேந்திரன் (Global Tamil Forum))

Suren Surendiranசிறீ லங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. அதில் பகிரப்பட்ட இறையாண்மை கோரப்பட்டுள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்றும் அவர்கள் சுயநிருணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பங்கீடானது இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஓர் அலகில் சமஷ்டி முறைக் கட்டமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டமும் ஒழுங்கும்இ கல்வி, சுகாதாரம் உட்படச் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றைப் பின்வரும் நிலைமைகளிற் பார்த்தல் வேண்டும்:

“எனினும், பல ஆண்டு காலம் நீடித்து ஏழு மாதங்களுக் முன்னர் முடிவடைந்த போர்க் காலத்தில் அழிந்த தங்கள் சொந்த வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பக்கூட இன்னமும் தொடங்காத இந்த நேரத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கத் தமிழர் விரும்பவில்லை. அவர்கள் இராணுவத்தினதும் ஒட்டுப்படைகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் மனித உரிமைமீறல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஓரு கூறென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பொதுவாக அச்சத்துடன் வாழ்கின்றனர்.” (http://www.guardian.co.uk/commentisfree/2010/jan/08/tamils-election-video-war-crimes).

சனவரி 26, 2010 இல் நடைபெறவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி நான் சனவரி 8, 2010இல் மேலே தரப்பட்டுள்ளதை எழுதியிருந்தேன். சிறிலங்காவில் வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழருக்கு அக்கறை குறைவு.: சுரேன் சுரேந்திரன்அத் தேர்தலில் வாக்களித்தோரின் தேசிய சராசரி 75%ஆக இருந்தும் யாழ் மாவட்டத்தில் தேர்தலில் பங்குபற்றியோர் தொகை (அஞ்சல் வாக்குகள் உட்பட) 25% ஆகவே இருந்தது என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. (http://www.slelections.gov.lk/presidential2010/AIVOT.html).

இந்நிலையில் சிறீ லங்காவில் நிலைமைகள் மோசமடைகின்றன என மனிதவுரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய அறிக்கை சிறீலங்கா அரசைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது. சிறீலங்கா அரசோ அல்லது அதனுடன் நெருக்கமாவுள்ள ஒட்டுப்படைகளோ கேள்விமுறையற்ற கொலைகளுடனும் ஆட்காணாமற்போதலுடனும் தொடர்புடையன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் தொந்தரவு செய்யப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் போரினால் பாதிப்புற்ற பகுதிகளிலேயே ஆட்காணாமற்போதல் மிகக்கூடிய தொகையில் உள்ளதென்றும் நூற்றுக் கணக்கானோர் காணாமற்போயுள்ளனர் எனக் கணிக்கப்பட்டுள்ளதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில கிழமைகளுக்கு முன்தான் சீறீலங்காவில் நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் பெறுபேறுகள் பற்றிய வரைபடமானது  இலங்கைத் தீவு இனவாரியாக இரு துருவங்களாகப் பிளவுபட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sri_lankan_presidential_election_2010).

வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியனவும் மத்திய மாகாணத்தில் தமிழர் பல தலைமுறையாக வாழ்ந்துவரும் நுவரேலியா மாவட்டமும் பொன்சோகாவிற்கு வாக்களித்தன. பெரும்பான்மையான மற்றைய மாகாணங்கள் இராசபக்சவிற்கு வாக்களித்தன. இரு கொடியவர்களில் பொன்சேகா சற்றுக் குறைந்த கொடியவர் எனத் தமிழர் பொதுவாகக் கருதினாலும் பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மேல் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் நம்பிக்கை இழந்துவிட்டதென்பதையும் தேசியப் பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றலோ நேர்மையோ அவருக்கில்லை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோன்று பெரும்பான்மைச் சிங்களச் சமூகமும் இரு கொடியவர்களில் எவர் தாம் விரும்புகின்ற அதிதீவிர தேசியவாதி என்பதையும் இனத்துவேசம் கொண்டவர் என்பதையும் இத்தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

சிறீ லங்காவின் பொது ஆட்சிமுறையானது கருத்து வேற்றுமையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அப்படியானவர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் என்பதையும் பல ஊடகவியலாளரும் அரசியல்வாதிகளும் கடத்தப்பட்டமையும் கொலை செய்யப்பட்டமையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை இராசபக்ச சிறையிலடைக்கத் தீர்மானித்துவிட்டார் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாகி விட்டது. தனி ஒருவரோ சமூகமோ கட்சியோ பிரிவினையை ஆதரிப்பதை நாட்டின் அரசியல் யாப்பே தடைசெய்கின்றது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டில் அதாவது தாயகம், தமிழர் தேசம், தமிழர் இறையாண்மை மற்றும் தமிழர் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஆணித்தரமாக ஆதாரமாகக்கொண்டு அம்முன்னணி அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. 

1977 ஆம் ஆண்டில் (பிரிவினைனயை எடுத்தியம்புவதைத் தடைசெய்கின்ற அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் செய்யப்படுமுன்) இலங்கையிலுள்ள தமிழர் இலங்கைத் தீவில் தமெக்கென்ற ஒரு தனிநாடு வேண்டும் என்ற தம் வேட்கையை எவ்வளவு வலுவாக எடுத்துக் காட்டினரோ அதேபோன்று வலுவுடன் உலகெங்குமுள்ள புலம்பெயர்ந்த தமிழர் தாம் குடிகொண்ட நாடுகளில் பக்கசார்பற்ற மேற்பார்வையுடன்கூடிய கருத்துக் கணிப்புகளை நடத்தி அதே வேட்கையை எடுத்துக் காட்டி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வண. எஸ்.ஜெ. இமானுவேல் அடிகளார் அவர்கள் பரிகாரமாக அல்லாது ஒரு தந்தையின் வழிகாட்டலாகத் தமிழ் உடன்பிறப்புகளுக்கு அண்மையில் எழுதிய மடலின் ( http://globaltamilforum.org/userfiles/file/GTF_Letter_from_President_to_Tamils_10_March_2010__-_Tamil_Version_-_Final.pdf ) ஒரு பகுதியைக் இங்கே மேற்கோள் காட்டுகின்றேன்:

“பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே  எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம் வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் பொழுது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம்  இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.”

இலங்கையின் ஆட்சேபனையை ஐ.நா ஏற்கவில்லை. தாமதமின்றி நிபுணர் குழுவை நியமிக்கப்போவதாக அறிவிப்பு – இலங்கையின் நிலையில் மாற்றமில்லை.

un-secretary-general.jpgஇலங்கை அரசாங்கம் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்திருப்பதற்கு மத்தியில் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர்கள் குழுவை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும், அக்குழுவினை தாமதமின்றி நியமிக்கப் போவதாகவும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா. வில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கான உரிமை தமக்கிருப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் இந்த நடவடிக்கை பொருத்தமற்றதும் அவசியமில்லாததொன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாத முற்பகுதியில் கூறியிருந்தார்.

பான் கீ மூன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் உத்தேச நிபுணர் குழுவானது இலங்கையின் இறைமையைப் பாதிக்காது என்றும் தெரிவித்தார். கடந்த மே மாதம் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பான் கீ மூனும் கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையை அடியொற்றியே உத்தேச நிபுணர் குழு அமைக்கப்படும் ஏற்பாடு என்றும் மாதாந்தம் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டின்போது பான் கீ மூன் தெரிவித்ததாக ஐ.நா. செய்திச்சேவை நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

நிபுணர் குழுவை அமைக்கும் நடவடிக்கையானது அழைக்கப்படாததும் பொருத்தமற்றதுமான நடவடிக்கையென ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்த நிபுணர் குழுவை அமைப்பதை நிறுத்துவதற்கான முயற்சியாக பல நாடுகளிடம் இலங்கை ஆதரவை கோரியிருந்தது. கடந்த வாரம் அணிசேரா நாடுகள் அமையத்தின் ஒத்துழைப்பு பிரிவின் தலைவரும் ஐ.நா. விற்கான நிரந்தர பிரதிநிதியுமான கே.அப்டலாடிஸ்,  பான் கீ மூனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். “தனிப்பட்ட நாடுகளை இலக்குவைத்துச் செயற்படுவதை அணிசேரா அமையம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்த நடவடிக்கை அணிசேரா அமையத்தினதும் ஐ.நா. வினதும் சாசனங்களுக்கு முரணானது எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை,  நியூயோர்க்கில் ஊடகங்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பான் கீ மூன்,  சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பரிகாரம் காண்பதற்காக பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவது தொடர்பான அம்சத்தை கூட்டறிக்கை உள்ளடக்கியுள்ளதெனக் கூறியுள்ளார்.

நான் அமைக்கும் குழுவானது தரம், முக்கியமான விடயங்கள் என்பவை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்கும். சர்வதேச ரீதியாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான வழிகாட்டலை கொண்டதாக இது விளங்கும். இந்தக் குழுவானது எனக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

அதேசமயம்,  நிபுணர்கள் குழுவின் நோக்கத்தின் தன்மை குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தன்மை அணிசேரா அமையத்தின் கடிதத்தில் காணப்படுவதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.”ஐ.நா. வின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் எனக்குள்ள அதிகார எல்லைக்குள் அந்த அமைப்பை ஸ்தாபிப்பதென்ற தீர்மானத்தை நான் கொண்டுள்ளேன். இந்த அமைப்பானது இலங்கையின் இறைமையை எந்த வழியிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளார்.

நிபுணர் குழு அவசியமற்றது உறுதியான நிலைப்பாட்டில் கொழும்பு 

இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதியாகத் தெரிவித்திருக்கும் நிலையில்,  அத்தகையதொரு குழு அவசியமில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான தனதுநிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அறிவித்திருக்கிறது.

ஐ.நா. செயலாளர் நாயகம் தற்போது தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கும் நிலைப்பாடு மாற்றமடையாதென்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

நிபுணர் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பரிசீலனை செய்து வருவதாக ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹண கொழும்புக்கு அறிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டை மட்டுமே நாம் அறிவோம் என்று சமரசிங்க மேலும் கூறியுள்ளார். இலங்கை மற்றும் அணிசேரா அமையம் ஆகியன தெரிவித்திருக்கும் ஆட்சேபனைகளின் மத்தியில் நிபுணர் குழுவை அமைப்பதை தான் முன்னெடுக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விருப்பு வாக்குகளுக்காக மோதும் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை

m-s.jpgவிருப்பு வாக்குக்காக மோதலில் ஈடுபடும் ஐ.ம.சு முன்னணி வேட்பாளர் களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதல்களில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு தேர்தலின் பின்னர் அமைச்சுப் பதவிகளோ அல்லது வேறு உயர் பதவிகளோ வழங்கப்படமாட் டாது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரி வித்த அமைச்சர், சில மாவட்டங்களில் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் விருப்பு வாக்குக்காக மோதிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எனக்கும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐ. தே. கவின் வேண்டுகோள் தேர்தல் ஆணையரால் நிராகரிப்பு

sri-lanka-elections.jpgஎதிர் வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளை எண்ணும் நிலையங்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்துக்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையாளர் நேற்று நிராகரித்தார்.

நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ததினத்தன்று எந்தவொரு அரசியல் கட்சியும் இவ்வாறான வேண்டுகோளை முன்வைக்கவில்லை என்று கூறியே தேர்தல் ஆணையாளர், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களில் நிறுத்தப்படுவதை நிராகரித்துள்ளார்.

சரியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நிறுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் கோரியிருந்தது.

எனினும், இவ்வாறான வேண்டுகோள் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த தினத்தன்றே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய தேர்தல் ஆணையாளர், அந்த வேண்டுகோளை நிராகரித்தார்.

மலையகத்தில் முழுமையான அபிவிருத்தி பத்தாண்டு கால செயல்திட்டம் பூர்த்தி வெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு

sri-lankas.jpgமலைய கத்தில் சகல துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பத்தாண்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்துறை அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, சுகாதார, கல்வித்துறை மேம்பாடு, விளையாட்டுத்துறை அபிவிருத்தி என முழுமையான செயல் திட்டத்தைக் கொண்ட நகல் வரைவு அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்டு அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், அடுத்த வரவு – செலவுத் திட்டத் துடன் நிதியொதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படு த்தப்படுமென்று கூறினார்.

இதேவேளை, மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்கான மூலதனத்தை வெளிநாடுகளிலிருந்து நேரடியாகப் பெறுவதற்கும் வழிவகைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. அந்த வகையில் யூ. என். டி. பீ. 20 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள தென்றும் பிரதியமைச்சர் கூறினார்.

தவிரவும், இந்திய அரசாங்கமும் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதியளித் துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். மலையகத்தில் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக இந்திய பல்கலைக்கழக ங்களின் கிளைகளை மலையகத்தில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குறுதி அளித்ததற்கமைய 500 வீடுகளைக் கூடிய விரைவில் நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அநேநேரம், மலையகத்தில் போக்குவரத்துத் துறையில் நிலவும் சிரமங்களைக் களையும் பொருட்டு மேலும் 30 பஸ் வண்டிகளை விரைவில் பெற்றுக் கொடுக்கவும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே, 20 பஸ் வண்டிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிற்துறையில் எதிர்காலத்தில் 10%ற்கும் குறைவானவர்களே தொழில்புரியும் நிலை உருவாகும். அதற்கு ஏற்றவாறு பெருந்தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக மாற்றும் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டு மென்றும் பிரதியமைச்சர் கூறினார்.