2010

2010

மரணத்தின் வாசனை: போர் தின்ற சனங்களின் கதை : என் செல்வராஜா, (நூலகவியலாளர்)

Smell_of_Death_Book_Coverஇளம் படைப்பாளி, த.அகிலன் எழுதியுள்ள மரணத்தின் வாசனை என்ற அருமையானதொரு சிறுகதைத் தொகுப்பு நூலொன்று வெளிவந்துள்ளது. “போர் தின்ற சனங்களின் கதை” என்ற உப தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் த.அகிலன், ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 1983இல் வடபுலத்தில் பிறந்தவர். மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இன்று கொள்ளத்தக்கவர். தான் புலம்பெயர்ந்து வந்தபின்னர், உறவினருடன் அவ்வப்போது மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களினூடாகத் தன் செவிகளுக்குள் வந்துசேர்ந்த பன்னிரண்டு மரணச்செய்திகளின் வாயிலாக விரியும் உறவின் பரிமாணமே இச்சிறுகதைகளாகும். ஒவ்வொரு கதையும் ஒரு மரணத்தை மட்டுமல்லாது, அந்த மரணத்துக்குரியவரின் வாழ்வு – அவ்வாழ்வினோடு தனது வாழ்வு பின்னப்பட்ட சூழல் என்பன மிக அழகாகவும் உணர்ச்சிகரமாகவும் போர்க்கால இலக்கியமாக இச்சிறுகதைத் தொகுதிக்குள் பதிவாகியுள்ளன. இந்நூல் சென்னையிலிருந்து வடலி வெளியீடாக 180 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது பதிப்பு ஜனவரி 2009இலும், 2வது பதிப்பு மே 2009இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரு சிறுகதைகளும், முன்னதாக அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தில் மரணத்தின் வாசனை என்ற தொடராக வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரையையும் அப்பால் தமிழ் இணையத்தள நெறியாளரான திரு.கி.பி.அரவிந்தன் அவர்கள் பாரிசிலிருந்து வழங்கியிருக்கிறார்.

அவர் நூலுக்கு வழங்கிய தனது முன்னுரையில் குறிப்பிடும் சில வரிகளை வாசகர்களுடன் நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.

“மரணத்துள் வாழத்தொடங்கிய ஈழத்தமிழ் சமூகத்தில் 1983இல் பிறக்கும் த.அகிலன் எதிர்கொள்ளும் மரணங்களே, அம்மரணங்கள் வழியாக அவனுள் கிளறும் உணர்வுகளே இவ்வெழுத்துக்கு வலிமையைச் சேர்க்கின்றன. மரணத்தின் வாழ்வினுள் பிறந்து அதன் வாசனையை நுகர்ந்து வளரும் ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகவே த.அகிலன் எனக்குத் தென்படுகின்றான். அந்தத் தலைமுறையின் எண்ணத் தெறிப்புகளே இங்கே எழுத்துக்களாகி உள்ளன. தந்தையைப் பாம்புகடித்தபோது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தடுக்கின்றது. அப்படி அதன் பின் அகிலன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மரண நிகழ்வின் பின்னாலும் இராணுவ ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்கள் தடம் பதிக்கின்றன. இந்த மரணத்தின் வாசனை என்பதே ஆக்கிரமிப்பின் நெடிதான். மரணத்தினுள் வாழ்வு என்பதன் ஓரம்சம் இராணுவ ஆக்கிரமிப்பு என்றால் அதன் அடுத்த அம்சம் ஊர்விட்டு ஊர் இடம் பெயர்தல். அகிலன் ஊர்விட்டு ஊர் இடம்பெயர்கிறான் காடுகள் ஊர்களாகின்றன. ஊர்கள் காடுகளாகிப் போகின்றன. அலைதலே வாழ்வாகிப் போகின்றது.” இது கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் அகிலனின் நூலுக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதியாகும்.

Smell_of_Death_Book_Coverத.அகிலனின் மொழிநடை வித்தியாசமானது. இடையிடையே ஈழத்தமிழரின் பேச்சு வழக்கில் கலந்து அமைந்தது. இந்த மொழி வழக்கில் இடையிடையே இயல்பாகக் கலந்துவரும் அங்கதச் சுவையே அவரது சிறுகதைகளுக்கு வெற்றியைத் தேடித்தருகின்றது என்று நம்புகின்றேன். தமிழகத்தில் வெளிவந்துள்ள இந்த ஈழத்து நூல் வெற்றிகரமான சந்தை வாய்ப்பினையும் அங்கு பெற்று இரண்டாவது பதிப்பும் வெளிவந்திருக்கின்றது என்பது அவர் பயன்படுத்தியுள்ள சுவையான ஈழத்து மொழி நடையை தமிழக வாசகர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை எமக்கு உணர வைக்கின்றது. இந்த நூலின் தொடக்கத்தில் சொல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சில பிராந்திய சொற் பிரயோகங்கள் ஈழத்து வாசகர்களையே விளக்கக் குறிப்பினை நாடவைக்கும் என்பதால், தமிழகத்தில் வெளியிடப்படும் ஈழத்தமிழரின் பிராந்திய மொழிவழி நூல்களுக்கு சொல் விளக்கக் குறிப்புகள் தவிர்க்கமுடியாதவையாகும்.

இந்நூல் ஈழத்தின் போர்க்கால சமூக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தினை எம் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. அந்தச் சூழலில் அகிலனுடன் வாழ்ந்துவந்துள்ள எமக்கு, இன்று சிறுகதைகளாக வாசிக்கும்போது, உணரப்படும் பகைப்புலங்கள் பல நினைவுகளை கனத்த நெஞ்சுடன் அசைபோட வைக்கின்றன. ஒவ்வொரு கதையை வாசித்த பின்னரும் நீண்டநேரம் அந்த அசைபோடல் எமது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் நிலைத்து நின்று குறுகுறுக்கின்றது. மரணத்துள் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் சமூக வாழ்வின் ஒரு பக்கத்தை தமிழகத்தின் வாசகர்கள் உணர்வுபூர்வமாகத் தரிசிக்கவும் இந்நூல் வழிகோலுகின்றது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் – குறிப்பாக புலம்பெயர் இலக்கிய வரலாற்றின் ஒரு பரிமாணத்தை இந்நூல் பதிவுசெய்கின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நூல் இந்திய விலையில் 125 ரூபாவாக தமிழகத்திலும், வடலி வெளியீட்டாளர்களின் இணையத்தளத்திலும் விற்பனைக்குள்ளது.

கொழும்பு வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அடித்துக் கொலை!

கொழும்பில் வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுச்செட்டித்தெரு வீடொன்றில் வேலை செய்து வந்த வெள்ளைச்சாமி சீதாராணி (வயது 44) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டு உரிமையாளரும் அவரது மாமியாரும் புதுக்கடை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், அதன் மத்திய மாகாணசபை உறுப்பினரான முரளி ரகுநாதனும் கண்காணித்து வருவதாக  அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்செட்டித்தெருவிலுள்ள தொடர்மாடி வீடொன்றில் குறித்த பெண் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்ததாகவும் வீட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் களவு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கினால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவிற்கு வருவோர் குறிப்பிட்ட உடைகளை அணிந்தே வரவேண்டும். இல்லாவிட்டால் ஆலயத்திற்குள் அனுமதி இல்லை.

Nallur_Templeநல்லூர் திருவிழாவில் இம்முறை புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் ஆரம்பமாகி நடைபெறவுள்ள நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பெண்கள் சேலை, நீளப்பாவாடை சட்டை, தாவணி ஆகிய உடைகளை அணிந்து வந்தால் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். சுடிதார் முதலான வேறு உடைகளை அணிந்து வருபவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண்கள் வேட்டி அணிந்து வரவேண்டும். காற்சட்டை உடபட்ட வேறு உடைகளில் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Nallur_Templeஎதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் திருவிழாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக நேற்று (16-07-2010) யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைறேறப்பட்ட முடிவுகளின் படியே இவை அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்னிலங்கையிலிருந்து ஏராளமான பெரும்பான்மை இனத்தவர்கள் இத்திருவிழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும் உடைகள் குறித்து தென்பகுதி பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரம் செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கப்பிரதிட்டை செய்யும் பக்தர்களுக்கு, நோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வீதிகளில் மணல் பரவப்படும். தினமும் அம்மண் பரிசோதனை செய்யப்படும். ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாட எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுகாதாரம், குடிநீர்விநியோகம் முதலான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர் எனக்கூறி கிளிநொச்சி மக்களிடம் பணம் வசூலித்தவர் பிடிபட்டார்.

வங்கி ஊழியர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தவர் கிளிநொச்சிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் லிங்கேஸ்வரன் என்ற இந்நபர் கிளிநொச்சியில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் தம்மை வங்கி ஊழியர் எனக்கூறிக்கொண்டு, போலி ஆவணங்களைக் காட்டி பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கும் தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற ஊழியர்கள் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நபரிடமிருந்து. 20ஆயிரத்து 800 ரூபா பணம், போலியான வங்கி ஆவணங்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (16-07-2010) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட இந்நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பி.சிவகுமாரன் உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு நகைகள் அபகரிப்பு. கோப்பாயில் சம்பவம்!

வீட்டில் குழந்தையுடன் தனித்திருந்த பெண்ணைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்ற சம்பவம் கோப்பாய் தெற்கில் நடைபெற்றுள்ளது. விஜயகுமார் வதனி என்ற இளம் தாயே வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். நேற்று (16-07-2010)  முற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கணவர் வழமை போல் வேலைக்குச் சென்ற பின் கைக்குழந்தையுடன் வீட்டிலிருந்த குறித்த பெண் தலைக்கவசம் அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கத்தி வெட்டுக்குள்ளானார். அப்பெண் கூக்குரலிடவே வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். நெஞ்சுப்பகுதியிலும், இருகைளிலும், கால்களிலும் கத்திவெட்டுக் காயங்களுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தெஹிவலை, கல்கிஸை டெங்கு பிரதேசங்களாகப் பிரகடனம்!

dengue22222.jpgதென்னிலங்கையில் தெஹிவளை. கல்கிஸை பிரதேசங்கள் டெங்கு நோய் அபாயப் பிரதேசங்களாக பிரடனப்படுத்தப்பட்டுள்ன. கடந்த யூன் மாதமும், நடைபெறும் யூலை மாதமும் இப்பகுதிகளில்  டெங்கு நோயாளிகள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். இப்பிரதேசங்களில் இந்நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பான அறிவறுத்தல்கள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கல்கிஸை மாகநரசபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி. மாங்குளத்தில் பிராந்திய அஞ்சல் நிலையங்கள் அமைக்கப்படும்

Post_Box_SLகிளிநொச்சியிலும் மாங்குளத்திலும், நவீன வசதிகள் கொண்ட பிராந்திய அஞ்சல் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் வி.குமரகுரு தெரிவித்துள்ளார். தபால்கள் சேகரிப்பு, தரம்பிரிப்பு உட்பட சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடியதாக இப்பிராந்திய அஞ்சல் அலுவலகம் இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இப்பிராந்திய அஞ்சல் அலுவலகங்களுக்கான கட்டட வேலைகள் விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் மக்களிடம் மீளளிக்கப்பட மாட்டாது” – அமைச்சர் ரம்புக்வெல -“உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்” – அமைச்சர் டக்ளஸ்

Douglas DevanandaKeheliya_Rambukwellaஅதி உயர் பாதுகாப்பு வலயங்களிலிருக்கும் காணிகள் பொதுமக்களுக்கு மீளளிக்கப்படமாட்டாததெனவும், அதற்குப் பதிலாக அம்மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படும் எனவும் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.  ஆனால் அதனை நிராகரித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகள் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை பேணுவதற்காக வடபகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்தும் இருக்கும் என அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். வாராந்த அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (June 16 2010) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. சிலநாடுகளில் பாதுகாப்பு வலயங்கள் விரிந்து காணப்படுகின்றன. பாதுகாப்பு முகாம்கள், பாதுகாப்பு வலயங்கள் என்பன ஒரு நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது. பாதுகாப்பு வலயங்கள் தேவை என இனங்காணப்படும் பகுதிகளில் இவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா அதன் பாதுகாப்புத் தேவைக்காக தென்கொரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துள்ளது. தற்போது நாட்டில் காணப்படும் பாதுகாப்பு வலயங்களும், படைமுகாம்களும் அப்படியே இருக்க வேண்டும்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன. அவை காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு என்பது முக்கியமானது. எனவே, அக்காணிகள் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தள்ளது” என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள இத்தகவல் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல இடங்களில் ஜனாதிபதி உரையாற்றுகின்ற போது பாதுகாப்பு வலயங்கள் நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்று கூறியுள்ளார்,

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் யுத்தகாலங்களில் உயர்பாதுகாப்பு வலயங்களாக மூடப்பட்டிருந்த இடங்கள் பல இப்போது திறந்து விடப்பட்டுள்ளன. அதேபோல வடக்கிலும் பல பகுதிகள் திறந்து விடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களாக கருதப்பட்ட இடங்கள் சில தினங்களில் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளன.  இவ்வுயர் பாதுகாப்பு வலயங்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும்” இவ்வாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றிரவு பி.பி.சி தமிழோசையிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தென்பகுதிகளில் கடும் மழை. களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

இலங்கையின் தென்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர்ப்பெருக்கு அதிகரித்து வருவதால் இரத்தினபுரி. களுத்துறை பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு  வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக இலங்கையின் தென்பகுதிகளிலும். மலையகத்திலும் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. ஆனால், யாழப்பாணம் உட்பட்ட வடபகுதியில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டம்

Chandrakumar_MP_Jaffna_EPDP இலங்கையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில், நேற்று (June 15 2010) யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. வடமாகாண சகாதார வைத்திய அதிகாரிகள்,   பிரதேச சபை செயலாளர்கள், கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோர்  இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மேலதிக கல்விப்பணிப்பாளர் தி.செல்வரத்தினம், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களில் இலங்கையின் தென்பகுதிகளில் டெங்கு காய்ச்சலினால் சிலர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்துமுள்ள நிலையில். யாழ்.மாவட்டத்தில் இதன் தாக்கத்தை கட்டப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.