2010

2010

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் – ஜெயலலிதா பரிந்துரை

1jaya.jpgஇலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னரே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக அநாதைகளாக அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் இலங்கையில் போர் முடிந்தவுடன் கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு வந்தனர்.

இலங்கை ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச்சென்றார்.இலங்கை ஜனாதிபதி வருகிறார் என்றவுடனேயே இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80,000 இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென பிரதமருக்கு வழக்கம் போல கடிதம் எழுதினார் கருணாநிதி.உடனே இந்தியப் பிரதமரும் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி தன்னிடம் உறுதி அளித்ததாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தமிழ்ப் பெயரில் இருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக்கூற முயற்சி நடப்பதாகவும் போரின்போது சிதைந்துபோன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டித்தர நடவடிக்கையெடுக்காமல் புத்த விகாரைகள் புதிது புதிதாகக் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபா மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபா நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்தளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

2009 ஆம் ஆண்டு தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படுமென்று உறுதியளித்தார் இலங்கை ஜனாதிபதி.

தற்போது, இந்தியப் பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதியளித்திருக்கிறார். இந்த உறுதிமொழி செயற்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் தெரிவித்துள்ள திட்டங்கள்:

1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.

8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.

11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.

12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.

15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.

17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Dinamani

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

kp.jpgஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தில் பயிர்ச் செய்கை உரமானியங்கள் வழங்க தீர்மானம்; காணிகள் வழங்கவும் ஏற்பாடு – பசில்

tr.jpgவட மாகாணத்திலுள்ள சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தின் போது பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு, காணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஸி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று முன்தினம் கையளித்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்:-

வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மாத்திரம் வழங்கியதுடன் அரசாங்கம் விட்டுவிடவில்லை. தற்போது அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், விவசாய, வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

படை வீரர்கள் வடக்கை விடுவித்ததன் மூலம் வடக்கும், தெற்கும் இணைக்கப் பட்டுள்ளன. உள்ளங்கள் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேச மக்களின் நலனைக் கருத்திற் கொண்டும் அரசாங்கம் மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. இலங்கைக்கு மிக நீண்ட காலமாக எல்லா நிலைமைகளிலும் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு உதவ முன்வரும் பல நாடுகள் உதவிகளை வழங்குவதுடன், எம்மை கண்காணிக்கவும், எம்மீது அழுத்தம் கொடுக்கவும் முற்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் நின்றும் மாறுபட்ட கொள்கையைக் கொண்டது ஜப்பான். அது எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இதற்காக இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தற்பொழுது சுமுகமான சூழல் காணப்படுகின்றது. எனவே, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி உரையாற்றுகையில்:-

வட மாகாண மக்களின் வாழ் வாதாரத்தையும் விவசாயத்துறையையும் மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம், தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கும். நாங்கள் விவசாய உபகரணங்கள், இயந்திரங்களை இந்த மக்களுக்காக வழங்கி வருகின்றோம். விவ சாயத்துறையை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றார்.

விவசாயத்துறை மேம்பாட்டின் மூலமே அந்த நாட்டில் அபிவிருத்தி ஏற்படுகின்றது. விவசாயம் என்பது அபிவிருத்தித்துறைக்கான ஒரு மைல் கல்லாகும்.இலங்கைக்கு நான் பல தடவைகள் விஜயம் செய்துள்ளேன். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன். அவை பயனளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் தங்களது பாரிய அர்ப்பணிப்புக்களின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பான் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கும் என்றும் அகாஷி தெரிவித்தார்.

வட பகுதி அகதிகளுக்கான அமெரிக்க உதவி 2.25 மில்லியன் டொலரால் அதிகரிப்பு

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடமாகாண மக்களின் மீள்குடியேற்றத்துக்கான நிதி உதவியை 2.25 மில்லியன் டொலரால் அதிகரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் 9000 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வீடுகளைக் கட்டுதல், மீள்குடியேற்றம் சம்பந்தப்பட்ட ஏனைய இதர நலன்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்காக இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும். இந்நிதிப் பங்கீடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தால் மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னர் மீள்குடியேற்ற முன்னெடுப்புகளுக்காக அமெரிக்கா 33மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்ட அலுவலகம் கிளிநொச்சியில் மீண்டும் திறப்பு

கிளிநொச்சியில் உலக உணவுத் திட்டத்தின் அலுவலகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற கடும் மோதலில் இந்த அலுவலகம் சேதமடைந்த இரு வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செய்திச் சேவை தெரிவித்தது.

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை

kuwait.jpgகுவைத் இளவரசர் ஷேக் பாசல் (52), அவரது மாமாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசரின் உடல் நேற்றே அடக்கம் செய்யப் படுமென குவைத் அரசு தெரிவித்திருந்தது. கொலை குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை துப்பாக்கியால் சுட்டும் குவைத் இளவரசர் சையிக் பாசல் தப்பி விட்டார்.

தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12 வது அரசர். ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனக்கைதிகள் இலங்கையில் இருப்பதாக ஜெயலலிதா கூறுவது அதீத கற்பனை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பு

1jaya.jpgஇலங்கையில் ஆயிரக்கணக்கான சீனக் கைதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தாகவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெவித்துள்ள கூற்றை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஜெயலலிதா கூறுவதைப் போன்று இலங்கையில் சீனக் கைதிகளோ அல்லது வேறு நாட்டின் கைதிகளோ இல்லையென்றும் தொழிலாளர்களே கடமையாற்றுகிறார் களென்றும், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பல்வேறு செயற்றிட்டங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்குக் குறுகியகாலம் மட்டுப்படுத்தப்பட்ட வீசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வீசா காலம் முடிவடைந்ததும் நாட்டைவிட்டுச் சென்று விடுவார்களென்றும் அவ்வதிகாரி கூறினார்.

வெவ்வேறு காரணங்களின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் சட்ட ரீதியாகக் கைதிகளாக உள்ளதைத் தவிர வேறு நாடுகளின் கைதிகள் இலங்கையில் எந்த நிலையிலும் கிடையாதென்று வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதைப் போன்று சீனப் பிரஜைகள் இலங்கையில் பணியாற்றுவதால், இந்தியாவுக்கோ தமிழகத்திற்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாதென்று தெரிவித்த, அவ்வதிகாரி ஜெயலலிதா தெரிவித்திருக்கும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார்.

இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உளவு பார்ப்பதற்காகவே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்று முன்தினம் (18) ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் சீனக் கைதிகள் பணியாற்றுவது இந்தியாவுக்கு விசேடமாக தென்னிந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று குறிப் பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நட்புறவு நிலவிய 1960களில் சீனா போர்த் தொடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு.

india1.jpgஆசிய கிண்ண நேற்றைய போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணியை இறுதிநேரத்தில் வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்று இறுதிநேரத்தில் வென்றது.  இலங்கை. இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளன்

11,000 அரிசியில் திருக்குறள்; செம்மொழி மாநாட்டுக்கு சாதனை

செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவத்துடன் கூடிய 1330 திருக்குறளையும் 11 ஆயிரம் அரிசியில் வரைந்து கோவை ஒவிய ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி தொடங்கி 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பலர் பல்வேறு சாதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் கோவை உப்பிலியாளையத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் எம். மனோகரன் என்பவரும் அரிசியில் திருக்குறள் முழுவதையும் எழுதி சாதனை படைத்து உள்ளார். அன்னை தமிழுக்கு அணி செய்யும் வகையில், ஏதாவது ஒரு வகையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வாய்ப்பாக வந்தது.

இதனால், எனக்குள் இருந்த எண்ணம் செயலாக மாறியது. அந்தச் செயல் தற்போது சாதனையாக உருவெடுத்து உள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு சினமான திருவள்ளுவரை மைய மாக வைத்து அவரை சுற்றிலும் அறம், பொருள், இன்பத்தை உணர்த்தும் 1330 திருக்குறளையும் அரிசிகளின் மீது எழுதினேன். ஒவ்வொரு அரிசியிலும் ஒரு வார்த்தை இருக்கும். மிகவும் நுட்பமான எழுத்தை, நுட்பமான பொருளான அரிசியில் எழுதுவதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. சிறு இடுக்கியால் அரிசியை பிடித்துக் கொண்டு, லென்சை பயன்படுத்தி எழுத்துக்களை எழுதினேன்.

இந்த எழுத்துக்களை எழுதுவதற்கு ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேகமான இங்க், மற்றும் பேனாவை பயன்படுத்தினேன். கடந்த மாதம் 17ம் திகதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையிலும், பிள்ளையார் பீடம் மணி வாசகம் அடிகளார் முன்னிலையிலும் எனது சாதனை முயற்சியை தொடங்கினேன்.

செம்மொழி மாநாட்டு இலட்சினையை (சின்னம்) உருவாக்க 9670 அரிசிகளும், எண்களுக்கு 1330 அரிசிகளும், மொத்தம் 11 ஆயிரம் அரிசிகள் தேவைப்பட்டன.

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தை அடுத்து ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பிரசல்ஸ் சென்று இலங்கை சார்பில் நியாயங்களை முன்வைத்திருந்தனர்.